-செண்பக ஜெகதீசன்

குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் றொழில். (திருக்குறள் -549: செங்கோன்மை) 

புதுக் கவிதையில்…

மற்றவர்கள் துன்புறுத்தலின்றி
மக்களைப் பாதுகாத்தல்
மன்னனின் கடமை…
மக்கள்தம் குற்றங்களுக்காக
அவரைத் தண்டித்தல்
பழியன்று,
தொழிலாகும் மன்னவர்க்கு…! 

குறும்பாவில்…

பிறரிடமிருந்து மக்களைக் காக்கும் மன்னன்,
தவறிழைப்போரைத் தண்டித்தல் குறையன்று…
அவன் கடமை அது! 

மரபுக் கவிதையில்…

மற்றவர் கொடுக்கும் இடரழித்தே
     -மக்களைக் காத்தல் மன்னர்கடன்,
கொற்றவர் இவர்க்குப் பழியன்று
     -குடிகள் எவரும் தவறிழைத்தால்,
குற்றங் கண்டு தண்டித்து
     -குடிகள் நலனைக் காத்திடலே,
நற்றுணை யாக யிருப்பதுதான்
     -நல்ல மன்னர் தொழிலன்றோ…! 

லிமரைக்கூ…

மாற்றார் செய்திடும் கொடுமை
தடுத்துக்காக்கும் மன்னன், தவறுவோரைத் தண்டிப்பது,
பழியன்று, அவன்தன் கடமை! 

கிராமிய பாணியில்…

மன்னவரு மன்னவரு
மக்களக் காக்கும் மன்னவரு,
மத்தவங்க யாராலயும்
துன்பம் வராம
மக்களக் காக்கும் மன்னவரு…
மக்கயாரும் தப்புசெஞ்சா
தண்டிக்கிற மன்னவரு,
அது அவுருக்குப் பழியில்ல
அவுரோட தொழிலுதானே… 

அவுருதான்,
மன்னவரு மன்னவரு
மக்களக் காக்கும் மன்னவரு…!

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *