இன்றல்ல, என்றுமே ‘’அனுமத் ஜெயந்தி”….அனுமார் சிரஞ்சீவி ஆயிற்றே….ஆதலால் உங்கள் மேலான பார்வைக்கு….!

கண்டேன் அனுமனை
—————————

efa08c2843227abcbce69ff60f81db6e

காப்பு
———-
சேரதீ சென்றிலங்கை சேதாரம் செய்தோனே
மாருதி ராமன் மனமகிழ்வே -சாரதியாய்
என்பால் தமிழோட்டும் நண்பன் ரவிமகிழ
வெண்பாவில் வந்துநீ குந்து….
————————————————————–

அனுமந்த ராயா அசகாய சூரா
தினமுந்தன் பாதம் தொழுவேன் -எனையிந்த
பாழும் மனமென்ற ஆழியைத் தாண்டிட
தோழா கொடுத்திடு தோள்….(1)

அனுதினம் ராமா யணமதை ஓதும்
அனுமனே அஞ்சனை அன்பே -கணுவிலா
பக்திக் கரும்பே பயமிலா வாழ்க்கை
சித்திக்கச் செய்வாய் சரண்….(2)

வினய வடிவம் விழிகளில் பாஷ்பம்
கணைவிடு ராமன் கதையே -துணையாய்
அணையா விளக்காய் அமர்ந்த அனுமான்
இணையே(தும்) இல்லா இறை….(3)

பாரிஜாத வாசம் பணிராமன் காரியம்
வேறுஜாதி வானரம் மாருதி -மாறுவேடம்
பூண்டுவந்த ருத்திரன் பூமிவாயு புத்திரன்
வேண்டுவோர்தம் வீட்டில் வரவு….(4)

அண்ணல் நினைப்பினால் கண்ணில் பனித்திரை
விண்ணில் பறந்தோன் வெகுளியாய் -திண்ணையில்
ஸ்ரீ£ராம் ஜெயராம் ஜெயஜெய ராமென்று
தீராத் தவத்தில் திளைப்பு….(5)

வீரன் வினயன் வெகுசமர்த்தன் ஈசனவ
தாரன் ரகுநாதன் இஷ்டவேலைக் -காரன்
கடல்கடந்து அய்யன் கணையாழி தந்த
உடல்கடந்தோன் உள்ளம் உணர்….(6)

இந்திர ஜித்தனின் தந்திரக் கட்டகல
எந்திர வேகத்தில் ஏகிய -சுந்தரன்
வெற்ப்பெடுத்து வந்தவனின் வீரக் கழல்களை
நிர்பயம் கொள்ள நெருங்கு….
நிர்பயத்தில் மூழ்த்தும் நெருப்பு….(7)

”ராம்”புகல் மந்திரம் ஜாம்பவான் உந்துதல்
வான்புக ஓங்கிய வானரம் -தேன்புகும்
கூந்தலாள் சூடாமணி ஏந்தி எஜமான்முன்
சேர்ந்தனன் சேவடி சேர்….(8)

புரவிகள் ஏழினைப் பூட்டிய தேரில்
இரவியோ(டு) ஏகி உயர்ந்த -அறிவினைப்
பெற்ற கவிக்குல பேரொளியை காகுத்தர்(கு)
உற்ற அனுமன்தாள் பற்று….(9)

வாயு குமாரன் வலிமிகு தோளினன்
ஆய கலைகள் அறிந்தவன் -தூயநல்
நெஞ்சினன் தொல்லை அழிப்பவன் தாயவள்
அஞ்சனை மைந்தன் அரண்….(10)

வாயு குமாரன் வலிமிகு தோளினன்
ஆய கலைகள் அறிந்தவன் -மாயவன்
அஞ்சன வண்ணனின் ஆருயிர்த் தோழனை
நெஞ்சினில் வைக்க நிறைவு….(11)

சினத்தீ இராவணன் சீர்மல்கு தீவில்
கணத்தில்தீ வைத்து அசோக (OR) கொளுத்தி-வனத்தில்
கணையாழி தந்தன்னை கண்ணீர் துடைத்தோய்
வினையாழி தாண்டிட வை….(12)

எஜமானன் ராமனுக்(கு) என்றும் பணிந்த
நிஜமான பக்தன் அனுமான் -புஜத்தில்
வடைமாலை சார்த்தி வணங்கி உறங்க
விடிகாலை காண்போம் வியப்பு….(13)

எங்கு இராமன் காதை நிகழ்ந்தாலும்
அங்கு விழியிலா னந்தபாஷ்பம் -பொங்கிவர
கைத்தாளம் இட்டு குதூகலிக்கும் மருதியின்
மெய்த்தலம் சிந்திக்க மாண்பு….(14)

திடமான பக்தி தெளிவான ஞானம்
கடமை தவறாத கர்மம் -அடைய
அனுமானை அஞ்சனை மைந்தனை என்றும்
மனமாறப் போற்றி மகிழ்….(15)

தன்பலம் காட்டா தவசீலன் தர்மமென்றால்
தன்பலன் பாரா(து) உழைப்பவன் -தன்புலன்
ஐந்தினை ஆளும் அனுமனை, வாயு
மைந்தனைப் பாடல் மகிழ்வு….(16)

சுந்தர காண்ட சுருதி உரைக்கும்
மந்திர வாசக மாருதியே -எந்திரமாய்
உண்டு உறங்கி உலகக் கிணற்றில்
மண்டூகம் ஆச்சே மதி….(17)

பொறிகளின் சூழ்ச்சியால் பெண்களின் காமக்
குறிகளில் வீழ்ந்திட வாழ்க்கை -நெறிதவறி
கஜ்ராஹோ கெட்டகனா காணாது கண்விழிக்க
பஜ்ரங் பலீ பணி….(18)

திருத்துழாய் காட்டில் கருத்துடன் ராமன்
திருப்பெயர் ஓதும் தவமே -மருத்துவக்
குன்றேந்தி வந்தோய் குணமயக்கம் போக்கிட
இன்றேந்தி வாருமய்யா இங்கு….(19)

பொன்னும் கிடைக்கும் புதனும் அகப்படும்
எண்ணும் எழுத்தும் இருவிழியாய் -மின்னும்
கவிக்குல முக்யன் கமல பதங்கள்
தவிக்கையில் தோன்றும் துணைக்கு….(20)

மூவாசை கொள்ளா முனிவன் (OR)முதல்வோன் ரகுராம
சேவாசை கொண்ட சிவரூபந் பூவாச
சேவைசெய் ஆசை சிவரூபன் -பூவாச
அன்னையைக் கண்டு அசோக வனத்திடை
இன்னலைத் தீர்த்தோன் இவன்….(21)

ஆஞ்ச நேயன் அசாத்திய சாதகன்
காஞ்சன அன்னையைக் கண்டன்று -வாஞ்சையாய்
வில்லாளி நாயகன் வாக்களிப்பை விண்டுரைத்த
சொல்லாளி சுந்தரன்பேர் சொல்லு….(22)

புலன்களாம் ஐவரோடு ஆறா காது
விலங்கினைப் பூட்டிய வாயு -குலன்மகன்
தாசரதி தோழன் தசகண்ட ராவணன்
வாசலெதிர் வந்தோன்வால் வாள்….
வாசலெதிர் வந்தோன்சீர் பேசு….(23)

இராமன் இளையோன் இருதோள் இருக்க
இராவணன் போரில் இறக்க -அரோஹரன்
அம்சனே அஞ்சனை ஆண்மகனே வானர
வம்சனே வாழியநின் வாகு….(24)

குரங்கெண்ணம் காக்க மருந்துண்ண வைக்க
விரைந்தோடிக் கண்டாய் வரையை -திருந்தேன்
மலைநிகர்த்த நீயிருக்க மற்றெதையோ நாடினேன்
தலையிருக்க வாலாடும் தீங்கு….(OR)
தலையிருக்க வாலாட்டத் தோடு….(25)

அறிவில் கதிரொளி ஆற்றலில் ஈசன்
திருவில் ஜனகமகள் தாசன் -உறவில்
குகனோடு ஆறானான் காகுத்தன் நட்பில்
நிகரில்லா மாருதியை நண்ணு….(OR)….(26)

அறிவிலோ ஆசானாம் ஆற்றலில் ஈசன்
திருவிலோ ஜானகிக்கு தாசன் -உறவில்
குகனோடு ஆறாம் ரகுநாதன் தேர்வு
நிகரில்லா மாருதியை நண்ணு….(27)

வானரம் ஆயிரம் வாயைப் பிளந்திட
வானுற ஓங்கிநீள் வாரிதி -ஜாணுற
தாவி இலங்கைக்கு மேவிய மாருதியை
சேவிக்க சித்திக்கும் சத்து….(28)

உரம்கொடுக்கும் ஓங்க, கரம்கொடுக்கும் தாங்க
அரன்படைத்த அம்சன் அனுமான் -வரம்கொடுக்கும்
காலில் சிரம்கிடக்க, ஏழு மரம்தடுத்தும்
வாலி திறன்முடித்தோன் வாழ்த்து….(29)

பகுத்தறி வாளன் பரமராம பக்தன்
அகத்துறை ஆன்மன் அனுமான் -மகத்துவம்
பாடு ,மலர்ப்பதம் நாடு இகத்துடன்
வீடும் இணைந்திடும் வாழ்வு….(30)

தத்துவமாய் சைவன், தரணியில் ராமனின்
வித்தாய் விளைந்ததால் வைணவன் -மத்வ
மதமூலன் வாயு மகனனுமான் ராசி
பதமூலம் ஆசி பலன்….(31)

இராமவென்று கூறல் இராமவுரு காணல்
இராமகதை கேட்டல், இருப்பு -இராமன்கால்
என்றிருக்க மாருதிபோல், என்றும் குணசீலக்
குன்றுச்சியில் வைக்கும் குரங்கு….(32)

சீதை துயர்தீர்க்க வாத மகனாக
பூதலம் வந்தவுமை பாகனை -ஆதவன்
கூடவே சென்றன்று பாடம் பயின்றோனை
நாடவே நாடுமுனை நாடு….(33)

சேராது துஷ்ட சகவாசம், சேர்ந்தாலும்
மாறாது மனம்வாயு மைந்தனின் -பேரோத
தீராத வல்வினைகள் தூராதி தூரத்தில்
ஓரோரம் ஓடும் ஒளிந்து….(34)

வாலால் சகோதரன் வாயுமகன் பீமனின்
தோளா ணவகர்வம் தீர்த்தோனே -காளான்
எனவகந்தை என்னுள் எழுந்திடும் போது
மனமுவந்து ஆளென் மனது….(35)

பாரத யுத்தத்தில் பார்த்தனின் சாரதி
தேரதன் உச்சி திகழ்ந்தோனே -நூறதை
பாண்டவர் வெல்ல பலமாக வீசினாய்
காண்டீப வேள்வியில் காற்று….(36)

வாடா மலரன்னை சூடா மணிபெற்று
ஓடோடி அண்ணலை ஓம்பிய -நாடகம்
சுந்தர காண்டத்தை எந்திரமாய்ச் செப்பினும்
மந்திரம் ஆகிடும் மெய்….(37)

கைத்தலம் பற்றிய கூடலாள் கூறிட
மைத்துனர் கால்பிடிக்க மாருதியாய் -வைத்திய
நாதரே வந்தீரோ நானிலத்தில் நாரணர்
தூதரான தேவா துணை….(38)

காமம் உலோபம் குரோதம் அகங்காரம்
நாமம் அனுமனென நாவுறைக்க -போமாம்காண்
தோளால் சிரஞ்சீவி தூக்கிவந்த மாருதியின்
வாளாம் அவனுடைய வால்….(39)

ஆதவனோ(டு) ஏகிவான் வீதியிலே மெய்ப்பொருளை
பேதமறக் கற்ற பவுருஷத்தை -மேதினியில்
கால்முடியும் நாள்முன்பே கால்பிடித்துக் கும்பிடுவீர்
கால்மடி புத்திரன் காப்பு….(40)

கணையாழி வெல்லும், மனையாள் துறக்கும்
அணையா நெருப்பில் தோன்றும் -இணைபிரியா
சொல்லும் பொருளுமாம் ராமனும் தோழனும்
வில்லை நிகர்த்தது வால்….(41)

நிலையாமை நீங்கும் நிரந்தரம் கூடும்
அலைபாயும் நெஞ்சம் அடங்கும் -சிலைராமன்
தூதன் அனுமானின் பாத கமலத்தைப்
போதும் பணிவோர் தமக்கு….(42)

நெஞ்சாம் அசோக வனத்தின் அரக்கியர்
அஞ்சாம் அவைதாண்டி, ஆன்மாவை -வெஞ்சிறைவாழ்
வேள்விதீ சீதையை கேள்விக் கணையாழியால்
தோள்வலியோன் மாருதிபோல் தேடு….(43)

நெஞ்சாம் அசோக வனத்தின் அரக்கியர்
அஞ்சாம் அவைதாண்டி, ஜீவனாய் -வெஞ்சிறைவாழ்
அன்னையை மீட்டான்ம அண்ணலிடம் சேர்பிக்க
முன்வந்த மாருதியாய் மாறு….(44)

வரம்கொடுக்கும் தெவம், கரம்கொடுக்கும் தோழன்
திறன்கொடுக்கும் வானர தூதன் -சரம்தொடுக்கும்
காகுத்தன் தந்த கணையா ழியாலன்னை
சோகத்தைத் தீர்த்தோன் சரண்….(45)

சரண்சுந் தரன்தாள் சரண்சுந் தரன்வால்
அரன்சம் பவித்தான் அவன்பால் -அறம்பொருள்
இன்பம் அளிப்பான் இராமன் சகவாச
நண்பனாய் மாற்றுமவன் நட்பு….(46)

நட்புக்காய் சுக்ரீவன், நாவில் அயக்ரீவன்
நுட்பத்தால் ராகவன் நண்பனாக -கட்புலன்கள்
கொன்ற அனுமனவன் கூறி வெகுண்டெழுந்து
சென்றழித்தான் தீவில்தீ சேர்த்து….(47)

சேர்ந்ததெலாம் செல்லாது, சுற்றமோ பொல்லாது
வார்த்தைகள் கூற்றின்முன் வெல்லாது -ஆர்த்தழுது
ஓ !நரனே அப்போது ஓய்ந்திடாய் இப்போதே
வனர வீரனை வாழ்த்து….(48)

வாழ்த்தியவன் வாகை விளம்பிட ஜாம்பவான்
ஆழ்திரை ஆழிமேல் ஆதவனாய் -பாழ்படுத்த
லங்கா புரிசென்று அங்கசோகக் கானுறையும்
செங்கமலத் தாள்கண்ட சேய்….(49)

சேயாய் இருக்கையில் சூரியனை சாப்பிட
தாயார் தடுத்தும் தவிர்த்துவான் -பாய
வெகுண்ட சுரர்கோன் வயிரத்தால் தாக்க
அகண்ட(து) அனுமன் அடல்….(50)

அடலவன் மோனம் கடலவன் ஞானம்
சுடர்விடும் ராமம் சுகித்து -அட!இவன்
எத்திறமும் அஞ்சிடும் ருத்திரன் அம்சமே
சித்தமொரு மித்திவனைச் சேர்….(51)

சேர்ந்த கவிக்குள சேற்றுச்செந் தாமரை
நேர்ந்தரா மாயண நுட்பொருள் -சோர்ந்த
மனமதில் பூக்க மகிழ்வு, நமஓம்
அனுமதே நாமம் அணி….(52)

அணிவான் அடக்கம் அயோத்தி இராமன்
பணிவரக் கொள்வான் பதட்டம் -கனவிலும்
அய்யனிடு காரியத்தை மெய்ப்பட வைத்திடச்
செய்யும் இவன்தொழில் சீர்….(53)

சீராகச் செல்ல சுவாஸத்தை நேர்படுத்தி
காரோத ஆழக் கடல்தாண்டி -ஸ்ரீராமன்
தாஸனெனச் சொல்லி தஸகண்டன் முன்வாலால்
ஆஸனம் கொண்டோன் அழகு….(54)

அழகண்ணல் ஏவல், அழகாழி தாவல்
அழகுகணை யாழிசேர் ஆவல் -அழகனுமன்
மோதிரக் கையால்நம் தீதறக் குட்டிலுண்டு
ஆதிரையோன் அன்பே அரன்….(55)

அரனவன் அம்சம், அரியவன் வம்சம்
திறனடியார் தீங்கு துவம்சம் -பரணதில்
வைத்த பொருளாக வாழ்நாள் வரைக்கும்
கைத்தலம் உண்டனுமன் காப்பு….(56)

காப்பதற்கு காசின்றி குட்டிகளைப் போட்டிடுவோர்
ஆப்படைந்த மந்தியென்(று) அன்றுரைத்தார் -ஆப்பக்கை
பந்தி அருளை பறிமாறும் சம்மந்தி
நந்தி தனிலேறும் நீறு….(57)

நீறுபூத்த அக்கினியாய் சேறுபூத்த தாமரையாய்
வேரசோகத் தில்வாடு வைதேஹி -மாறசித்தம்
அஞ்சண வண்ணன் அனுப்பிய தூதனென
குஞ்சுக் குரங்கானான் குன்று….(58)

குன்றுருவம் காட்டி, கணையாழி தந்தம்மா
சென்றிடலாம் ஸ்ரீராமன் சேவடிக்கு -என்றுரைக்க
சீதை மறுத்தணி சூடா மணியளிக்க
காதை குறிப்புணர்ந்தான் கால்….(59)

கால்வாசி மைந்தன் அரைவாசி வானரமுக்
கால்போதும் (OR) காலமும் யோகி முழுமுதற் -காலகாலன்
பூரணன் சிரஞ்சீவி நாரணன் காரியக்
காரணன் மாருதியைக் கொள்….(60)

கொள்வான் கரத்தில் கதாயுதம், சித்தத்தில்
கொள்வான் இராமன் கதாஅமுதம் -கொள்வான்
அளவுவிஸ்வ ரூபன் அணிகவிக்கு தீபம்
பிளவுபடா வாயுமகன் பார்….(61)

பாரழைக்க வந்த பரமசிவா, பார்த்தன்தன்
தேரழைக்க வந்த தருமதுரை -யாரழைக்க
என்மூச்சுக் காற்றினில் உன்எஜ மான்கொடி
விண்வீச்சுக் கொள்ளும் விளம்பு….(62)

விளங்கிடத் தேரில் விரையும் கதிரோன்
விளம்பிட சாத்திரங்கள் விண்ணில் -குளம்பிடி
சத்தப் புரவிகள் ஒத்துப் பறந்தவன்
மெத்தப் படித்தஅனு மன்….(63)

மன்னுபுகழ் கோசலை மைந்தன் இராகவன்
கண்ணுபட ஆனந்தக் கூர்ச்செறிந்து -பண்ணிசைத்து
ராமஜபம் செய்தபடி ராப்பகல் பாராத
நாமசங் கீர்த்தனனை நாடு….(64)

நாடவ ளுக்கவள் நாய கனயோத்தி
நாடிவ னுக்கோவில் நாணிழுப்பான் -நாடகம்
போடுமிடம், ஆனந்த பாஷ்பம் சொரிந்திடப்
பாடுமிவன் ஆடிப் பெருக்கு….(65)

பெருக்கிட நீளும் பிறவியாம் வாலில்
நெருப்பிட லங்கா நகர -உருக்கெட
குச்சுமச் செல்லாம்தீ காம தகனமாய்
வச்சுக் குளிர்ந்ததரன் வால்….(66)

வாளாய் இருப்பதேன் வாலே எனக்குமட்டும்
ஆளாளுக் கெல்லாம் அருள்கிறாய் -மாளா,
பிறவா வரம்தா இறைவா இலையேல்
தரவா குருவாய் தவம்….(67)

தவபரதன் தற்கொலைத் தீர்வைத் தடுக்க
அவசரமாய் சென்றிட, அண்ணல் -தவவிருந்தில்
சேர்த்துனது பங்குண்ண சாப்பாட்டு ராமனென
பேர்தலத்தில் பெற்றானப் போது….(68)

போதன்னை ஜானகியைப் பார்த்தற்கு சாட்சியாய்
தீதிலங்கை தீவுக்குத் தீவைத்தான் -சோதரர்க்கு
அண்ணன் இருப்பை அறிவித்து சாட்சியாய்
விண்ணுயரும் வேள்வித்தீ வைப்பு….(69)

வைப்பாய் அவன்நாமம் வாக்கில், மனம்செயலில்
கைப்பாவை யாயிருந்து காட்சிகளை -துய்ப்பாய்நீ
சாட்சியாய் வாழ்ந்து சகலமும் அர்பணிக்க
ஆட்சிஅவன் ஆதாயம் ஆளூ….(70)

ஆளாள் உரைப்பர் அதையிதை நம்பென்று
மாலாலா காததை மாருதியின் -மேலேறும்
ஊற்றுக் குளிவெண்ணை ஊசா உளுந்துவடை
சாற்றும் திருத்துழாய் சேர்ப்பு….(71)

சேரான் அதமனை சீர்வாலி ஆனாலும்
மீறான் சுக்ரீவ மத்யமனை -வாரான்
ரமித்திடும் உத்தமன் ராமனெனக் கண்டு
இமைத்திடும் முன்படைந்தான் ஈர்ப்பு….(72)

ஈர்ப்பான் வரமளித்து, தீர்ப்பான் வினைகணக்கு
கோர்ப்பான் கணைதொடுப்போன் கையில் -சேர்ப்பான்.
வடைமாலை சூட்டி அடியார்கள் வேண்ட
அட!மாலைக் குள்பார் அளிப்பு….(73)

அளித்திட அன்று அவுடதக் குன்று
செலுத்திட இந்திர ஜித்தன் -பலிக்கணை
லக்குமணன் வானர லட்சங்கள் காப்பாற்ற
திக்கிமையம் சென்றுவந்த தேசு….(74)

தேசுலாவும் தேகனை, மாசிலா பூந்துழாய்
வீசுவாசத் தோளனை, வைகுண்ட -ஈசனம்ச
நேய ரகுவம்ச நாயகன் தூதனை
வாயு குமாரனை வாழ்த்து….(75)

வாழ்த்த வசிட்டன், வணங்க விபீஷணன்
தாழ்த்தி அங்கதன் தாங்கவாள் -ஏழ்த்தல
ராஜ்ஜியம் ஏற்றிடும் ராகவன் பாதத்தில்
பூஜ்ஜியன் கண்ணீர் பளிங்கு….(76)

பளிங்கு மரகதப் பர்வதம், பக்தி
துலங்கிடும் மார்கழித் திங்கள் -நிலம்தொடு
தாரக பிம்பம் வேறகம் கண்டதுஆல்
வேரது பாருக்கு வந்து….(77)

வந்தாராம் வாழ்ந்தாரம் நொந்துநூ லானாராம்
தந்தாராம் கர்ணத்தில் தாரகத்தை -கங்காராம்
ஏன்மூக்கைச் சுற்றிநீ ஈசன் தொடுகின்றாய்
காண்முக்கண் மாருதியின் கண்….(78)

கண்மூடிக் கானில் கிழக்குரங்காய் கால்நீட்டி
பின்னாடி வந்தவாசி பீமனைத்தன் -முன்னாடி
சோதிக்க ,போரிலவன் சாதிக்க மாரணைத்து
ஆதிக்கம் கூட்டினாய் அன்று….(79)

அன்றரன், பின்பைந்தில் ஒன்றிணைந்த அஞ்சனைக்
கன்றவன், கிஷ்கிந்தைக் காவலவன் -என்றும்
அராவணைப் பள்ளி நராயணன் அம்ச
இராமனின் கீதை இவன்….(80)

இவனிராமன் நண்பன், இனத்தவர் போற்றும்
இவன்மந் திகள்மந் திரியாம் -இவனகந்தை
ஆசறுக்கும் ஆசிரியன் நேசிப்போர் சேவகன்
வீசுவாசி பூதம்தெய் வம்….(81)

தெய்வமே, துன்புறுத்தும் ஐவரை ஆட்கொண்டு
உய்யவகை காட்டு உலகினில் -பெய்யவா
பந்தமறு கர்மத்தை, பக்தியை, ஞானத்தை
மந்தனென்மேல் மாருதி மா….(82)

மாமருந்து குன்றெடுத்தாய், மாபா ரதமிருந்தாய்
மாபா தகத்தின்மேல் மூட்டினாய்தீ -மாதேவன்
மாதவன் நட்புணர்த்த மாருதியாய் வந்தவரே
வேதாந்த தேசிகராய் வா….(83)

வாக்கில் இராமமொழி, நோக்கில் இராமவிழி
போக்கில் இராமவழி, பூமகளின் -ஏக்கம்
தவிர்க்க கடல்தாவு, தாசரதி தூதன்
கவிக்குல ஞானக் கனி….(84)

கனிமா ருதியிருக்கக் காய்மனிதர் கூட்டு
சனிரா குகேதுபுதன் செவ்வாய் -பனிதிங்கள்
வெள்ளி கதிரோன் வியாழன் நவகோள்கள்
கல்லும்பா டாதோ கவி….(85)

கவிக்குல சூரி கடும்பிரமச் சாரி
தவக்கிளை வாழ்ராம தாரி -அவிக்கும்தீ
வாயுவின் வாரி சுபத்திற்கோர் ஏரிகுரு
ராயன் அனுமனைப்பா ரீர்….(86)

ரீங்கா ரமாய்த்துவங்கி ஹூங்கா ரமாய்முடியும்
ஆங்கார கோதண்ட ஆர்ப்பிலாழி -தேங்க
இவனங்கம் புல்லரிக்க இஷ்வாகு ராமன்
சிவலிங்கம் செய்தபின்பே சேது….(87)

சேது அணையெடுக்க ஸ்ரீராமன் பேரெழுதி
ஓதப் பரப்பில்கல் ஓய்ந்திருக்க -வாத
மகனவன் வானர மக்களை மேய்த்து
புகநடந்தான் லங்கா புரிக்கு….(88)

புரிசைசூழ் லங்கா புரிக்குள் புகுந்து
கரிசெய் இரவிலசோ கத்துள் -பரிசாய்
சுமத்திய சோகம்சூழ் சீதையைக் கண்டான்
சமர்த்த ராமதா ஸன்….(89)

ஸன்னமாய் ராம சரிதம் உரைத்திடுவான்
பின்னமாய் பூரணன் புல்லாகி -திண்ணமாய்
சீதையார் சந்தேகம் சோகத்தைப் போக்கிடுவான்
வேதநிகர் சொல்லின்செல் வன்….(90)

வன்னி மரத்தடியில் வாழை மரத்தோப்பில்
எண்ணி இருப்பான் இராமனை -கண்ணிரெண்டும்
ஆனந்த நீர்சொரிய மோனம் தனில்மூழ்க
வானிந்த மண்ணில் வசம்….(91)

வசமாக்கும் கல்வி, வளமாக்கும் செல்வம்
திசையெட்டும் வீரம் தெறிக்கும் -தசகண்டன்
முன்பமர்ந்தோன், பொன்னின் மகனாவோன், வித்தைக்காய்
விண்பறந்தோன் கையின் வரம்….(92)

வரவர மாமி விலங்கு கழுதை
உருபெறத் தேய்ந்தாற்போல் உள்ளம் -தரதர
என்றிழுக்கும் ஐம்புலனால் பன்றியாய்ப் போனதே
கொன்றழிக்க கொண்டா கதை….(93)

கதைபுத்திப் பிள்ளையார் கையைப் பிடிக்க
அதுவைம் புலக்குரங்காய் ஆச்சே -இதையுனக்கு
சொல்வது ஏனென்றால் செய்யிரா மாயணமாய்
நல்வழியில் நெஞ்சை நடத்து….(94)

நடத்துனர் நானென்றால் ஓட்டுனர்நீ அன்றோ
மடத்தன வாகனம்இம் மேனி -அடைத்திருக்கும்
எண்ணப் பயணிகள் ஏகாந்த ஊர்செல்ல
என்னப்பா வேகத்தை ஏத்து….(95)

ஏத்த வழியறியேன் எட்டக் கழியறியேன்
வாழ்த்த மொழியறியேன் வானரனே -மூழ்த்திடு
ஆராய்ச்சி அற்ற அதுநான் அனுபூதியை
வாராய் சிவாம்சா விரைந்து….(96)

விரைந்து மகேந்திர வெற்பேறி நின்று
இரைந்து இராமா இயம்ப -உறைந்து
விலங்குகள் ஓலமிட விண்ணளந்த மாலாய்
இலங்க இலங்கைக்(கு) இழிவு….(97)

இழிவுற்று ஈனமாய் இங்கங்(கு) அலைந்து
பழியுற்ற பாவப் பணத்தால் -அழிவுற்று
காலத்தின் கோலத்தால் காடேகும் மூடாஅம்
மூலத்தின் மூலம்வெல் மூப்பு….(98)

மூப்படைந்து மூச்சிறைக்க முக்காலில் நின்றிடுவீர்
காப்படைய நாளும் கதலிவனத் -தோப்படைந்து
கைசிவக்க தாளமிட்டு காகுத்தன் பேரோதி
மெய்சிலிர்க்கும் மாருதிதாள் மாந்து….(99)

மாந்தர் சதமல்ல வேந்தர் சதமல்ல
சேர்ந்த சகமும்அ சத்தே -தேர்ந்த
அரியகல்வி கற்க அருக்கன்பின் சென்ற
சிறியதிருத் தாளே சதம்….(100)….கிரேசி மோகன்….!

கண்டேன் அனுமனை சுபம்
———————————————————————————————————

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.