-மேகலா இராமமூர்த்தி

“ஒருவர் பொறை இருவர் நட்பு” என்பது  தமிழியம். தமிழ்மகள் அதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்திருக்கின்றாள். தமிழ்ச் சமுதாயம் பெண்குலத்தைப் பொறுமைக்குலமாக அன்று பயிற்றுவித்திருக்கின்றது.  ஆதலின் கணவனின் பரத்தமைக்காக மனைவி ஊடினாலும், அவனைக் கண்டித்தாலும் அவனை முற்றாய் வெறுக்கவில்லை; மனைவாழ்க்கையில் மீண்டும் இடந்தர மறுக்கவில்லை என்பதைச் சங்கப்பாடல்கள் பறைசாற்றுகின்றன.

பரத்தைவீடு சென்ற தலைவன் தன் மனை புகவேண்டும்; தலைவியொடு இணைந்து வாழவேண்டும் என்பதே அவளின் வழிகாட்டியாகவும், நலம்விரும்பியாகவும் flowersதிகழ்கின்ற அறிவுசால் தோழியின் உட்கிடையாகவும் இருந்திருக்கின்றது. ஆதலால்தான் விதைவிதைத்த உழவர் நெல்லொடு பெயர்கின்ற, பல்வேறு பூக்கள் மலரும் ஊரனான தலைவனுடைய மனைவாழ்க்கை பொலிவுபெற வேண்டும் எனும் தன் வேட்கையை வெளிப்படுத்துகின்றாள்.

நடைதவறிய தலைவனைத் துறந்து தலைவி தனித்தோ, வேறோர் ஆண் துணையைத் தேடிக்கொண்டோ வாழவேண்டும் என்று அவளும் விரும்பினாளில்லை.

…..வித்திய  உழவர்  நெல்லொடு  பெயரும்
பூக்கஞல்  ஊரன்  தன்மனை
வாழ்க்கை  பொலிக  என வேட் டேமே. (ஐங்: 3 – ஓரம்போகியார்)

அவ்வண்ணமே தலைவனும் சில காலத்தில் தன் தவற்றையுணர்ந்து திருந்தி, மனம்வருந்தி தலைவியொடு திரும்பவும் மனையறம் பேணத்தொடங்குவதாகவே அகப்பாடல்கள் அமைந்திருக்கின்றன. இதுவே அற்றைத் தமிழ்ப் பண்பாடு.

இனி நம் தலைவி இல்லில் நிகழ்ந்தவற்றைக் கண்ணுறுவோம்!

வாயில்கள் பயன்படாத நிலையில் தானே வீட்டினுள் துணிந்து நுழைந்துவிட்ட தலைவனைத் தலைவியும் மன்னித்து ஏற்றுக்கொண்டுவிடுகின்றாள். அவர்களின் மனைவாழ்க்கையில் மகிழ்ச்சிப் பூ மீண்டும் மலரத்தொடங்கியிருந்தது.

மாலைக்காலம் அது!

வானமேடையில் வலம்வரத் தொடங்கியிருந்த வெண்ணிலா தன் தண்ணொளியை பூமிக்கு அட்டியின்றிmoon அள்ளி வழங்கவே, மட்டிலா மகிழ்ச்சிகொண்ட பூமி அக்குளுமையில் குளித்தது; உளம் களித்தது. அப்போது அலர்ந்த அல்லிப்பாவையும் மலர்ந்தமுகத்தோடு தன் மோகனமுறுவலை நிலவரசனைப் பார்த்து இலவசமாக வழங்கிக்கொண்டிருந்தாள்.

அவ்வேளையில் தலைவனைக் கண்டுசெல்ல முன்பு அவனுக்குத் தூதாய் வந்த பாணன் வீட்டுக்கு வந்திருந்தான். தோழியும் அப்போது வீட்டில்தான் இருந்தாள். பாணனைக் கண்டவள், அவனை வரவேற்றுவிட்டுத் தலைவன் தலைவியரின் இனிய இல்லறத்தைப் பாணனோடு பகிர்ந்துகொள்ள விழைந்தவளாய்,

”பாண காண்! இல்வாழ்க்கை அன்புடைமை எனும் பண்புடைத்து! வெற்றியையுடைய நம் தலைவன், மாலைக்காலத்தில் விரிந்த வெள்ளிய நிலவொளியில், குறுகிய கால்களையுடைய கட்டிலில் மணமிகு மலர்பரப்பிய படுக்கையில் விருப்பத்தோடு தன் புதல்வனைத் தழுவிக்கொண்டு கிடைகொண்ட களிற்றைப்போல் பெருமூச்சு விட்டனன்.  அப்புதல்வனின் தாயாகிய தலைவியோ புதல்வனைத் தழுவிக்கிடக்கும் தலைவனின் முதுகுப்புறத்தைத் தழுவினாள். மகிழ்ச்சிதரும் இந்நிகழ்ச்சி எத்துணை அழகுடையது!” என்றாள் பூரிப்போடு.

கண்டிசின்  பாண  பண்புடைத்  தம்ம
மாலை
 விரிந்த  பசுவெண்  ணிலவிற்
குறுங்காற்
 கட்டில்  நறும்பூஞ்  சேக்கைப்
பள்ளி
யானையின்  உயிர்த்தனன் அசையிற்
புதல்வன்  தழீஇயினன்  விறலவன்
புதல்வன்  தாயவன்  புறங்கவைஇ  யினளே. (குறுந்: 359 – பேயன்)

தலைவன் தலைவியரின் பள்ளியறையில் வலியநுழைந்து அவர்கள் பள்ளிகொண்டிருந்த காட்சியைக் கண்டே தோழி இவ்வாறு விவரித்தாள் என்று பொருள்கொள்ளுதல் கூடாது! அவ்விணையரும் மகவும் கொண்டிருந்த அன்புப் பிணைப்பை கற்பனையில் கண்டோ, தற்செயலாகப் பார்த்தோதான் அவள் பாணனுக்குச் சொல்லியிருக்கவேண்டும் என்று பொருள்கொள்வதே சாலப் பொருத்தமுடைத்தாகும்.

இதே பொருள்தரும் பாடலொன்று ஐங்குறுநூற்றிலும் அமைந்திருக்கின்றது.

புதல்வன்  கவைஇயினன்  தந்தை  மென்மொழிப்
புதல்வன்  தாயோ  இருவரும்  கவையினள்
இனிது  மன்றஅவர்  கிடக்கை
நனியிரும்  பரப்பின்இவ்  உலகுடன்  உறுமே.   (ஐங்: 409)

தலைவன் தலைவியரின் இல்லற மாண்பைக் காணவந்த செவிலித்தாய், அவர்களின் அன்பையும் அந்நியோன்யத்தையும் நாற்றாய்க்கு விளக்குகையில்,

”தலைவன், தலைவி, புதல்வன் ஆகிய மூவரும் ஒரே deersபடுக்கையில் கிடக்கும் காட்சியானது மான்பிணையானது தன் குட்டியோடும் ஆண் மானோடும் இணைந்திருக்கும் மாண்பினை ஒத்திருந்தது” என்று உளம்பூரித்துக் கூறுவதை ஈண்டு நாம் இணைத்துப் பார்க்கலாம்.

மறியிடைப் படுத்த மான்பிணை போலப்
புதல்வன் நடுவ ணாக நன்றும்
இனிது மன்றஅவர் கிடக்கை
முனிவின்றி 
நீல்நிற
 வியலகங்  கவைஇய
ஈனும்
உம்பரும் பெறலருங்  குரைத்தே.   (ஐங்: 401)

அன்பும் அறனும் உடைத்தாய்த் திகழவேண்டும் இல்வாழ்க்கை!
அதன் பண்பும் பயனும் அதுதானே?

தவறுதல் மனித இயற்கை; தன் தவற்றை என்ணி வருந்துதல் அறம்; அவ்வாறு வருந்துவோரை வன்மொழிகளாலும் புன்மொழிகளாலும் புண்படுத்தாது, அன்பாலும் பண்பாலும் பண்படுத்தும் குறுந்தொகைத் தலைவியை இங்கே நாம் காண்கிறோம்.

அகவையில் இளையோளாக இருப்பினும் அறிவில் முதிர்ந்திருக்கும் அச்சிறுமுதுக்குறைவியை நாமும் வாழ்த்தி விடைபெறுவோம். அவள் இல்லறம் பார் போற்றும் நல்லறமாய்த் திகழட்டும்!

நற்றமிழ்ப் புலவர் இயற்றிய நல்லகுறுந்தொகை, பழந்தமிழரின் காதல் வாழ்வையும், அவர்தம் விழுமியங்களையும், சீர்த்த நாகரிகத்தையும், இயற்கையோடும் இதர உயிர்களோடும் அவர்கள் கொண்டிருந்த இணையற்ற பிணைப்பையும், எதனையும் கூர்ந்துநோக்கும் அவர்தம் நுண்மாண் நுழைபுலத்தையும் நாம் அறிந்துகொள்ள நல்லதோர் வாய்ப்பை நல்குகின்றது.

நான் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் உரையாசிரியர்களால் அதிக அளவில் மேற்கோள் காட்டப்பட்ட சங்கநூல் எனும் பீடும் பெருமையும் உடையது குறுந்தொகை. தொல்காப்பியப் பொருளதிகார உரையில் இளம்பூரணஅடிகள் குறுந்தொகையை 126 இடங்களில் பயன்படுத்தியுள்ளார். பேராசிரியர் 103 இடங்களில் இப்பாடல்களை மேற்கோள் காட்டுகின்றார். உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியரோ அனைவரினும் அதிகமாய் 223 இடங்களில் குறுந்தொகையை எடுத்தாண்டுள்ளார் என்பதை அறியும்போது குறுந்தொகையின் பெருமை வெள்ளிடைமலையாய்த் துலக்கமாகின்றது அன்றோ?

”பெருந்தொகை தந்தாலும் குறுந்தொகைக்கு ஈடாய்
ஒருபாடல் இயற்றக்கூட ஒருவரும் இல்லை நம்மிடம்!”

அத்துணைச் சிறப்பு வாய்ந்த குறுந்தொகை நறுந்தேனிலிருந்து ஒருசில துளிகளை மட்டும் இக்கட்டுரைத் தொடரில் சுவைக்கத் தந்தேன்.
மீதமுள்ள பாடல்களையும் ஊக்கத்தோடு படித்தின்புறுக என்பதை என் வேண்டுகோளாய் வைக்கின்றேன்.

பழமென இனித்திடும்
சங்கப் பனுவல் கற்றால்
கிழம் போம்! கீழ்மை போம்!
ஆதலினால் காதலோடு கற்பீர் அதனை!

[முற்றும்]
 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *