குறளின் கதிர்களாய்…(214)
-செண்பக ஜெகதீசன்
பொறுத்த லிறப்பினை யென்று மதனை
மறத்த லதனினும் நன்று. (திருக்குறள் -152: பொறையுடைமை)
புதுக் கவிதையில்…
பிறர் தீங்கு செய்கையில்,
அவரை
ஒறுக்கும் திறனிருந்தும்
பொறுத்துப் போதல் நன்று…
அத் தீமையை
அடியோடு மறந்திடுதல்
அதனினும் நன்று…!
குறும்பாவில்…
பிறர் செய்த தீமைகளைப்
பொறுத்துக்கொள்ளுதல் நல்லது,
மறந்துவிடுதல் மிகநல்லது…!
மரபுக் கவிதையில்…
நமக்குத் தீங்கு செய்தவரை
-நம்மால் ஒறுக்க முடிந்தாலும்,
அமைதி காத்துப் பொறுமையாக
-அடங்கி யிருத்தல் நன்றாகும்,
சுமக்கும் சுமையாய் நெஞ்சினிலே
-செய்த தீமையைக் கொள்ளாமல்,
நமக்கு வேண்டாம் சுமையெனவே
-நாமே மறப்பது மிகநன்றே…!
லிமரைக்கூ…
பொறுத்திடு பிறர்செய்தாலும் தீங்கு,
மறத்தலதை மிகநல்லதென மறந்துவிட்டு
நல்ல பெயர்தனை வாங்கு…!
கிராமிய பாணியில்…
பொறுமவேணும் பொறுமவேணும்
வாழ்க்கயில பொறுமவேணும்…
தீங்கு நமக்குச் செஞ்சவனத்
தண்டிக்கத் தெறம நமக்கிருந்தாலும்,
அதப்
பொறுத்துப்போறது நல்லகொணம்…
அதயே மனசுல வச்சிக்காம
அப்புடியே மறந்துபோறது
மிகவும் நல்ல கொணம்…
அதால,
பொறுமவேணும் பொறுமவேணும்
வாழ்க்கயில பொறுமவேணும்…!