– ஏறன் சிவா
அறிவென நினைத்துக் கொண்டு
        ஆங்கிலப் பள்ளி நூறு
தெருவெலாம் திறந்து வைத்தோம்!
         தென்மொழியை மறந்தோம்!
பெருமையாய் அதனை எண்ணிப்
         பேதமைக் கடல் குளித்தோம்!
சிறையினில் மாட்டிக் கொண்டோம்!
          செந்தமிழ் நாடிழந்தோம்!
அருந்தமிழ் வேண்டா மென்று
          அயலாரின் சூழ்ச்சி தன்னில்
அறிவினை இழந்து விட்டோம்!
           ஆண்மையைத் தொலைத்து விட்டோம்!
திறமைகள் மறந்து விட்டோம்!
         தீந்தமிழ்ச் சுவடி யை..நாம்
இரையெனக் கொடுத்து விட்டோம்
         இழிநிலை அடைந்து விட்டோம்!
அருந்தமிழ் மீட்சி ஒன்றே
            அழிந்ததை மீட்டெடுக்கும்!
அறையினில் தூங்கு கின்ற
           அரிச்சுவடிகளை யெல்லாம்;
முறையாகத் தொகுத்து மக்கள்
           மூளையில் புகுத்தி விட்டால்;
உறக்கங்கள்  முற்றாய்த்  தீரும்
            உணர்வெழும் தமிழ்நாட் டாரே!
 26/02/2019

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *