என் இனிய காதலே…!

– சு.திரிவேணி, கோயம்புத்தூர்

என் ஒவ்வொரு நாளும்
உனக்காய்த்தான் விடிகின்றன.
எப்போதும் என்றில்லாவிட்டாலும்
எப்போதாவது
நீதான் என் நிரந்தர
வாழ்க்கை ஆகிறாய்.
வசந்தத்தின் பதிவுகளை
எனக்குள்
வார்க்கக் காத்திருக்கிறாய்.

அடிக்கடி உன்
ஞாபகம் வந்தாலும்
கடமை மறந்த காதலி நான்!
உன்னைக் காண என் சார்பில்
ஓரிரு முயற்சிகள்தான்!
என் பார்வை வரத்திற்காய்த்தான்
உன் தவங்கள் எல்லாம்!
நானோ –
சூழலைக் காரணம் காட்டி
உன்னை துடிக்க வைத்துப் போகிறேன்.

எங்கேனும் நான்
பார்க்க வேண்டுமே என
அங்கங்கே நிகழும்
உன் அணிவகுப்புகள்.
ஊடலும் கூடலுமாய்
நம் உல்லாச வாழ்க்கை
மூன்றாண்டுகளின் மயக்கத்தில்
முடிந்ததென
வண்டியில் ஏற்றி உன்னை

வழிஅனுப்பினால்
மாற இருந்த என் பாதையின்
மறுமுனையில் நீ நிற்கிறாய்!

உனக்கும் எனக்குமான
கணக்கில் இன்னமும்
பாக்கி இருக்கிறதா?
உன்னை மணக்கச் செய்யும்
மலர்களின் மத்தியில்
இந்தக் காகிதப்பூவுக்கும்
கருணை உண்டா?

உன் அருகில் இருக்கையிலேயே
ஆளை மாற்றத் துடித்தவள் நான்!
எந்த நம்பிக்கையில்
என்னை(யும்) நேசிக்கிறாய்,
தமிழே?
என் இனிய மொழியே….
எதற்காய் இந்த
எதிர்பார்ப்பில்லாக் காதல்?

– இப்படிக்கு,
காதல் வளர்க்கும் காதலி.

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *