-மேகலா இராமமூர்த்தி

சிந்தனை முகத்தினராய்ச் சுவரில் சாய்ந்து அமர்ந்திருக்கும் மூவரை ஒளிக்காட்சியாக்கிப் படக்கவிதைப் போட்டிக்குத் தந்திருப்பவர் திருமிகு ராமலக்ஷ்மி. அவருக்கு என் நன்றி!

அகத்தின் அழகை மட்டுமன்று கலக்கத்தையும் முகம் துலக்கமாகவே வெளிக்காட்டும் என்பதை இம்மூவரின் முகங்களும் நன்றாகவே புலப்படுத்துகின்றன. எதனால் வந்த கலக்கமிது என்று நாம் யோசிப்பதைவிடவும் நம் கவிஞர்கள் சரியாக யோசித்துப் பதில் சொல்வார்கள் என்பதால் அவர்களையே கேட்போம்! புறப்படுங்கள்!

*****

”வண்ணமிட்ட எம் கைகளுக்கு அன்னமிட யாருமில்லை; கோவில் சுவரே எங்கள் கூடுமிடம். இதுவரை நீராகாரமே எம் உணவு; இனி நீரே ஆகாரமாகும் நிலைவருமோ?” என்று நொந்த சிந்தையோடு அமர்ந்திருப்பவர்கள் இவர்கள் என்கிறார்  திரு.  ஸ்ரீதரன் வெங்கடகிருஷ்ணன்.

நம்பிக்கை

வேகமான நகரத்தில்
விரைவாக செல்வோரே
சோகமே எங்களது
சொத்தாகும் அறிவீரோ ?

ஆழக் குழி தோண்டி
அஸ்திவாரமிட்டு – பிறர்
வாழக் கட்டிடங்கள்
வாகாய்க் கட்டிடுவோம் !

வானம் கைகுலுக்கும்
வண்ணக் கட்டிடங்கள்
எத்தனையோ நாங்கள்
எடுத்துக் கட்டி விட்டோம் !

சொந்தக் குடிசை என்று
சொல்ல எதுவுமில்லை
வண்ணமிட்ட கைகளுக்கு
அன்னமிட யாருமில்லை !

கோவில் சுவர் எங்கள்
கூடும் இடமாகும் – எம்
நாவில் உணவு படவே
நாட்கள் பலவாகும் !

ஆளுக்கு அரைக்குவளை
அளவாக நீர் உண்டு
தாவிக் குடித்தே பசித்
தாகம் தீர்த்திடுவோம்

நீராகாரம் முன்பு நாங்கள்
நிதமும் பருகிடுவோம்
நீரே ஆகாரமாகும்
நிலை வந்து விடுமோ ?

எங்களுக்குள் பயம்
எட்டிப்பார்க்கும் நிதம்
கண்களில் நீர் தாரை
கொட்டித்தீர்க்கும் !

தாளாப் பசியினிலும்
தளராது எங்கள் மனம்
உள்ளுணர்வு வந்து
உரைத்தது மெதுவாக

வந்துவிட்ட ஊரடங்கு
விரைவாகத் தகருமென !
எங்கள் வாழ்க்கை
இயல்பாக நகருமென !

நாங்கள் மூவருமே
நன்று உணர்ந்திட்டோம்
நம்பாமை இனி தாழ்வு
நம்பிக்கையே வாழ்வு !

*****

”அழையாக் கொடுநோயால் அகிலம் அல்லலுற்றாலும் உழைப்போர்க்கு உண்டி கிடைத்திட நாம் வழிகண்டிட வேண்டும்!” எனும் நியாயமான கவலையைக் கவிதையில் பதிவுசெய்திருக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

உதவிடு உழைப்பவர்க்கு…

உழைப்பவர் ஓய்வில் அமர்ந்திடலாம்
ஊதியம் உழைப்பு இரண்டுமிலை,
அழைத்திடும் வயிறு பசியினிலே
அடங்கா ததுதான் வெறும்நீரில்,
அழையாக் கொடுநோய் வந்ததாலே
அல்லல் படுவார் அனைவருமே,
உழைப்போர் உண்டிட வழிவகுத்தே
உயிர்க்கொலும் நோயையும் ஓட்டுவோமே…!

*****

இரு கவிதைகளைப் படக்கவிதைப் போட்டிக்குப் படைத்துத் தந்திருக்கும் திருமிகு. சுதா மாதவன், தம்முடைய முதற்கவிதையில், ”குடல் தின்னும் திரவமதில் மயங்கும் மானிடா! குடும்ப மானம் பறிவோவதை நீ எண்ணவில்லையா? நன்னெறிக்குத் திரும்பு! உன்னத வாழ்க்கையை விரும்பு!” என்று அறிவுறுத்துகின்றார்.

இரண்டாவது கவிதையில், ”அரசின் வருவாய்ப் பெருக மதுக்கடலில் மக்கள் வீழ்வதா? என்று வினாவெழுப்பி, மதுவை எதிர்த்துவெல்லும் மனவுறுதி கொள்வோம்!” என்று வலியுறுத்துகின்றார்.

எப்போது திறக்குமென்று காத்திருக்கிறாயோ?
ஏன் இப்படியானோமென நினைக்கிறாயோ?
கொரோனாவை அழிக்குமென இதை குடிக்கிறாயோ?
குடும்பத்தில் நிம்மதியை குலைக்கிறாயோ?

காடுமேடுக் காட்டில் நிற்கிறாயோ?
காசுபணம் நிரம்ப வைத்திருக்கிறாயோ?
குடல் தின்னும் திரவமதில் மயங்குகிறாயோ?
குடும்ப மானம் பறிபோக நினைக்கிறாயோ?

உன் சுற்றங்கள் நினைவில்தான் வரவில்லையோ?
குதூகலமாய் உன் மழலைமுகம் தெரியவில்லையோ?
தாலி கட்டியவள் கண்ணீரை நிறுத்தவில்லையோ?

மௌனமாய் இருப்பதால் நீ
ஞானியல்ல!
மடைதிறந்த மது உனக்கு நல்லதல்ல!
உடற்பயிற்சி யோகா தினம் உடனே செய்க!
உன்னத நிலை அடைந்திடு வாழ்வை இனிதே வெல்ல!!!!!

*****

அரசின் வருவாய்ப் பெருக
மதுக்கடலில் மக்களா?
எதிர்ப்பு சக்தி தரும் என்கிறார்களே
அதை எதிர்க்கும் சக்தி நம்மிடம் இல்லையா?
உன் வாழ்க்கை உன் கையில்
அமர்ந்திருந்து யோசி
ஆவாய் நீ சன்யாசி
புதுமைமிகு எண்ணம் எழும்
பொலிவு பெறும் இது திண்ணம்!

*****

பாடுபடும் பாட்டாளிகளெல்லாம் அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் அவதியுறும் நிலைகண்டு குமுறி, ”நாட்டு மக்கள் நலங்காணத் திட்டம் தீட்ட வகையின்றி ஓட்டதனைக் காசுக்குப் பெறும் குடியாட்சி ஒன்றே போதும்!” என்று அங்கதமாய் நாட்டின் கேடுகெட்ட நிலையைப் படம்பிடித்துக் காட்டியுள்ளார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

போதுமென்ற மனம்!

பாடுபட்டு தானுழைக்கும் பாட்டாளிக்குக்
காடு வேண்டாம் கழனி வேண்டாம்
பட்டுச் சட்டை பீதாம்பரம் வேண்டாம்
மேலுடுத்தி மானங்காக்க ஆடை போதும்!

வீடு கட்டி வாழ வைக்கும் உழைப்பாளிக்குக்
கோட்டை வேண்டாம் கொத்தளம் வேண்டாம்
தங்கம் வெள்ளி பித்தளை வேண்டாம்
ஓய்வொடுக்க கூரை வீடு அஃதே போதும்!

சோறு போட்டு உயிர் காக்கும் விவசாயிக்குக்
கூழ் கஞ்சி இருந்தால் போதும்!
பாதை போடும் தொழிலாளியை தெருவில்
நடக்க அனுமதி தந்தால் போதும்!

நாட்டு மக்கள் நலங்காண
திட்டம் தீட்ட வகையின்றி
ஓட்டதனைக் காசுக்குப் பெறும்
குடியாட்சி ஒன்றே போதும்!

கனவு கொண்டு முயற்சி இன்றி
மதுக்கடையில் வாழ்வு தொலைத்து
இலவசத்தில் வாழ்ந்திருந்தால்
போதுமென்ற மனமே போதும்!

*****

விழிப்புணர்வூட்டும் வீரியமிகு சிந்தனைகளை வார்த்தைகளில் ஏற்றித் தம் கவிதைகட்குப் பொலிவூட்டியிருக்கும் கவிஞர்களைப் பெரிதும் பாராட்டுகின்றேன்.

அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாக நான் தேர்ந்தெடுத்திருப்பது…

சிந்திக்கவைக்கும் மூன்று கவிதைகளை நான் சிறந்த கவிஞராக இவ்வாரம் தேர்ந்தெடுத்திருப்பவர் போட்டிக்குத் தந்திருந்தாலும் அதில் என்னைக் கவர்ந்த ஒன்றை இங்கே பதிவிடுகின்றேன்.

மூவரும் உழைப்பால் மட்டுமே ஒன்றான வர்கள் அல்லர்
உறவுமுறையிலும்

அப்பா மகன் மருமகன்
ஆலோசனையில் அதுவும்
அதிதீவிர ஆலோசனையில்

நாற்பது நாட்கள் குடியை மறந்திருந்தோம் குடிசையில்
குடியிருந்ததோ பூரண நிம்மதி

மறக்க முடிந்தது மதுவை
துறக்க முடிந்தது போதையை
வியக்கக் கண்டது புதிய பாதையை

திறக்கட்டும் மீண்டும் கையாலாகாத அரசுகள்

துறந்தது துறந்ததுதான்
மறந்தது மறந்தது தான்
மது எதற்கு இனி என்றான பின்பு
இலவசமாய்த் தந்தாலும் மது மலமே!

மாமா நீ உழைக்கவே வேண்டாம்
குடிக்காம இரு பிள்ளைக்கு அப்பனாய்
பாடம் நடத்தி விட்டாள் பெஞ்சாதி!

குடி குடியைக் கெடுக்கும்
வாசகம் அரசுக்குப் பொருந்தாதா?
ஆறு வயசுப் பையன் கேட்கிறான்!

உழைப்பவன் உயர்வாகச் சிந்திக்க மறக்கடிக்கவே மது
அரசியல் சதுரங்கத்தில்
உழைப்பாளிகளைத்தான்
பகடைக்காய்களாக
உருட்டி விளையாடுகின்றன
ஆளுங்கட்சியும்
எதிர்க்கட்சியும்!

இருகட்சிகளுமே கூட்டணி
அமைப்பர் மது விசயத்தில்!

அமாவாசை அன்று மூடிய மதுக்கடைகளை மீண்டும்
ஒளிமயமான பவுர்ணமி அன்று அரசு திறக்கலாம்
குடும்பத்தை அமாவாசை இருட்டாக்கும் மதுவிற்கு
தர்ப்பணம் பண்ணியாச்சு!

தனிமனிதன் திருந்திய பின்பு
எவன் குரல் எதற்கு?

மதுக்கடைகளை மூடிப் பாரு
முதலில் விபத்துக்கள் குறையும்
மருத்துவமனைக்கு வேலையில்லை
குற்றங்கள் குறையும்
தேசபக்தி வளரும்!

குடி குடியைக் கெடுக்கும்
அரசும் சிந்தனை கொண்டால்
குடி மாநிலத்தைக் கெடுக்கும்
குடி நாட்டைக் கெடுக்கும்

மூவர் நாங்கள் சிந்தித்து விட்டோம்
சிந்திய வியர்வைத் துளிகள்
பெண்டாட்டி பிள்ளைகளுக்கே!
அவர்களை நடுத்தெருவில் நிற்க வைக்கும் மதுவிற்கல்ல!

*****

பூட்டிய டாஸ்மாக் இரும்பு கேட்டினை (gate) திறந்து மக்களுக்குக் கேட்டினை அளிக்கும் மதுவைத் தமிழக அரசு மீண்டும் அனுமதித்ததை வன்மையாகக் கண்டிக்கும் வகையில் எழுதப்பட்டிருக்கும் இந்தக் கவிதையில்,  

மறக்க முடிந்தது மதுவை
துறக்க முடிந்தது போதையை
வியக்கக் கண்டது புதிய பாதையை
திறக்கட்டும் மீண்டும் கையாலாகாத அரசுகள்!

துறந்தது துறந்ததுதான்
மறந்தது மறந்தது தான்
மது எதற்கு இனி என்றான பின்பு
இலவசமாய்த் தந்தாலும் மது மலமே!” என்ற வரிகள் பொட்டில் அடித்ததைப்போல் மதுக்கடைகளைத் திறப்பதை அரசும், மது அருந்துவதை மக்களும் முற்றாகக் கைவிட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.  இன்றைய சூழலுக்கு அவசியமானதொரு கவிதையைப் படைத்தளித்திருக்கும் திரு. காமாட்சிநாதனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *