வேட்டி போர்த்திய உடல் (சிறுகதை)

பாஸ்கர் சேஷாத்ரி
“சார், அந்தப் பக்கம் போகாதீங்க, இட்ஸ் ஹாரிபல்”
“ஏன் என்னாச்சு?”
“எவனோ ஒருத்தன் குடிச்சிட்டு துணி மணி இல்லாம இருக்கான். எதிர்த்த பக்கம் போங்க.”
நான் நகர்ந்து அந்தப் பக்கம் சென்றாலும் என் கண்கள் அவன் இருந்த திசை நோக்கி இழுக்க அவனை நோக்கிச் சென்றேன் .
மெலிந்த தேகம். எலும்பெல்லாம் தெரியும் ஒடிசலனா உடல். இந்த நிலையிலும் போதை என்ற விஷயம் எவ்வளவு பெரிய வேதனை. மனம் கலங்கியது.
நேர அங்கே போய் அவனைப் பார்த்தேன். கிட்டதட்ட முழு நிர்வாணம். பக்கத்தில் இருந்தார் ஒருவர்.
“சார், ஒரு சின்ன ஹெல்ப்” என்றேன்.
“சொல்லுங்க சார்”
“எதிர்க்க ரேவதில ஒரு நாலு முழ வேட்டி வாங்கி வர முடியுமா? இந்தாங்க பணம்.”
“தோ சார். பில் யாரு பேர்ல?”
“அதெல்லாம் வேணாம் ப்ளீஸ்.”
“இவரை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போலாமா?”
“போலாம் சார். ஆனா பக்கத்துல போனா ஒரே கலீஜ். ஆனா உயிர் இருக்கு.”
வேட்டி வந்தது. “கொஞ்சம் போர்த்த முடியுமா?” எனக் கேட்டேன். பதில் வரவில்லை.
நெருங்கிப் போர்த்தினேன். “இவரைப் பத்தி யாருக்காவது தெரியுமா?” எனக் கேட்டேன்.
“தெர்ல சார். ஆனா இங்க தான் குந்தினு இருப்பான் பேரல்லாம் தெர்ல.”
“ரெண்டு தபா வந்து போலீஸ் துரத்திச்சு.. அவன் போல. என்னா தில்லு பாரு.”
ஒரு காவலர் இரு சக்கர வண்டியில் வந்தார்.
“சார் நீங்க?”
சொன்னேன்.
“இப்ப ஆம்புலன்ஸ் வரும்” என்றார்.
உங்க நம்பரைக் கொடுங்க என்றார் . கொடுத்தேன்.
“பயப்படாதீங்க. எங்களுக்கு இதெல்லாம் சகஜம்” என்றார் .
“இட்ஸ் ஒகே.” அவர் எண்ணை வாங்கிக்கொண்டேன்.
“ஏன் சார் இவரை ஏதாவது மறுவாழ்வு இல்லத்துல சேர்க்க முடியுமா?”
பதில் வரவில்லை ..
“சார். நீங்க கிளம்புங்க, அது உங்க காரா?”
இல்லை என்றேன்.
ஆம்புலன்ஸ் வர நான் புறப்பட்டேன்.
“சார் என்ன பேர் சொன்னீங்க?”
“ராமஸ்வாமி.”
“நன்றி. ராயப்பேட்டை தான் போறேன். கூப்பிடுறேன்” என்றார்
இந்தக் குடி பற்றியும், அதன் தாக்கத்தையும் பற்றியும் உள்ளே நிறைய கேள்விகள் எழுந்தன. தீர்வாக ஏதும் கைகூடவில்லை.
கைப்பேசியில் ஓர் அழைப்பு .
“சார். நான் சண்முகம். மார்னிங் பாத்தீங்களே”
“சொல்லுங்க, இ ஒன் தானே?”
“ஆமா சார்.”
“என்னாச்சு?”
“அவர் இரண்டு மணிக்கு இறந்துட்டார் சார்”
“மை காட்” என்றேன் .
ஆர் எம் ஒ ரிப்போர்ட் இப்போதான் வந்தது. ஆனா நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. அவருக்கு கொரோனாவும் இல்லை . அவர் ஆல்ககாலிக் கூட இல்லை.”
“அப்ப என்னா தான் ஆச்சு?”
“ஸ்டார்வேஷன் சார். பட்டினிச் சாவு.”
இணைப்பு துண்டிக்கப்பட்டது .
அவன் உடலைக் கட்டிப் பிடித்து அழ வேண்டும் போல இருந்தது.