1

புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
விளார் புறவழிச்சாலை,
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

‘சொல்’ வரவும் பொருள் நிறைவும்

முன்னுரை

‘நல்வரவு’ என்பது சடங்குகளிலும் விழாக்களிலும் பெருவழக்கு. ‘சொல்வரவு’ உரையாசிரியர்களுக்கு உரியது. சொல்வரவு என்றால் என்ன? நூலாசிரியரின் உள்ளக் கருத்தினை முற்றுணர்ந்து உரையெழுதுங்கால் அக்கருத்தினை முழுமையாக வெளிப்படுத்தும் சொற்கள் அல்லது சீர்கள் அப்பாட்டில் காண இயலாதபோது உரையாசிரியர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சொற்களை வருவித்துக் கொள்வதற்கே சொல்வரவு என்று பெயர்.   சொல்லை வரவு வைப்பது. சொல்வரவாகும். செல்வமாகிய பொருளை வரவு வைப்பது உலகியல்பு. ஆனால் பாட்டில் இல்லாத சொற்களைப் பெய்து பாட்டுக்கான முழுப்பொருளையும் வரவு வைப்பது உரையாசிரியர் சிந்தனைத் திறனாகக் கொள்ளப்படும். திருக்குறளின் குறுகிய வெண்பா யாப்பு என்னும் வடிவத்தைப் பரிமேலழகர் எப்போதும் நினைவிற்கொண்டே உரையெழுதுகிறார். அதனால்தான் ஆழமான பொருள் அடங்கிய யாப்புக்குள் அமைகிறபோது ‘உய்த்துணர்தல்’ என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிடுகிறது. உய்த்துணர்வும்  உரை சிறப்பும் நேர்விகிதத்தில் அமைவதே சிறப்பு.

‘சொல்வரவு’ ஓர் விளக்கம்

கட்டுரையின் தோரண வாயிலாகச் சொல்வரவு என்பதைப் புரிந்து கொள்வது அதன் உள்ளடக்கத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள ஏதுவாகலாம்.

“சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப்புணையைச் சுடும்” (306)

என்னும் குறட்பாவில் “சினமென்னும் நெருப்பு தனக்கு இடமானவரையே யன்றி அவர்க்கு இனமாகிய ஏமப்புணையைச் சுடும்’ என்று உரையெழுதினார் பரிமேலழகர். ‘இனத்தை ஏமப்புணையாக’ உருவகம் செய்த திருவள்ளுவர் அப்புணையால் கடக்கும் பிறவியைக் கடலாக உருவகம் செய்யவில்லை என்பதைப் பரிமேலழகர் அறிந்து கொள்கிறார். கொண்டு,

“இன மென்னும் ஏமப்புணை என்னும் ஏகதேச உருவகத்தால் பிறவிக்கடலுள் அழுந்தாமல் வீடு என்னும் கரையேற்றுகின்ற என வருவித்து உரைக்க”

என்று புணைக்கேற்ற எதிர்நிலை உருவகத்தைத் தம் சிந்தனையாற்றலால் சில சொற்களை வருவித்து உரையெழுதுவதன் மூலம் கண்டறிந்து கூறுவதைக் காணலாம். மேற்கண்ட சில சொற்களை வருவித்து உரைக்காமல் குறட்பாவின் ஏழு சீர்களுக்கு மட்டும் உரைசொன்னால் ‘இனமென்னும் ஏமப்புணை’ என்னும் உருவகம் விளக்கம் பெறாத நிலையில் வெகுளாமையினால் வரும் நன்மையும் வெகுளியினால் வரும் இழப்பும் முற்றும் புலப்படாது.

புகழ்வதற்கும் தகுதி வேண்டும்!

இன்றைய நடப்பியல் உலகில் சில பொருத்தமற்ற செயல்பாடுகளை அனைவரும் காண முடியும். குறிப்பாக அரசியற்களத்தில் இது அதிகம். ஒரு நிகழ்வு. தகுதி வாய்ந்த ஒருவரைத் தகுதியே இல்லாதவர் பாராட்டுவது. அதுபோலவே பெருந்தகுதி வாய்ந்த ஒருவரைத் தகுதியே இல்லாதவர் விமர்சிப்பது. ‘உரிமை’ என்ற பெயரால் நடக்கும் இந்தக் கூத்து பெரும்பாலும் கண்டுகொள்ளப்படுவதில்லை. ஆனால் அச்சான்றோர்கள் உயிரோடிருக்கும் நிலையில் அவ்விரண்டனையும் ஒன்றாகவே பாவித்துப் புன்னகையோடு அமைதியடைவர். இந்தப் பின்புலத்தை நன்கு உள்வாங்கிக் கொண்டால்தான் பின்வரும் குறட்பாவிற்குப் பரிமேலழகர் எழுதிய உரை நுட்பம் புரியக்கூடும்.

“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்” (69)

என்ற குறட்பாவிற்குத் (தான் தாயான அத்தருணத்தில்)

“தான் பெற்ற பொழுதை மகிழ்ச்சியினும் மிக மகிழும்; தன் மகனைக் கல்வி கேள்விகளால் நிறைந்தானென்று (அறிவுடையோர்) சொல்லக் கேட்ட தாய்”

என்று உரையெழுதிய பரிமேலழகர் குறட்பாவில் இல்லாத ஒரு எழுவாயைப் பற்றிச் சிந்திக்கிறார். ‘தன் மகன் சான்றேன்’ எனக் கேட்ட தாயைக் காட்டிய வள்ளுவர், ‘சான்றோன் எனப் புகழ்ந்தவரைச்’ சுட்டவில்லை. ‘பாம்பறியும் பாம்பின் கால்’ என்பதும் ‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ என்பதும் வழக்கு. இவற்றை முற்றும் அறிந்த பரிமேலழகர், ‘தந்தை அவையத்து முந்தியிருப்பச் செய்த மகனை அறிவுடையார் சான்றோன் எனப் புகழக்கேட்டால்தான் தாய் மகிழ்வாள்’ என்று சிந்தித்து உரையெழுதினார். ஆனால் ‘அறிவுடையார்’ என்னும் சொல் குறட்பாவில் இல்லை. பரிமேலழகர் அதனை வருவித்து எழுதி அதற்கான காரணத்தையும் பதிவு செய்கிறார்.

“அறிவுடையார் என்பது வருவிக்கப்பட்டது சான்றோன் என்றற்கு உரியவர் அவராகலின்”

பரிமேலழகர் இதனை வருவித்து உரைக்காவிட்டால் புகழுதற்குரியார் யார் என்பது புலப்படாததோடு, தகுதியுள்ள ஒருவனைத் தகுதியற்றவர்களும் புகழும் நிலை வரலாம் என்னும் பிறழ உணரும் நிலை வந்துவிடும். திருவள்ளுவரின் கருத்து அதுவல்லவாதலின் ‘புகழ்வதற்கும் தகுதி வேண்டும்’ என்னும் நுட்பத்தை உணர்ந்துரைக்கிறார் பரிமேலழகர்!.

எதுவரை இருக்கும் ‘இசை’?

உலக வழக்கில் ஒரு தொடரைப் பலரும் செவிமடுத்திருக்கலாம். ‘அவர் மறைந்தாலும் அவர் புகழ் இருக்கும்’ சரி!. எதுவரை இருக்கும்? அவர்தான் மறைந்துவிட்டாரே? அவரை யார் புகழ்வர்? அவரைத் தவிர மற்றவர்கள் அவரைப் புகழ்ந்து கொண்டிருப்பார்கள். அது எதுவரை நீளும்? இந்த உலகத்தின் இறுதி மனிதன் இருக்கிறவரை நீளும். அப்படியானால் புகழ் என்பது இந்த உலகம் உள்ளவரை அழியாது நிற்கும். இதுபற்றிய திருக்குறள் ஒன்று இப்படி அமைந்திருக்கிறது.

“ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்” (156)

“தமக்குத் தீங்கு செய்தாரை ஒறுத்தார்க்கு உண்டாவது அவ்வொருநாளைய இன்பமே. அதனைப் பொறுத்தார்க்கு உலகம் அழியுமளவும் புகழ் உண்டாம்“ என்று உரையெழுதுகிறார் பரிமேலழகர். புகழுக்குரிய காரணங்கள் ‘கல்வி, ஆண்மை’ (231) எனப் பல. அக்காரணங்களைச் செய்கிறவன் மறைகிறான். அவன் தேடிய புகழ் இறவாமல் நிற்கிறது. ‘இறவாது நிற்கும் கீர்த்தி’ (புகழ் அதிகார முன்னுரை)  ‘செய்தவர் இறந்து போக தான் இறவாது நிற்கும்’ (238) என்றெல்லாம் பரிமேலழகர் சொற்பொருள் விரிப்பார். அது இவ்வுலகம் உள்ளளவும் அழியாது நிற்கும். உலகம் அழிகிறபோது புகழும் அழியும். ‘பொன்றுந் துணையும் புகழ்’ என்றாரேயன்றி ‘எது பொன்றும்? என்பதற்கான எழுவாய் பாட்டில் இல்லை. வாழையடி வாழையாகத் தோன்றும் உலகத்துச் சான்றோர் புகழைச் செய்வதனைத் தொடர்ந்து புகழ்ந்து கொண்டேயிருப்பர். இத்தகைய பொருள் விரிப்பதற்கு ஏதுவான ‘உலகம்’ என்னும் சொல் குறட்பாவில் இல்லையென்பதை உணர்ந்து கொண்ட பரிமேலழகர்,

“ஆதாரம் ஆகிய உலகம் பொன்ற புகழும் பொன்றுமாகலின் ஏற்புடைய உலகு என்னும் சொல் வருவித்து உரைக்கப்பட்டது”

என்று விளக்கவுரை எழுதுகிறார். புகழ் அழியாது நிற்பது. புகழைச் செய்தவர் மறைந்தாலும் அவரைப் புகழ்வார் தோன்றிக் கொண்டே இருப்பர். இச்சான்றோர்களையே ‘உலகம்’ என்னும் சொல் சுட்டும். உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்பது சேந்தன் திவாகரம். சான்றோர்களைக் குறிக்கும் இச்சொல் இத்திருக்குறளில் இல்லையாதலின் அதனை வருவித்து உரைக்கிறார் பரிமேலழகர். இவ்வாறு ‘உலகம்’ என்னும் இச்சொல்லை வருவித்து உரைக்காவிட்டால் ‘எது பொன்றும் அளவும்?’ என்னும் வினாவுக்கு விடையின்றிக் குறட்பா ‘குன்றக்கூறல்’ என்னும் குறைபடுதற்கு வாய்ப்பு உண்டு. ஒரே ஒரு சொல்லை வருவித்து உரைத்ததன் மூலம் “பிறருடைய தீமையைப் பொறுத்துக் கொண்டவர்கள் உலகம் உள்ளவரை (அதாவது உலகம் அழியும் வரை) புகழப்படுவார்கள் என்னும் முழுமையான குறட்பாவின் கருத்து புலப்படுகிறது!.

சொன்னால்தான் சிக்கல்

சொல்லுக்கு இரண்டு பண்புகள் இன்றியமையாதன. ஒன்று அது சொல்வானுக்கும் கேட்பானுக்கும் நன்மை தர வேண்டும். இரண்டு பண்போடு கூடிய சொற்களாக அமைதல் வேண்டும். இவ்விரண்டு தன்மைகளும் இல்லாத சொற்களைப் பல்லார் நிறைந்த அவைக்கண் பேசுவது அவர்மாட்டு நீதியோடு படாததாய்ச் சொல்பவனை நற்குணங்களின் நீக்கும். இந்தக் கருத்தமைந்த திருக்குறள் பொறையுடைமை அதிகாரத்தின் நான்காவது குறட்பாவாக அமைந்திருக்கிறது.

“நயன் சாரா நன்மையின் நீக்கும் பயன்சாரா
பண்பிற் சொல் பல்லாரகத்து” (194)

“பயனோடு படாத பண்பில் சொற்களை ஒருவன் பலரிடைச் சொல்லுமாயின் அவை அவர்மாட்டு நீதியோடு படாவாய், அவனை நற்குணங்களின் நீக்கும் எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

“பண்பு – இனிமையும் மெய்ம்மையும் முதலாய சொற்குணங்கள். சொல்லுமாயின் என்பதும் அவர் மாட்டு என்பதும் எச்சமாக வருவிக்கப்படடன”

என்று விளக்கமளிக்கிறார். இந்த விளக்கத்தில் குறட்பாவில் இல்லாத ‘சொல்லுமாயின்’, ‘அவர்மாட்டு’ என்னும் இரண்டு சொற்களை வருவித்துக் கொண்டு உரையெழுதுவதாகக் கூறுகிறார். சொல்லப்படும்போதுதான் சொற்களுக்கான விளைவுகள் உண்டு. மனத்துக்குள்ளேயே இருந்தால் அது சொல் அல்ல. பின் விளைவும் கிடையாது. அதிகாரமும் பயனில  சொல்லாமையேயன்றிப் ‘பயனில எண்ணாமை’ என்பதன்று. பாட்டில் இனிமையும் பயனும் இல்லாத சொற்களை ஒருவன் சொன்னால்தான் அந்த அவையினின்றும் நீக்கப்படுவான். அமைதியாக இருந்துவிடின் நீக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை. பாட்டில் ‘சொல்லுமாயின்’ என்பதற்கான குறிப்பு இல்லை. குறிப்பு இல்லாதபோது பாட்டின் கருத்து தெளிவாகாது. எனவே பரிமேலழகர் ‘இனிமையும் பயனுமற்ற சொற்களைச் சொல்லுமாயின்’ என உரைகண்டு ‘சொல்லுமாயின்’ என்னும் சொல்லை வருவித்துக் கொண்டதாக எழுதுகிறார். இனி அவனை யார் நீக்குவது என்பதற்கும் குறட்பாவில் பொருத்தமான சொல்லாட்சி இல்லை. ‘பல்லார் அகத்து’ என்னும் தொடர்கொண்டு ‘அவர்மாட்டு அச்சொற்கள் நீதியோடு படாவாய்’ என எழுதுகிறார். எனவே ‘அவர்மாட்டு’ என்னும் சொல்லை வருவித்துக் கொள்வதாகக் கூறி உரைநிறைவு காண்கிறார். இவ்வாறு இவ்விரண்டு சொற்களையும் வருவித்து உரை கண்டிருக்காவிட்டால் என்ன நேர்ந்துவிடும் எனச் சிலர் நினைக்கக்கூடும். பயனும் இனிமையும் அற்ற சொற்களை நினைத்தாலும் கேடுவருமா என்னும் ஐயத்தைக் குறட்பா களைந்திருக்க முடியாது. ‘பயன்சாராப் பண்பில் சொல் பல்லாரகத்து நயன் நீக்கும்’ என்றுதான் இருக்கிறதே தவிர, ‘பல்லாரகத்துச் சொன்னால்தான் நீக்கும்’ என்பதாகவோ யார் அவனை நீக்குவார்கள் என்பதற்கான விடையோ குறட்பாவில் இல்லை. இவ்விரு ஐயங்களையும் களையுமாறு பரிமேலழகர் உரை அமைந்திருப்பதைக் காணலாம்.

மேகம் மழையாகலாம்! மழை மேகமாகாது!

இயற்கையை மனிதன் பயன்படுத்திக் கொள்ளலாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் அதன் கோரத்தாண்டவத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.  ஆனால் அதனை மறுதலிக்கவோ மாற்றவோ எதிர்த்து நிற்கவோ இயலாது. காரணம் அது இயற்கை. இறைவனின் மறுவடிவம். இதனை முற்றும் உணர்ந்தவர் திருவள்ளுவர். மழையின் சிறப்பை முற்றச் சொல்லும் ‘வான்சிறப்பு’ என்னும் அதிகாரத்தில் விடுபட்ட கருத்தொன்றினை நினைவோடு ஒப்புரவறிதல் என்னும் அதிகாரத்தில் உவம அளவையால் பதிவு செய்து நிறைவு செய்கிறார். ஒப்புரவை யாரும் செய்யலாம். ஆனால் மேகங்கள் போல்வார் செய்யும் ஒப்புரவுகளுக்கு எதிர்வினை ஆற்ற இயலாது. இந்தக் கருத்தினைச் சொல்லவரும் திருவள்ளுவர் அவருக்கு மேகத்தை உவமமாகக் கொள்கிறார்.

“கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட்டு
என்னாற்றும் கொல்லோ உலகு?” (211)

என்னும் குறட்பாவிற்குத்,

“தமக்கு நீர் உதவுகின்ற மேகங்களினிடத்து உயிர்கள் என்ன கைம்மாறு செய்யா நின்றன? அம்மேகங்கள் போல்வார் செய்யும் ஒப்புரவுகளும் கைம்மாறு நோக்குவன அல்ல”.

எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

“என் ஆற்றும்? என்ற வினா யாதும் ஆற்றா என்பது தோன்ற நிற்றலின் அது வருவித்து உரைக்கப்படும்”

என்று விளக்கவுரை தருகிறார். இந்த விளக்கவுரையில் ‘யாதும் ஆற்றா’ என்னும் குறட்பாவில் இல்லாததொரு சொல்லை வருவித்துப் பயன்படுத்துகிறார். அதற்கான காரணத்தையும் அவரே பதிவு செய்கிறார். ‘உன்னால் முடியுமோ எனின் முடியாது’ என்பது போல ‘என் ஆற்றும்?’ என்ற வினா ஆற்றாது என்பது தோன்ற நிற்கிறதாம். அதனாலேயே ‘யாதும் ஆற்றா’ என்பதை வருவித்து உரைத்ததாகக் கூறுகிறார்.

  • யாதும் ஆற்றா என்னும் இரண்டு சொற்களை வருவித்து உரைத்திருக்காவிட்டால் ஏதேனும் ஆற்றக் கூடுமோ? என்னும் ஐயம் களையும் ஆறில்லையாம் என்க.

இந்த உவமத்தில் சிறப்பு என்னவென்றால் மேகம் மழையாகுமேயன்றி அம்மழை மேகமாகாது. மேகத்தையொப்பார் செய்யும் ஒப்புரவு அத்தகையது. அதாவது திரும்பச் செய்ய இயலாது என்பதாம். குறட்பாவின் நுட்பம் என்னவெனின் மழையான மேகம் கலைந்துவிடுமாம்!. பரிமேலழகர் உரை நுட்பம் என்னவெனின் மாரிக்கு மழையென்னும் பொருளிருக்க ‘மேகம்’ என்று பொருள் உரைத்ததுதான்!

உளர் சிலராகிய காரணம்

இவ்வுலகில் செல்வர் சிலராகவும் வறியவர் பலராகவும் இருப்பதற்கு ஒவ்வொரு துறை சார்ந்தவரும் ஒவ்வொரு கருத்தினைச் சொல்வர். அது இயற்கையே. அறம் உரைக்க வந்த திருவள்ளுவர் இதற்கு அறவழிக் காரணம் காண்கிறார். இல்லாதவர் பலராக இருப்பதற்கு நோலாதவர் அதாவது தவம் செய்யாதவர் பலராக இருப்பதுதான் காரணம். இருப்பவர் சிலராக இருப்பதற்குக் காரணம் நோற்பார் அதாவது தவம் செய்பவர் சிலராக இருப்பதுதான் காரணம் எனத் தெளிவாக்குகிறார். இந்தக் கருத்திலும் காரண, காரிய விளக்கத்திலும் நாம் செல்லவில்லை. இந்தக் கருத்தினைத் திருவள்ளுவர் பதிவு செய்திருக்கிற முறை கற்பாருக்கு எளிதாக இருக்கிறது எனக் கருதுமாறு இல்லை. பாடல் எப்படியிருக்கிறது?

“இலர் பலராகிய காரணம் நோற்பார்
சிலர் பலர் நோலா தவர்” (270)

‘இலர் பலராகிய காரணம் நோற்பார் சிலர்’ என்று இருக்கிறது!. எவ்வளவு பெரிய முரண்? நோலாதவர் பலராக இருப்பதால்தான் இலர் பலராகின்றனர். ஆனால் திருவள்ளுவர் யாப்புக்கட்டமைப்பைக் கருதிக் குறுகத் தறித்த காரணத்தால் நோற்பார் சிலர் என்பதற்கான காரியத்தைச் சொல்லாமல் விடுகிறார் என்பதை உய்த்துணரலாம். ‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர்’ என்பது போன்ற உடன்பாட்டைப் பலவிடங்களில் முன்னெடுத்த திருவள்ளுவர் இங்கே இல்லாதவராகிய எதிர்மறையை முன்னெடுக்கிறார். எடுத்தவர் அதனை இன்னும் குழப்பமாக ‘நோற்பார் சிலர்’ என்று காரணத்தைக் கூறுகிறார். இந்தத் தொடர் எப்படி இருந்திருக்க வேண்டும்? இலர் பலராகிய காரணம் நோலாதவர் பலர் என்றல்லவா இருந்திருக்க வேண்டும்? அப்படியில்லையே? எனவே  உரையாசிரியர் பரிமேலழகர் தனது கடமையை உணர்ந்து ‘நோற்பார் சிலர்’ என்னும் காரணத்திற்கான காரியத்தை வருவித்து உரைக்கிறார், எப்படி? இப்படி!

“நோற்பார் சிலர் எனக் காரணம் கூறினமையின் காரியம் வருவித்து உரைக்கப்பட்டது”

இலர் பலராகிய காரணம் – உலகத்துச் செல்வர்கள் சிலராக நல்கூர்வார் பலராதற்குக் காரணம் யாது எனின் நோற்பார் சிலர் நோலாதவர் பலர் – தவம் செய்வார் சிலராக அது செய்யார் பலராதல்.

  • இலர் பலராகிய காரணம் என்றே பாட்டில் அமைந்திருக்க, பரிமேலழகர் உளர் சிலராகிய காரணத்தையும் குறட்பாவிலிருந்து எடுத்து மொழிகிறார்.
  • நோற்பார் சிலர் என்னும் காரணத்திற்கான காரியத்தைக் கண்டறிந்து உளர் சிலர் என்பதையும் எடுத்து மொழிகிறார்.

இவ்வாறு ‘நோற்பார் சிலர்’ என்பதற்கான காரியத்தைக் கண்டறிந்து அதனை வருவித்துக் கூறியிருக்காவிட்டால் ‘நோற்பார் சிலராக இருப்பதனால் இலர் பலரானார்’ என்னும் பொருள் மயக்கம் நிலவும். மேலும் நோற்பார் சிலர் என்பதற்கான காரியம் இறுதிவரைக் கண்டறிய இயலாமற் போயிருக்கும்.

இளமையில் துறப்பதே இன்பம்

அறத்துப்பால் துறவறவியலில் அமைந்திருக்கிற அதிகாரங்களில் துறவு என்பதும் ஒன்று. அதனுள் இரண்டாவது பாடலாக அமைந்திருப்பது,

“வேண்டின் உண்டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டு இயற்பால பல” (342)

என்னும் குறட்பாவாகும். இக்குறட்பாவுிற்குத்,

  • துறந்தபின் – எல்லாப் பொருள்களையும் துறந்தால்
  • ஈண்டு இயற்பால – ஒருவர்க்கு இம்மைக்கண்ணே உளவாம் முறைமையையுடைய இன்பங்கள் பல
  • வேண்டின் – அவ்வின்பங்களை வேண்டின்
  • உண்டாகத் துறக்க – அவற்றைக் காலம் பெறத் துறக்க

எனப் பொழிப்புரை எழுதுகிறார். ‘துறக்க’ என முதலில் ஏவிய திருவள்ளுவர் அவ்வாறு (துறந்தால்) ‘அதன் பயனாக இம்மையில் கிட்டுகின்ற இன்பங்கள் பல’ எனத் தொடர்ந்துரைக்க, பரிமேலழகர் இன்பங்களை முதலில் காட்டி அவ்வின்பங்கள் வேண்டுமானால் நீ துறக்க என மாற்றி உரையெழுதுகிறார்.  அவ்வாறு எழுதியவர்,

“இன்பங்கள் என்பதும் காலம் என்பதும் வருவிக்கப்பட்டன”

என்றும் எழுதுகிறார்.

  • பாட்டில் வேண்டின் என்றிருக்கிறதேயன்றி “எவை வேண்டின்?” என்னும் செயப்படுபொருள் இல்லை.
  • அதுபோலவே பாட்டில் துறக்க என்றிருக்கிறதேயன்றி எப்போது என்னும் பொழுது இல்லை.

பரிமேலழகர் வருவித்தவையும் அவற்றிற்கான காரணங்களும்

மேற்கண்ட குறட்பாவின் விளக்கவுரையில் இன்பங்கள் என்பதையும் காலம் என்பதையும் பரிமேலழகர் வருவித்து உரைத்தமைக்குச் சில காரணங்கள் உண்டு. துறவு பொதுவாயினும் இளமையில் துறத்தலே சிறப்பு. ஏனெனில் அவ்வாறு இளமையிலேயே துறந்துவிடின் துறக்கப்பட்ட நாளிலிருந்து பெறக்கூடிய இன்பங்களின் கால அளவு கூடும். இதனை அந்தக் குறட்பாவின் விளக்கவுரையில்,

“மனமொழி மெய்கள் அலையாது நிற்றலானும், அவை நன்னெறிக்கண் சேறலானும் வருவன”

என்று எழுதிக்காட்டுகிறார். எனவே துறவு பொதுவாயினும் இளமையில் துறத்தல் பற்றிய சிந்தனையும் அதன் பயன்களையும் பரிமேலழகர் தெள்ளிதின் உணர்ந்தவர்.

  • “நரைவரும் என்றெண்ணி நல்லறிவாளர் குழவியிடத்தே துறந்தார்” (நாலடியார்1.)
  • “மற்று, ‘அறிவாம் நல்வினை’ ‘யாம் இளையம்” நாலடியர்9)

என்றெல்லாம் விரவி நிற்கும் சிந்தனைகளை நன்கு உள்வாங்கிய காரணத்தால் ‘உண்டாகத் துறக்க’ என்பதற்குக் ‘காலத்தால் துறக்க’ என்னும் சிறப்புரை கண்டார் பரிமேலழகர். ஒன்றினைத் துறக்க வேண்டின் அதற்கு மாற்றாக மற்றொன்றினைக் காட்ட வேண்டுமாதலின் ‘வேண்டின்’ என்பதற்கான செயப்படுபொருளாகிய ‘இன்பங்கள்’ என்பதை வருவித்து உரைக்கிறார். இவ்வாறு வருவித்து உரைக்காவிடின் எவை வேண்டின் என்னும் தெளிவும் எப்போது துறப்பது என்னும் காலமும் புலப்படாதாம்!.

நிறைவுரை

எழு சீர்களுக்குள் எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய கடப்பாடு திருவள்ளுவருக்கு இருந்திருக்கிறது என்பதை நன்கு உணர்ந்தவர் பரிமேலழகர். எழுவாய் இல்லாமல் குறள் அமைகிறது. செயப்படுபொருள் இல்லாமல் அமைகிறது. உவம விளக்கம் இருந்து பொருள் விளக்கம் குன்றி அமைகிறது.  பொருள் விளக்கம் இருந்து உவமம் தனித்து நிற்கிறது. உவமமும் பொருளும் தனித்தனியே நிற்கின்றன. காரணம் இருக்க காரியம் புலப்படுவதில்லை. காரியம் தெளிவாகக் காரணம் அறியுமாறு இல்லை. இவ்வாறு திருவள்ளுவரின் உள்ளத்தின் முழுப்பரப்பையும் சொற்களால் காட்ட இயலாதபோது அதனைத் தம் நுண்மாண் நுழைபுலத்தால் கண்டறிந்து ஆங்காங்கே சில சொற்களை  வருவித்து உரைகாண்பதன் வழித் தமது உரைப்பணியை நிறைபணியாகச் செய்து முடித்திருக்கிறார் பரிமேலழகர் என்பதே மேற்கண்ட சில சான்றுகளின் வழிப் பெறப்படும் அவருடைய உரைத்திறனாகும்.

(தொடரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.