சேக்கிழார் பாடல் நயம் – 107 (திருவார்)

திருச்சி புலவர் இராமமூர்த்தி
பாடல்
திருவார் பெருமை திகழ்கின்ற “தேவா சிரிய னிடைப்பொலிந்து
மருவா நின்ற சிவனடியார் தம்மைத் தொழுது வந்தணையா
தொருவாறொதுங்கும்வன்றொண்டன்புறகென்றுரைப்பச்சிவனருளாற்
பெருகா நின்ற பெரும்பேறு பெற்றார்; மற்றும் பெறநின்றார்.
பொருள்
அருட்டிரு நிறைந்த பெருமை எந்நாளும் விளங்குகின்ற தேவாசிரிய மண்டபத்திற் பொலிந்து பொருந்தி வீற்றிருக்கின்ற சிவனடி யார்களைத் தொழுது, அவர்கள்பால் வந்து அணையாமல் ஒரு புறமாக ஒதுங்கிச் செல்லும் வன்றொண்டன், ‘புறகு’ என்று உரைப்பதற்குச் சிவபெருமானருளிற் பெருகுகின்ற பெரிய பேறு பெற்றார் இந்நாயனார்.அதுவேயுமன்றிமேலும் பெறுதற்கமைந்து நின்றாரானார்
விளக்கம்
‘’திருவார் பெருமை திகழ்கின்ற தேவாசிரியன்’’ என்ற தொடரில், திரு -அருட்டிரு. ஆர் பெருமை – அடைந்தாரை உய்விக்கவல்ல திருநீறு, கண்டிகை,பஞ்சாக்கரம் முதலிய சாதனங்களும் இவை பூண்டொழுகும் சீர் அடியார்களும் எப்போதும் இடையறாது விளங்குதல் குறித்தது.
இவை பற்றி முன்னர்த் திருக் கூட்டச் சிறப்பிலே சிறப்புறச் சில திருப்பாட்டுக்களில் உரைத்துள்ளார்.
மாவா ழகலத்து மால் என்றதனால் இங்குத் திரு என்றதும் இலக்குமியைக் குறித்தது என்று உரைப்பாரும் உண்டு.
பொலிந்து – சிவசாதனங்களாலே பொலிவு பெற்று. “புரந்த அஞ்செழுத்து ஓசை பொலிதலால்“ (438)என்றதும் காண்க. இச்-சிவசாதனங்கள் ஆன்மாக்களைத் தம்வசமாக்கிக் கொள்ள இறைவனால் அருளப்பெற்றவை களவு செய்வானொருவன் மிகு செல்வமுடையோனை மந்திரத்தாலும், மருந்தாலும், தந்திரத்தாலும் பேதித்துத் தன்வசமாக்கி அவன் பொருளை வௌவுதல்போல இறைவனும் திருநீறென்கிற மருந்தாலும், சீபஞ்சாக்கரம் என்கிற மந்திரத்தாலும், சொரூபமென்கிற தந்திரத்தாலும் ஆன்மாக்களைப் பேதித்துத் தன்வசமாக்கி அவரவர் வினைகளை அபகரிக்கின்றான்.
“கள்ளரோ டில்ல முமையார் கலந்திடில்.
வெள்ள- வெளியாமென்றுந்தீபற,
வீடு மெளிதாமென் றுந்தீபற“ – திருவுந்தியார்-23.
தொழுது வந்து அணையாது ஒருவாறு ஒதுங்கும் வன்றொண்டன் – நம்பியாரூரர் திருவாரூரில் தினமும் பூங்கோயிலுக்குச் சென்று இறைஞ்சி வருகின்ற நியதிப்படி ஒருநாட்செல்வார், “இங்குத் தேவாசிரியனிற் கூடி எழுந்தருளி யிருக்கும் அடியார்களுக்கு என்னை அடியேனாகப் பண்ணுநாள் எந்நாளோ?“ என்று இறைவர் பாதங்களைச் சிந்தித்துக் கொண்டே செயல் மறந்து திருக்கோயிலினுட் சென்றார். இறைவரும் அவர்தாம் வேண்டும் அதனையே அருள வேண்டித் திருவாயிலின் நேரே எழுந்தருளி வந்து, எதிர் காட்சி தந்து, ‘இவர்கள் பெருமைகளைத் தேற்றிப் பாடெ’ன்று பணித்து, அதற்குத் “தில்லை வாழந்தணர்தம் மடியார்க்கு மடியேன்“ என்று அடியும் எடுத்துக் கொடுத்தருளினர்.அதன்வழியேஎடுத்து நம்பிகள் இவ்வடியவர்க ளுக்கெல்லாம் தனித்தனி வேறடியேன் என்று, ‘திருத் தொண்டத்தொகை’ பாடித் தொழுது திருக்கூட்டத்தின் நடுவணைந்தார் என்ற வரலாறு தடுத்தாட் கொண்ட புராணத்தினுட் கூறப்பெற்றது. இவ்வரலாற்றின் சரித நிகழ்ச்சியிலே நம்பிகள் திருக் கோயிலினுட் சென்றபோது எழுந்தது, இப்பாட்டிற் கண்ட விறன்மிண்ட நாயனாரின் செற்றம் பற்றிய செய்தி.
அங்கு ஒருபுறம் நம்பி ஆரூரர் இவ்வடியவர்களுக்கு ஆளாகப் பண்ணுநாள் எந்நாள் என்று இறைவனை வேண்டி நேரே கோயிலினுட் செல்கின்றார்; அதனை நோக்கி இங்குத் தேவாசிரியனில் இருந்த விறன்மிண்ட நாயனார் நம்பிகள் திருக்கூட்டம் தொழுது வந்து அணையாது ஒருவாறு ஒதுங்கி உட் செல்கின்றார் என்று சினந்து மொழிகின்றார். திருக்கூட்டத் தெதிர்முன் பரவும் அருள்பெற்றே பின் இறைவர் பாதந் தொழப்பெற்றார் விறன்மிண்டர்
அந்நியதியே விதி எனக்கொண்ட அவர் அதன்வழி ஒழுகாது உட்சென்றது பற்றி நம்பிகள்பாற் சினந்தார். நம்பிகளும், அடியாரை வணங்கி அணையா விடினும், அடியாரைப் பணிய வேண்டியே இறைவனைத் தொழ உட்சென்றனர். எனவே, இருவர் கருத்தும் அடியார்பணி என்ற ஒரு வழியிலே படிந்திருந்தன என்க. ஆயின் கருத்தினைப் பின்பற்றிய புற வழிபாடு நிகழாமையின் “புறகு“ என்ற மொழியும் எழுந்தது. இருவருள்ளும் உயிர்க்குயிராய் உடன் இருந்த இறைவன் இருவர் கருத்தையும் முற்றுவித்துத் திருத்தொண்டின் திறத்தை உலகம் உய்ய உணர்த்தி யருளினார் என்பதனை ஈண்டுச் சிந்திக்க.
அணையாது ஒருவாறு ஒதுங்கும் – அணைந்தோர் அடியவர்கள். அவரை அணைவது சீவன் முத்தர் நிலை என்பது சாத்திரம்.
“அன்பரொடு மரீஇ“ – சிவஞானபோதம். அவ்வாறு அணையாது நேரே உட்சென்று ஒதுங்கும். அடியார் வழியே நேர்வழி; பிற வழிகள் ஒதுங்கிய தூர வழியாம் என்பது இந்நாயனார் கொள்கை. ஆதலின் அடியார் தம்மைத் தொழுது வந்தணையாது இறைவரை வணங்கச் செல்லுதலை ஒதுங்கும் என்று ஒதுக்கினார் நாயனார்.
புறகு – புறம்பாவான். பெருகாநின்ற பெரும் பேறு – பேறு – பாக்கியம். இப்பேறுபெரியது. இயல்பிற் பெரிதா யிருப்பதுடன் பின்னும் மேன்மேலும் பெருகி வளர்கின்றது என்க. பெருகுதலின் விரிவு மேல்வரும் இரண்டு பாட்டுக்களும் குறித்தன. அவை யன்றியும் திருத்தொண்டத் தொகையால் உலகம் என்றும் உய்ந்து நிகழ்கின்றதும் குறிப்பாம்.
அவர்பாற் பேறு பெற்றார் – புறகு என்று நாயனார் சொல்லியதும் திருவருளாலே ஆகியதாம். “அகில காரணர் தாள்பணிவார்கள் தாம், அகில லோகமு மாளற்குரியர்“ என்றபடி அடியவர்களே முதல்வராவார் என்பது இந்நாயனார் கொள்கை.
அதற்கிணங்க இறைவரும் உலகம் உய்யத் திருத்தொண்டத்தொகையினைத் தோற்றுவிப்பதும், நம்பிகளைத் திருக்கூட்டத்தினுட் கூட்டுவிப்பதும் ஆகிய இரண்டினையும் தாமே செய்வதினும் இந்நாயனாரைக் கொண்டு செய்விப்பது தக்கதென்று திருவுளம் பற்றி இவ்வாறு இவர் சொல்லுமாறு செய்தனர் என்க.
மற்றும் பெற நின்றார் – மற்றும் – வன்றொண்டர் புறகென்றதேயன்றி அவருக்குப் பிரானாகிய சிவபிரானும் புறகு என்பது. இதுவும் திருவருள் வழியே நிகழ்வதாகலின், மற்றும் – என எச்சவும்மை கொடுத்தோதினார். அதனோடு மேலும், “அல்லல் தீர்ந்துலகுய்ய மறையளித்த“ தமது திருவாக்கினாலே இறைவர் “தில்லைவாழந்தணர்த மடியார்க்கு மடியேன்“ என்று அடியார்க்கு அடிமைத்திறம் தாமே வகுத்தருளப் பெற்றதும், அவ்வருட்டுணை கொண்டு, அதுவே உண்ணின்று உணர்த்திப் பாடுவிக்க நம்பிகள் திருத்தொண்டத்தொகை பாடித் தொழுது திருக்கூட்டத்தின் நடுவண் வந்து அணையப்பெற்றதும் ஆகிய பேறுகளுமாம். பெற நின்றார் – இனிப் பெறுதற்குரியராய் நின்றார்.
இப்பாடல் அடியார் பெருமையை ஆண்டவனே ஏற்று மகிழ்வார் என்பதைத் தெளிவாக்குகிறது.