Tag: எம். ஜெயராம சர்மா

  • அமுத மொழி அன்றோ !

    -எம்.ஜெயராம சர்மா – மெல்பேண்

    காலையிலே எழுந்தவுடன்
    கண்ணெதிரே கண்டேன்
    கவலை இன்றிப் பூத்திருக்கும்
    கட்டழகு ரோஜா!

    வேலைசெய்ய விருப்பமின்றி              roses
    சோம்பலிலே கிடந்தேன்
    விருட்டென்று கேட்டதுமே
    வெலவெலத்துப் போனேன்!

    யாருக்காய்ப் பூக்கின்றோம்
    என்று தெரியாது
    பூக்கின்றோம் பூக்கின்றோம்
    பூத்தபடி நிற்போம்!

    பூப்பதிலே சோம்பலின்றி
    பூத்தபடி இருப்போம்
    பூப்பார்த்த வுடனேயே
    பூரிப்பைக் கொடுப்போம்!

    சோம்பல் வந்துவிட்டதெனச்
    சோர்ந்துவிட மாட்டோம்
    சுறுசுறுப்பாய் இருந்தபடி
    சுகம்கொடுத்து நிற்போம்!

    சாந்தம் எங்கள்போக்குவெனச்
    சகலருக்கும் தெரியும்
    சந்தோஷம் கொடுப்பதுவே
    எங்கள் குணமாகும்!

    மற்றவர் மகிழ்ச்சியுற
    மகிழ்ந்து நாம்நிற்போம்
    மற்றவர் மனமுடைய
    வாழ்நாளில் நினையோம்!

    சோம்பலுற்று வாழ்வினிலே
    சோர்ந்துவிட மாட்டோம்
    சொர்க்கத்தைக் காட்டுவதே
    சுகமென்று நினப்போம்!

    விழுகின்ற மலர்பார்த்து
    விழுதழுதல் மாட்டோம்
    விழுவது எழுவதற்கென
    விழித்தெழிந்து நிற்போம்!

    அழுகின்ற தொழிலைநாம்
    அழித்துமே விட்டோம்
    ஆனதால் என்றென்றும்
    அழகினையே தருவோம்!

    பறிப்பாரின் கையினைப்
    பக்குவமாய்ப் பார்ப்போம்
    பறித்தவர்கள் எம்மழகைப்
    பார்த்தபடி நிற்பர்!

    குறித்தமலர் அழகையவர்
    குதூகலத்தால் ரசிப்பர்
    கொண்ட்டாட்டம் வந்துவிட்டால்
    கொண்டையிலும் வைப்பர்!

    ஆண்டவனின் அருகினலே
    அடைக்கலமும் ஆவோம்
    ஆவேசக் கைகளிலே
    அசிங்கமும் படுவோம்!

    ஆனாலும் ஆத்திரத்தை
    அடக்கியே வைப்போம்
    ஆதலால் என்றுமே
    அழகாக இருப்போம்!

    மலர் சொன்னவார்த்தையால்
    மலைத்துமே விட்டேன்
    நிலைகுலையா நானும்
    நிலைகுலைந்து விட்டேன்!

    அழகான மலர்சொன்ன
    அத்தனையும் கேட்டேன்
    அவைசொன்ன அத்தனையும்
    அமுதமொழி அன்றோ!

     

    Share
  • குடிமுழுதும் காத்துவிடு !

        -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

          படிபூசை செய்து உனை
          பாடி நிதம் அடியார்கள்
          அடிதொழுது நிற்கின்றோம் – ஐயப்பா         ayyappan
          எங்கள் குடிமுழுதும்
          காத்து விடு – ஐயப்பா!

          அனுதினமும் பாடி உனை
          அடிதொழுது பரவி விடும்
          அடியவரின் மனதில் உறை – ஐயப்பா
          கொடிய வினை எமையகல
          குடிமுழுதும் விடிவு பெற
          அனுதினமும் அருள் தருவாய் – ஐயப்பா!

          மடிமீது குழந்தை என
          தினமும் உனைப் பார்க்கிறோம்
          மனம் இரங்கி வந்திடுவாய் –  ஐயப்பா
          தலைமீது கால் வைத்து
          தமியேனைக் காக்க என
          சடுதியாய் வந்து விடு  – ஐயப்பா!

          தேடி உனை நாடிவர
          கூடி வரு வினையகல
          ஓடி வரு அடியவரைப் பாராயோ
           பாதமது தந்து எமைக் காவாயோ!

          மலையேறி வரு மடியார்
          மனதிலுறை எண்ண மெலாம்
          உனது நினை வல்லவோ ஐயப்பா
          உன்முமதைக் காட்டிவிடு மெய்யப்பா!

           படியேறிப் பதம் பணிந்து
           பலமுறையும் துதி பாடி
           அடிதொழுது நிற்கின்றோம் ஐயப்பா
           அருள்புரிந்து காத்துவிடு ஐயப்பா!

    Share
  • எங்கே போகின்றோம் ?

    எம். ஜெயராமசர்மா – மெல்பேண்

    மனித வாழ்வுக்கு ஒரு அர்த்தம் இருக்கின்றது. மனித வாழ்வு ஒரு புனித வாழ்வு. மனிதப் பிறவி ஒரு புனிதப் பிறவி. ” மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே” என்றார் அப்பர் அவர்கள். ” மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் ” என்றார் சம்பந்தப் பெருமான். ” புவனியிற் போய்ப் பிறவாமையில் நாள்நாம் போக்குகின்றோம் அவமே ” எனத் தேவர்கள் கவலைப்பட்டுச் சொல்லுவதாக மணிவாசகப் பெருமான் கூறுகின்றார். இப்படியெல்லாம் சொல் லும் அளவுக்கு… இந்தப் புவியும், அதில் வாழும் மனிதவாழ்வும் போற்றப்படு கின்றது. அந்தப் போற்றுதலுக்கு ஏற்ப எமது வாழ்வு அமைகின்றதா? அந்தப் போற்றுதலுக்கு உரித்துடையவர்களாக இருக்கின்றோமா ?

    எங்கே போகின்றோம்? என்ன செய்கின்றோம்? என்ன சிந்திக்கின்றோம்? எதுவே ஒரு திட்டமில்லாது இருக்கின்றது. கண்டதே காட்சி!கொண்டதே கோலம்! என்று வாழ்கின்றோம். அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணுமாக இருக்கின்றோம். முழங்காலுக்கும் மொட்டத் தலைக்கும்முடிச்சுப் போடமுயல்கின்றோம். கரும்பிருக்க இரும்பைக் கடித்துப் பார்க்கின்றோம். கனியிருக்கக் காய் கவர்ந்து உண்ணுகின்றோம்.

    சிங்கத்தைவிட்டுச் சிறுநரியைப் பிடிக்கின்றோம். எங்களுக்குப் புரியவில்லை! தெரியவில்லை! திகைப்பு ! ஒரே மலைப்பு !சாந்தியில்லை… சமாதானம் இல்லை… அன்பு ஒளிந்துகொண்டுவிட்டது. அறம் வெளியே வர மறுக்கிறது. அஹிம்சை ஹிம்சையாகி நிற்கிறது. மன்னிக்கும் இயல்பு மறந்தே விட்டது. கல்வி காசாகி விட்டது. குருபக்தி கருகியேவிட்டது. கல்விக் கூடங்கள் காசுக் கூடங்களாகி   விட்டன. பெரியவரைக் காண்பதே பெரிய விஷயமாகிவிட்டது. சின்னத்தனம் எங்கும் சிரித்து நிற்கிறது. மனத்தில் இருட்டு! வழியில் திருட்டு! பார்க்குமிடங்க ளெல்லாம் படுகுழிகள் மயம் ! எங்கே போகின்றோம் ?

    கோவில்கள் கட்டப்படுகின்றன. கும்பாவிஷேகங்கள், மண்டலாபிஷேகங்கள் நடக்கின்றன. இலட்சார்ச்சனை, கோடியார்ச்சனை, மகாயாகம், சாந்திஹோமம், சங்காபிஷேகம், திருவிழாக்கள் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன..இவற்றால் பலன் உண்டா? பலன் வந்ததா? இதையெல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால்…எங்கள் வாழ்வில் “சமயம் சமயமாக இல்லாது போய்விட்டமையேயாகும்”. சமயத்தை நாங்கள் யாருமே சரிவர அறியவில்லை. சமயத்துக்கான மனப்பாங்கைச் சரியாக வளர்த்துக் கொள்ளவும் இல்லை. ஒருகணம் யோசித்தால்…சமய வாழ்வையே வாழவில்லை! ஆண்டவன் சன்னிதானத்தில் அனைவரும் சமம்தானே? நாம் அப்படி நடக்கின்றோமா? உயர்வு, தாழ்வு, பதவி, அந்தஸ்து காட்டப்படுவது முறைதானா?

    “ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்” என்று அப்பர்பாடிய அந்த அருள் வாக்கை மறந்துவிட்டோம். “கண்ணப்ப னொப்பதோர் அன்பின்மை கண்டபின்’ என மணிவாசகர் கண்ணப்பரைப் போற்றிய அன்பினை உணரவும் காட்டவும் தவறிவிட்டோம்.”பட்ட கட்டையிற் பகற்குருடு போகுது ” என்ற தத்துவத்தின் தாத்பரியத்தையும் அறவே மறந்து விட்டோம்.

    விளைவு … சமயம் சமயமாக இல்லை. எங்கள் சமயவாழ்வு சமய வாழ்வாக இல்லை. உண்பது, உடுப்பது, உறங்குவது, உல்லாசமாக வாழ்வது சமயவாழ்வா? “ஆடையணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவ தில்லை—அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலய வழிபாடில்லை.” தன்னல மறுப்பு சமயத்தின் உட்கிடை. பொதுநலம் ஓம்புதல் சமயத்தின் உன்ன தம்.

    நான் வாழ வேண்டும். எனது குடும்பம் வாழ வேண்டும். எனக்கு எல்லாம் வரவேண்டும். நானே பெரியவன். மற்றவன் எக்கேடு கெட்டாலும் அதைப்பற்றி எனக்கென்ன? பணம்..பதவி..அந்தஸ்து..மற்றவனைவிட எனக்கும் எனது       குடும்பத்துக்கும் மட்டுமே வந்துசேரவேண்டும். இதுதான் சிந்தனை. இதுதான்   இன்றைய வழிபாட்டில் காணப்படுகின்றது. இதுதான் இன்றைய மனிதனின் மனப்பாங்காகவும் இருக்கிறது.

    இதை எப்படிச் சமயவாழ்வு என்று எடுக்கலாம்? சம்பந்தரும் அப்பரும் யாருக்காக வாழ்ந்தார்கள்? இறைவனிடம் தமது சொந்த சுகத்துக்காக எதையும் கேட்டனரா? மண்ணில் நல்லவண்ணம் வாழவேண்டும். அப்படி வாழ்வதற்குக் கழுமலத்தில் பெண்ணின் நல்லாளொடு இருக்கின்ற எம்பெருமான் துணை நிற்பார். அந்தப் பெருமானை வழிபடுவோம் வாருங்கள் என அடியவர்களுக்கு வழிகாட்டி நின்றார். அப்பர் முதலானோர்… சமயவாழ்வு , சைவம் தழைக்கத் தமது வாழ்க்கையையே தியாகம் செய்து நின்றார்கள். முதன் மந்திரிப் பதவியியும் அதனால் வரும் ஆடம்பர வாழ்வும் வாய்த்திருந்தபோதும் அவற்றை உதறிவிடுகிறார் மணிவாசகப் பெருமான். பெரியபுராணம் காட்டும் அடியார்கள் தமக்காக வாழாத பெரியவர்கள். சந்தனமாக, மெழுகுவர்த்தியாக வாழ்ந்தவர்கள்.

    “கூடும் அன்பினில் கும்பிடலேயன்றி வீடும்வேண்டா விறலினர்” என்று அவர்களை எமக்கெல்லாம் அடையாளம் காட்டுகின்றார் சேக்கிழார் அவர்கள்.

    ஆலயம் என்பது ஆன்மா லயிக்கின்ற இடமாகும். எல்லா வற்றையும் மறந்து ஆன்மா இறைவனை நினைக்கும் இடமாகும். அங்கே லயிப்பு இருக்கிறதா? லயிப்பதில் எம் மனம் நாட்டம் கொள்கிறதா? ஆலயத்தில்தான் எத்தனை வாக்குவாதங்கள்? ஆலயத்தில்தான் எத்தனை அந்தஸ்துச் சண்டைகள்.. நீயா..நானா ..பெரியவன்! எனக்கா — உனக்கா இந்த ஆலயத்தில் முதல் மரியாதை? எனக்குப் பரிவட்டமா? அல்லது உனக்குப் பரிவட்டமா? சுவாமி புறப்படும் முன்னர் நீ தேங்காய் உடைப்பதா? நான் உடைப்பதா? என்று பலரது மண்டைகளே உடைபடுவதைக் காண்கின்றோம்! இவைகள் பொருந்தக் கூடியனவா? இதுதான் சமயவாழ்வா? நாம் எங்கே போகின்றோம்?

    வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் தேவை. நோக்கம் இல்லாத வாழ்வு அர்த்தமற்ற வாழ்வாகும். வாழ்வுக்கு அர்த்தம் ஊட்டி நிற்பதே சமயவாழ்வுதான். சமயத்தை ” மதம் ” என்ற பெயராலும் அழைக்கின்றோம். மனிதனிடம் காணப்ப டுகின்ற ’மதத்தை ‘ அகற்ற உதவுங் காரணத்தால்தான் இப்படி ஒருபெயர் சூட்டப்பட்டதோ என்று கூட எண்ணத்தோன்றுகின்றது. ஆனால் மதத்தை அகற்றுவதற்கு ஏற்பட்ட ஒரு அமைப்பானது…மனிதனிடம் மதத்தை ஊட்டுவதற்குக் காரணியாக்கப் பட்டுவிட்டது. மதவாதிகளால், மதவெறியர்களால் இந்த நிலை தோற்றுவிக்கப்பட்டுவிட்டது.

    சிலுவை யுத்தம், இந்து முஸ்லீம் கலவரம், பாபர்மசூதி விவகாரம், அயர்லாந்து இங்கிலாந்துப் பிரச்சினை யாவும் ..மதவெறிபிடித்தவர்களின் வெறியாட்டங்களையே காட்டிநிற்கின்றது. இது வரலாறாகி நிற்கின்றது. உலகில் பல மதங்கள் காணப்படுகின்றன. மதங்களின் சடங்குகள் ஆசாரங்கள் வேறுபட்டனவாக இருக்கலாம். ஆனால்… எந்தச் சமயமாவது; அநீதியை, அறம் அல்லாதவற்றை, ஒழுக்கத்துக்குப் புறம்பானவற்றைச் செய் என்று சொல்லுகிறதா என்றால் .. இல்லை என்றுதான் விடை வரும். “அன்புதான் இன்ப ஊற்று…அன்புதான் இதய ஜோதி…அன்புதான் அரவணைக்கும் தாரகமந்திரம் “.

    அன்பின் முக்கியத்துவத்தையே எல்லாச் சமயங்களும் வற்புறுத்துகின்றன. எங்கள் சைவமும் அன்பைப் போற்றுகின்றது.”அன்பும் சிவமும் இரண்டல்ல.அன்பும் சிவமும் ஒன்றே” என்பது எங்கள் சமயத்தின் பெருந்த த்துவமாகும். இறைவன் அன்பு வடிவானவன். அன்புடையார்க்கு ஆண்டவன் அருகில் வருவான். அருளைத் தருவான் என்று எங்கள் சமயமும், சமயப் பெரியோரும் கூறுகின்றனர். இன்று உலகத்தில் அருகிக் காணப்படுவது என்ன வென்றால்; அதுதான் “அன்பு “. மனித வாழ்வில் அன்புத்தேவை இல்லாமல் போய்விட்டது. அன்புக்காக ஏங்குவோர் அநேகர். அன்பைக் காட்டுவார் யார்? அவர்கள் அன்புக்காய் ஏங்குகிறார்கள்! அவர்களது தாகம்தான் தணிக்கப் படுவதாகவில்லை.

    ஏக்கம், ஏமாற்றம், மனக்கவலை, மலிந்துகிடக்கிறது. பாதுகாப்பு, அன்பு, காருண்யம், இரக்கம் ஒறுத்துவிட்டது. எங்கும் ஒரே அந்தகாரம், குழப்பம், பதட்டம், பேராசை, பொறாமை, முரட்டுத்தனம் மலிந்துவிட்டது. உலகாயதம் உருக்கொண்டுவிட்டது. உலகம் அதன் கைப்பொம்மையாகிவிட்டது. விஞ்ஞானம், தொழில்நுட்பம் வளர்ந்து வளர்ந்து வருகிறது என்பது உண்மைதான். மனித வாழ்வில் பல செளகரியங்கள் ஏற்பட்டுள்ளன என்பதும் உண்மைதான்.

    ஆனால் மனித மனங்களில் மட்டுந்தான் செளகரியங்களோ செளஜன்யங் களோ ஏற்பட்டதாகத் தெரியவில்ல. வாய்ப்புகள், வசதிகள் மனதில் கூடக்கூட மனங்களில் நல்ல மாற்றங்களும் ஏற்படவேண்டும். ஆனால் மாறாக உள்ளது. விரிவடைய வேண்டிய மனங்கள் சுருங்கிவிட்டன. நேராக இருக்க வேண்டிய மனங்கள் கோணலாகிவிட்டன.மனங்களில் நிறைவு தோன்ற மறுக்கிறது.கிடை த்ததற்கு மேலாக இன்னும் இன்னும் வேண்டும் என்று மனம் பேராசை கொள்ளு கிறது. மேலும் கிடைப்பதற்கு– அது ; என்ன வழியானாலும் பரவாயில்லை என்று எண்ணுகிறது. இதனால் செய்யக்கூடாததை எல்லாம் செய்கிறது. மனித மனத்தில் வெறி ஏற்பட்டுவிட்டது. வெறிவந்தால் அங்கே நெறி அழிந்துவிடும்.

    நெறி அழிந்தால் அங்கே முறை தவறிவிடும். முறை தவறிவிட்டால் வாழ்க்கை வாழ்க்கையாக அமையாது. இதனையே இன்று நாளாந்தம் காண்கின்றோம்.

    இறை நம்பிக்கை குறைந்து தனது செயற்பாடுகளில் முற்றும் முழுதான நம்பிக்கை வந்துவிட்டது. எனவே எதுவும் செய்து எதையும் பெறலாம் என்ற முனைப்பு ஏற்பட்டுவிட்டது. இராவணர்கள், சூரர்கள், ஹம்சர்கள், இரணியர்கள் மலிந்துவிட்டார்கள். யாரை யார் திருத்துவது? யாருடைய சொல்லை யார் யார் கேட்பது? இறைத் தியானம் கலைந்துவிட்டது. லெளகீகம் மேலோங்கிவிட்டது.

    “பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்பதைமட்டும் பார்த்தவர்கள்…..”அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை” என்பதை பார்க்க மறந்து விட்டனரோ அல்லது மறுத்துவிட்டனரோ தெரியவில்லை!

    போதைவஸ்து, பொருள்கடத்தல், இலஞ்சம், ஊழல், மோசடி இவற்றால் பணம் சம்பாதிப்பது இன்று சாதாரணமாகிவிட்டது. பணத்தைச் சம்பாதிக்க   வேண்டும். உலகாயத வாழ்வை வாழவேண்டும்.பாவமாவது! புண்ணியமாவது! கடவுளா? சாமியா? தானமா? தர்மமா? நீதியா? நியாயமா? உண்மையா? நேர்மையா? ….. எதைப் பற்றியும் எள்ளளவும் கவலையே இல்லை. பணம் பண்ணுவது ஒன்றே குறிக்கோள். முடிவில் காண்பது என்ன? விரக்தி! வேதனை! பயங்கரம்!

    பாரததேசத்திலே பல மகான்களும்,துறவிகளும் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் அளவுக்கு நாங்கள் போகவேண்டும் என்பதில்லை. மனத்தளவிலே ஓரளவுக்காவது துறவுநிலை தேவைதானே? எங்கள் மனவெழுச்சிகள் மாற்றம் உறவேண்டும். மாற்றப்படவேண்டும்! எங்கள் சிந்தனைகள் செல்லும்திசை திருப்பப்படவேண்டும்.எங்களின் செயற்பாடுகளில் தூய்மை துலங்கிட வேண் டும். இவற்றுக்குச் சமயவாழ்வுதான் துணைபுரியும்.சமய நெறிகள்தான் வழி காட்டும். இறையுணர்வுதான் நல்வழி இட்டுச்செல்லும்.

    கோவில்கள் சோழர்காலத்தில் சமூக நிறுவனங்களாக விளங்கின. ஆதுரர்சாலையாக, கலைக்கூடமாக, கல்விச்சாலையாக, நீதித்தலமாக, என்று பலநிலைகளில் விளங்கின.ஆன்மீகம் கலந்ததாக நீதி, ஆன்மீகம் கலந்ததாக கலைகள், ஆன்மீகம் கலந்ததாக பொருளாதார நடவடிக்கைகள் இருந்தன.

    அரசன் முதல் ஆண்டி வரை கோவிலையே நினைத்தார்கள். கோயிற்பணி செய்வதையே தமது வாழ்வின் பெரும்பயன் என எண்ணினார்கள். ஆண்டவனுக்குச் செய்யும் பணியே பெரியது என்று நினைத்தார்கள். கனவும் நினைவும் கோவில் பற்றியதும், ஆன்மீகம் பற்றியதுமாகவே இருந்தது. இதனால் சோழ சாம்ராஜ்ஜியம் பரந்து விரிந்து வளர்ந்தது. கலைகள் வளர்ந்தன. காவியம், ஓவியம், சிற்பம், கட்டிடம் யாவும் உன்னத நிலைக்கு வந்தன. திருமுறைகள் வகுக்கப்பட்டன. திருத்தொண்டர் புராணம் உருப்பெற்றது.

    இன்றோ எங்கள் கோவில்களில் உரிமைச் சண்டைகள் ஒருபுறம். நிர்வாகச் சண்டைகள் ஒருபுறம்.திருவிழாச் சண்டைகள் ஒருபுறம். அந்தஸ்துச் சண்டைகளும் ஒருபுறம். பூசைபண்ணுவதில் கூடச் சண்டைகள் நடக்கின்றன.

    இவையெல்லாம் தேவைதானா? கோவில்கள்…பிரச்சனைகளின் கூடமாகமாறி நீதிமன்றம் வரை சென்றுவிட்டதைக் காண்கின்றோம். ஒரு காலத்தில் நீதித் தலமாக விளங்கிய கோவில்கள் எங்களின் போக்கால் எள்ளிநகையாடும் விதத்திற்கு நிலைக்களனாகிவிட்டது.

    இதற்குக் காரணம் என்ன? எங்களது சிந்தனைகள் சமயச்சிந்தனைகளில் இருந்து வேறு நிலைக்குச்சென்றதும்… திருவிழாக்கள் களியாட்டமாக மாற் றப்பட்டதும்… அவசியமான காரியங்கள் கைவிடப்பட்டு ஆடம்பரங்கள் இடம் பிடித்துக்கொண்டதுமே ஆகும்.

    சமயச் சடங்குகள் முக்கியத்துவம் அற்றன என்றொரு மாயை ஏற்பட்டதும், சமயமே அர்த்தமற்றது என்ற நாத்திகவாதம் தலைதூக்கியதும், புராணங்களுக்கும், இதிகாசங்களுக்கும்,வேதங்களுக்கும், ஆகமங்களுக்கும், வித்தியாசமான அர்த்தங்கள் கற்பித்து மக்கள் மத்தியில் விதைக்கப் பட்டமையுமேயாகும்.

    ராமகிருஷ்ணபரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், ரமண மகரிஷி போன்ற வழிகாட்டிகள் இல்லாத நிலையுமாகும். யாவும் கொம்யூட்டர் மயமாகிவிட்டது. எங்கும் விஞ்ஞானம்.மெய்ஞ்ஞானம் வழிகாட்ட உகந்தது அல்ல என்ற வாதம் கவர்ச்சியாக அமைந்ததும் ஆகும்.ஆன்மீகத்தின் பெயரால் சமயத்தின் பெயரால் கடவுளின் பெயரால் பல போலிகள் நடத்தும் கபட நாடகங்கள் உண்மைச் சமயத்தின் உருவத்தைக் உருக்குலைத்துவிட்டது.

    சமயம் – அரசியல் லாபங்களுக்கு இடமாக்கப்பட்டது. அரசியல்வாதிகள் சமயத்தலைவர்களாக முற்பட்டனர். புனிதம் கெட்டது. தூய்மை அகன்றது. மக்களுக்கு…..பாதுகாப்பு – எது எனத்தெரியாத ஒரு நிலத்தோற்றம் பெற்றுவிட்டது. அரசியல் தலைவர்களா? ஆன்மீகத் தலைவர்களா? யார் உயர்ந்தவர்கள் / யார் உண்மையானவர்கள் ? என்னும் அளவுக்குச் சமயவாழ்வை அரசியல் வாழ்வும், ஆடம்பர வாழ்வும் … உருக்குலைத்துவிட்டன. மக்களும் கவர்ச்சிகளுக்குத் தங்களைப் பறிகொடுத்து விட்டனர். கவர்ச்சியினால் பகுத்தறிவும், பக்குவமும் மக்களைவிட்டு அகலத்தொடங்கிவிட்டது.பகுத்தறிவற்ற தன்மை… படாடோபத்துக்கே வழி சமைத்துவிட்டது. எங்கே போகிறோம் என்று தெரியாத ஒரு மயக்க நிலையைத் தோற்றுவித்துவிட்டது.

    இந்த மயக்க நிலையால் சுயநலமே மேலோங்கியது.பிறர்நலம் பேணல் என்பது மறக்கப்பட்டது. மற்றவர் துயர் துடைப்பது என்பது அவசியம் அற்றதாக ப்பட்டது. இறைபக்தி எள்ளி நகையாடப்பட்டது. கோவில் தரிசனமே பெரிதாகக் கொள்ளப்படாத ஒரு நிலை ஏற்பட்டது. இதனால் கண்டது என்ன? அமைதி குலைந்தது. சாந்தி நிலை தடுமாறுகிறது. அன்பு விலை ஏறிவிட்டது. அஹிம்சை யைப் பார்க்கவே முடியாது போய்விட்டது. குடும்ப உறவு சீரற்றதாகிவிட்டது. கல்விக்கூடங்களில் அமைதியில்லை.கலைகளில் காணப்பட்ட தெய்வீகத் தன்மை தரம் இறங்கிவிட்டது. வாழ்க்கை இயந்திர மயமாகிவிட்டது.

    இதனால் எங்கே போகிறோம் என்பதை அறியாது, உணராது, திட்டமிடாது போவதுபோலவே இருக்கின்றது. இந்த நிலை மாற்றப்படவேண்டும். ”குறிக்கோள் இலாது கெட்டேன்” என்னும் நிலைக்கு வந்துவிடக்கூடாது. எப்படியும் வாழலாம் என்ற நிலை மாற்றப்பட்டு, “இப்படித்தான் வாழவேண்டும்” என்னும் நிலை உருவாகவேண்டும். அதற்குச் சமயவாழ்வுதான் உகந்தது. எனவே…எங்கே போகிறோம் என்று உணர்ந்து தெளிந்து அறிந்து எங்கள் வாழ்க்கையை அமைக்கவேண்டும். அதுவே “மண்ணில் நல்லவண்ணம் வாழும் வாழ்வாகும்”. அதுவே “வையத்துள் வாழ்வாங்கு வாழும் வாழ்வாகும். ” இதனை ஏற்படுத்தும் சக்தி இறைபக்தி யாகும். இறைபக்தியுடனான சமயவாழ்வை வாழ்ந்து எங்கள் குறிக்கோளை அடைவோமா?

    Share
  • நாளும் நீ பாடவேண்டும்!

    -எம். ஜெயராம சர்மாமெல்பேண்

    சுந்தரத் தெலுங்கரான
    சுசீலா அம்மாவெங்கள்
    செந்தமிழ் மொழியில்பாடி
    தீஞ்சுவை தந்துநின்றார்!

    நெஞ்சினில் பதியும்வண்ணம்                   suseela
    நிறைவுடன் பாடிநின்று
    விஞ்சியே வியந்துபோற்ற
    விதம்விதம் பாடல்தந்தார்!

    பின்னணி பாடினாலும்
    முன்னணி ஆகிநின்றார்
    எவ்வணி சேர்ந்திட்டாலும்
    இனியதே அளித்துநின்றார்!

    தன்னிலை மாறிடாமல்
    தரமுடன் பாடிநின்றார்
    இன்னமும் பாடுகின்றார்
    இன்னிசை சுசிலாஅம்மா!

    டிஎம்எஸ் ஸோடு சேர்ந்து
    திரையிசை மிளிரச்செய்தார்
    பாமரர் ரசிக்கும்வண்ணம்
    பலபாடல் பாடிநின்றார்!

    சங்கீத ரசிகர்க்கெல்லாம்
    சளைக்காமல் பாடிநின்றார்
    எங்குமே சுசீலாபாடல்
    ஏற்றமாய் ஒலிக்குதிப்போ!

    குரலிலே இனிமைகொண்டுக்
    குயிலெனப் பாடிநின்ற
    திரையிசை திலகம்தன்னைத்
    தினமுமே வாழ்த்திநிற்போம்!

    சுவைபடப் பாடியெம்மை
    சுமையெலாம் போகவைத்த
    திரையிசைக் குயிலேநாளும்
    திறலுடன் வாழ்கவாழ்க!

    திரையிசைத் திலகமாக
    தினமுமே வந்தாயம்மா
    நரைதிரை வந்திடாமல்
    நாளும்நீ பாடவேண்டும்!

    Share
  • குடிகொண்டே இருக்கின்றார்!

    எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    பார்வியக்கப் பாரதத்தை
    பார்க்கவைத்த பேராக
    பாரததத்தின் பிரதமராய்
    நேருவந்து நின்றாரே!

    பார்நடுங்க வைத்தபெரும்                     jawaharlal-nehru
    பேர்போன வெள்ளையரை
    வேர்பிடுங்கி எடுத்தாரே
    வித்தகராம் நேருமகான்!

    ஊர்விடுங்கி உலையிலிட்டு
    ஊர்கோலம் போனஅந்தப்
    பார்பிடுங்கும் வெள்ளையரின்
    படைநடுங்க வைத்தாரே!

    ’சேர்’போட்டு அழையென்று
    சிரச்சேதம் செய்தவரை
    ஊர்விட்டு விரட்டியதை
    உலகமே வியந்ததுவே!

    பணம்படைத்த குடும்பமதில்
    பண்டிதர் பிறந்தாலும்
    பாரதத்தாய் விடுதலைக்காய்ப்
    பலவிதத்தில் உழைத்தாரே!

    ஏவலுக்கும் காவலுக்கும்
    எத்தனைபேர் இருந்தாலும்
    எங்கள்நேரு அதைவிடுத்து
    ஏற்றனரே சிறைவாசம்!

    சிறைசென்ற போதுமவர்
    பொறையிழந்து போகாது
    குறியொன்றே மனங்கொண்டு
    நெறியுடனே செயற்பட்டார்!

    சிறையிருந்து எழுதியவை
    சிறப்புடைய நூலாச்சு
    அனைவருமே படிப்பதற்கு
    அறிவுநிறை கருத்தாச்சு!

    காந்திமகான் வழிநடந்து
    காணநின்றார் பாரதத்தை
    சாந்தி சமாதனம்காண
    ஏங்கிநின்றார் நேருமகான்!

    வழித்தடங்கள் மாறிடினும்
    மனதுமட்டும் மாறவில்லை
    மாநினைப் போடுநின்று
    மகான்நேரு செயற்பட்டார்!

    யாரெதிர்த்து நின்றாலும்
    பாரதத்தின் விடிவுக்காய்
    நேருவைத்த திட்டங்கள்
    நீண்டநாள் நிலைத்தனவே!

    பதினேழு வருடங்கள்
    பாரததத்தின் பிரதமராய்ப்
    பண்டிதர் நேருமகான்
    பக்குவமாய் இருந்தாரே!

    குழந்தைகள் தினமதிலே
    குதூகலமாய் இருப்பவர்தான்
    குடும்பமாம் பாரததத்தின்
    குலவிளக்காம் நேருமகான்!

    ரோஜாவாய் இருக்குமெங்கள்
    ராஜாவாம் நேருமகான்
    குழந்தைமனம் எல்லாமே
    குடிகொண்டே இருக்கின்றார்!

    Share
  • எம்மோடு இணைந்துவிட்டார்!

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

     இத்தாலி நகர் பிறந்த
     இனிய பெஸ்க்கிப் பாதிரியார்
     இன்பத் தமிழைக் கற்று
     எம்மோடு இணைந்து விட்டார்!              Beschi

     முப்பது வயதில் வந்தார்
     முயற்சியால் தமிழ் படித்தார்
     எப்போதும் நாம் நினைக்க
     எழுதி வைத்தார் தமிழ்நூல்கள்!

     மதம் பரப்பும் நோக்கோடு
     வந்த பெஸ்க்கிப் பாதிரியார்
     மனதைப் பறி கொடுத்தார்
     வாழுகின்ற தமிழின் இடம்!

    தாம் படித்த தமிழ்மொழியைத்
    தலைமீது வைத்து அவர்
    தேம்பாவணி தந்து
    திரும்பிநாம் பார்க்க வைத்தார்!

    தமிழ் மொழியைக் கற்றதனால்
    தன்பெயரை மாற்றிக் கொண்டு
    வீரமா முனி ஆகி
    வேட்கையுடன் பணி செய்தார்!

    தமிழரே தமிழ் எழுதத்
    தயங்கி நிற்கும் வேளையிலே
    தமிழர் அல்லாப் பாதிரியார்
    தமிழ் எழுதித் தலைநிமிர்ந்தார்!

    அமிழ்தான தமிழ் கற்று
    அதில் திருத்தம் பலசெய்து
    அனைவரது உள்ள மெலாம்
    அமர்ந்து விட்டார் பெஸ்க்கியவர்!

    இத்தாலி நகர் தந்த
    இனிய தமிழ் வரவாய்
    என்றுமே எண்ணி நிதம்
    எம்மனதில் போற்றி நிற்போம்!

     

    Share
  • சேக்கிழார் சிறப்பும் உயர்வும்!

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    chekkizhar“பக்திச் சுவை நனி சொட்ட சொட்ட”ப் பாடியதால் சேக்கிழார் சிறப்புப் பெறுகிறாரா? புதிய உத்தியைக் கையாண்டதால் சேக்கிழார் உயர்ச்சி பெறுகின்றாரா? முதலமைச்சர் ஆகவிருந்தமையால் சிறப்புப் பெறுகின்றாரா? புரட்சிகரமான கருத்துக்களை முன் வைத்தமையால் சிறப்பும் உயர்வும் பெறுகின்றாரா? அல்லது பெரியபுராணத்தைத் தந்தமையால் சிறப்பும் உயர்வும் பெறுகின்றாரா? என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா?

    பேரரசு உருவாகி அந்தப்பேரரசுக்கு புகழ்மாலைகள் பெருகும் பொழுது ஆட்சியாள ர்கள் தம்மை மறப்பது இயல்புதான். ஆனால் இந்த நிலையைத் தொடரவிட்டால் குறிக்கோள்கள் இல்லாமலே கெட்டழிந்தும் போய்விடலாம். போர் வெற்றியாலும், அதனால் ஏற்படும் பேராசையினாலும் அந்தப்பேரரசு தன்னை ஒருநாளும் தளர்வடையச் செய்யும்படி நடந்து கொள்ளவும் கூடாது. ஆனால் இதனை எந்தவொரு அரசும் நோக்கியதாகத் தெரியவில்லை. தளர்வுறும் வேளை அந்த நாட்டுமக்களையும் அப்போது உள்ள அரசர்களையும் நல்வழிப்படுத்துதல் மிகவும் முக்கியமானதாகும். இதனை முதலமைச்சராக இருந்த அனுபவம் மிக்க சேக்கிழார் தம்வசம் எடுத்துக்கொண்டார். இதனால் பெரியபுராணம் பிறந்தது எனலாம்.

    பிற்காலச் சோழ மன்னரது போக்கைச் சேக்கிழார் விரும்பவில்லை. அவர்களின் மனோபாபம் வேறுவிதமாகப் போவதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு நல்ல வழியைக் காட்டினால்தான் மக்களும் நாடும் மீண்டும் பழைய நிலைய அடையமுடியும் என்று கருதினார். எனவே மன்னர் மனம் மாற, மக்கள் விழிப்புப் பெற, அவர் கையாண்டவழிதான்—ஆண்டவன் அடியாரை அறிமுகப் படுத்தும் அதி உன்னதப் பணியான பெரிய புராணமாக அமைந்தது. “குடிஉயரக் கோனுயர்வான்” இதை நன்கு அறிந்தவராகச் சேக்கிழார் இருந்தபடியால் குடிகள் உயர்வுபெற வேண்டுமானால், கோன் — அதாவது அரசர்களை உயிர்ப்பூட்டவேண்டும் என எண்ணினார். அதனால் மன்னர் மனத்தில் இறையுணர்வை ஊட்டுவதே மிகச் சிறந்தவழி என்று அதனை மையமாகக் கொண்டு சுவைபட ஒருகாவியத்தை ஆக்கினார்.

    மந்திரிகள் என்றாலே ஊழலும், பித்தலாட்டமும், நேர்மையீனமும், ஏமாற்றுதலும்தான் எங்களுக்கெல்லாம் தற்போது ஞாபகத்துக்கு வரும். அந்த அளவுக்கு மந்திரிகள் நிலை இருக்கிறது. ஆனால் சேக்கிழாரோ மன்னனையும் மக்களையும் நல்வழிப்படுத்துவதற்காக அந்தஸ்தும் அதிகாரமும் மிக்க முதலமைச்சர் பதவியினையே துறந்து விடுகின்றார். அதிகாரத்தில் இருந்து ஆண்டவன் புகழ் பாட அவர் விரும்பவில்லை. இதனால்தான் அவர் வாயினினின்றும் “கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார் – ஓடும் செம்பொனும் ஒக்க நோக்குவார்” என்று வரிகள் வந்தனபோலும்.

    சேக்கிழாரின் புலமை சாதாரணமானதல்ல. கம்பரைப் போல கவிபாடும் ஆற்றல் மிக்கவர். அவர்மட்டும் வேறு துறையில் காவியம் பாடியிருந்திருந்தால் சில வேளைக் கம்பராமாயணத்தைக் கூட விஞ்சியும் இருந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அவர் நோக்கம் அதுவல்ல. அதனால்தான் அடியார்கள் வரலாற்றைத்தேடிப் பிடித்து அதனை எப்படிக் கொடுக்க வேண்டுமோ அப்படிக் கொடுத்து நின்றார்.

    சேக்கிழார் காவியம் பாடுவதற்கு எடுத்துக்கொண்ட பொருள் வித்தியாசமான தாகும். சிலம்பு மட்டுமே உயர்திணை அல்லா ஒன்றைப் பாடுபொருளாகக் கொண்டிருந்தது. அதனை மனத்திற்கொண்ட காரணத்தால் சேக்கிழாரும் “தொண்டை” கருப்பொருளாக வைத்துத் தனது காவியத்தை படைத்து விடுகின்றார். அறுபத்துமூன்று அடியவர் கதைகளை வைத்துக்கொண்டு ஒரு காவியத்தைப் புனைவது என்பது இலகுவான காரியமல்ல.   இதனை நன்கு மனத்திற்கொண்ட காரணத்தால் எப்படியும் இந்த அடியார்களை இணை ப்பதற்கு ஒரு மார்க்கம் கிடைக்காதா என்று சிந்தித்த பொழுதுதான்…அடியார்கள் எவ்வாறு இருப்பினும் அவர்கள் யாவரிடமும் தொண்டு மனப்பாங்கு இருப்பதை அவரால் புரிந்து கொள்ளமுடிந்தது எனலாம். எனவே இப்பொழுது அடியார்கள் தொகை அவருக்குப் பெரிதாகப்படவில்லை. அங்கே தொண்டுதான் தலைமை வகித்தது. எனவே தொண்டை மையமாக வைத்துத் தொண்டர் பெருமையைப் பறைசாற்றும் காவியத்தை எளிதாகப் புனைந்து எமக்கு அளித்துவிட்டார். இது சேக்கிழாரின் பெருமைதானே!

    சுந்தரமூர்த்தி சுவாமிகளும், நம்பியும், பெரியபுராணம் பாடச் சேக்கிழாருக்குப் பெரிதும் உதவிய போதும்….சேக்கிழார் அவற்றோடு மட்டும் நின்றுவிடாமல், அடியார்கள் பற்றிய விஷயங்களையெல்லாம் ஆதாரத்துடன் எடுக்க வேண்டும் என்னும் எண்ணத்தால் ஊர்கள் தோறும் சென்று பல தகவல்களையும் எடுத்துக்கொள்கின்றார். அமைச்சராக இருந்த காரணத்தால் அவர் ஊர்கள்தோறும் சென்று பல வரலாற்றுத் தகவல்களையும், கல்வெட்டுப் போன்றவற்றையும் ஆராயும் நுண்மாண் நுழைபுலத்தைத் தன்னகத்தே கொண்டவராக விளங்கினார். இதனால் அவரின் காவியமான பெரியபுராணம் தலை நிமிர்ந்து நிற்கின்றது. இது அவருக்கு உயர்வையும் சிறப்பையும் தராமல் இருக்கத்தான் முடியுமா?

    பக்தியை ஊட்டுவதற்குப் பெரிய புராணத்தைச் சேக்கிழார் பயன்படுத்தினாலும் அதன் ஊடாகப் பல சமூக சீர்திருத்தங்களையும் துணிந்து செய்ய நினைக்கின்றார். இது அவரின் சமூக அக்கறையினையே காட்டுகிறது எனலாம். பல விஷயங்களையும் கற்றுத் தேர்ந்தவர் என்ற காரணத்தால்தான் சோழ மன்னனே அவருக்கு முதல் அமைச்சர் பதவி வழங்கிப் பெருமைப்படுத்துகின்றான். ஆட்சியில் அதிகாரத்தில் இருந்து வேலை பார்த்தவருக்கு நாட்டின் நிலை, அங்கு வாழும் மக்களின் நிலை பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள வாய்ப்பிருந்தது. தனக்குக் கிடைத்ததை அனுபவங்களின் வெளிப்பாடாகப் பெரிய புராணத்தில்…அவரின் சமூக அக்கறையாக வந்து நிற்கிறது எனலாம்.

    பெரிய புராணத்தில் இடம்பெறுகின்ற அடியவர்கள் யாவரும் வெவ்வேறு சமூக நிலையில் இருந்து வந்தவர்கள். அந்தணர், அரசர், புலையர், வேட்டுவர், மீன்பிடிகாரர், வண்ணார், குயவர், மரமேறுபவர்கள், செக்கார், ஆதிசைவர், வேளாளர் இப்படிப் பல சாதிப் பிரிவினரையும் தமது ஒப்பற்ற காவியமான பெரியபுராணத்தில் காட்டி அவர்களை வணங்கத்தக்க நிலைக்குக் கொண்டுவந்தமை சேக்கிழாரின் துணிவுதானே!

    ஆண், பெண், பொருளாதார ஏற்றத்தாழ்வு, கல்வியறிவு, சாதி எதையுமே கருத்தில் கொள்ளாமல் சமயம் என்பதற்குள் இவர்கள் அனைவரையும் கொண்டுவந்து…இவர்கள் அனைவரும் இறைவனுக்குத் தொண்டு செய்கின்ற நிலையில் போற்றப்பட வேண்டியவர்கள் என்று காட்டிய துணிச்சலால் சேக்கிழார் சிறப்பும் உயர்வும் பெற்றே நிற்கிறார் எனலாம்.

    சேக்கிழார் காலத்தில் சாதிக் கட்டுப்பாடு மிக இறுக்கமாக இருந்திருக்கிறது என்பதற்கு அவரின் காவியத்தில் வருகின்ற அடியார்களே சான்றாகும். தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் சென்று வணங்கமுடியாத நிலை காணப்பட்ட காலம். இதனைச் சேக்கிழார் மனித தர்மம் அற்றது எனக் கருதியதால்தான் அறுபத்து மூவரையும் இறைவன் அடியார்களாக்கி விடுகின்றார். பெரிய புராணத்தில் வருகின்ற அடியார்கள் பல சாதிகளைச் சேர்ந்த்திருந்த போதிலும் யாவரும் சிவமயமாக நின்று தொண்டையே தம் மன த்தில் இருத்திய காரணத்தால் சாதி அடிபட்டுப் போவதையே நாம் இதன் மூலம் கண்டுகொள்ள முடிகிறது. “ஆண்டவன் சன்னிதானத்தில் அனைவரும் சமம்” என்னும் அரிய கருத்தை அகில உலகமும் அறியச் செய்த காரணத்தால் சேக்கிழார் சிறப்புக்கும் உயர்வுக்கும் உரியவர் ஆகிறார் அல்லவா?

    ஒதுக்கி வைக்கப்பட்டவர்களை இன்று கோவில்கள்தோறும் சிலை வடிவில் உள்ளே வைத்துப் பூசனைகள் செய்தும், பெருவிழா எடுத்தும், குருபூசை என்று குறித்துக் கொண்டாடியும் வருகின்றோம் என்றால்…அந்தப் பெருமைக்கும் சிறப்புக்கும் சேக்கிழார்தான் காரணம் என்பதை எவருமே மறந்து விடமுடியாது.

    எமது சமயத்தின் தொண்டர் பற்றிக் கூறவந்தாலும்… ஆயிரம் ஆண்டுகால தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றினையும், மொழி பற்றிய நிலையும், சமயங்களின் நிலையையும் முதன்முதலாகப் பதிவு செய்து எமக்கெல்லாம் தந்து நிற்கின்றார் சேக்கிழார்.

    வீரம் என்றால் பொதுவாக …. புஜபல பராக்கிரமம் கொண்டவர்களையும், பல போர்களில் வெற்றி கண்டவர்களையுமே சொல்லுவது வழக்கம். ஆனால் சேக்கிழாரோ வீரத்துக்கும் வீரர்களுக்கும் வித்தியாசமான விளக்கத்தை அளித்து வியக்கவைகின்றார். முதலமைச்சராகவிருந்தவர். பல போர்களைக் கண்டவர். ஆனாலும் அவற்றில் ஈடுபட்டவர்களை ’வீரர்’ என்றோ அவர்கள் பெற்றது ’வெற்றி’ என்றோ அவர் மனம் ஏற்கவில்லை. அதாவது புறத்தே நடக்கும் போரைவிட அகத்தே நடக்கும் போரும் அதனை வெற்றி கொள்ளுதலுமே வீரமும் வெற்றியும் எனக் கருதினார். இதற்கு எடுத்துக்காட்டாகத் திருநீலகண்டரைக் காட்டுகின்றார். புலனடக்கம் பெற்றவர்தான் உண்மையான வீரர் என்பதைச் சேக்கிழார் காட்டுவது எத்துணை அரிய பெரிய தத்துவமாக இருக்கிறது! இந்திரியங்களை வென்றவர்களால்தான் பகையின்றி வாழமுடியும். பகையை ஒழித்தவர்களால் தான் தொண்டுள்ளத்தோடு செயற்படமுடியும். இதுதான் வீரமும் அதற்கான வெற்றியும் என்று புதிய விளக்கத்தைச் சேக்கிழார் தந்து சிறப்பு மிக்கவராகி விடுகின்றார். பற்றை நீக்கிக் குறிக்கோளுடன் துறவு மனப்பான்மை கொண்டு வாழும் தொண்டர்களின் “வீரம் என்னால் விளம்பும் தகையதோ ?” என்ற சேக்கிழார் வாக்கை நோக்கவேண்டும்.

    அதேவேளை “ஈர அன்பினர் யாதுங் குறைவிலார் — வீரம் என்னால் விளம்பும் தகையதோ “சிறுத்தொண்டர், எறிபத்தர், வீரம் படைத்தவரானாலும் ஈரமும் கொண்டவர்கள். நாவுக்கரசர், குங்கிலியக்கலையர், கண்ணப்பர், வீரத்தையெல்லாம் எளிதில் சொல்லிவிடமுடியாது என்று சேக்கிழார் காட்டுவது அவரின் புதுச் சிந்தனையை வெளிப்படுத்துவதாக இருக்கிறதல்லவா? வீரத்துக்கு இவ்வளவு விளக்கமா என எண்ணத் தோன்றுகிறதல்லவா? வீரம் மிக்கவர்கள் ஆனாலும் ஈரமும் மிக்கவர் என்பதுதான் முக்கியம். இதனை ” ஈர அன்பினர் யாதும் குறையிலார் ” என்று சேக்கிழார் சுட்டுவது நோக்கத் தக்கது.

    பெண்களைப் பெருமைப்படுத்துவதில் அக்கறை காட்டுகின்றார் சேக்கிழார். அவள் வந்தாள் என்று பெண்களைச் சமகால இலக்கியங்களால் பெண்கள் விளிக்கப்பட்ட வேளை…பெண்களுக்கு மரியாதை கொடுத்து “அவர்” என்றும் “வந்தார் ” என்றும் தமது காப்பியத்தில் அழைப்பதும் ஒருவித புதுமைதானே!

    “சிவலிங்கத்துக்கு” அருமையான விளக்கத்தைச் சேக்கிழார் தந்து நிற்கின்றார். காணாத “அருவனுக்கும்” “உருவனுக்கும்” காரணமாய் நீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்” அதாவது கண்ணால் காணும் நிலை— உருவம். காணாநிலை — அருவம். இதனை ’அருவுருவம்’ என்று சேக்கிழார் காட்டுகின்றார். ஒரு உருவத்தில் இறைவனைக் காண்பது தொடக்க நிலை. உருவமே இல்லாத சிவனை மனதுக்குள் கொண்டுவருவது ஞானநிலை. இரண்டுக்கும் இடைப்பட்ட “அருவுருவ நிலை” சைவத்தின் உயர்தத்துவ நிலையாகும். இதனையே மிக நுட்பமாகச் சேக்கிழார் காட்டுவது அவரின் திறத்தை வெளிப்படுத்தி நிற்கிறதல்லவா?

    ஆலயத்தில் ஆண்கள் எப்படி வணங்க வேண்டும் , பெண்கள் எப்படி வணங்க வேண்டும் என்பதையும் சேக்கிழார் காட்டுவது நோக்கத்தக்கது. “அட்டாங்க பஞ்சாங்கமாக முன்பு முறையினால் வணங்கி “எட்டினொடு ஐந்தாகும் உறுப்பினால் பீடு நிலத்தின் மேல் பெருக்கப் பணிந்து”
    இவை எல்லாம் சேக்கிழாரின் அறிவுறுத்தல்கள்தானே!

    ” உலகெலாம் ” என்று இறைவன் அடி எடுத்துக் கொடுக்கும்வரை பல காலம் காத்திருந்தார் சேக்கிழார். பெரிய புராணம் வந்தால் உலகுக்கு நன்மை பயக்கும் என்று சேக்கிழார் நினைத்தார் என்றே எண்ணமுடிகிறது. சமயத்தை, தொண்டை, பக்தியை, கலாசாரத்தைப் பாடவந்தாலும் அவரிடம் உலகம் தழுவிய உயர்ந்தநோக்கு இருந்திருக்கிறது என்பதையே பெரிய புராணம் மூலமாக நிலைநாட்ட முயன்றுள்ளார்.

    பக்தர்கள், தொண்டர்கள், அடியார்கள் என எப்படி அழைத்தாலும் அவர்கள் யாவரும் உலகில் பொதுமையானவர்களே!

    அகில காரணர் தாள் பணிபவர், கைத்திருத்தொண்டு செய்கடப்பாடினர், உள்ளும் புனிதர்கள், கோதிலாக் குணப் பெருங்குன்றனார், கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார், ஓடும் செம்பொனும் ஒக்க நோக்குவார், கும்பிடலேயன்றி வீடும் வேண்டாதவர், பாரம் ஈசன் பணி அலது ஒன்றிலார், ஈர அன்பினர் யாதும் குறைவிலார், வீரர்.

    மேலே கூறிய அடைமொழிகளை உற்று நோக்கும் பொழுது இவை யாவும் உலகந் தழுவிய ஒரு நிலையையே உணர்த்தி நிற்கிறது அல்லவா? “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் குரலும் இதனுடன் ஒத்துவருவதையும் பார்க்க முடிகிறதல்லவா? “தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! ” என்பதைச் சேக்கிழார் தெளிவாக அறிந்தவர் என்பதும் புலனாகிறதல்லவா?

    அன்பின் உயர்வுக்கு முன்னால் வேறு எதுவுமே இருக்கமுடியாது என்பது சேக்கிழார் எண்ணமாகும். இதனை விளக்க வரும்பொழுதுதான் கண்ணப்பரையும் சிவகோசரியாரையும் எமக்குக் காட்ட வருகின்றார். சிவகோசரியார் விதி மார்க்கத்தில் நிற்க– கண்ணப்பரோ பக்தி மார்க்கத்தில் நிற்கின்றார். விதி மார்க்கத்தோர் அறிவின் துணைகொண்டு இறைவனை அறியமுயல்பவர்கள். பக்தியில் நிற்பவர்கள் உணர்வு மய மானவர்கள். அவர்கள் அறிவை நாடுவதில்லை. இதனையே கண்ணப்பனிடம் காண்கின் றோம். விதி மார்க்கத்தில் செல்பவர்கள் இறைவனைக் கனவில்தான் காணமுடியும். ஆனால் பக்தி அப்படியன்று. கண்ணப்பனுக்கு ஆறாவது நாளே இறைவன் காட்சிகொடுத்து அருள்புரிகின்றான். இங்குதான் அன்பு எவ்வளவு உச்சமானது எனச் சேக்கிழார் காட்டுகின்றார். இதனால்தான் ” கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் — என்னப்பன் என் ஒப்பில் என்னையும் ஆட்கொண்டருளி” என்று மணிவாசகப் பெருமானே வியந்து நிற்பதைக் காண்கின்றோம். சேக்கிழார் வழிபாடுகளைப்பற்றி காணும் பாங்கு வியந்து நிற்க வைக்கிறதல்லவா?

    அன்பு என்பதில்” நான்” இருக்கக்கூடாது. நான் இல்லாத அன்புதான் கண்ணப் பனது அன்பாகும். கண்ணப்பன் அன்பு பயன் கருதாததாகும். இதைத்தான் ” கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி வீடும் வேண்டா நிலை” என்பதாகும். அன்பின் உயர்வை – இறைவனை அடைவதற்கு எப்படிப் பயன்படுத்தலாம் என்பதை எடுத்துச்சொல்லும் விதத்தால் சேக்கிழார் ஈடிணையற்றவராக நிற்கிறார் எனலாம்.

    இப்படிப் பல்வேறுவிதமான நிலைகளில் நின்று சிந்தித்துப் பெரிய புராணம் என்னும் பொக்கிஷத்தை எமக்குத் தந்தமையால் சேக்கிழார் என்றுமே சிறப்புக்கும் உயர்வுக்கும் உரியவர் ஆகி நிற்கின்றார். அவர் பக்திச்சுவையோடு தமிழ்ச்சுவையினையும் தரத் தவறவில்லை.” சொற்றமிழ் பாடுக என்றார் தூமறை பாடும் வாயார்” என இறைவனே தமிழில்தான் பாடவேண்டும் என்று விரும்பினான் என்னும் செய்தியையும் தெரிவித்துத் தமிழின் பால் தாம் கொண்டிருந்த ஆராக் காதலையும் சேக்கிழார் வெளிப்படுத்தி நிற்கின்றார்.

     

    Share
  • உலவுறாய் வாலி நீயும்!

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    வாலியுன் பாட்டைக் கேட்டால்
    வலியெலாம் பறந்தே போகும்
    போலிநீ இல்லை ஐயா
    பொங்கிடும் தமிழின் ஊற்று!                         Vaali

     நூலெலாம் ஆக்கித் தந்து
     நுகர்ந்திடச் செய்தாய் ஐயா
     நாலுபேர் உன்னைப் போற்ற
     நயமிகு கவிதை தந்தாய்!

     ‘வாலிபக் கவிஞன்’ என்று
      வரம்வாங்கி வந்தாய் ஐயா
      வைரமாய் வரிகள் பாடி
      மனங்களில்  பதிந்தே விட்டாய்!

     தெருவெலாம் உந்தன் பாடல்
     தினமெமைக் கேட்கச் செய்தாய்
     தமிழிலே மூழ்கி நாளும்
     தரமுடைக் கவிதை தந்தாய்!

     நரைதிரை வந்த போதும்
     நாளெலாம் பாடி நின்றாய்
     உரமுடைக் கவிஞன் ஆக
     உலவுறாய் வாலி நீயும்!

    Share
  • எழுத்து நாகரிகம்!

    -எம்.ஜெயராம சர்மா – மெல்பேண்

     

    paper-penஎழுதத்தெரிந்துவிட்டால் எழுதிவிடலாம் எனப்பலபேர் நினைக்கிறார்கள்.
    அப்படி நினைத்தபடியால்தான் எப்படியோ எல்லாம் எழுதியும் விடுகிறார்கள்.

    எழுதிய விஷயங்கள் எப்படி இருந்தாலும் அவர்களுக்கு அதைப்பற்றி எந்தவித வருத்தமோ கவலையோ வருவதேயில்லை. மற்ற‌வர்கள் என்ன சொன்னாலும் என்ன எண்ணினாலும் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவே மாட்டார்கள். எழுதிக்கொண்டே இருப்பார்கள்.

    நாங்கள் எதைச்செய்தாலும் அந்தச் செயல் மற்றவர்களை எந்தவிதத்திலும் பாதித்து விடவே கூடாது. எங்களது விருப்பு வெறுப்புக்களைப் பகிரங்கப்படுத்தும் பொழுது மிகக் கவனமாகவே வெளிப்படுத்தவேண்டும். எங்களுக்குப் பிடித்த விஷயம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று நினைக்கலாமா?அப்படி நினைக்கவே கூடாது.

    சாதாரணமாக வீட்டிலே இருக்கின்ற அம்மா அப்பா பிள்ளைகளிடையேயே சாப்பாட்டில் கூட வித்தியாசம் இருப்பதை காணமுடியும். அப்பாவுக்கு நல்ல‌ காரம் பிடிக்கும். அம்மாவோ எதிர்மாறாக இனிப்பையே விரும்புபவராக இருப்பார். பிள்ளைகள் ஒவ்வொன்றுமே வித்தியாசமான சுவையை விரும்பலாம்.

    அவர்களை பார்த்து…இனிமேல் நீங்கள் எல்லோரும் காரம்தான் சாப்பிட வேண்டும் என்று அப்பா கட்டளை இட்டாலோ வற்புறுத்தினாலோ அது நாகரிகமாக இருக்குமா?அது சர்வாதிகாரமாகவும் காட்டுமிராண்டித்தனமாக‌வுமாகவே இருக்கும் அல்லவா?

    வீட்டிலேயே இப்படி இருக்கையில் வெளியில் உள்ளவர்கள் நிலையைச் சிந்திப்பது முறையான செயல்தானே. ஒவ்வொருவருக்கும் விருப்புக்களும் விருப்பம் இல்லாத தன்மையும் நிறையவே இருக்கிறது. அது அவரவர் சுதந்திரம். அதில் தலையிட எவருக்கும் உரிமை இல்லை. ஆனால் அவர் விருப்பத்தினை மற்றவர் மீது திணிக்க முயற்சிக்க நினைப்பதுதான் நாக‌ரிகமற்ற செயலாகி விடுகிறது எனலாம்.

    சினிமா பார்ப்பதை அந்த நாள்தொட்டு இன்றுவரைப் பலர் நல்லதென்று
    எடுத்துக்கொள்வதேயில்லை. ஆனால் நல்ல சினிமாக்களும் வந்துதான் இருக்கின்றன. அதற்காக ஒட்டுமொத்த சினிமாவையும் அது சார்ந்தவர்களையும் திட்டித் தீர்ப்பதோ வசை பாடுவதோ முறையா? இதனை பலர் எழுத்தால் செய்யும்பொழுது எழுத்து நாகரிகம் சற்று யோசிக்கின்றது.

    சமயம் பக்தி கடவுள் இவையெல்லாம் பொதுவானவை. இவை பற்றி பல‌ கருத்து முரண்பாடுகள் காலத்துக் காலம் இருந்துதான் வந்திருக்கிறது. ஆனால் சமயங்களோ பக்திமார்க்கங்களோ கடவுள்பற்றிய நம்பிக்கைகளோ உலகைவிட்டு மறைந்து விடவில்லை.

    இதுபோலத்தான் உயர்வு தாழ்வு என்னும் சாதிப் பாகுபாடும். என்னதான் சமத்துவம் பேசினாலும் சாதியென்பதை ஒழிக்கமுடியவில்லை. அது ஒருபக்கத்தில் தனது வேலைகளைச் செய்தபடியே இருக்கிறது.

    புத்தர் வந்தார்; இயேசு வந்தார்; காந்தியும் வந்தார்; ரமணர்வந்தார்; ராமகிருஷ்ண‌ பரமஹம்சர் வந்தார்; அவரது வாரிசாக சுவாமி விவேகானந்தரும் வந்தார். இவர்கள் அனைவருமே மிக மிக நயமாகவும் அதேவேளை வெகு நாகரிகமாகவுமே நல்லவற்றைச் சொன்னார்கள் எழுத்தாயும் தந்தார்கள். யாரையும் குறை சொல்லவும் இல்லை. யாரையும் புண்படும்படிச் செய்யவும் முயல‌வில்லை. இது எமக்கெல்லாம் பெரியதொரு பாடமாகும்.

    இப்படி இவர்கள் எல்லாம் நடந்து காட்டிய பின்னரும் கூட நாகரிகம்
    இல்லாமல் இங்கிதம் என்றால் என்ன என்று தெரியாமல் புரியாமல்
    எல்லோர் மனத்தையும் நோகடிக்கும் வகையில் எழுதுவது என்பது
    இவர்களிடம் எப்படித்தான் வந்ததோ?

    வீட்டுக்குள் இருந்தால் அது அவர்களுக்கு மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தும். வீட்டை விட்டு வெளியில் வரும்பொழுது அது பல பேரைப் பாதிக்கும் அல்லவா? இதை ஏன் இவர்கள் உணர்கிறார்களில்லையோ தெரியவில்லை. விமர்சனம் என்பது தேவைதான். அதனை நாகரிகமாகச் செய்ய வேண்டும்.

    வாரியார் சுவாமிகள் பல இடக்கு முடக்கான கேள்விக் கணைகள் வந்தபோதெல்லாம் யாருக்கும் எந்தவித மனநெருடல்களும் ஏற்படாவகையில் மிகவும் நாகரிகமாக அதனைக் கையாண்டுள்ளார் என்பதை அறிகின்றோம்.

    எழுத்து என்பது மிகவும் வல்லமை வாய்ந்த ஆயுதமாகும். அதனை
    மிகவும் லாவகமாகக் கையாளாவிட்டால் அது தாக்கிச் சேதப்படுத்திவிடும். கத்தியால் பழத்தையும் வெட்டலாம். அதேவேளை ஒரு ஆளையும் வெட்டிவிடலாம். நாகரிகம் அற்ற எழுத்துக்கள் மற்றவரை வெட்டிக்காயப்படுத்திவிடும்.

    எனவே எழுத்தால் காயப்படுத்தாது…கருத்துக்களைக் கொடுப்போம்.
    எழுத்தால் கண்ணியத்தைக் காப்போம். எழுத்தால் யாவரையும் இதமாக வருடிக்கொடுப்போம். அப்பொழுது எழுதும் எழுத்தில் நிச்சயமாக நயத்தகு நாகரிகம் வந்தே சேரும். நல்ல எழுத்தால் நாடும் வளரும். வீடும் வளரும். நட்பும் வளரும். உறவுகளும் மலரும். உள்ளமெல்லாம் உயர்வு பெறும். கண்ணியத்தைக் கடைப்பிடித்துக் கருத்துக்களை எழுதுவோம்.

     

    Share
  • சீக்கிரம் அருள்வாய் கந்தா!

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    கருவிலை கருணை வேண்டும்
    கல்வியில் உயர்வு வேண்டும்
    தெருவெலாம் அலையா வண்ணம்              Murugan
    தினமெனைக் காக்க வேண்டும்

    ஒருமனம் கொண்டு உன்னை
    உவப்புடன் வணங்க வேண்டும்
    பெருமனம் கொண்டு என்னைப்
    பேணுவாய் கந்த வேளே!

    கருணைகூர் முகங்கள் ஆறும்
    காத்திட வேண்டும் ஐயா
    வறுமையில் வாடி நாளும்
    வதங்கிடா திருக்க வேண்டும்!

    தரமுடை மனத்தைப் பெற்றுத்
    தரணியில் வாழ வேண்டும்
    சிரமதில் அகந்தை போகச்
    சீக்கிரம் அருள்வாய் கந்தா!

    நரை திரை வந்திடாமல்
    நலமுடன் வாழ வேண்டும்
    நாளுமுன் நாமம் சொல்லி
    நானுனைப் பாட வேண்டும்

    குறையுடை வாழ்க்கை தன்னைக்
    குமராநீ அகற்ற வேண்டும்
    நெறியுடன் நின்று வாழ
    நீயெனக் கருள்வாய் ஐயா!

    Share
  • இடைவெளி தேவையா?

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    grandparentsமுதியவர்களை இளையவர்கள் தமக்கு முட்டுக்கட்டைகள் என்று எண்ணுகிறார்கள். அவர்களுக்கு அவசரம்; இவர்களுக்கு ஆறுதல். அவசரம் என்பது சிந்திக்க விடாது. எதையும் ஆறுதலாக எடுக்கும் பொழுது பல தெளிவுகள் ஏற்பட வாய்ப்புண்டு அல்லவா? இதனை இளமை ஏற்க மறுக்கிறது. இதைப்பார்க்க முதுமை மறுகுகிறது. எடுத்ததற்கெல்லாம் ஏதாவது சொல்லியபடியே இருக்கிறார்களே என எரிச்சல்படுகிறார்கள் இளையவர்கள். அவர்கள் அப்படிச் சொல்வதற்குக் காரணம் அவர்களுக்கு முன்பு கிடைத்த பாடமாகும். தமக்கு ஏற்பட்ட கசப்புகள், மனச்சங்கடங்கள், மீண்டும் இளையவர்களுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்னும் நல்ல எண்ணமே இதற்கான காரணமாக இருக்கிறது எனலாம்.

    பாட்டிகள், தாத்தாக்கள் எல்லாம் பிள்ளைகளுக்கு நல்ல கதைகளை எல்லாம் சொல்லிக் காட்டுவார்கள். அந்தக் கதைகளில் அருமையான பயனுள்ள செய்திகள் எல்லாம் உள்ளே இருக்கும். அவையாவும் வாழ்க் கையில் பிரச்சினைகள் வரும் பொழுது தீர்வு காண்பதற்கு உதவி நிற்கும் தன்மை வாய்ந்தனவாகும். எனவே பாட்டி தாத்தாவை ஒதுக்கிவிடுவது என்பது முறையற்ற செயலேயாகும்.

    ஒளவை பாட்டிதான்…ஆனால் அவரை ஒதுக்கினோமா? அவரின் “அறஞ்செய விரும்பு“ தொடர்தரும் அருங்கருத்துக்கள் எமக்கெல்லாம் அரணாக இருக்கிறதல்லவா?

    பாட்டி வைத்தியம் பலவித பக்குவத்தை அளிப்பதையும் பார்க்கிறோம் அல்லவா? குழந்தைகள் அழும்; ஏன் அழுகின்றன என்று சில வேளைகளில் கண்டுபிடிக்கவே முடியாது போய்விடும். வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் விக்கி விறைத்துவிடுவார்கள். அங்கு ஒரு பாட்டி இருந்தால்…அவருக்கு அதற்கான காரணமும் தெரியும். அதற்கான பரிகாரமும் தெரியும். பாட்டியின் பக்குவத்தால் பதறித் துடித்த குழந்தை பக்குவமாவதுடன் சிரித்து விளையாடவும் தொடங்கிவிடும். வீட்டில் உள்ளவர்களும் ஆறுதல்பட்டு நிற்பர்.

    இரவில் தயிர் சாப்பிடக்கூடாது. இரவில் கீரை சாப்பிடக்கூடாது என்று முதியவர்கள் எச்சரிப்பார்கள். அதனை இளையோர் கிண்டல் பண்ணி அவர்களின் எச்சரிக்கையையும் புறந்தள்ளி விட்டுச் சாப்பிடுவார்கள். அதன் பின்பு அவர்கள் அவஸ்தைப்படும் பொழுதுதான் முதியோரின் எச்சரிக்கை பற்றி உணர்ந்து கொள்ளுவார்கள்.

    முதியவர்கள் சொல்லுவது அத்தனையும் மூடப்பழக்கம் என்றும், தேவையற்றன என்றும் எண்ணுவதே இளையவர் வழக்கமாகி விட்டது. அதனால் அவர்கள் எதைச் சொன்னாலும் காரண காரியம் பாராது உடனே ஒதுக்கித்தள்ளி விடுவதை வழக்கமாக்கிக் கொண்டுவிட்டார்கள்.

    Share
  • மலர்ந்திடுமே தீபாவளி!

           -எம். ஜெயராம சர்மா- மெல்பேண்

           தீபாவளி என்றால்
           தித்திப்பு மனதில் வரும்
           தெருவெங்கும் மக்களெலாம்                deepavali
           பெருமகிழ்வு கொண்டிடுவார்!

           கோபங்களைத்  தவிர்த்து
           குற்றங்களை மறந்து
           தீபமிட்டு வழிபட்டு
           சிறப்புடனே மகிழ்ந்து நிற்பார்!

           அடக்கி ஒடுக்கி நின்று
           ஆணவத்தின் தலை ஏறி
           அமைதியைக் குலைப்பதிலே
           ஆருக்கு என்ன பயன்?

            மற்றவரை வாழவிட்டு
            வம்புதும்பு தனையொதுக்கி
            நற்கருணை யோடிருந்தால்
            நலந்தானே யாவருக்கும்?

            இக்கருத்தை உள்ளடக்கி
            எங்கள் தீபாவளியுளதை
            எல்லோரும் மனதிற்கொளின்
            இனித்திடுமே தீபாவளி!

            ஏழ்மை நிலை ஒழியவேண்டும்
            இரக்ககுணம் ஓங்கவேண்டும்
            தாழ்வுமனம் ஓடவேண்டும்
            தலைநிமிர்ந்து வாழவேண்டும்!

            ஊழ்வினையை நம்பிநம்பி
            ஒதுங்கிநாம் நின்றிடாமல்
            வாழும் மனம் வந்துவிடின்
            மலரும் நல்ல தீபாவளி!

             பட்சணமும் செய்ய வேண்டும்
             பட்டாசும் வெடிக்க வேண்டும்
             கஷ்டமின்றி வாழ நாங்கள்
             கடவுளிடம் வேண்ட வேண்டும்!

             இஷ்டமுடன் யாவரையும்
             ஏற்று நிற்கும் மனமும்வேண்டும்
             துஷ்டரையும் துணிவுகொண்டு
             தூயராக்க முயலவேண்டும்!

             மட்டில்லா மகிழ்ச்சி என்றும்
             வந்துகொண்டே இருந்துவிடின்
             வாழுகின்ற நாட்களெல்லாம்
             மலர்ந்திடுமே தீபாவளி!

             பெண்ணடிமை போகவேண்டும்
             பெண்பிறந்தால் போற்றவேண்டும்
             மண்ணிலவர் நல்லவண்ணம்
             வாழும்நிலை வளரவேண்டும்!

             உண்ணுகின்ற உணவுமுதல்
             ஊற்றெடுக்கும் ஆறுவரை
             பெண்ணாகப் போற்றுகிறோம்
             பிறகுதான் தூற்றுகிறோம்!

             மனக்கதவைத் திறவுங்கள்
             மங்கையரை மதியுங்கள்
             மங்கையர்கள் மகிழ்ந்திட்டால்
             மலர்ந்திடும் நற்தீபாவளி!

             மஞ்சளொடு குங்குமமும்
             மல்லிகையும் அலங்கரிக்க
             மங்களமாய் பெண்கள்வரின்
             மலர்ந்திடுமே தீபாவளி!

            பெண்ணவளின் பெருமையினைப்
            பேணிவிடும் வேளையிலே
            மண்ணுலகில் தீபாவளி
            மலர்ந்திடுமே நாளெல்லாம்!

    Share
  • கவிதையில் வாழுகின்றாய்!

       -எம். ஜெயராம சர்மா- மெல்பேண்

    kannadasan     கற்பனைக் கடலுள் மூழ்கி
         கணக்கில்லா முத்தெடுத்து
         அற்புதக் கவிதை தந்து
         அனைவரின் கவிஞன் ஆனாய்!

         சொற்சுவை அனைத்தும் சேர்த்து
         சுந்தரத் தமிழில் தந்த
         பொற்புடைக் கவிதையாலே
         புவியெலாம் புகழுதுன்னை!

         காவியம் செய்து நின்ற
         கவி கண்ணதாசனே நீ
         கவிதையால் உலகையாண்டு
         காவியம் ஆகி விட்டாய்!

         ஓவியம் போல  நீயும்
         ஒவ்வொரு கவிதை தந்தாய்
         பாவிடைத் தோய்ந்தாய் நாளும்
         பாட்டுக்கே அரசனானாய்!

         ஊரெலாம் உன்னைப் போற்ற
         உன்கவி உதவிற்றன்றோ
         வாரிநீ தந்து நின்றாய்
         வளமுடைத் தமிழை நாளும்!

         கார்முகில் போல நீயும்
         கவிமழை பொழிந்து நின்றாய்
         கவி கண்ணதாசனே நீ
         கவிதையில் வாழுகின்றாய்!

    Share
  • ஆராய்ந்து தேர்ந்திடுவீர்!

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

      அடியார்களின் இலக்கோ
      ஆண்டவனை அடைவது
      அரசுள்ளார் இலக்கோ
      அனைத்தையும் அள்ளுவது!

       ஆணவத்தின் இலக்கோ
       அனைத்தையுமே அழிப்பது
       ஆதலால் இலக்குதனை
       ஆராய்ந்து தேர்ந்திடுவீர்!

       வள்ளுவனார் இலக்கோ
       வாழ்வை வளமாக்குவது
       தெள்ளுதமிழ் பாரதிக்கோ
       தேசமதின் விடுதலையே!

       உள்ளமதில் நல்லவெண்ணம்
       ஊற்றெடுத்து நின்றுவிடின்
       நல்லநல்ல இலக்குகளை
       நாம்பெற்று நிற்போமே!

       கத்தியின்றி ரத்தமின்றி
       யுத்தம்செய்யும் இலக்கு
       காந்திமகான் உள்ளமதில்
       தோன்றி நின்றதன்று!

       வெற்றியென்னும் பெயரைக்கொண்டு
       வீழ்த்தல் வீரமன்று
       சத்தியத்தைக் கையில்கொண்டு
       சாதித்தாரே காந்தி!

       உத்தமரின் இலக்கைக்கண்டு
       உயிர்ப்புப் பெற்றவுலகு
       உண்மையான இன்பம்பெற்று
       உதிர்த்ததே நல்லுவகை!

    Share
  • அருவி!

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    வள்ளுவரின் குறள் படித்தால்
    மனமாசு அகன்று விடும்                                  kural
    தெள்ளுதமிழ் மூலம் அவர்
    தேடி எமக் களித்துள்ளார்
    அள்ள அள்ளக் குறையாத
    அத்தனையும் தந்த அவர்
    அருவி எனப் பாய்ந்தோடி
    அனைவரையும் விழிக்கச் செய்தார்!

    ஆண்டவனை நினைப்பதற்கும்
    அமைதியாய் வாழ்வதற்கும்
    வேண்டுகின்ற கருத்தெல்லாம்
    விதம்விதமாய்த் தந்த குர்ஆன்                                                            Jesus
    நீண்டதொரு அருவியென
    நீள்புவியில் ஓடிநிதம்
    ஆண்டவனின் குரலாக
    அனைவருக்கும் இருக்கிறது!

    பைபிள் எனும் வேதநூல்
    பலமொழியில் வந்துளது
    உள்ளமெலாம் ஒளிஊட்ட
    உரமாக நிற்கிறது
    தெள்ளுதமிழ் பைபிளிப்போ
    சிறப்பான அருவியென                                                                          Lord-Krishna
    கள்ளமெலாம் கரைந்திடவே
    காத்திரமாய் ஓடுதிப்போ!

    கண்ணனது கீதையினால்
    கசடரெலாம் விழிப்புற்றார்
    எண்ணமெலாம் சிறப்படைய
    எல்லோரும் படிக்கின்றார்
    கீதையெனும் அருவியிலே
    கிடந்தெழுந்து வந்துவிடின்                                                                 mosque
    போதையெலாம் தெளிந்துவிடும்
    பொறிபுலனும் ஒடுங்கிவிடும்!

    சமயங்கள் பல அருவி
    சாத்திரங்கள் பல அருவி
    சன்மார்க்கம் குலைந்துவிடின்
    சகதியாய் ஆகிவிடும்
    அருவிகள் ஓடவேண்டும்
    ஆணவம் அழியவேண்டும்
    உணர்விலே நல்லெண்ணம்
    ஓடிடட்டும் அருவிகளாய்!

    கண்ணனும் அருவியானார்
    கர்த்தரும் அருவியானார்
    எண்ணியே பார்க்கும்போது
    எம்நபியும் அருவியானார்
    மண்ணிலே உள்ளாரெல்லாம்
    மாண்புறவே வாழ்வதற்கு
    புண்ணியர்கள் யாவருமே
    புனிதநீர் அருவியானார்!

    Share