Tag: எம். ஜெயராம சர்மா

  • பால்நினைந்து கொடுத்திடுவீர்!

    -எம். ஜெயராமசர்மாமெல்பேண்

    பிரமனின் படைப்பினிலே
    பெரும்படைப்பு
    பெண்ணினமே!          MotherChild2
    பெருங்குணங்கள்
    பெற்றவளே
    பிறப்பினிலே
    பெண்ணாவாள்!

    ஆண்படைப்பும் பெண்படைப்பும்
    அகிலத்தில்
    உயர்படைப்பே!
    ஆனாலும்
    பெண்படைப்பே
    அகிலத்தை
    ஆளுவதே!

    கருவினைத் தாங்கிநிற்கும்
    பெருமையே
    பெண்மையாகும்!
    உருவினைக்
    கொடுப்பதற்கும்
    உரியதே
    ஆண்மையாகும்!

    இருஇனம் சமமானாலும்
    பெருமையே
    பெண்ணுக்கன்றோ!
    சுமைதனைத்
    தாங்கிநின்று
    சுமப்பது
    பெண்மைதானே!

    அடிவயிறு நோவெடுக்க
    அவள்சுமந்து
    பெற்றபிள்ளை
    அழகுமுகம்
    கண்டவுடன்
    அகமகிழ்ந்து
    நின்றிடுவாள்!

    அக்குழந்தை பால்குடிக்க
    அவள்வயிறு
    குளிர்ந்துவிடும்!
    அக்கணத்தில்
    ஆனந்தம்
    அவளோடு
    அணைந்துவிடும்!

    பால்குடிக்கா விட்டாலும்
    பால்கொடுக்கா
    விட்டாலும்
    தாயின்நோ
    அதிகரிக்கும்
    தாளாத
    துயரைத்தரும்!

    குழந்தை அழவேண்டும்
    குடிக்கவேண்டும்
    தாய்ப்பாலை
    தாயப்போ
    தனைமறப்பாள்
    தாயன்பு
    சுரக்குமப்போ!

    தாய்ப்பாலே உணவாகும்
    தாய்ப்பாலே
    மருந்தாகும்
    தாய்ப்பாலைத்
    தவிர்த்துவிடின்
    நோய்க்கிடமாய்
    ஆகிடுமே!

    பிள்ளைக்குப் பால்கொடுத்தல்
    பெருமையென
    நினைத்தார்கள்
    பால்குடிக்கும்
    பிள்ளைக்கு
    நோயணுகா
    என்றார்கள்!

    நாகரிகம் தலைக்கேறி
    நல்லதெல்லாம்
    மறந்துவிட்டுப்
    பால்கொடுத்த
    பெண்களிப்போ
    படுத்துறங்கி
    நிற்கின்றார்!

    குழந்தை அழுதாலும்
    கொடுக்கமாட்டேன்
    பாலென்று
    குழறுபடி
    செய்கின்றார்
    குடும்பமதில்
    பெண்களிப்போ!

    பால்கொடுத்தால் தம்மழகு
    பாழாகி
    விடுமென்று
    பவ்வியமாய்ச்
    சொல்லியவர்
    பால்கொடுக்க
    மறுக்கின்றார்!

    பெற்றபிள்ளை அழுதாலும்
    பெருங்கவலை
    கொள்ளாமல்
    வற்றிவிடும்
    அழகுஎன்று
    வாடியவர்
    நிற்கின்றார்!

    உற்றவரும் மற்றவரும்
    ஓலமிட்டு
    உரைத்தாலும்
    சற்றுமதை
    மதியாது
    தம்மழகைப்
    பேணுகின்றார்!

    புட்டிப்பால் கொடுக்கின்றார்
    புத்திகெட்டு
    அலைகின்றார்
    கிட்டச்சென்று
    கேட்டாலோ
    வெட்டியே
    பார்க்கின்றார்!

    விஞ்ஞானம் வளர்ந்தாலும்
    விந்தைகள்
    புரிந்தாலும்
    உண்மைகள்
    ஒருபோதும்
    ஓடிவிட
    மாட்டாது!

    தாய்ப்பாலைக் கொடுத்துவிடின்
    தாய்க்குக்குறை வருவதில்லை
    தாயழகும்
    கெடுவதில்லை
    தாய்மைதான்
    அழகுபெறும்!

    என்றிப்போ விஞ்ஞானம்
    எடுத்தியம்பி
    நிற்கிறது
    இதைக்கேட்ட
    தாய்மாரும்
    இரங்கிவந்து
    நிற்கின்றார்!

    மேலைநாட்டில் பெண்களிப்போ
    விரும்பிப்
    பால்கொடுக்கின்றார்
    வேலைக்குச்
    சென்றாலும்
    பால்கொடுக்க
    மறக்கவில்லை!

     எம்கருவில் வந்தபிள்ளை
    எம்பாலைக்
    குடிப்பதனால்
    எங்கிருந்து
    பிரச்சனைகள்
    எமக்குவரும்
    எண்ணுங்கள்!

    தாய்ப்பாலைக் குடித்தவர்கள்
    தானுரமாய்
    உள்ளார்கள்
    தகரப்பால்
    குடிப்பதனால்
    தரம்கெட்டுப்
    போகாதா?

    தாய்ப்பாலில் உள்ளசத்து
    தகரத்தில்
    இருக்கிறதா?
    தாய்மாரே
    மறக்காதீர்!
    தாய்ப்பாலைக்
    கொடுத்திடுவீர்!

    பால்முகத்தைப் பாருங்கள்!
    பரிவோடு
    அணைத்திடுங்கள்!
    பால்நினைந்து
    கொடுத்திடுவீர்
    பாரிலுள்ள
    தாய்மாரே!

    Share
  • சங்கடம் கொள்ளவேண்டாம்!

    -எம்.ஜெயராமசர்மாமெல்பேண்

    சர்க்கரை வியாதி வந்தால்
    சந்தோ
    ஷம் பறந்தே போகும்
    சாப்பாட்டைக்
     கண்டு விட்டால்              sweet
    சலனமே
    மனதில் தோன்றும்!

    எப்பவும் இனிப்பை எண்ணும்
    எதையுமே
    உண்ணப் பார்க்கும்
    அப்படி
    உண்டே விட்டால்
    அதுதொல்லை
    ஆகி நிற்கும்!

    திருமண வீடு சென்றால்
    தித்திப்பு
    நிறைந்தே நிற்கும்
    வகைவகை
    உணவை அங்கே
    வரிசையாய்க்
    கண்கள் காணும்!

    அவையெலாம் உண்ணும் ஆசை
    அளவிலா
    மனத்தை ஆளும்
    நினைவெலாம்
    உணவாய் நிற்கும்
    நிம்மதி
    பறந்தே போகும்!

    கொண்டாட்டம் வந்து விட்டால்
    குதூகலம்
    நிறைந்தே நிற்கும்
    குலோப்ஜான்
    லட்டு எல்லாம்
    குறைவின்றி
    இருக்கு மங்கே!

    நாக்கிலே நீரும் ஊறும்
    நரம்பிலே
    முறுக்கும் ஏறும்
    ஆர்க்குமே
    தெரியா வண்ணம்
    அனைத்தையும்
    தின்னத் தோணும்!

    விரைந்தோடி நிற்கும் வெட்கம்
    விரும்பிமனம்
    உண்ண நிற்கும்
    வேண்டியதை
    உண்டு விட்டு
    விழி
    பிதுங்கி நிற்போமே!

    இனிப்புகள் உள்ளே சென்று
    இரத்தத்தில்
    கலந்து நின்று
    முறைத்துமே
    எம்மைப் பார்க்க
    முகமெலாம்
    கலங்கி நிற்போம்!

    மனைவியும் மகளும் சேர்ந்து
    மங்களம்
    பாடித் தீர்ப்பார்
    மளமள
    வென்று சென்று
    மருந்தினை
    விழுங்கி நிற்பேன்!

    விளம்பரம் ஒன்றைப் பார்த்து
    விரைவுடன்
    படித்து நின்றேன்
    விருப்பமாய்ச்
    செய்தி அங்கே
    விந்தையாய்
    இருந்த தங்கே!

    சர்க்கரை உள்ளோர் எல்லாம்
    சங்கடம்
    கொள்ள வேண்டாம்
    சரியான
    உணவு எல்லாம்
    சந்தையில்
    இருக்கு இப்போ!

    செயற்கையாய் இனிப்புச் சேர்த்து
    தின்பண்டம்
    இருக்கு இப்போ
    வருத்தமே
    படவே வேண்டாம்
    வந்துமே
    வாங்கித் தின்பீர்!

    அளவுடன் உண்ண வேண்டும்
    அதைநிதம்
    பேண வேண்டும்
    அனைவரும்
    மனதில் கொண்டால்
    ஆனந்தம்
    வருமே நாளும்!

    தினமுமே நடந்து சென்றால்
    தீராத
    நோயும் தீரும்
    நடவுங்கள்
    எந்த நாளும்
    நன்மைகள்
    உம்மைச் சேரும்!

    சர்க்கரை வியாதி கண்டு
    சஞ்சலம்
    கொள்ள வேண்டாம்
    சாப்பாடு
    எடுக்கும் போது
    சமமாக
    எடுக்க வேணும்!

    உடற் பயிற்சி செய்திடுங்கள்
    உணவு
    எலாம் மாற்றிடுங்கள்
    மனத்தினிலே
    உறுதி கொண்டு
    மாற்றிடுங்கள்
    பழக்கம் எலாம்!

    சோம்பல் நிலை மாற்றிடுங்கள்
    சுறுசுறுப்பை
    ஏற்றிடுங்கள்
    நாங்கள்
    வாழ வேண்டுமென்று
    நாளும்
    எண்ணி நின்றிடுங்கள்!

    சர்க்கரை வியாதி தன்னைச்
    சலிப்புடன்
    நோக்க வேண்டாம்
    எப்பவும்
    உங்கள் வாழ்வில்
    இனிப்புகள்
    தேவை அன்றோ!

    தப்புடன் இனிப்பை உண்டால்
    தலையிடி
    வந்தே தீரும்
    எப்பவும்
    அளவாய் உண்டால்
    எவர்க்குமே
    விளைவு நன்றே!

    மருந்தினை விருந்தாய் உண்போம்
    விருந்தினை
    மருந்தாய் உண்போம்
    வருந்திநாம்
    நிற்க வேண்டாம்
    வாழ்வெலாம்
    இன்பம் காண்போம்!

    வெளிச்சத்தைக் கொண்டு வந்த
    விளம்பரச்
    செய்தி தன்னால்
    சர்க்கரை
    வியாதி பற்றி
    சங்கடம்
    அகன்றே போச்சு!

    Share
  • ஆலமரம் நிற்கிறது!

    -எம்.ஜெயராமசர்மாமெல்பேண்

    அழகான ஆலமரம்                                             banyan tree
    கிளைவிட்டு
    நின்றதங்கே
    விழுதெல்லாம்
    விட்டுஅது
    வேரோடி
    நின்றதங்கே

    ஆலமர நிழல்தேடி
    அனைவருமே
    வருவார்கள்
    வேலையில்லா
    நிற்போரும்
    விரும்பி
    வந்திருப்பார்கள்

    காலைமாலை என்றின்றி
    காளையரும்
    வருவார்கள்
    சேலையுடன்
    பெண்கள்வந்து
    சிரித்து
    விளையாடிடுவர்

    நாலுமணி ஆனவுடன்
    ஆளரவம்
    கூடிவிடும்
    ஓடிடுவார்
    ஆடிடுவார்
    உல்லாசம்
    கூடிவிடும்

    பந்து விளையாடிடுவர்
    சிந்து
    கவிபாடிடுவர்
    கெந்தி
    அடித்துநிற்பர்
    கிட்டிப்
    புள்ளும்ஆடிடுவர்

    பெரியவரும் வருவார்கள்
    சிறியவரும்
    வருவார்கள்
    பேசாமல்
    ஆலமரம்
    பெருமையுடன்
    வரவேற்கும்

     விழுது பற்றியாடிடுவர்
    மேல்மரத்தில்
    ஏறிடுவார்
    அழுங்குழந்தை
    ஆடுதற்கு
    அங்கூஞ்சல்
    கட்டிடுவார்

    சீட்டு விளையாடிடுவர்
    சிரித்து
    விளையாடிடுவர்
    ஆர்ப்பரித்துச்
    சிறுவரெலாம்
    அங்கங்கே
    ஓடிநிற்பர்

    வேர்க்கடலை கொறிப்பாரும்
    வெற்றிலையை
    மெல்வாரும்
    பாற்பொருளை
    உண்பாரும்
    பார்த்திடலாம்
    மரநிழலில்

    ஆயிரம் பேரமர
    ஆலமரம்
    நிழலைத்தரும்
    அனைவருமே
    இளைப்பாறி
    அகமகிழ்வு
    பெற்றிடுவர்

     சித்திரை பிறந்துவிட்டால்
    எத்தனையோ
    கொண்டாட்டம்
    நித்திரையே
    கொள்ளாது
    நீண்டகூத்து
    நடக்குமங்கே

    வடமோடி தென்மோடி
    வகைவகையாய்க்
    கூத்தங்கே
    பாய்விரித்துப்
    பார்த்தபடி
    பார்த்திடுவார்
    ஊரார்கள்

    தேனீர்க்கடையும் வரும்
    தித்திப்புக்கடையும்
    வரும்
    அப்பம்சுட்டு
    விற்கின்ற
    ஆச்சியும்
    வந்திடுவார்

    கடலையும் வறுப்பார்கள்
    கச்சானும்
    வறுப்பார்கள்
    கமகமக்கும்
    வாசனையால்
    களைகட்டும்
    ஆலையடி

    குடும்பமெலாம் ஒன்றாக
    குதூகலமாய்
    இருப்பார்கள்
    குழந்தைகளும்
    குறும்புசெய்து
    குதூகலத்தில்
    மிதப்பார்கள்

    அமைதியாய்ப் பார்த்துநிற்கும்
    அதையெல்லாம்
    ஆலமரம்
    ஆர்வந்து
    போனாலும்
    ஆலமரம்
    அகமகிழும்

    போரொன்று வந்ததனால்
    ஊரெல்லாம்
    ஓடிற்று
    யாருமே
    ஊரிலில்லை
    ஊரிப்போ
    உறங்குகிறது

    களைகட்டி நின்றவிடம்
    நிலையிழந்து
    நிற்கிறது
    ஆருமே
    வருவதில்லை
    ஆலமரம்
    நிற்கிறது

     ஆலமரம் மட்டுமிப்போ
    அப்படியே
    இருக்கிறது
    ஆலடியைப்
    பார்ப்பதற்கு
    அழுகைதான்
    வருகிறது

    மரம்மட்டும் பேசிவிடின்
    வக்கிரங்கள்
    தெரிந்துவிடும்
    மரமாக
    இருப்பதனால்
    வக்கிரங்கள்
    தொடர்கிறது

    ஆலமரம் அழுதுவிடின்
    ஆறாக
    ஆகிவிடும்
    அதுமரமாய்
    நிற்பதனால்
    நாமழுது
    நிற்கின்றோம்!

    Share