Tag: திருச்சி புலவர் இரா.இராமமூர்த்தி

  • சேக்கிழார் பா நயம் – 24

    -திருச்சி புலவர் இரா.இராமமூர்த்தி

    கயிலாயத்தில் சுந்தரருக்கு வரமளித்தவாறே தென் திசையில் தமிழ்நாட்டில் மையல் மானுடமாய் மயங்கும்போது தடுத்தாட் கொள்ள , சிவபெருமான் புத்தூரில் எழுந்தருளினார். அப்போது   ஒரு மூத்த அந்தணர் வடிவு  கொண்டு சுந்தரர் திருமணம் நடைபெறும் இடத்தில் தோன்றினார்!  அவ்வாறு தோன்றும்  பொழுது, மேலே மிகவுயர்ந்து , கீழே மிகவும் தாழ்ந்து  பிரமனும் திருமாலும் மிக முயன்றும் அடி  முடி  தேடவரிய,  மிகப்பெரிய அனல் உருவத்துடன் வந்த சிவபிரான்,எளிய அந்தக் கோலத்தில் தம்மை ஒடுக்கிக் கொண்டு தோன்றினார்.

    மிகப்பெரிய படைப்புக் கடவுளும், காக்கும் கடவுளும் அறிந்து கொள்வதற் கரியவர்,  எளிய மானிடர்கள் அறிந்து கொள்வதற்கரிய முதிய அந்தணராகத் தோன்றினார்! அவரை ஊர்மக்கள் அறிந்து கொள்ளவில்லை என்பதைக் காட்டும் வகையில்,முன்பு வானையும் மண்ணையும் அளந்த அனற்பேருருவுடன்

    தோன்றிய சிவபிரான் என்றுகூறிய சேக்கிழார், இக்கதையைப் படித்தறியும்  நமக்கு மட்டும்  புலப்படும் வகையில் முதிய அந்தணராய்த் தோன்றினார், என்று பாடுகிறார்!

    இங்கே அந்தப் புத்தூர் மக்களுக்குப்புலப்படாத அந்தண வடித்துவத்துடன் சிவபிரானே  தோன்றினார் என்று கூறுவதில்தான் சேக்கிழாரின் திறமை புரிகிறது! நமக்குத் தெரிந்த சிவபெருமான், புத்தூர் மக்கள் மட்டுமே  புரிந்து கொள்ள இயலாத, முதிய  அந்தணராய்த் தோன்றினார், என்று சேக்கிழார் பாடுகிறார்! இதனை சிவக்கவிமணி,

    ‘’பெருந்தேவர்க்கும் அரியனாகிய பெருமான் அன்புசெய்வார்க்கு  எளியவன்  என்பதை ,

    நல்லசிவ தன்மத்தால் நல்லசிவ யோகத்தால்

    நல்லசிவ ஞானத்தால் நானழியவல்லதனால்

    ஆரேனு மன்புசெயி னங்கே தலைப்படுங்காண்

    ஆரேனுங் காணா வரன்

    என்ற சாத்திரத்தால் அறியலாம். அகந்தை கொண்ட இருவர்க்கும் அரியவர், தாமே அன்புடைய ஒருவர்க்கு எளியவராயினமையும், அவர்கள் தேடவும் ஒளித்தவர் இவர் மறுப்பவும் விடாது வழக்கிட்டுப் பற்றியமையும் குறிப்பு.’’

    என்று எழுதுகிறார்! ஆகவே தம்பால்  மிகவும் அன்புகொண்ட சுந்தரர் அறியாமல் வாதாடிய போதும் தம்மை அறிவித்துக்  கொள்ள வந்தார்! இதனை மேலும் சுவைபட , அவர் கொண்ட அந்தண  வடிவத்தை விளக்குகிறார்!

    தம் நெற்றிக்கண்ணை மறைத்த துணிப்படலம் போலக் குழைத்த திருநீறணிந்த நெற்றியும், அதனருகே மிகவும் மூத்தமையால் தளர்ந்து நெற்றியில்  விழும் நரைத்த சடையும், காதில் உருத்திராட்சக் குழைகளும், மார்பில் பழைய மெலிந்த பூணூலும், அதனை மறைத்த வெண்மையான உத்தரீயமும், வெயிலை மறைப்பதற்கு உரிய குடையும், வயிற்றின் கீழே சரிந்த பழைய கோவணமும்,  அதனை மூடிய பழைய ஆடையும் உடையவராய் வந்தார். அவர் கரத்தில் வெண்மையான துணியைச் சுற்றி, தர்ப்பைக்கயிற்றால் கட்டிய சிறுமூங்கில் கழியை ஏந்திக்கொண்டு , தள்ளாடிய நடையுடன் வந்தார்!

    அவ்வாறு வந்த மூத்த அந்தணரின் வடிவத்தை நோக்கி, ஓர் இளைஞனின் பேரழகு    காலப்போக்கில் அகவை முதிர்ந்தால் உண்டாகும் சுருக்கங்களுடன் தோன்றுவது போல இருக்கிறதே  என்று அவ்வூர் மக்கள் ஐயம் கொண்டார்கள்! மேலும் பேரழகே  மூப்படைந்தால் அவ்வடிவம்  இப்படித்தான் இருக்குமோ என்றும் ஐயம் கொண்டார்கள்! திருவிளையாடற்புராணத்தில் சிவபிரான் விருத்தராக வந்தார். அதனை,

    “கரிந்தநீள் கயல்உன்னின் அரையும்முது  திரைகவுளும் கனைக்கும் நெஞ்சும்
    சரிந்தகோ  வணஉடையும்  தலைப்பனிப்பும்  உத்தரியம்  தாங்கும்  தோளும்
    புரிந்தநூல் கிடந்தலையும்  புண்ணியநீ றணிமார்பும்  பொலிய  நீழல்
    விரிந்ததோர் தனிக்குடையும் தணடூன்றிக் கவிழ்ந்தசையும் மெய்யும் தாங்கி.

    ஒருத்தராய் உண்டிபல  பகல்கழிந்த  பசியினர்போல்  உயங்கி  வாடி
    விருத்தவே   தியராய்வந்து  அகம்புகுத”

    என்று பாடுகிறது. அங்கு  மெலிந்து  தளர்ந்த  திருமேனி வருணிக்கப் பெற்றது.  பெரியபுராணத்திலும் முதியவராக வந்த திருக்கோலம் வருணிக்கப்   பெறுகிறது. ஆனால்  அந்த முதுமையிலும் ஓர் அழகு விளங்கியதைச்  சேக்கிழார் கூறுகிறார்!   வேதியராகிய இவருடைய தோற்றம், உண்மை வைதிக நெறியே உருவாகி   விளைந்த மூலப்பொருளோ, என்றும் ஐயுற்றார்கள். இந்த வடிவுடன், திருமண மண்டபத்துள்  தோன்றிய முதிய அந்தணரை அனைவரும் வியப்புடன் பார்த்தனர்! இதனைச் சேக்கிழார்,

     ‘’மொய்த்து வளர் பேரழகு மூத்தவடி வேயோ

     அத்தகைய மூப்பெனும் அதன் படிவ மேயோ

     மெய்த்த நெறி வைதிகம் விளைந்த முதலேயோ 

     இத்தகைய வேடம் என ஐயமுற எய்தி ‘’

    என்று பாடினார். ஒருவருடைய உடலழகு மூப்படைய, மூப்படைய அழகை  இழப்பது உலகின் இயல்பு! ஆனால்,  இந்த வடிவம் பேரழகே மூத்த வடிவமோ? என்று மக்கள் நினைத்தனர்! முதுமையின் படிவமே  அழகுதானோ? என்றும் எண்ணினர். வேதம் ஓதுவதால் அக அழகு,  முக அழகாக ஒளிவீசும்! வேதம் ஓதியும், சமுதாயத் தொண்டாற்றியும், தமிழின் இனிமையை எங்கும்  கூறியும், இசைபாடியும் வயதில் மூத்த பெரியோர்களாகிய மகாபெரியவர், காந்தியடிகள், வாரியார் சுவாமிகள், எம்.எஸ்.சுப்புலட்சுமி , கஸ்தூரிபா  ஆகியோரின் அழகு, அவர்களின் முதுமையிலும்  பார்த்துக்கொண்டே இருக்கத்  தோன்றுகிறதல்லவா? இதுதான் மூப்பின் அழகு! வேதத்தின் சிறப்பை ஓதி ஓதி உணர்ந்தமையால் பூசலார் நாயனாரின் அழகு மிகுந்தது  என்பதைப் பூசலார் நாயனார் புராணத்தில்,

    ‘’வாய்மைப்   பொருள்பெறு    வேதநீதிக்   கலையுணர்   பொலிவின்    மிக்கார் ‘’

    என்று பாடுகிறார்!  ஆகவே அகத்தின்  அழகுதான்  புறத்தின்  அழகாகப்  பொலியும்!  அத்தகையோர் அகவை ஏற ஏற, அழகும் ஏறும். ஆதலால் இப்பாடலில்  அழகின்  முதிர்வு, மூப்பு, கலையுணர்வு ஆகிய  முப்பரிமாணங்களும் கூறப்பெறுகின்றன. இங்கே இளமை அழகின்  கர்வத்தினை, முதிய,  அறிவுநிறைந்த , கலையுணர்வு மிக்க அழகு எளிதில்  வென்றடக்கிய  சிறப்பு,   நயம்படக் கூறப்பெறுகிறது.

    Share
  • சேக்கிழார் பா நயம் – 22

    -திருச்சி புலவர். இரா. இராமமூர்த்தி

    சுந்தரருக்குத் திருமணக்கோலம் புனைவித்து, உயர்ந்த குதிரையின் மேலேற்றி ஊர்வலம் வந்தார்கள்! அந்த ஊர்வலத்தில் உறவினரும், நட்பினராகிய அரசரைச் சார்ந்தோரும் தொடர்ந்து வந்தனர்! அவ்வாறு வந்தோர் தத்தமக்கு உரிய தேர், யானை, குதிரை முதலிய வாகனங்க ளிலும், வண்டிகளிலும் வந்தார்கள்!

    சிறந்த திருமணக் கோலத்துடன் திருமணம், நிகழும் புத்தூரை நோக்கி அனைவரும் வந்தனர்! புத்தூர், மணமகளின் தந்தை சடங்கவி சிவாசாரியாரின் ஊர் ஆதலால் அங்கேதான் திருமணம் புரிவித்தனர்! இங்கே சேக்கிழார் ஒருகுறிப்பைத் தருகிறார்! அன்றுமுதல் புத்தூரின் பெயர்’’மணம் வந்த புத்தூர் ‘’ எனப்பட்டது, என்று எழுதுகிறார்! சுந்தரர் திருமணத்தின் அடையாளமாக எஞ்சப்போவது, அந்தப் பெயரே ஆதலால் அவ்வாறு கூறினார்! ஆனால் காலப்போக்கில் அவ்வூர் ‘’மணம் தவிர்ந்த புத்தூர் ‘’ என்று மாறியது!

    அவ்வூர் நோக்கி வந்த சுந்தரர் சுற்றத்தினரை பூரண கும்பம் கொடுத்துப் புத்தூர் அந்தணர்கள் வரவேற்றனர்! அவ்வாறு ஊர்வலத்தில்வந்த சுந்தரரைக் குறித்தும் , திருமணப் பெண் குறித்தும், தம்மைக் குறித்தும் பெண்கள் உரையாடியதை அடுத்த பாடலில் நயம்படக் கூறுகிறார்!

    திருமணத்தில் பேரழகர் சுந்தரரின் அலங்காரத் தோற்றத்தைக் கண்ட ஊர்வலப் பெண்டிர், ‘’ கண்கள் எண்ணிலாத வேண்டும் காளையைக் காண ‘’ என்றார்கள்! சுந்தரரைக் ‘’காளை’’என்று கூறிய சேக்கிழாரின் சொல்லாட்சி தனித் தன்மை வாய்ந்தது! திருமண நங்கை சடங்கவி பேதை!அவளுடன் காளையை இணைப்பது சற்றுத் தயக்கம் தருகிறது! திருமணத்துக்கு மணம்பேசிய அளவில் திருமணத்தகுதி வந்துவிட்டது என்றாலும் , அவர்கள் திருமணத்தைப் பெருமான் தடுத்தாட்கொண்டார்! ஆதலால் கண்கள் எண்ணில்லாத வேண்டும் என்று சுந்தரரரைக் காண விரும்பியவர்கள், நங்கையாகிய சடங்கவி திருமகளின் அழகு குறித்து ஏதும் கூறாமல், ‘’பெண்களில் உயர நோற்றாள் சடங்கவி பேதை! என்பார்!’’ என்று சேக்கிழார் கூறுகிறார்! சுந்தரர் என்னும் சிவனடியாருடன் திருமணம் என்ற அளவிலேயே சடங்கவி மகள் சிவலோகப் பேறு பெற்றாள். ஆதலால் ‘’பெண்களில் சிவலோகப்பேறு பெற்று உயர நோற்றாள், சடங்கவி பேதை ‘’ என்று சேக்கிழார் பாடுகிறார் ‘சடங்கவி பேதை’ என்ற தொடர் அவர்தம் அஞ்ஞானம் விளைத்த ஞானத்தை உணர்த்துகிறது! அதனால்தான் சிவலோகப்பேறு பெரும் தகுதியுள்ள பேதைப்பெண்ணின் மேனியழகின் வருணனையைச் சேக்கிழார் பாடவில்லை.

    சுந்தரர் சிவபெருமானால் தடுத்தாட்கொள்ளப் பெற்றார். ஆனால் அவரைக் கணவனாக நினைத்த சடங்கவியார் திருமகள் என்ன ஆனார்? என்றார் வினாவுக்கு விடை தருவது போல் சேக்கிழார்,

    ‘’அயலோர் தவம் முயல்வார் பிறர் அன்றே மணம் அழியும்
    செயலால் நிகழ் புத்தூர் வரு சிவ வேதியன் மகளும்
    உயர் நாவலர் தனி நாதனை ஒழியாது உணர் வழியில்
    பெயராது உயர் சிவலோகமும் எளிதாம் வகை பெற்றாள்.’’

    என்று அப்பேதையும் சிவலோகம் பெற்றதைக் கூறுகிறார்! இவ்விடத்தில் சிவப்பேறு பெறத்தக்க காரைக்காலம்மை வரலாற்றில் அவருக்கும் பரமதத்தனுக்கும் நிகழ்ந்த திருமணத்தை ,

    தளிரடிமென் னகைமயிலைத் தாதவிழ்தார்க் காளைக்குக்
    களிமகிழ்சுற் றம்போற்றக் கலியாணஞ் செய்தார்கள்.

    என்று சேக்கிழார் பாடியதை இங்கே நினைவில் கொண்டு வருதல் வேண்டும்! காளையும் மயிலும் திருமணப் பொருத்தத்தில் பகையாகும்.

    இங்கே முறையான திருமணத்தில் இணைந்த இராமன்-சீதை திருமணம் குறித்த கம்பன் பாடல்கள் படித்துச் சுவைக்கத் தக்கன! அங்கே மகளிர்,

    “நம்பியைக் காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும்!
    கொம்பினைக் காணும்தோறும் குரிசிற்கும் அன்னதேயாம்!’’

    என்று ஒருவரை ஒருவர் விஞ்சிய அழகைக் காட்டுகிறார்! இதனை நன்கறிந்த சேக்கிழார், சற்றே மாற்றிப் பாடிய நயம் போற்றுதற்கு உரியது! இனிச் சேக்கிழார் பாடலை மீண்டும் காண்போம்!

    ‘’கண்கள் எண்ணிலாத வேண்டும் காளையைக் காண என்பார்
    பெண்களில் உயர நோற்றாள் சடங்கவி பேதை என்பார்
    மண் களி கூர வந்த மணம் கண்டு வாழ்ந்தோம் என்பார் ‘’‘.

    இப்பாடலில் ஈற்றடியில் இந்த மண்ணில் மட்டும் மகிழ்ச்சி தரும் திருமணமத்தைக் காணுமுன் வாழ்ந்தோம் என்று கூறிய பெண்களின் கூற்று நயம் மிக்கதாகும்.

    Share
  • சேக்கிழார் பா நயம் -21

    திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி

    சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருமணத்துக்குப் புறப்பட்ட காட்சியை, சேக்கிழார் மிகவும் நயம்படப் பாடுகிறார்! சுந்தரர் அந்தணர் குலத்தில் அவதரித்தாலும், அரசரின் வளர்ப்பு மகனாக வளர்ந்தார்! அவருக்கு அந்தணர்குல வழக்கப்படி, ஜாதகரணம், நாமகரணம், உபநயனம் ஆகிய சடங்குகளை அவர் பெற்றோர் நிறைவேற்றினர். அதன் பின் அவர் திருமணத்துக்கு ஏற்ற பருவம் அடைந்த பின் அவருக்கு உரிய மணமகளாக புத்தூர்ச் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைக் குலம், கோத்திரம் ஆகியவற்றை ஆராய்ந்து பொருத்தம் பார்த்து, இருவருக்கும் பொருந்திய மணநாள், முகூர்த்த நேரம், இவற்றைக் குறித்தனர். அரசரின் வளர்ப்பு மகனாதலால் பலநாட்டினருக்கும், மணவோலை அனுப்பினர்! இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொள்வதை அனைவரும் காண வேண்டும் என்ற நுட்பமான கருத்து இதில் புலப்படும்!

    சுந்தரருக்குத் திருமஞ்சனம் ஆட்டி, அவருக்கு இருவகையான அலங்காரங்கள் செய்தனர்! அரசரின் வளர்ப்புமகன் ஆதலால், அரசர் பெருங்கோலமும், அந்தணர் மைந்தன் ஆதலால் வைதிகப் பெருங்கோலமும் செய்தனர்! அதாவது தமக்கு உரியதல்லாத மன்னவர் திருவுக்கேற்ப, வைதிக முறையில் ‘’தூய நறிய பச்சைக் கர்ப்பூரச் சுண்ணத்துடன் அழகிய பூக்களிலிருந்து ஆகிய தண் பனிநீர் கூட்டிச் செய்த சந்தனக் குழம்பைப் பூசி, கத்தூரி சேர்ந்த கலவைச் சாந்தையும் அணிவித்து; அதன்பின் விதிப்படி அணியும் பூணூலை மார்பிலும் பவித்திரத்தைக் கையிலும் விளங்கவைக்க, அவ்வாறு பவித்திரங்கொண்ட கையினராய் வைதிகத் திரு வுடையர் ஆனார்!.. அடுத்து அரசத் திருவாகிய தூய மலர்களால் ஆகிய பிணையல் – மாலை – கண்ணி – கோதை – தாமம் என்ற பலவகை மலர்மாலைகளையும் சாத்த அணிந்து, ஒளி மிகுந்த மணிகளிழைத்த தூய பொன் மணி மாலைகளையும் சாத்த அணிந்து கொண்டார்! இதனைச் சேக்கிழார்,

    ‘’மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க ‘’

    என்று பாடுகிறார்! இதைக்கண்ட அவ்வூர் மக்கள் திருவிழாவாகக் கொண்டாடினர்! அப்போது நம்பி ஆரூரர், தம்மைக் கைலாயத்திலிருந்து அனுப்பிய சிவபெருமானின் திருவடிகளை, உள்ளத்துள் எழுந்தருள வைத்துக் கொண்டு, அந்த உரிமையைக் காட்டத் தக்க திருநீற்றை முறையாக அணிந்து கொண்டார்! மேலும் இவர் கைலையில் இறைவனுக்குத் திருநீறு ஏந்தி அணைவார் என்பது குறிப்பு.

    அப்போது பொன்னாலாகிய அணிகளைப் பூண்ட அடியார்கள், சுந்தரராகிய மணமகனை, அக்கால முறைப்படி ஓர் உயர்ந்த குதிரையை அலங்கரித்து, அதன் மேலேற்றி ஊர்வலமாக வந்தனர்! இதனைச் சேக்கிழார்,

    ‘’பொன்னணி மணியார் யோகப் புரவி மேற்கொண்டு போந்தார்!’’

    என்று பாடுகிறார்! இங்கே சுந்தரர் ஏறிவந்த குதிரை, ‘’யோகப்புரவி ‘’ என்று குறிக்கப் பெறுகிறது. நம் உயிர், மிகுந்த தியானம் செய்தால் யோகசாதனை என்ற இறைமையின் இணைப்பைப் பெறலாம்! மணமகனும், மணமகளும் இல்வாழ்வில் இணையும் இன்பநிலையுடன், இறைவனை அணுகும் யோகமுறையை இங்கே குறிப்பிடக் காரணம் உண்டு! கம்பராமாயணத்தில், இராமனும் சீதையும் திருமணம் புரிந்து கொண்ட நிகழ்ச்சியை,

    ‘’மன்றலின் வந்து மண தவிசு ஏறி
    வென்றி நெடும் தகை வீரனும் ஆர்வத்து
    இன் துணை அன்னமும் எய்தி இருந்தார்
    ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார்!’’

    என்று கம்பர் பாடுகிறார்! இராமனை வென்றி நெடுந்தகை வீரனும் என்று கம்பர் கூறுகிறார்! தன் ஆற்றல் புலப்பட, வில்லை வளைத்து , ஒடித்து சீதையை போகம் கருதி மணந்து கொண்டமையால் இராமன் அவ்வாறு கூறப்பெற்றான். ஆனால் சீதையைக் கம்பர், ‘’ஆர்வத்து இன்துணை அன்னமும்‘’ என்று பாடுகிறார். சீதை இராமன் என்னும் ஆன்ம நாயகனுடன் என்றுமே இணைந்து வாழும் தன்மை உடையவள்! சீதையை அன்னம் என்று கம்பர் கூறியது இராமனிடம் மானுடத் தன்மையால் நிகழும் பிழையை நீக்கி, பாலில் சேர்ந்த நீரைப் பிரித்து நீக்கும் அன்னப்பறவை போல, தியானத்தால் இராமனின் குறையை நீக்கி இறைவனாகிய தலைவனுடன் இணையும் யோகத்தை அவள் பெறுவாள், என்பதை குறிப்பிடவே! அதுகருதியே ‘’தேவியைப் பிரிந்த போதெல்லாம் இராமன் திகைத்தான்! ஆகவே, இவர்கள் திருமணம் புரிந்து கொண்டதைக் கம்பர் ‘’ஒன்றிய யோகமும் போகமும் ஓத்தார்!’’ என்று பாடினார்! அவ்வாறே சுந்தரர் சடங்கவி மகளை மணந்து கொள்ளாமல் , யோக நிலையில் இறைவனுக்குத் தோழராய் சைவத் திருமுறையாகிய பாடலைப் பாடி இணைந்து கொள்ளப் போகும் சிறப்பை இங்கே முன்நிகழ்ச்சியாய்க் குறிப்பிடுகிறார்! சுந்தரர் ஏறிய யோகப் புரவி, பின்னரும் பரவையார், சங்கிலியார் இருவருடனும் இறைப்பணியாகிய, தியான யோகம் செய்து மீண்டும் கைலாயம் சென்று வாழப் போவதையும் குறித்தது! இனி முழுப் பாடலையும் பாடி மகிழ்வோம்!

    ‘’மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க
    நன்னகர் விழவு கொள்ள நம்பிஆ ரூரர் நாதன்
    தன்னடி மனத்துள் கொண்டு தகும்திரு நீறு சாத்திப்
    பொன்னணி மாமியார் யோகப் புரவிமேற் கொண்டு போந்தார்!’’

    இப்பாடலின் நயம் மிக்க தொடர்கள் நமக்குச் சமயத் தெளிவை உணர்த்துகின்றன !

    Share
  • சேக்கிழார் பா நயம் – 17

    -திருச்சி புலவர் இரா இராமமூர்த்தி
    =======================

    திருவாரூரில் தேவஆஸ்ரய மண்டபம் எனப்படும் தேவாசிரிய மண்டபம் உள்ளது.இறைவனை ஆஸ்ரயித்த அடியார்கள் நிறைந்த மண்டபம் ஒன்றுண்டு!அந்த மண்டபத்து அடியார்களின் அருளைப் பெற, சுந்தரர் விரும்பினார்!அதன் திருவாயிலில் தேவர்களும் முனிவர்களும் அடியார்களை வழிபடக் காத்திருப்பார்கள்!அங்கேதான் சுந்தரர் திருத்தொண்டத்தொகை என்ற,பெரியபுராணத்தின் வழிநூலைப் பாடினார்! அங்குள்ள அடியார்களின் சிறப்பினை சேக்கிழார் ஆறு திருப்பாடல்களால் விளக்குகிறார்.

    இறைவனே விரும்பி யழைத்துப் பெருமைப் படுத்திய சிறப்பும்,சரியை நிலையில் இறைவனுக்குத் திருத்தொண்டு செய்யும் சிறப்பும் பெற்றவர். தம் திருநீறு பூசியே திருமேனியின் ஒளியால் எண்டிசையையும் விளங்கச் செய்பவர்! ஐம்பூதங்களும் தம் நிலையில் கலங்கினாலும், இறைவன் மலர்ப்பாதத்தை மறவாதவர்  உலகினர் பொருட் செல்வத்தை மிகமுயன்று அடைவார்கள் அச்செல்வம் நன்மைக்கும் தீமைக்கும் பயன்படும்! செல்வங்களைத் திருவள்ளுவர் பல வகைகளாகப்பிரிப்பார். கல்விச்செல்வம், கேள்விச்செல்வம், ஊக்கச் செல்வம், அருட்செல்வம், பொருட்செல்வம் என்பன அவை. இவற்றுள் கேடில் விழுச்செல்வம் கல்வி, செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம், அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் என்ற தொடர்களால் வள்ளுவர் கூறுகிறார்! சேக்கிழார் சிவனடியார்கள் பெற்ற அருட்செல்வத்தை “கேடும் ஆக்கமும் கெட்ட திரு” என்கிறார். உலகத்தின் பொருட் செல்வம் விரைவில் குறைவு படும், அழியும்; அதுவே மிகுதிப்படும்! ஆனால் குறைவு,மிகுதி ஆகிய இரண்டையும் அடையாமல் ஒரே சீராக நிலைத்து நிற்பது அருட்செல்வம்மட்டுமே!இந்தஅருட்செல்வம், பொருட்செல்வம் பெற்றவருக்கு உரிய செருக்கு,பெறாதவருக்குரிய அவலம் ஆகிய இரண்டும் இல்லாதது! இந்த அருட்செல்வத்திற்கு வளர்ச்சியும் இல்லை கெடும் இல்லை! அதனால் அச்செல்வத்தைப் பெற்ற அடியாரைக்‘கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்’ என்பார்! ஈஸ்வரனின் அருளாகிய செல்வமே ஐசுவரியம் என்று கூறப்பெறும்! இதனைத் திருஞானசம்பந்தர்,

    “செல்வ நெடுமாடம் சென்று சேணோக்கிச்
    செல்வ மதி தோயச் செல்வம் வளர்கின்ற
    செல்வர் வாழ்தில்லைச் சிற்றம்பலம் மேய
    செல்வன் கழலேத்தும் செல்வம், செல்வமே!”

    என்று பாடுகிறார்! இச்செல்வத்தைப் பெற்ற அடியார்கள் ஓடேந்திப் பிச்சை பெற்று வாழும் வறிய நிலையையும்,பொன்னை மிகுதியாகப் பெற்ற செல்வநிலையையும் ஒரே நிலையில் வைத்து எண்ணுவர்!அவர்கள் கண்முன்னே உடைந்த பானை ஓடும், பொன் முதலான மணிகளும் தென்பட்டாலும் அவற்றை ஒரே தன்மையில் நோக்குவர்! இதனைச் சேக்கிழார்,”ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவர்” என்று போற்றுகிறார்! அப்பரடிகள் அருள் வரலாற்றில், அவர் திருப்புகலூர் திருமுற்றத்தில் உழவாரப் பணி புரிந்த போது, நிலத்தில் கிடந்த பொன்னையும் மணிகளையும் ஒன்றாகவே மதித்து நீக்கிக் குளத்தில் எறிந்தார் என்று கூறுவர்! அத்தகைய அடியார்கள் சிவபெருமான் திருவருளைப் பெற்று, இறைவனுடன் ஒன்றி நின்று கும்பிட்டு வாழும் பிறப்பினை விரும்பிப் பிறவாநிலையாகிய வீடுபேறு கிட்டினாலும் அதனைச் சற்றும் விரும்பாத உள்ளச் செருக்கு உடையவராவார்!இங்கே சுந்தரமூர்த்தி சுவாமிகள் கைலையில் இறைவனைக் கூடிவணங்கி வாழ்ந்தபின், திளைத்த திருநடனத்தை “வணங்கி மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பம்” என்று பாடியது நினைந்து மகிழத்த தக்கது. இனி சேக்கிழார் பெருமானின் முழுப்பாடலையும் பயில்வோம்!

    “கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
    ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
    கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி
    வீடும் வேண்டா விறலின் விளங்கினார்!

    சோழ நாட்டையும் அதன் பின்னர் அதனுடைய திருவாரூர்த் திருநகரத்தையும் அதன் பின்னர் அந்நகரத்திலுள்ள பூங்கோயிலையும் முறையே காட்டி நம்மைத் தரிசிக்கச் – செய்தார் ஆசிரியர். பின்னர்த் தேவாசிரியனையும் காட்டி அதற்கு அப்பெயர் போந்த காரணத்தை அறிவிக்கும் வகையாலே அந்த முறையிலே திருவாயிலில் காத்திருக்கும் தேவர்களைக் காட்டி உள்ளே அழைத்துச் சென்று அங்கு எழுந்தருளி யிருக்கும் அடியார்களுடைய தன்மையையும் ஆசிரியர் அறிவித்து அவர்களை நாம் வணங்கும்படி செய்கின்ற முறையையும் காண்க. மேலும் இந்திரன் முதலியோரது பதவிகளை எல்லாம் வெறுத்து ஒதுக்கியவர்கள் இங்கு  உள்ளே. கூடியிருக்கும் அடியார்கள் என்று அவர்களுடைய இயல்பினை முகவுரை ஆக அறிவித்தபடியுமாம். ‘வீடும் வேண்டா விறலின் விளங்கினார்’ என்று பின்னர் முடித்துக் காட்டியதையுங் காண்க. ‘’ என்று சிவக்கவிமணி அவர்கள் எழுதியுள்ளார். மேலும்  கழுத்தில் உத்திராக்க மணியணிந்து , கந்தையாடை புனைந்து ஈசன் பணியாகிய திருத்தொண்டு புரிவோரின் வீரம் பெரிது! என்றும், சேக்கிழார் கூறுகிறார்!

    Share
  • சேக்கிழார் பா நயம் – 16 (அந்நிலையே)

    -திருச்சி புலவர் இரா.இராமமூர்த்தி

    உலகில் நிகழும் இயல்பான நிகழ்ச்சிக்கு மாறுபட்ட நிகழ்ச்சி திருவாரூரில் நிகழ்ந்தது! தொடக்கம் இயல்பான உலகியலாக இருந்தாலும் தொடர்ச்சி இயல்புக்கு மாறுபட்டதாக நிகழ்ந்து , இறையருள் நிகழ்ச்சியாக நிறைகிறது. ஆரூர்  மன்னன் வாழ்வில் கண்ட அதிசயம், அவனுக்கும் நமக்கும் இறையருளின் விளக்கமாக அமைந்தது என்பதை அடுத்து நிகழ்ந்த அதிசய நிகழ்ச்சி வழியே அறிந்து கொள்கிறோம்! ஆம், தேர்ச்சக்கரத்தில் அடிபட்டு இறந்த கன்று உயிர் பெற்று எழுகிறது! அப்போதே மன்னன் தேர்க்காலால் ஊரப்பட்ட   மகனும் உயிர்த்து எழுகின்றான்! தொடர்ந்து அமைச்சனும் உயிர் பெற்று எழுகிறான்!

    இதனை உணர்த்தும் வகையில் மன்னன் தானே தன் மகனைத் தேர்க்காலில் இட்டுக்  கொன்ற அதே நேரத்தில்  சிவபிரான் அருட்காட்சி தருகிறார்!  சிவபிரான் திருச்சடையில் இளம்பிறை நிலவும், திருநுதலில் மூன்றாம் கண்ணும் பொலிய அவர் தோன்றுகிறார்! நிலவு செய்த  பிழையைமன்னித்து அதனைச் சடையில் ஏற்றுக்கொண்டு பெருவாழ்வு தந்த கருணையைச் சடை காட்டுகிறது. முருகப்பிரான் என்ற குமாரனை ஈன்ற நெற்றிக்கண் இறைவனின் தனிச்சிறப்பையும் காட்டுகிறது!அக்குமரனின் தாயாகி அரவணைத்த பார்வதி தேவி இடப்பக்கத்தில் இணைந்து நிற்கிறாள்! அங்கும் சிவபூத கணங்கள் தோன்றி நிற்பதைக்கண்ட அரசன் சிவ பிரானைப் போற்றுகின்றான்! அப்போது தமக்கே உரிய காளைமேல் இறைவன் தோன்றுகிறார்! சடையில் பிறையைத் தாங்கும் பிரானை, விடை தாங்குகிறது! சடையும் விடையும் ஆதாரமாகவும் ஆதேயமாகவும் விளங்கும் காட்சி அது.  சடைக்கு சிவன் ஆதாரம்,விடைக்கு சிவன் ஆதேயம்! இக்காட்சி மிகச்சிறந்த அடியார்கட்கே கிட்டும். இக்காட்சி நல்கும் இறைவனை ‘சோமாஸ்கந்தமூர்த்தி’ என்பர்! குடும்பத்துடன் காட்சிதருபவர் என்பது பொருள்.

    அரசனும் , மகனும் ஈடுபட்ட நிகழ்ச்சி என்பதால் குடும்பத்துடனும், அமைச்சனும் ஈடுபட்டதால் பூதகணங்களுடனும் இறைவன் காட்சி நல்கினார்! அப்போது ஆன்கன்று , இளவரசன், அமைச்சன் ஆகியோர் உயிர் பெற்று எழுந்தனர்! இதனைச் சேக்கிழார் பெருந்தகை,

    ‘’அந்நிலையே  உயிர்பிரிந்த  ஆன்கன்றும் அவ்வரசன்
      மன்னுரிமைத் தனிக்கன்றும் மந்திரியும் உடன்எழலும்
      இன்னபரி சானான்என்று  அறிந்திலன்  வேந்தனும் யார்க்கும்
      முன்னவனே முன்னின்றால் முடியாத  பொருள் உளதோ?’’

    என்று பாடுகிறார்!  இப்பாடலில் முறைப்படி முதலில் இறந்த ஆன்கன்று உயிர் பெற்று எழுகின்றது! அதனைக் கண்ட அப்பசு மகிழ்கிறது! அக்கன்று உயிர்த்து எழுந்ததைக்  கண்ட பசு மகிழ்ந்தமையால் அரசன் மகிழ்ந்தான்! அதற்கிடையில் இளவரசனைத் தேர்க்காலில் இட்டுக்  கொல்ல அஞ்சித்தன் உயிரை நீத்த அமைச்சன் உயிர்பெற்று எழுந்தான்! இதனையும் அரசன் கண்டு மகிழ்ந்தான்! பின்னர்அரசனின் மைந்தன் உயிர்பெற்று எழுந்தான்! இதனை , ‘’மன்னுரிமைத் தனிக்கன்றும் ‘’ என்று பாடுகிறார் புலவர்! ஆன்கன்று அரசன் கன்று என்ற சொல்லாட்சி உயிர்கள் அனைத்தும் ஒருதன்மையனவே, என்பதைப் புலப்படுத்தும் ! இரண்டு கன்றுகள் எழுந்தபின் அமைச்சன் எழுந்தான் என்பதில் முறைமாற்றம் செய்கின்றார் சேக்கிழார்! மந்திரி இறந்தபின்னரே  இளவரசன் மரணமடைகிறான். அப்படியானால் மந்திரி எழுந்தபின் தானே இளவரசன் எழவேண்டும்?   இளவரசன் உயிரிழப்பானோ என்ற அச்சத்துடன் இறந்த அமைச்சரின் அச்சத்தை நீக்கும் பொருட்டு அவன் எழுமுன் இளவரசன் எழுந்தான் என்று கூறியது நுட்பம் வாய்ந்தது! இவை அனைத்தையும் கண்ட அரசனின் மனோநிலை எத்தகையது என்று யாராலும் உணரவியலாது! இதனை ‘’இன்ன பரிசானான் என்று அறிந்திலன் வேந்தனும் ‘’ என்ற தொடரால் சேக்கிழார் கூறுகிறார்! எப்போதும், எங்கும் ,எல்லாவுயிரினுள்ளும் இருக்கும் இறைவனே,சாட்சியாய் நின்று, இவைஅனைத்தையும்நிகழ்த்துகிறார் என்பதை,

    ‘’யார்க்கும் முன்னவனே முன்னின்றால் முடியாத  பொருள் உளதோ?’’

    என்று சேக்கிழார் கூறுவது இறைவனின் இலக்கணத்தையும்  காட்டுகிறது! எனவே திருவாரூரில் நிகழ்ந்த நிகழ்ச்சியின் நிறைவில் அனைவர்க்கும் இன்பமே உண்டாயிற்று!  உயிர்களைப் படைத்தல், காத்தல், மறைத்தல், அருளால், அழித்தல் ஆகியவற்றை ஆற்றும் இறைவனின் முதன்மையை, முழுமையை  இப்பாடலில் சேக்கிழார் காட்ட முனைந்துள்ளார்!

    Share
  • சேக்கிழார்   பா நயம் – 13  

    திருச்சி புலவர்.இராமமூர்த்தி

    ========================

    அடுத்து, திருவாரூரில் ஆண்ட மனுநீதிச் சோழனின் சிறப்பு கூறப்படுகிறது! திருவாரூர் நகர்ச் சிறப்பு  பெரியபுராணத்துக்கு எவ்வாறு துணை புரிகிறது என்பதைச் சில அகச்சான்றுகளால் விளங்கிக்  கொள்ளலாம்!  திருவாரூரின்  பெருமைக்கு   முதற்காரணம். அந்நகருக்குத்  திருமகளே வந்து சிவபெருமானை வழிபாடு செய்தருளினாள்  என்பதாம். அதற்கு ஆதாரம் திருவாரூரில் பெரிய திருக்கோயிலின்  பெயரே கமலாலயம் என்பதாம்!  இதனைச் சேக்கிழார்,

    ‘’சொன்ன நாட்டிடைத்  தொன்மையின்  மிக்கது

    மன்னு  மாமல  ராள்வழி  பட்டது ‘’

    என்று பாடுகிறார்!  மேலும் தியாகேசப் பெருமான் பலகாலம்  பாற்கடலில் மகாவிஷ்ணுவின் இதயத்திலும், பின்னர் பலகாலம் தேவருலகிலும், பின்னர் திருவாரூரிலும்  எழுந்தருளிய சிறப்புடையது.  மேலும் அந்த நகரில்தான், கைலாயத்தில் சுந்தரரை விரும்பிய இருசேடியருள் ஒருத்தியாகிய கமலினி, பரவை நாச்சியாராக வந்துஅவதாரம் செய்த மாளிகை உள்ளது! தொண்டர்கள் தேடும் சிவபிரான், தாமே சுந்தரரைத்  தேடிப்போய்,  சுந்தரருக்காகப் பரவை நாச்சியாரிடம்  இருமுறை தூதுவராக நடந்தருளிய பாதத் தாமரையின் நறுமணம் கமழும் திருவீதி உடையது. இதனைச் சேக்கிழார்,

    “இடந்த  ஏனமும்  அன்னமும்  தேடுவார்

    தொடர்ந்து கொண்டவன்  தொண்டர்க்குத்  தூதுபோய்

    நடந்த  செந்தா  மறையடி  நாறுமால் ‘’

    எனப்பாடுகிறார்! இவ்வூரில்தான், சுந்தரமூர்த்தி சுவாமிகளைத் தடுத்தாட்கொண்ட சிவபெருமான், ‘’தில்லை வாழந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்’’ என்று அடி எடுத்துக் கொடுத்தார். அவ்வகையில் உருவான திருத்தொண்டர் புராணத்துக்குப்  பொருளாகிய அடியார் திருக்கூட்டமும் எழுந்தருளிய ஊர்  திருவாரூராகும். இத்தனைச் சிறப்புக்களும் அமைந்த ஊர் திருவாரூராகும். இவ்வூரில்   சோழர்களின் மரபு வழியில், சேக்கிழாரை ஆதரித்த அநபாயச்  சோழன் மரபின் முன்னோனாகிய  மனுநீதிச் சோழன் ஆட்சி புரிந்தான்! அவன் அறநெறி தவறாமல் ஆட்சி செய்ததோடு, வேள்விகள் பல புரிந்து , திருக்கோயி லுக்கான நிபந்தங்களையும் வழங்கினான். அவனுக்கு உலகோர் போற்றத்தக்க முறையில் அருமையான ஆண்மகவு பிறந்தது! அந்த ஆண்மகன் வளரும்போதே  போர்க்கலை ஆட்சிக்கலை, ஆன்மிகம் ஆகியவற்றைப் பயின்றான்

    ஒருநாள்  அவன் இளவரசர் பலரும், நாள் வகைப் படையினரும்  நாற்புறமும் சூழ்ந்து வர, அரசவீதியில் மணிகள் ஒலிக்கும் தேரில் ஏறிச்  சென்றான். அப்போது எவரும் அறிந்து கொள்ளாத நிலையில் ஓர்  இளைய ஆன் கன்று இளவரசன் சென்ற தேரின் சக்கரங்களுக்கிடையில் சிக்கி மாண்டது! உடனே இளவரசன், தான் செய்த  பிழையை நீக்கிக் கொள்ளும் கழுவாயை,   தம் நாட்டு மன்னனாகிய தந்தை அதனை அறியும் முன்னரே அந்தணர்களிடம் சென்று  கேட்டான்!  இந்தச் செய்தி பரவியது. அப்போதே தன் அருமைக்  கன்றை இழந்த தாய்ப்பசு, அரண்மனை வாசலில் இருந்த ஆராய்ச்சி மணியைக்  கொம்பால்  முட்டி அசைத்து ஒலிக்கச் செய்தது! அந்த மணியோசை அரசன் செவியில் ஒலித்தது. இதுவரை ஆராய்ச்சி மணியோசையைக் கேட்டறியாத அரசன் விரைந்து வெளியே வந்தான். காவலர்கள் ஒரு பசுமாடு மணியை அசைத்தது. என்று கூறினார். அரசன் அமைச்சர்களைப் பார்த்தான். அவர்களுள் அறிவால் மிக்க ஓர் அமைச்சர், அரசனின் பாதங்களை வணங்கிப் பேசலானார்.

    ‘’சோழ மன்னனே!  நீங்கள் பெற்ற  புதல்வனாகிய இளவரசன், பலவகை மணிகள் பெரிதாய் ஒலிக்கும் , மிகவுயர்ந்த தேரின்  மேலேஉள்ள தேர்த்தட்டில்  ஏறி,எண்ணிக்கையற்ற தேர்கள் சூழ்ந்துவர, அரசர்கள் மட்டுமே சென்று பழகும் பெரிய வீதியில் நகர் வளம் செய்யும்போது, மிகவும் இளைய பசுங்கன்று ஓன்று எங்கிருந்தோ யாரும் அறிந்து கொள்ள இயலாத வகையில் தானாகச் சென்று, மிகவும் கீழேயுள்ள தேர்ச்  சக்கரங்களின் இடையே எப்படியோ புகுந்து இறந்தது. அதனால் மனத்தளர்ச்சியுற்ற தாய்ப்பசு, மணியோசையை உண்டாக்கியது!” என்றார்.

    இப்பாடலில் புலப்படும்  அமைச்சரின் நுண்ணறிவு நம்மை வியப்புக்கு ஆளாக்குகிறது. முதலில்  ‘வளவ!’ என்று மன்னனை அழைக்கிறார்! குழப்பத்துடன்  இருந்த மன்னன் மனத்தில் அவன்  நாட்டை ஆளும் மிகப்பெரிய சோழர்  பரம்பரையினன் என்பதை  ‘வளவன்’  என்ற சொல்லால்  விளக்குகிறார்!

    அடுத்து, அத்தகைய பெருமைமிக்க அரசனாகிய ‘நின்’ புதல்வன் என்கிறார்! ஆதலால் பெருமை மிக்க நின் மகன்  சிறுமை  செய்பவனல்லன்  என்கிறார்! புதல்வன் என்ற சொல்லாட்சி அவன்   குலத்துக்கே  நீத்தார் கடன் புரிவதற்குரிய ஒரே புதல்வன் என்பதைக் குறிக்கிறது. ‘’அங்கு ஓர் மணி நெடுந்தேரில் ஏறி’’ என்று கூறுகிறார். ஆங்கு என்ற சொல், அவனுக்கே உரிய இடத்தில் என்ற பொருளை உடையது. ‘ஓர்’ என்பது ஒப்பற்ற என்ற பொருளில் உடன் வரும் பல தேர்களுள்  இத்தேர் சிறப்பு வாய்ந்தது என்பதைப் புலப்படுத்துகிறது.அதனால் இளவரசன் பற்பல தேர்களின் இடையே தனித்த சிற்ப்புடைய தேரில் ஏறி வருகிறான் என்பதைக் குறிக்கிறது. அதனால் பசுங்கன்று இவற்றைத் தாண்டி உள்ளே நுழைந்தது நடவாத செயல் என்ற ஐயத்தை உருவாக்குகிறது!  ‘மணி’ என்ற சொல் அத்தேரில் ஆரவாரத்துடன் ஒலித்த மணிகளின் ஓசையைக் குறிக்கிறது.அந்த ஆரவார ஓசை இளங்கன்றை அச்சுறுத்தி விலகியோடச் செய்திருக்குமே, என்று கருத வைக்கிறது. ‘’நெடுந்தேரில்’’ என்ற தொடர் மிகவுயர்ந்த தேர் அது, என்பதைக் காட்டுகிறது.அவ்வாறு உயர்ந்த தேரிலிருந்து சக்கர பகுதி கண்ணில் புலப்படாது என்ற கருத்தைப் புலப்படுத்துகிறது. ‘ஏறி’ என்ற சொல் தேர்த்தட்டின் உயரத்தைக் குறிக்கிறது. அவ்வாறு ஏறி வருபவன் பார்வை வழியைப் பார்த்துச் செலுத்தும் வாய்ப்பில்லாமையைக் காட்டுகிறது.   ‘அளவில் தேர்த்  தானை சூழ ‘ என்ற தொடர் எண்ணிக்கை அளவைக் கடந்த தேர்களுக்கிடையில் இளவரசன் ஏறிவந்த நெடுந்தேர் சென்றது என்பதைப் புலப்படுத்தி எல்லாவற்றுக்கும் இடையில் வரும் இளவரசன் தேரை யாராலும் நெருங்க வியலாது என்ற நுணுக்கமான விளக்கத்தால் ஆன்கன்று இந்தத்    தேரின் கீழே செல்லும் வாய்ப்பே  இல்லை என்று வலியுறுத்துகிறது. அவன் தேரேறிச் செல்லும் தெரு, அரசகுடும்பத்தினர் மட்டுமே செல்வதற்குரிய மேன்மை மிக்க தெரு என்பதை விளக்குகிறது. அங்கே எளிய மனிதரோ, விலங்கோ செல்வது அரச நிந்தனை என்ற குற்றத்துக்கு உரிய செயல் என்பதை நிலைநாட்டுகிறது. ‘போங்கால்’ இளவரசன் எந்த நோக்கமும் இல்லாமல் மகிழ்ச்சி உலாவை மேற்கொண்டு  சென்றான் என்பதைப் புலப்படுத்தி, அவனுக்கு அந்த ஆன்கன்றைக்  கொல்லும் நோக்கமில்லை என்பதையும் குறிக்கிறது. அடுத்து  ‘இளைய ஆன்கன்று ‘ என்று அமைச்சர் கூறுகிறார்.மிகவும் இளையது அக்கன்று, ஆதலால் தானாக அக்கன்று தேரின் கீழே செல்லாது என்பதையும், ‘இளங்கன்று பயமறியாது!’ என்ற பழமொழிக்கேற்ப அக்கன்று  அறிவும் அச்சமும் அற்றது என்பதையும் அத்தொடர் குறிக்கிறது. அடுத்து ‘’தேர்க்கால் இடைப்புகுந்து ‘’ என்கிறார் அமைச்சர். முன்சக்கரத்தில் புகுந்தால் அது தேரை ஓட்டுபவனின் கவனமின்மையைக் குறிக்கும். ஆனால் பல சக்கரங்களை உடைய பெருந்தேரின்  இடையில் புகுந்தது என்பதால், இளவரசன் அதனை நேரில்  காணாத நிலையை அனுமானிக்க வைக்கிறது. அனுமானம் குற்றத்தை நிரூபிக்காது. கன்று இறந்ததை யாரும் அறிந்து கொள்வதற்குள், அதனை ஒரு பசு அறிந்து கொண்டது என்பது நடவாத செயல். அப்பசுவின் தளர்ச்சியால் எவ்வாறு  அறிவுடன் ஆராய்ச்சி மணியை அசைத்தது என்பதைப்  புரிந்துகொள்வது? என்ற ஐயமும் தோன்றுகிறது!

    இந்தக்  கொலைவழக்கு விசாரணைக்கு  வந்தால், குற்றத்தின் பின்னணி, குற்றச்செயலின் தன்மை ,குற்றம்  நடந்த சூழ்நிலை, கொலை நோக்கம்,  கொலை செய்யப்பட்ட கன்றின் அறிவு, இவை அனைத்தும் இக்கால இந்தியக் குடியாட்சியின் குற்றவியல், தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளில் எந்த வகை யினுள்ளும்   அடங்காது. ஆகையால் அக்கால முடியாட்சிச் சட்டங்கள் பற்றி நாம் எந்த முடிவுக்கும் வருதல் இயலாது. சட்டமும் நீதியும், எல்லாக் காலத்துக்கும்  உரியனவே! என்பதையும், இந்தக் குற்றத்தை அன்றைய அமைச்சர் அணுகிய விதம் எக்காலச் சட்டத்துக்கும் இசைவாகவே உள்ளது என்பதையும் நாம் சிந்தித்தால் சேக்கிழார் பெருந்தகையின் சட்ட நுணுக்க அறிவும் , அவர் அக்காலத்திலேயே சோழமன்னனின்  முதலமைச்சராக விளங்கிய பெருமையும் ஒருங்கே புலப்படுகின்றன! கொலைக்குற்றம் சாட்டப் பட்டவரின் சார்பில் வைக்கப்படும் வாதங்கள் எவ்வாறிருக்க வேண்டும் என்பதை இப்பாடல் விளக்குகிறது. இனி நாம் பாடல் முழுவதையும் படித்து இப்பாடலின்  சொல்லாட்சிச் சிறப்பைப் புரிந்து கொள்வோம்!

    “வளவ! நின் புதல்வன் ஆங்கோர் மணி நெடுந் தேர்மேல் ஏறி
    அளவில் தேர்த்தானை சூழ அரசுலாந் தெருவில் போங்கால்
    இளையஆன் கன்று தேர்க்கால் இடைப் புகுந்து இறந்ததாகத்
    தளர்வுறும் இத்தாய் வந்து விளைத்ததித் தன்மை” என்றான்”

    இந்த வழக்கின் பின்புலத்தை மிகவும் நுட்பமாக விளக்கும் வகையிலும், பின்நிகழ்ச்சியை முன்னதாகவே உணர்த்தும் உத்தியாகவும், திருவாரூர் பற்றிய அறிமுகப் பாடலில்,

    “பல்லி  யங்கள் பரந்த வொலியுடன்

     செல்வ  வீதிச்  செழுமணித்  தேரொலி

     மல்லல் யானை  ஒலியுடன்  மாவொலி

     எல்லை  இன்றி  எழுந்துள  எங்கணும்” 

    என்று சேக்கிழார் பாடி வைத்த நுட்பம், எண்ணி யெண்ணி மகிழ்தற்குரியது!

    ============================================================

     

     

     

    Share
  • சேக்கிழார்  பாநயம் – 12

     

    =======================

    திருச்சி  புலவர் இரா.இராமமூர்த்தி

    ———————————————————–

     

    ஓரூரின் சிறப்பு அவ்வூர் மக்களின் நல்வாழ்வைப் பொறுத்தே அமையும்! ஒவ்வோர் ஊரிலும் அந்த ஊரில்  நெடுங்காலம் வாழ்வோரின் வரலாறு, எல்லா வகையிலும்  வெளிப்படும். தமிழ் நாட்டின் பழங்காலத்து நகரங்கள் சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்களின் வரலாற்றைப் புலப்படுத்தும்! பூம்புகார் சோழ நாட்டின் பழங்காலத்  துறைமுக நகரம்! அந்த நகரின் சிறப்பினைப் பற்றி சிலப்பதிகாரத்தின் தொடக்கத்திலேயே இளங்கோவடிகள் கூறுகிறார்!

    ’பொதியிலாயினும்  இமயமாயினும்

      பதியெழுவறியாப்  பழங்குடி  கெழீஇய

     பொதுவறு  சிறப்பின் புகாரே  யாயினும்

     நடுக்கின்றி  நிலைஇய என்பதல்லதை

     ஒடுக்கம் கூறார்  உயர்ந்தோர் உண்மையின் ‘’

    என்று பாடுகிறது. பொதியில், இமயம், புகார் என்ற மூன்று இடங்களையும்  கல்வியிற் சிறந்த பெரியோர் ‘’எக்குறையும் இல்லாமல் நிலைத்த  சிறப்பின, என்பார்களே அல்லாமல் எந்தக்  குறையையும் கூற மாட்டார்கள்! அதற்குக்  காரணம்  அங்கெல்லாம்  நீண்டகாலம்  உயர்ந்தோர் வாழ்வதே!’’ என்று புகழ்வர்!

    பொதியில் அகத்தியர் முதலான முனிவர்களும், இமயத்தில் சிவபிரானும், புகாரில் , எக்காரணத்தைக் கொண்டும் ஊரைவிட்டுச் செல்லாத சோழ நாட்டுப் பழங்குடிகள் நிறைந்து வாழ்வதாலும் , அவ்வாறு புகழ்வர்.  அவ்வகையில் ஓரூரின் சிறப்பு அங்கு நீண்டகாலம் வாழும் மக்களால் விளங்கும்!

    தமிழகத்தின் சிறந்த நகரங்களில் ஒன்றாகிய திருவாரூரின் சிறப்பைச்  சேக்கிழார் சுவாமிகள் பற்பலபாடல்களில் புகழ்கிறார்! ஓரூரின் சிறப்பு அங்குள்ள சிறந்த சான்றோர்களாலும் , அங்குள்ள நீர்வளம், நிலவளம், தொழில் வளம், கோயில் முதலானவற்றாலும் புலப்படும் என்பதைச் சிலம்பு கூறுவதை மேலே கண்டோம்! அவ்வகையில் ‘’திருவாரூர்  அங்குள்ள பறவைகளின் ஒலிகளால்,  சிறந்த ஊர் என்பதை அறிந்து கொள்ளலாம்! ‘’ என்கிறார் புலவர்.

    சங்க இலக்கியமாகிய பெரும்பாணாற்றுப் படையில் , பாணர்களை அந்தணர் வாழும் இல்லத்துக்குச்சென்றால், அங்கு எவ்வகை உணவைப் பெறலாம் என்பதைக் கூறி ஆற்றுப்படுத்துகிறார்கள். அப்போது, ‘’அந்தணர் இல்லத்தில் பசுமாட்டின் கன்றைக் கட்டிவைத்த பந்தலின் உள்ளே,பசுஞ்சாணத்தை இட்டு  மெழுகிய யாகசாலை உடைய வீட்டில், கோழியும்,அதனை விரட்டும்  ஆடும் உள்ளே நுழைய மாட்டா! அங்கே வளைந்த வாயினை உடைய கிளிகள்   வேளைதோறும் இடைவிடாது அந்தணர்கள் கூறும் அறிய வேதங்களைக் கேட்டு, மீண்டும் சொல்லிப்  பயிலும் ‘’  என்பதை,

    ‘’செழுங்கன்று  யாத்த  சிறுதாள் பந்தல்

     பைஞ்சேறு  மெழுகிய படிவ நன்னகர்

     மனையுறை  கோழி, அடு ஞமலி துன்னாது

     வளைவாய்க்  கிள்ளை  மறைவிளி  பயிற்றும்

     மறைகாப்பாளர்  உறைபதி’’

    என்று பாடுகிறது.  வேதங்களைக் கிளிகள் பயிலும் அடையாளம் சிறந்த வேதியர் வாழும் இடத்தைக் குறிக்கிறது!திருவெண்காடு சிறந்த சிவத்தலம்! அங்கே வாழும் அந்தணர்கள் ஸ்ரீருத்திரம் போன்ற வேத மந்திரங்களை வேளைதோறும் விடாமல் ஒதுகின்றனர்! அதைக்கேட்ட அவ்வூரில் உள்ள  கிளிகள் அவ்வேத மந்திரங்களைக்   கொண்டே  பேசப்   பழகுகின்றனவாம்! இதனைத் திருஞானசம்பந்தர் ,

    “நாதன்  நமையாள்வான்   என்று  நவின்றேத்தி

     பாதம்  பன்னாள்  பணியும் அடியார்கள் தங்கள்மேல்

     ஏதம்தீர   இருந்தான்   வாழும்    ஊர்போலும்

    வேதத்து  ஒலியால்  கிளிசொல்  பயிலும்  வெண்காடே!’’ என்று பாடுகிறார்!

     மேலும் அவர் ‘’திருவீழி மிழலை என்ற திருத்தலத்தில், இடமகன்ற திருமடங்களில்  அந்தணச் சிறுவர்கள் ‘பதம்’ என்ற வகையில்   படித்த நால்வேதங்களைக் கேட்டு, மகிழ்ந்து இருந்த பசுங்கிளிகள் , அவ்வாறே ஓதக்கேட்டு , அத்திருக்கோயில் வாயிலில் படுத்துக் கிடந்த பசுக்குலங்கள்,வேத ஒலியைத் தாமும் பயின்று முழங்குகின்றன. இத்தலத்தின் இறைவனின்  திருவைந்தெழுத்தை  நாமும் ஓதினால் நம் வினைகள் கெடும்!’’ என்கிறார்! அவர் பாடல்,

    ’அஞ்செழுத்துரைக்க அருளினன்   தடமிகு  நெடுவாள்

    படித்த  நான்மறைகேட்    டிருந்த பைங்கிளிகள்  பதம்ஓத, பாடுஇருந்த

    விடைக்குலம்  பயிற்றும்  விரிபொழில்வீழி  மிழலையான்  எனவினை  கெடுமே!’’

    என்று பாடுகிறார்.  மேலும் விடமுண்ட கண்டராகிய சிவபிரான் என்றும் வாழும் நகராகிய  சீர்காழியை, ‘’மிகவும் நல்லவர்களாகிய வேதியர் கற்றுப்  பயில்கின்ற வேதங்களைக் கேட்டு, அவ்வூர்ச் சோலைகளில் பறந்து திரியும் கிளிகள், தாமே அப்பதங்களைச்  சொல்லி மகிழும் திருப்புகலி!’’ என்று பாடுகிறார்! இதனைத் திருமுறை,

    “ சால  நல்லார் பயிலும்  மறைகேட்டுப் பதங்களை

     சோலை மேவும் கிளித்தான்  சொல்பயிலும் புகலியே!’’    

    என்று பாடுகின்றது!

    இவையனைத்தையும்  பயின்ற   சேக்கிழார்   பெருந்தகை,   திருவாரூரில் உள்ள  இல்லங்களில், சிறந்த திருமுறைகளை  அனைவரும் வேளைதொறும் பயில்வர்! அதனை அங்கே  வாழும் கிளிகள் கேட்டு மீண்டும் கூறுமாம். அதனை நாகணவாய்ப் பறவைகளும் கேட்டு மகிழும் என்று பாடுகிறார்.

    ‘’உள்ளம்  ஆர் உரு  காதவர்?  ஊர்விடை

     வள்ள   லார்திரு  வாரூர்  மருங்கெலாம் 

     தெள்ளும்  ஓசைத்  திருப்பதி  கங்கள் பைங்

     கிள்ளை  பாடுவ  கேட்பன  பூவைகள்!’’

    என்பது அவர் அருளிய திருப்பாடல். இப்பாடலில் வேதப்  பதங்களைக் கிளிகளும், பசுக்களும் பயிலும் என்று, சங்க இலக்கியமும், சம்பந்தர் தேவாரமும் கூறியதைச் சற்றே மாற்றம் செய்து பாடுகிறார்! திருவாரூரில் இல்லங்களிலும் , வீதிகளிலும், திருக்கோயிலிலும் , புறநகர்ப் பகுதிகளிலும் அடியார்கள் இடைவிடாமல்  சைவத்  திருமுறைப் பதிகங்களைப்    பயில்கிறார்கள், என்று மாற்றி, வேதமும்  திருமுறையும் ஒன்றே என்ற கருத்தை நிலை நாட்டுகிறார்!

    மேலும் ‘வள்ளலார்’ என்று திருவாரூர்த் தியாகேசரைக் குறிப்பது, அவர் தம்மையே தமர்க்கு நல்கும் தியாகத்தைச் செய்தருளுபவர் என்பதை நமக்குத் புலப்படுத்தும். அவ்வூரில் தம்மைக் காதல் தூதுவராக்கிக் கொண்டு இரண்டு முறை திருவாரூர் வீதியிகள் நடந்தருளியவர்! அவர் திருவருட் சிறப்பைப் பாடும் பாடல்கள் நால்வரும், காரைக்காலம்மையாரும்  நல்கிய பத்துப் பத்துப் பாடல்களால் ஆகிய பதிகங்களே, என்கிறார்! முன்னோர் மொழிந்த  கருத்துக்களைக்  காலத்துக்கும்  இடத்துக்கும் ஏற்பச்  சற்றே  மாற்றிப்  பாடிய சேக்கிழாரின் திருமுறைப் பற்றினை இப்பாடல் குறிக்கின்றது!

    =====================================================================13

    ——— சே.பா.ந. – 12 —- sent  on   15/11/’18.

    Share
  • சேக்கிழார் பா  நயம் – 11 

    =======================

    (திருச்சி புலவர் இராமமூர்த்தி)

    —————————————————

     

    திருவாரூர்  நகரத்தின் தோற்றம் இங்கே சிறப்பாகக் கூறப் பெறுகிறது. இப்பாடலில் உள்ள தொடர்கள் அடுத்தடுத்து வெவ்வேறு  பொருள்களைப்  புலப் படுத்துகின்றன. ஒரே தொடர் மீண்டும் வந்து , பொருள் நோக்கிப் பிரிந்து வெவ்வேறாகப் பொருள்தரப்   பாடுவது இரட்டுற மொழிதல் என்ற அணி என்பர். இந்த அணி இருவகைப் படும் , அவை செம்மொழிச் சிலேடை, பிரிமொழிச்  சிலேடை என்பனவாம்.

    சேக்கிழார் பெருந்தகை , திருவாரூரில் உள்ள மாளிகைகளின் சூழல் பற்றிக் கூறுகிறார்! மாளிகைகள் கட்டப்பெற்ற இடங்களுக்குப் புறம்பே உள்ள சோலைகளில் அந்நாட்டு மக்களால் வளர்க்கப் பெறும் யானைக் கன்றுகள் திரிகின்றன. அந்தச்   சோலைகளில் , வண்டுகள் பறந்து சென்று தேனுண்ணும் மலர்கள் எங்கெங்கும் பூத்துள்ளன!

    அடுத்து அங்கே  மகளிர்  விளையாடும் பொழுது  பாடும்   அம்மானைப் பாடல்கள்  எங்கெங்கும்  ஒலிக்கின்றன! அவர்கள் வாழும் அழகிய பெருமனைகள்  எங்கெங்கும் உள்ளன.

    அங்குள்ள இல்லங்களின்மேல் ஏற்றிவைத்த கொடிகள் படபடக்கின்றன. அந்த இல்லங்களுக்குள்  பெரும் செல்வங்களின் வைப்புப்  பெட்டகங்கள் உள்ளன.

    பூக்களால் தொடுக்கப் பெற்ற  மாலைகள் எங்கெங்கும் உள்ளன. அந்த மாலைகளை அழகாக அணிந்து கொண்டு இன்புறும் ஆடவரும் பெண்டிரும் எங்கும் உள்ளனர்.

    இப்பாடலில் போதகங்கள்  என்ற சொல், யானைக் கன்றுகளைக் குறித்தது; மாடு என்ற அடைமொழி ஊரின் பக்கத்தில் என்று பொருள்தந்து, அங்கே  சோலையில் திரியும் யானைக்கன்றுகளைக் குறித்தது.  அதே சொல் அடுத்து,   வண்டு போது  அகங்கள் என்று பிரிந்து , மலரிதழின் உட்பாகங்கள் என்று பொருள் தருகிறது. அதற்கு அதன் அடைமொழியாக உள்ள வண்டு  என்ற சொல் போதகம் என்ற யானையை நீக்கி, போது , அகங்கள் அதாவது வண்டுகள் தேனுண்ணக்  கிண்டுவதால் ,  விரியும் போது காணப்படும் அகவிதழ்கள் என்று,   பொருள் தருகிறது. இங்கே போதகங்கள் என்ற சொல் இருவகையாகப் பொருள் தருவதே சேக்கிழாரின் இலக்கிய ஆளுமையைக் காட்டுகிறது.

    அடுத்த அடியில், பாடும் அம்மனை என்பதில் உள்ள அடை மொழி, பாடுகின்ற அம்மனை என்ற கருத்தைத் தருகிறது. அம்மனை என்பது அம்மானை என்ற விளையாட்டுப் பாடலைக் குறிக்கும்! ஆதலால் அங்குள்ள வீடுகளில் எங்கெங்கும்  பெண்கள் அம்மானைப் பாடல்களைப் பாடி விளையாடுகின்றனர் என்பது புலனாகின்றது.  அடுத்து  அம்மனைகள் என்பது  பயிலும் அம்  மனைகள் எங்கும் என்ற தொடராகப் பிரிந்து அழகிய வளமனைகள்  எங்கெங்கும் அமைந்துள்ளன என்பதைக் கூறுகின்றது.

    அங்குள்ள மாளிகைகளில்  நெடிதுயர்ந்து  நீற்று அசையும் கொடிகள் எங்கெங்கும்  விண்ணில் பறக்கின்றன! இதனைச் சேக்கிழார் ‘’நீடு கேதனங்கள்’’ என்று பாடுகிறார்.  அடுத்து நிதி நிகேதனங்கள் எங்கும் என்கிறார். ‘’அம் மாளிகைகளுக்குள் செல்வத்தின் வளத்தை எடுத்துக் காட்டும் பொற்கூடங்கள் எங்கெங்கும் உள்ளன ‘’ என்பது இதன் பொருள். இங்கு கேதனங்கள் என்ற சொல் இருவகைப் பொருளாக தருகிறது.

    பூவிதழ்களால் கட்டப் பெற்ற மலர் மாலைகள் எங்கெங்கும் உள்ளன! இதனைச் சேக்கிழார் , ‘’தோடு சூழ் மாலை எங்கும் ‘’ என்று பாடுகிறார். அடுத்து, கணவன் மனைவியர் இணைந்து மாலையணிந்து மகிழும் இடங்கள் எங்கும் உள்ளன! என்பதை, ‘’ துணைவர் சூழ்  மாலை எங்கும் ‘’ என்கிறார். இங்கு மாலை என்ற சொல்  அடுத்தடுத்து  வந்துள்ளது.

    இனி முழுப்பாடலையும் பார்ப்போம்.

    ’மாடு போதகங்கள் எங்கும் வண்டு போதகங்கள் எங்கும்
     பாடும் அம்மனைகள் எங்கும் பயிலும் அம்மனைகள் எங்கும்
     நீடு கேதனங்கள் எங்கும் நிதி நிகேதனங்கள் எங்கும்
     தோடு சூழ் மாலை எங்கும் துணைவர் சூழ் மாலை எங்கும்.”

    இப்பாடலில் அலையும் யானைக் கன்றுகள், சோலையில் பூக்கும் மலர்கள், அம்மானைப் பாடல் பாடுவோர், வளமனைகளில் வாழ்வோர்,கொடியசையும் மாளிகை மக்கள், பெருஞ் செல்வம் பெற்றோர், மலர்ச்சோலை வைத்தோர், மாலை சூடி மகிழ்வோர் ஆகியோரின் சிறப்பை இரட்டுற மொழிதல் என்ற அணி நயத்துடன் சேக்கிழார் பாடியுள்ளார். இதன் வழியே திருவாரூரின்  இயற்கை வளம், செல்வச்சிறப்பு, செல்வவளம் ஆகியவற்றை உணரலாம்.

    Share
  • சேக்கிழார் பா நயம் – 10

    =======================

    திருச்சி புலவர் இரா.இராமமூர்த்தி

    ———————————————————-

     

    வேளாண்தொழிலில் நெற்பயிரோடு வாழை , கரும்பு ஆகியவை நன்செய் நிலப்பயிர்கள் ஆகும்.  விளைந்த கரும்புகள்  கமுக  மரங்களுக்கு  இணையாக விளங்கின என்று முன்னரே கண்டோம். அந்தக் கரும்புகளை வெட்டி, ஆலைகளில் இட்டுப் பிழிந்து, மிகப் பெரிய அண்டாக்களில் ஊற்றிக்  காய்ச்சுவார்கள். அவ்வாறு காய்ச்சும்போது எழும் கரும்புகை வானில் எங்கும் பரவும்.  அந்தப் புகையில் கரும்பின் இனிய மணம் கமழும்.

    அந்நாட்டில் பெண்கள் நன்றாகக்  குளித்து உடலையும் உள்ளத்தையும் தூய்மை செய்துகொண்டு, தம் இல்லத்தின் மேல்மாடங்களில் நிற்பர். அப்போது  மணம் மிக்க அகில், சாம்பிராணிப்  புகையை உருவாக்கித்  தம் கூந்தலில் அவற்றின் புகையை வாங்கி உலர்த்துவர். அப்புகையும் வானில் எழுந்து பரவும். அதிலும் அகிலின் நறுமணம் கமழும்.  அவர்தம் கூந்தலில் புதுமலர்ச் சரங்களைச்  சூடிக் கொள்வர்.   அப்பூக்களின் நறுமணமும் வானெங்கும் பரவும்.

    ஊரிலுள்ள அந்தணர்கள் தம் இல்லங்களில் சிறுசிறு வேள்விக் குண்டங்களை அமைத்து அன்றாடம் தீவேள்வி புரிவர். ஆனால் ஊரின் நன்மை கருதி, மிகப்பெரிய  யாகங்களையம் செய்வர். அவற்றுக்காக ஊரின் புறத்திலே வெட்ட வெளிக் களங்களில்  , பெரிய யாக குண்டங்களை அமைப்பர். அவற்றின் நடுவே யூபம் எனப்படும் பெரிய தூண்களை நடுவர். அவற்றை நம் பழந்தமிழ் இலக்கியமான புறநானூறு,

    ‘’நற் பனுவல் நால் வேதத்து

     அருஞ் சீர்த்திப் பெருங் கண்ணுறை

     நெய்ம் மலி ஆவுதி பொங்கப், பன்மாண்

     வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி,

     யூபம் நட்ட வியன்களம் பலகொல்?’’

    என்று பாடுகிறது. அந்த யூபத்தூண்களில் இடப்பெறும் தசைகளைத்  தின்பதற்காகப் பருந்துகள்  வானில் வட்டமிட்டுப் பறக்கும் . இதனைப் புறநானூறு,

    ‘’பருதி உருவின் பல்படைப் புரிசை

     எருவை  நுகர்ச்சி யூப நெடுந்தூண்

     வேத வேள்வித்  தொழில்முடித்  ததூஉம் ‘’  

    என்று பாடுகிறது. இவ்வாறு அமைக்கப்பெறும் வேள்விச்சாலைக் களங்கள்  பெரிய சுவர்களுடன் கட்டப்பெறும். அந்த வேல்விச் சாலைகளிலிருந்து மேலே கிளம்பும் பெரும் புகை வானில் பரவும். அந்தப் புகையிலும் ஆவுதி மணம் கமழும். இதனை வில்லிபாரதம்,

    ‘’அரசினை அவிய அரசினை அருளும் அரிபுருடோத்தமன் அமர்வு

      நிரைநிரையாக நெடியன யூபம்  நிரந்தரம் ஒழுக்குவிட்டு இரண்டு

      கரை புரை வேள்வி புகைகமழ் ‘’ 

    என்று பாடும். இந்த வேள்விச் சாலையை சேக்கிழார் ‘’ பெரும் பெயர்ச் சாலை ‘’ என்று பாடுவார்.

    ‘’பெரும் பெயர் – மகா வாக்கியம். ஆகு பெயராய் ஈசுவரனை யுணர்த்திற்று. “தத்துவமசி” முதலிய மகா வாக்கியங்களாலே பேசப் பெறுபவன். “பெரும் பெயர்க் கடவுளிற் கண்டு” என்ற சிவஞான போதச் சிறப்புப்பாயிரமும் “பெரும் பெயர் முருக” என்ற திருமுருகாற்றுப்படையும் முதலியனவும் காண்க. பெரும் பெயர்ச்சாலை – ஊருக்கு வெளியிலே யூபத்தம்பங்கள் நாட்டி இறைவனை முன்னிட்டுச் செய்யப்பெறும் பொது வேள்விச் சாலைகள்’’. என்பார் சம்பந்த சரணாலயர்.

     “மண்ணிற் பெருவேள்வி வளர்தீப் புகைநாளும்,

      விண்ணிற் புயல் காட்டும் வீழிம் மிழலையே.”

    என்பது தேவாரம்.

    இவற்றைத் தவிர வானில்  இயல்பாகச் சூழும் கருமேகங்களும் விளங்கும். இவ்வகையில் திருவாரூர்  வானில் நால்வகைப்  புகைகளும், நால்வகை நறுமணங்களுடன் விளங்கும். இவை யனைத்தும் வானில் மருவிக் கலந்து எந்த நறுமணம் எங்கிருந்து வருவது? என்ற குழப்பத்தை விளைவிக்கும்.

    இதனைச் சாறு மணக்கும் குன்றத்தூர்த் தலைவராகிய சேக்கிழார் பாடுவதை இங்கே காண்போம்.

    ‘’கரும்படு   களமர் ஆலைக்  கமழ்நறும்  புகையோ, மாதர்

     சுரும்பெழ  அகிலால் இட்ட  தூபமோ,  யூப  வேள்விப்

     பெரும்பெயர்ச்   சாலை  தோறும் பிறங்கிய  புகையோ  வானின்

     வருங்கரு  முகிலோ  சூழ்வ  மாடமும் காவும் எங்கும் ‘’

    என்பது அவரருளிய  பாடல்!

    இப்பாடலில்  நால்வகைப்பட்ட புகைகள் நெடுநிலை மாடங்களையும், சோலைகளையும்  சூழ்கின்றனவாம். இவற்றுள் கரும்பைக் காய்ச்சும் ஆலைப்புகை நாட்டின் விளைச்சல் வளத்தையும், அதன் வழியே பொருளாதார மேம்பாட்டையும் காட்டுகிறது. அடுத்து பெண்கள் நெடுநிலை மாடத்தில் நின்று கூந்தலில் நறுமணப் புகை இடுவது, அந்நாட்டின் இல்லற இன்பநிலையைக் காட்டுகிறது.அடுத்து பொதுவேள்விச் சாலைகளில் அவி சொரிந்து நடத்தும் வேள்வி , வீடுபேற்றைக்  குறித்த  வழிபாட்டு  நெறியைக்   காட்டுகிறது. மேலும் வானில் சூழ்ந்து  நிற்கும் இயல்பான மேகங்கள், நாட்டு மக்களின் அறஞ்சார்ந்த வாழ்க்கையைக் காட்டுகின்றன. இதனைக் கம்பர் ,

    ‘’பொற்பின் நின்றன பொலிவு பொய் இலா
    நிற்பின் நின்றன நீதி மாதரார்
    அற்பின் நின்றன அறங்கள் அன்னவர்
    கற்பின் நின்றன கால மாரியே’’

     

    என்று  அறத்தின் சிறப்பைக் கருமேகத்தின் வழியே காட்டுகிறார்.

    ‘’சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

     வறக்குமேல்  வானோக்கும் ஈண்டு .’’

    என்றும்,

    ‘’தானம் தவமிரண்டும்  தங்கா  வியனுலகம்

    வானம் வழங்கா தெனின்’’

    .

    என்றும் ,

     

    நீரின்று  அமையாது உலகெனின்  யார்யார்க்கும்

    வானின்று  அமையாது  ஒழுக்கு.’’

    என்றும் திருக்குறள் பாடுகிறது.அறம்,பொருள் இன்பம், வீடு ஆகிய நால்வகைப் பால்களையும் காட்டும் பாடல் இது. இந்தச் சிந்தனைகள் அனைத்தையும் ஒருங்கே எண்ணிச்  சேக்கிழார்  பாடும்  பாடலின்  நுட்பம்  வியந்து  போற்றுதற்கு உரியது.

    =============================================

     

    Share