Tag: மறவன்புலவு க.சச்சிதானந்தன்

  • நெறியல்லா நெறிதன்னை நெறியாகக் கொள்வேனை….

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    கடலை நோக்கி ஆறுகள் பாய்கின்றன. நோக்குவது ஒரே இடத்தை. ஆனாலும் பாயும் வழிகள்? ஒரே தன்மைத்தனவா?

    சிவாச்சாரியார் நீராட்டுவார், மலர் தூவுவார், தூபமிடுவார், திருவமுது படைப்பார், போற்றிகள் பாடுவார், சிவனாகிய இறைவனை வழிபடுவார். அவர் வழி அஃதாம்

    கருவறையை நோக்கிக் கற்களை எறிவார், சிவனாகிய இறைவனை வழிபடுவார், புத்தத் துறவி வேடத்தில் சாக்கிய நாயனார். அவர் வழி அஃதாம்.

    அம்மையே அப்பா எனச் சிவனை அழைப்பார் மணிவாசகர், அதை விடுத்துப் பித்தனே என்பார் சுந்தரர்.

    பித்தன் என்று அழைத்தாய், அப்படியா பாடு என்பார் சிவனாரும்!

    வழி எது? வழி எது? வழி இது.. வழி இது.. என அவரவர் கொள்ளும் வழியே வழி, அதுவே மனிதம் அதுவே இயற்கை என்ற செய்தியைச் சென்னை மார்கழி இசை விழாவில் சொல்ல முயல்கிறார், தீர்மான அழகுமுறையாளர், வழக்குரைஞர், கலைமாமணி அனிருத்தர்.

    திருமூலரின், ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஆடரங்கம், ஆனந்தம் பாடல்கள், ஆனந்தம் பல்லியம், ஆனந்தம் வாச்சியம் ஆனந்தமாகி ஆனந்தம் அகில சராசரம் ஆனந்தம் ஆனந்தக் கூத்துகந்தானுக்கே என்ற வரிகள் நாட்டியத்துக்கான ஒரு மணி நேர ஆடலின் அடிநாதம்.

    வாய்க்குள் நீர், தலையில் பூ, எச்சிலாக்கிச் சுவை பார்த்த இறைச்சி, இவை பூசனைப் பொருள்கள். ஏற்பாரா இறைவன்? அதையே தா எனக் கேட்பவரே இறைவன். கண்ணப்பர் அன்புடன் கொடுத்ததை ஏற்றார்.

    அலாரிப்புடன் தொடங்கும், தில்லானாவுடன் நிறைவுறும். அதுவே 300 ஆண்டு கால மரபு வழிப் பரதம். தில்லானாவுடன் தொடங்கினால்? திருவமுதுக்குப் பதிலாக எச்சிலாக்கிய இறைச்சியைப் படைப்பது போலாகாதா? தில்லானாவுடன் தொடங்கலாம் என்கிறார் அனிருத்தர்.

    நடனத்தில் இல்லாத ஞானம் இல்லை, நடனத்தில் இல்லாத சிற்பம் இல்லை, நடனத்தில் இல்லாத கல்வி இல்லை, நடனத்தில் இல்லாத யோகம் இல்லை, நடனத்தில் இல்லாத நாளாந்த செயலும் இல்லை என நாட்டிய நன்னூல் கூறும் வரிகளுடன்  கல்யாணி இராகத்தை அழைத்துக்கொண்டு அரங்கத்துள் நுழையும் நாட்டியமணிகள் பிரியா முரளி, பிரியா தீட்சிதர், கிருத்திகா சுப்பிரமணியம், பிரபா தீட்சிதர் நால்வரும் அரங்கத்தை ஆட்கொண்டனர்.

    என்றுமில்லா அழகுடன் அரங்கம் அமைந்திருந்தது. இந்த நிகழ்ச்சிக்காகத் தயாரித்த அரங்கத்தில், நிலவு தண்ணொளி வீசியது. கோயிலின் கோபுரம் நிமிர்ந்தது. மஞ்சள் வண்ண மலர் மாலைகள் நெடுந் தோரணமாகத் தொங்கின.

    நாட்டை இராகத்தில் சிறீகாந்தரின் கணீர் குரலில், திருமூலரின் வரிகளுக்கு நடனத்தில் பொருள் சொல்லியவாறே அம்சநாதத்தில் மதுரை என். கிருஷ்ணன் தந்த தில்லானாவைத் தொடர்ந்தனர் நடன மணிகள். கண்ணனின் கானத்தைச் சரணமாக்கினர்.

    ஏற்றமும் இறக்கமும் மென்மையும் குழைவுமாய்க் கலைமாமணி சசிரேகாவின் சொற்கட்டுகள் தந்த சோதி, அருட்பெருஞ்சோதி வரிகள் வர்ணத்துள் நடன மணிகளை அழைத்துச் சென்றன. பிரீதி இராமபிரசாதரின் ஆங்கில வரிக் குரலாக்கம் மெருகூட்டியது.

    வண்ணக் குழையலாய் சந்திரகாந்தமான ரூபமாய் எனக் கரகப்பிரியாவில் தொடங்கி, ஆதாரம் நீயே பல்லவிக்குள் நுழைந்து, கருத்தினில் உனை நிறுத்தி வழிபட அருள் செய்வாய் எனத் தோடியில் வியந்து, தா நிதம் தா, அருள் தா, பொருள் தா எனப் பந்துவராளியில் மிதந்து, உன்னையே நம்பினேன் செகநாதா எனப் பைரவியில் நயந்து, நடனமணிகள் அரங்கை அசத்தினர்.

    நந்தினி ஆனந்தனாரின் குரல் வளத்தில், தெளிவான உச்சரிப்பில், இசையின் எழிலில் அரங்கத்தார் மயங்கினர். அவருடன் சிறீகாந்தரும் இசைத்து மகிழ்வித்தார்.

    இடையிடையே சசிரேகாவின் சொற்கட்டுகளுக்குப் பதம்பிடித்து, காலடிகளைப் பணிவித்து, கையசைவுகளை மெருவாக்கி, விரல்வழி கண்ணசைத்து, கழுத்தசைவில் செழிப்புற்ற பரதத்தின் பண்பட்ட முத்திரைகளை  ஒருங்கிணைத்து அனிருத்தரின் அடிநாதக் கருத்துக்கு உயிரூட்டினர் பிரியா, பிரியா, கிருத்திகா, பிரபா நால்வரும்.

    அடிமேல் அடி வைத்தால் நடனம். அடிமேல் அடிவைத்தல் படிப்படியாக முன்னேறும் முயற்சி. அதற்காக அடிமேல் அடிவாங்குவது துன்பம். அவ்வடியவன் நாடுவதோ மேலேயுள்ள இறைவனின் அடி, எனப் பல்பொருளை முன்னிறுத்திக் கருத்து விருந்து தந்தவர் அனிருத்தர். சொற்கட்டாக்கிச் செவிக்கு விருந்து தந்தவர் சசிரேகா, நடனமாகக் கண்ணுக்கு விருந்து தந்தவர் நடனமணிகள் நால்வரும்.

    அலாரிப்பில் துயரத்தைக் காட்டி, தோடியில் சீறீகாந்தர் சங்கடம் தீர்த்திடக் கடைக்கண் பாராய் என இசைக்க, ஆனந்தம் ஆனந்தம் எனச் சசிரேகாவின் குறுகுறுவான எத்துக்கடைச் சொற்கட்டில் நாட்டியத்தின் வழி ஆனந்தம் அடைவதை நடனமணிகள் காட்டினர்.

    தூணிலும் இருப்பவன் துரும்பிலும் இருப்பவனைச் சிறீகாந்தர் கீரவாணியில் இசைக்க, உள்ளத்தைக் கடைந்து உள்ளத்தைக் கடந்து, நமக்குள்ளேயே கடவுள் இருப்பார் எனத் தொடரும் சசிரேகாவின் சொற்கட்டுகளுக்கு அப்பால் சப்தத்தில், நந்தினியின், கடவுளே வினை தீர்க்கும் முழுமுதற் கடவுளே எனும் காம்போதிக்குப் பரதம் தந்தனர் நடன் மணிகள்.

    சுருதியை Strauss எனும் மேற்கத்திய இசை சார்ந்து, நான் இசையின் வழியே என்ற பாடலை வேதாந்தர் தர, பிரியா முரளி பரதத்தை ஆடி அசத்தினார்.

    லயத்தைக் கருவிகளூடே  தனஞ்செயன் மிருதங்கத்திலும் வேங்கடசுப்பிரமணியன் காலக்கட்டிலும் தர, சசிரேகாவின் சொற்கட்டுகளில் பிரபா மெய்மறந்து ஆடி, பரதக் கலையின் நுண்ணிமைகளில் திண்ணியராகினார்.

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும், ஆள்பாதி ஆடை பாதி, புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு, அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவமாட்டான், கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன், போதுமென்ற மனமே பொன்செயும் மருந்து, பொறுத்தார் பூமியாள்வார் ஆகிய பழமொழிகளுக்கு முக பாவங்களைத் தந்தவர் பிரியா தீட்சிதர்.

     சிருங்காரித்தலைச் சிறீகாந்தர் இசைக்கக் கிருத்திகா ஆடினார். அதற்காக அவர் தன்னை அலங்கரித்து வந்தார், அரங்கம் பொலிந்தது.

    நடனத்தின் வழி நம் மனம் இறைவனை நோக்கிப் புறப்படுவதாகச் சொல்ல வருகிறார் அனிருத்தர். நாட்டிய நன்னூலின் உட்பொருளை மல்லாரியில் நாகசுரமும் தவிலுமாய் இராசேந்திரனும் கசேந்திரனும் இசைக்க, கால்நுனியில் உடலை உயர்த்தி, தோளை நிமிர்த்திய நடன மணிகள், இறைவனை உலாக் கொணர்ந்த பாங்கினை அரங்கம் நயந்து வியந்தது.

    அமைதி நிலவுக எனும் உயர் நோக்கை வாத்தியர்கள் வடமொழியில் பாராயணமாக்க, நடன மணிகள் நால்வரும் அரங்கத்தை ஆட்கொள்ள, பார்வையாளர் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டினர்.

    சிறீகாந்தரின் கம்பீரக் கணீர்க் குரலிசை, நந்தினியின் தேன் மழலைச் சிந்திசை, சசிரேகாவின் தாளம்பிறழாச் சொற்கட்டும் நட்டுவாங்கமும், தனஞ்செயனின் மத்தள ஓசை, வல்லுநரின் வயலினின் நாதம், புல்லாங்குழலின் ஊதோசை, ஏனைய கருவிகளின் செவ்விசை, யாவும் ஒன்றுக்கொன்று  மாறுபடாமல் ஒன்றோடொன்று ஒத்திசைத்ததால் கேட்போர் காதுகள் இசைத் தேனில் ஊறின.

     விரலசைவில் கையசைந்தது. கைகள் செல்வழி கண்கள் சென்றன. கண்களின் வழி மனம் சென்றது. மனத்தின் வழி காலடி கட்டமைத்தது. காலடி அசைவுக்குக் கழுத்தசைந்தது. செம்மைசார் நுண் இடையார் பிரியா, பிரியா, கிருத்திகா, பிரபா நால்வரும் செவ்விதாய் ஆடிச் செழிப்புற, அவையோரின் கண்கள் ஆடக அரங்குடன் ஒட்டிக்கொண்டன.

    கைவழி நயனம் செல்லக் கண்வழி மனமும் செல்ல, ஐயநுண் இடையார் ஆடும் ஆடக அரங்கு கண்டார், என மிதிலைப் படலத்தின் 8ஆம் பாடலில் கம்பன் கூறியதை நினைவூட்டினர் ஆடல் வல்லார்.

    அனிருத்தரையும் அவர் கருத்துக்குச் செம்மாந்த இசையும் செழுமைசேர் நடனமும் குவித்த கலைஞர் யாவரையும் சுவைஞர் மீண்டும் மீண்டும் கைதட்டிப் பாராட்டிப் போற்றினர்.

    பத்மசிறீ விருது பெற்ற பேரா. சுதாராணி இரகுபதியின் 65 ஆண்டுகால நடன வாழ்வுக்கும் வாத்தியார் மதுரை என். கிருஷ்ணன் நினைவுக்கும் பெரும் பொருட்செலவில் இந்நிகழ்ச்சியைத் தயாரித்து, தன் குருவுக்கு நடனக் காணிக்கையாக்கிய கிருத்திகா சுப்பிரமணியனை எத்துணை போற்றினும் தகும்.

    05. 12. 2012இல் இராயப்பேட்டை சங்கீத வித்துவ சபையில் அரங்கேறிய இந்நிகழ்ச்சி, 19. 12. 2012இல் கார்த்திகை நுண்கலைக் கழகம் சார்பில் மயிலாப்பூர் பாரதிய வித்தியா பவனில் மீளேறியது.  இரு நிகழ்ச்சிகளையும் கண்ணாரக் காணும் பேறுற்றேன்.a

    Share
  • Degree of Doctor of Science (Honoris Causa)

    23. 12. 2012 காலை 1100 மணி

    கோயம்புத்தூர் ஈச்சநாரி, கற்பகம் பல்கலைக்கழகம்

    வேந்தர் முனைவர் இரா. வசந்தகுமார்

    துணைவேந்தர் முனைவர் க. பாலசுப்பிரமணியன்

    பட்டமளிப்பு விழா

    சிறப்புவிருந்தினர் உயர்நீதிமன்ற நீதியரசர் வி. இராமசுப்பிரமணியம்

    மதிப்புறு முதுமுனைவர் பட்டம் (Honoris Causa D. Sc.) மூவருக்கு

    தொழிலதிபர் க. கஸ்தூரிரங்கன்

    இந்தியன் ஓவர்சீஸ்வங்கித் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் ம. நரேந்திரா

    ஐக்கிய நாடுகள் சபை மேனாள் ஆலோசகர் மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    38 முனைவர் (Ph. D.) பட்டம்

    89 முதுமாணி (M. Phil.) பட்டம்

    118 முதுநிலை (Masters) பட்டம்

    1323 இளநிலை (Bachelors) பட்டம்

    36 பட்டயம் (Diploma)

    Maravanpulavu Kanapathipillai Sachithanananthan


    Born in Jaffna, in the year 1941, Maravanpulavu Kanapathipillai Sachithanananthan graduated with a Degree in Zoology from the University of Madras in 1963. After obtaining his Masters Degree in Zoology with Marine Biology from the University of Madras under the Government of India General Scholarship Scheme, he served as a Research Officer in the Sri Lanka Scientific Service, Colombo. As a marine biologist, he has carried out scientific investigations related to, the Beche-de-mer fishery of Sri Lanka and the physical, chemical and biological nature of the Jaffna lagoon. On a scholarship from the Government of Japan, he underwent training in Marine Biochemistry in Tokyo. He participated in UNESCO training programme on Marine Microbiology in Singapore. As an Expert / Consultant to the UN/FAO he worked for 23 Governments in Asia, Africa and the Pacific, travelling through 60 countries across the world. His travels and consultancies helped him acquire proficiency in languages such as Sinhalese, English, Japanese and Arabic. His extensive studies on marine ecology related issues of the Sethusamudram project provided support to the Government of India towards speedy implementation. His research publications were carried by reputed journals in Sri Lanka, Australia, Japan and the UK and some of them are available in French, Arabic, Swahili and Japanese. His intense zeal for the Tamil language motivated him to obtain a Masters Degree in Tamil from the University of Madras in 1992.

    Subsequent to the communal disturbances of July 1977, he resigned from the Sri Lanka Scientific Service to join the teaching faculty of the University of Jaffna, to serve for two years. He also established Kaanthalakam, a book publishing house in Jaffna. In 1980 he established Kaanthalakam in Chennai, India.

    He made meaningful international contacts with people and governments in making them aware of the problems faced by the Tamils at home and canvassed support for the suffering Tamils of his native land who are very close to his heart. He has been singularly responsible for inducing the Government of Tamilnadu to grant a sum of Rs. 100 crores for the relief of Sri Lankan refugees living in the refugee camps of Tamilnadu in December 2009.

    Post-retirement from active scientific service, he plays an active role in propagating the cultural heritage of India. His contribution in the proliferation of knowledge towards self-realisation and life sustainability through www.thevaaram.org, the internet site for Panniru Thirumurai is noteworthy. From 2010, he is the coordinator of the project for the Tirumalai Tiruppathi Devasthanam to translate the Panniru Thirumurai from Tamil to Telugu. So far 7,090 songs of the 18,268 hymns have been translated by experts in the field. He is also the coordinator for the project of the Dharmapuaram Adheenam of Mayiladuthurai for translating the Panniru Thirumurai from Tamil to Kannada, Malayalam, Sanskrit, Hindi, Sinhalese and Burmese. His unique efforts are to promote and foster knowledge-sharing among different linguistic groups occupying a common cultural area by rendering centuries old middle age literature hymns of the Tamil language in other languages for reading by more people over a greater geographical space thus broadening the bases of their thought and perspective, less parochial and more universal.

    In recognition of Maravanpulavu Kanapathipillai Sachithanananthan’s individual effort and contributions to industry and society, friendship and harmony, peace, literature, knowledge-sharing and progress and spirituality, Karpagam University is pleased to confer on Maravanpulavu Kanapathipillai Sachithanananthan the Degree of Doctor of Science (Honoris Causa) in the 3rd Convocation on 23rd December 2012 and wishes him many more years of useful service to society.

    Share
  • அகத்தின் ஐந்திணை புறத்தே அரங்கில்..

     

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    நாட்டிய நிகழச்சிக்கு வருமாறு திரு. முரளி மற்றும் திருமதி பிரியா முரளி அழைத்தார்கள். சென்னை, நாரத கான சபாவில் முன்வரிசைகளுள் முக்கியமானவருக்கான இருக்கை ஒன்றை எனக்குத் தந்தார்கள்.

    25.11.2012 மாலை 1645க்கே இருக்கையில் அமர்க, 1700 மணிக்கு நிகழ்ச்சி. இடைவேளை இல்லா இரண்டரை மணிநேரம்.

    1630 மணிக்கே ஆள்வார்பேட்டை, நாரத கான சபா சென்றேன். வண்டி நிறுத்திடம் நிரம்பியிருந்தது. அரங்கமும் நிறைந்துகொண்டிருந்தது. ஏறத்தாழ 2000 பேர் வரை கூடினர். அவர்களுள் பாதிக்குமேல் கலை வல்லுநர்கள்.

    இக்காலத் தொழினுட்பக் கருவிகள் ஆங்காங்கே. அரங்கின் இரு மருங்கும் இரு திரைகளுக்கு இரு ஒளிப்படக்காட்டிகள். வண்ணங்களைச் சிதற, பாய்ச்ச, சுழற்ற எனக் கருவிகள் அரங்கை வளைத்தன. பல்வேறு சூழல்களைக் காட்சியாக்கி அரங்கில் வியப்பு நிறைக்கும் முயற்சி எனத் தோன்றியது.

    இரசோகம் www.rasoham.in வழங்கிய நாட்டிய நாடகம். தலைப்பு ஐந்திணை.

    சங்கத் தமிழ் தந்த சொல், தந்த பொருள், அகத்தின் ஐந்திணை, அன்பின் ஐந்திணை. புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் ஆகிய உரிப்பொருள் காட்டும் ஐந்திணை.

    சங்கத் தமிழ்ச் சொல்லைப் பலமுறை கட்டியமாகக் கூறித் தேன் தமிழுக்குத் தெவிட்டாத சுவையுண்டு எனப் பாடிய நரசிமாமாச்சாரியாரின் கணீர் குரலிசைக்குப் பிரியா முரளியும் மற்றும் நால்வரும் அறிமுக வரவேற்பு நடனத்தில் பரதத்தின் அடவுகள், காத்திரம் மிகாமல் சிறுமருவும் மாத்திரையும் காட்டியன நெகிழாத நெஞ்சையும் நெகிழ்வித்துத் தமிழைப் புகழாதை நாவையும் புகழ்விப்பன.

    செவ்வியல் குன்றாச் செழுமைப் பரத நடன அசைவுகளுள்ளும் குச்சுப்பிடிப் பாங்குடனும் இவ் ஐந்திணைக் கூறுகளைத் தந்தனர் இரசோசம் அமைப்பினர்.

    நறிய நல்லோன் மேனி முறியினும் வாயது முயங்குதற்கும் இனிதே எனப் புணர்தல் (குறுந்தொகை, 62) சேயோன் மேய மைவரை உலகமாகிய மலையும் மலை சார்ந்த குறிஞ்சிக்கு உரிப்பொருள்.

    குறிஞ்சி நில விலங்கு யானையின் பிளிறலைப் பின்னணி இசை தர, பரதத்துள் வெளிக்காட்டிய உடலசைவுகளாயினென், பறவையாகிய மயிலாய் வந்த ஒயிலாளின் அடவுகளாயிலென், குறிஞ்சிக் கடவுள் முருகனாய், அவன் புகழ் பாடும் குன்றுவரான குறவரின் கூத்தாயினென், கண்ணொடு கண் நோக்கிக் காதலுற்ற காளையும் கன்னியுமாயினென், திருச்செங்கோட்டுக் குறவஞ்சியில் குறத்தியாக வந்து அசத்திய ரோஜா கண்ணன் இங்கும் குறத்தியாக வந்து குறிசொன்னவாறெனின், திருமண நிகழ்வின் மதுசூதனின் தவிலாகிலென், புணர்தலைப் பூடகமாகக் காட்டிய பெற்றியாயினென், நாட்டிய வண்ணம் தந்த நவையறு காட்சிகள் நயந்து நயந்து இன்புறுமாறமைந்தன.

    வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும் பொருளே காதலர் (அகநானூறு, 53) கூறும் பிரிதலை உரிப்பொருளாகக் கொண்ட மாயோன் மேய காடுறை உலகமே, காடும் காடு சார்ந்த முல்லை.

    முல்லை நில விலங்கு ஆநிரை. பசுக் கூட்டம் நிரையாக, ஓட்டும் கோவலர் தொகையாக, கவின்மிகு கன்னடத்து வரிகள் துணையாக, காதலியிடம் பிரியாது பிரிந்து விடைபெற நீளும் காதலின் காட்சிகளாக, கோபியரும் கண்ணனும் இடையர் ஆடலாக, நடனத்துடன் பிணைத்து நம்மைக் காட்சிகளுடன் அழைத்து, நம் கண்களை அரங்கோடு கட்டி, உள்ளத்தை ஒடுக்கிப் பிழியுமாறமைந்தன.

    கடற்சிறு காக்கை காமர் பெடையொடு கோடிடுமீன் வழங்கும் (அகநானூறு, 170) ஏங்கி இரங்கலை உரிப்பொருளாக்கிய கடலும் கடல் சார்ந்த மணல்பரப்புமே வருணன் மேய பெருமணலுமாகிய நெய்தல்.

     கடல் அலைகள் பின்னணியாக, பாதங்கள் படகுகளாக, ஏலேலோப் பாடல் இசையாக, மீனவராய், மீன்பிடித்தும், காற்றலையில் தத்தளித்தும் கரைவலை இழுத்தும், நுளைத்தியர் மீன் விற்றும் வரத் தலைவியை நெஞ்சில் நிறைத்த தலைவன் இரங்குமாறு நவில்தொறும் நயக்கும் மென் மலையாளத்தில் மொழிந்து, வண்ண உடலசைவுகளின் செவ்வியல் போக்கும், செம்மாந்த அரங்கமைப்பும் நினைவலைகளில் நினைந்து நினைந்து மீட்டுமாறமைந்தன.

    பனிபடுநாளே பிரிந்தனர் பிரியுநாளும் பலவாகவ்வே (குறுந்தொகை, 104) எனப் பிரிவாற்றமையால் இருத்தலையும் திணை மயங்கலையும் உரிப்பொருளாகக் கொண்ட முறைமையிற் திரிந்து நல்லியல்பு அழிந்தது பாலை.

    சிந்துபைரவியில் தொடங்கித் தேஷ் பண்ணுள் புகுந்து சந்ததமாய் இந்தியினைப் பரதத்துக்கு மொழியாக்கிய பாங்கு, காளிக்கு விழாவெடுத்த காட்சியுடன் மீராவின் மீட்டுவிரல்களைக் காட்டிய பாங்கு, காட்டுக்குள் குதிரை வண்டியாகி, வழிப்பறிக் கயவரின் கம்பத்தின் கொடுமை போக்கி, விரலசைவுகளின் விரைவும் கால்களின் அடிகள் அசைந்த அழகும் தந்த பாங்கு, பார்வையாளர் பலர் எழுந்து நின்று ஆரவாரித்துக் கைதட்டிப் பாராட்டிய பாங்கு யாவும் உள்ளத்தை வயப்படுத்திய உவகைப் பெருக்கெடுப்பில் உடலெங்கும் சிலிர்ப்புற அமைந்தன.

    கணவன் உண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன் தொண்ணுன்முகனே (குறுந்தொகை, 167) என ஊடல் போக்கிய கூடலைக் கருப்பொருளாக்கிய வேந்தனாகிய இந்திரன் மேய தீம்புனல் உலகமே மருதம்.

    ஊடலுடன் காட்சி தொடங்கி, வேளாண் மக்களின் வாழ்வியல் கூறுகளை அரங்கேற்றி, உழவு, விதைப்பு, நீர்ப்பாசனம், அறுவடை, பொலிகாணல், முறங்களால் புடைத்தெடுத்தல் யாவையும் உரிய இசைப் பின்னணியில் சுந்தரத் தெலுங்குப் பண் தொகுப்பில் பிண்டியும் பிணையலுமகிய கை முத்திரைகள் வழி கண் செல்ல, கண்கள் செல்லும் வழி மனம் செல்ல, மனம் செல்லும் வழி உள்ளத்தின் உணர்வு செல்லும் குச்சுப்பிடி உடலசைவுகளையும் காட்டித் தலைவனும் தலைவியும் கூடும் நிலைக்கு அழைத்துச் சென்று இன்பியல் முடிவுடன் ஆடல் அரங்கத்தை நிறைவு செய்தனர்.

    காதல், வீரம், அருள், வியப்பு, சிரிப்பு, அச்சம், வெறுப்பு, சினம், அமைதி ஆகிய ஒண்பான் சுவைகளை வெளிக்கொணருமாறு, சிலப்பதிகாரம் கூறிய நாட்டிய நன்னூல் கற்றனரோ, அரங்க அமைப்பைக் கற்றனரோ, கணிணிக் கால அரங்க நுணுக்கம் கற்றனரோ எனுமாறு பல நூற்றாண்டு கால மரபுகளை, நாட்டிய மரபுகளை, செவ்வியல் தன்மைகளை, இசைப் பராம்பரியத்தை, அரங்க அமைப்புகளை இக்காலத்துடன் இசைத்துத் தந்தனரே இரசோகம் நிறுவனத்தார்.

    ஏறத்தாழ 100 கலைஞர்கள் மேடைக்கு வந்து சென்றனர், இரண்டரை மணி நேர இடைவெளிக்குள். குரு நிலைப் பிரியா முரளி தொடக்கம் அரங்கை ஆட்கொண்ட மதுசூதனன் ஊடாக, தொடக்க நிலைச் சிறார்கள் வரை, அத்தனை கலைஞர்களையும் ஒருங்கிணைத்துச் செய்தி சொல்லும் இடையீடற்ற உடல் அசைவுகளளை மேடையாக்கியவர் கலாச்சேத்திரா தந்த கலைப்பேராசான் நரசிம்மாச்சாரியார், அவர் துணைவியார் வசந்தலட்சுமியார்.  இந்தக் கலை இணையரின் கலைமக்கள் இலாவண்யா, இலசியா. நால்வரையும் சுவைஞர்கள் பாராட்டுவர், வாழ்த்துவர், வணங்குவர்.

    தமிழ் தந்த திணைகள், எல்லைகள் தாண்டி, ஏனைய மொழிகளையும் தமதாக்கி, மனிதத்துக்கு மாண்பமைக்க, பல்மொழிப் பேராசிரியர்கள் கவிஞர்கள் துணைநின்றுளர். அவர்கள் இந்தியா பெற்றெடுத்த பெருமக்கள்.

    ஐந்து அன்பின் திணைகளையும் அள்ளித் தந்தவர்கள் ஐந்து கலை இணையர். வாழ்வில் தம்பதியரான அவர்கள் மேடையிலும் உணர்வுகளின் சங்கமமாயினர்.

    பாட்டிசை, குழல் இசை, யாழ் இசை, மத்தள இசை, கைத்தாள இசையுடன் இக்கால மின்னிசைக் கருவிகளும் கலந்து கொளிக்க, தவில், நாகசுரம் உள்ளிட்டவை காதுகளுக்கு விருந்தாக்கத் துணைநின்றோர் பட்டியலில் இக்கால வல்லுநர் பலர் உளர்.

    ஆண்கள் இத்தனை பேர் பரதம் கற்று வருகிறார்களா என மூக்கின் மேல் விரலை வைத்து வியக்குமாறு இருபதுக்கும் கூடுதலான ஆண்கள் பரதமும் குச்சுப்பிடியும் கைவரலாயினர், சுவைப்போரைத் திகைப்பில் ஆழ்த்தித் திகட்டினர்.

    கைவலோர் என்பார் சேக்கிழார். நூற்றுக்கும் கூடுதலான கலைஞர்களின் முகங்கள் பளிச்சிடக் கைவலோர், உடைகள் பொருந்திடத் தையலோர் என முக ஒப்பனை, உடை, அணி அலங்காரம், மேடை அமைப்புப் போன்ற பல்வேறு துறைகளிலும் நூற்றுக்கும் கூடுதலான கைவினைஞர், பொறிஞர், ஒலி ஒளி நுட்பினர், படப்பிடிப்பாளர் பணியாற்றி ஐந்திணையை அரங்கேற்றினர்.

    இந்தியாவுக்கு நவீன முகம் கொடுக்கும் ஐந்திணை. உலகெங்கும் இந்திய அரசு எடுத்துச் சென்று இதுவே இந்தியக் கலைமுகம் என்னுமாறு காட்டும் வகையது ஐந்திணை.

    செந்தமிழ்த் தேனைச் சொரிந்து, கவின் கன்னடத் தீம்பாலை ஊற்றி, கங்கைப்புலத்தின் குங்குமப்பூப் பிசைந்து, களி தெலுங்கின் கன்னலைக் கலக்கி, மலையாளத்தின் நேந்திரம் பழத்தைக் குழைத்துத் தந்தால் வரும் சுவையோ! குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை, மருதம் எனப் புணர்தல், பிரிதல், இரங்கல், இருத்தல், ஊடல் திணைகளை ஆடலாகத் தொகுத்தோர் தந்த சுவையோ!

    இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு அழைத்த முரளி இணையருக்கு நன்றி கூறுகிறேன்.  

    Share
  • பேரா. ம. ரா. ப. குருசாமி காலமானார்

     

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    பேரா. ம. ரா. ப. குருசாமி அவர்கள் நேற்று 06.10.2012 கோயம்புத்தூரில் காலமானார் என்ற செய்தியால் உலுங்கினேன்.

    1963இல் கலைக்கதிர் இதழுக்கு அறிவியல் கட்டுரைகளை நான் எழுதிய காலங்களில் பேராசிரியர் ம.ரா.போ.குருசாமி அவர்கள் பதிப்பாசிரியராக இருந்து என்னை ஊக்குவித்தாராயினும் நேரில் காணும் வாய்ப்புப் பெற்றிலேன்.

    கோவைக் கம்பன் கழகம் பதிப்பித்த கம்பராமாயணம் தொகுதியை அச்சிடல் தயாரிக்கும் பணியை என்னிடம் தந்தனர். அப்பணி தொடங்கிய காலத்தில் பேரா. அ. ச. ஞா. அறிமுகம் செய்ய 1987இல் பேராசிரியர் ம.ரா.போ.குருசாமி அவர்களின் அன்புக்கு உரியவனானேன்.
     
    சென்னைக்கு வருவார். பேரா. அ. ச. ஞா. இல்லத்தில் சந்திப்பேன். என்னிடம் வண்டி இருந்த காலங்களில் சென்னைத் தொடர்வண்டி நிலையத்திலிருந்து அழைத்துவரும் பேறும் பெற்றிருக்கிறேன்.  

    1991-1993 ஆண்டுகளில் என் ஆண் மக்கள் கோவையில் கற்ற காலங்களில் அவரின் பாதுகாப்பு அவர்களுக்குக் கிடைத்தது.

    அவரின் தாமு நகர் இல்லத்துக்குப் பலமுறை போயிருக்கிறேன்.

    அந்தணர், அறவோர், செந்தண்மை பூண்டவர், செயல்வீரர் என்ற தகைமைகளைத் தேடுகையில் என் கண்முன் தோன்றுபவர்களுள் பேராசிரியர் ம.ரா.போ.குருசாமி அவர்களும் ஒருவர்.

    தன்மானம் மிக்கவர். புலமைக்கு மதிப்பளித்தவர். எவரையும் செல்வந்தர் என்றோ, அரசியல்வாதி என்றோ, அதிகாரி என்றோ கருதி அளவுக்கு அதிகமாகப் பணிவுகாட்டார். அதில் அவருக்கும் பேரா. அ. ச. ஞா.வுக்கும் ஒற்றுமை அதிகம்.

    என் மீது அளவற்ற பாசம் கொண்டிருந்தார். அவர் சொற்களுக்கு அச்சுப் பதிப்புச் செயல்வடிவம் தரும் ஆற்றல் எனக்குண்டு எனக் கருதியவர்.

    1990களில் நான் அச்சிடத் தயாரித்த முருகன் பாடல் தொகுதி முழுவதையும் 2011இல் என்னிடம் கேட்டார், என்னிடம் இருந்த படிகளைக் கொடுத்தேன். கௌமார மடத்தாரிடம் சேர்த்தார்.

    முருகன் பாடல் தொகுதி முழுவதையும் மீள அச்சிடவேண்டும் என்ற ஆர்வத்தை அருட்செல்வர் நா. மகாலிங்கத்துக்குப் பேரா. ம. ரா. பொ. குருசாமி அவர்கள் ஊட்டியதால் அந்தப் பணி இப்பொழுது முடுக்கிவிடப்பட்டுள்ளது.

    அவரது அண்ணர் திரு. ம. ரா. போ. பாலகணபதி அவர்களைப் பிஜி நாட்டில் 1971இல் சந்தித்தேன். அப்பொழுது அவர் அங்குள்ள விவேகானந்த தமிழ்ப் பள்ளியின் தலைமை ஆசிரியர். ஓய்வுக் காலத்தில் நியுசீலாந்தில் வாழ்ந்தார். ஒருமுறை சென்னை வந்தார். கந்தரனுபூதி ஆங்கில மொழிபெயர்ப்பைப் பதிப்பிக்குமாறு என்னிடம் கேட்டார். பதிப்பித்தேன்.

    2012 ஆனியில் பன்னிரு திருமுறைச் சொல்லடைவு தொடர்பாக அருட்செலவர் நா. மகாலிங்கம் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, பேராசிரியர் ம.ரா.போ.குருசாமி அவர்களின் வழிகாட்டலில் பேராசிரியர் பலருடன், கணிணி வல்லுநர் பலருடன், புலவர் மணியன் அவர்களுடன் மூன்று நாள்கள் கோவையில் தங்கிக் கலந்துரையாடினேன்.

    1963 தொடக்கம் 2012 வரை ஏதோ ஒரு வழியில் தொடர்பாக இருந்தோம். தமிழ் அமைத்த பாலத்தால் இணைந்திருந்தோம்.

    2012 ஆனியில் தாமு நகரில் அவர் இல்லம் சென்றிருந்தபொழுது பழுத்த பழமாக இருந்தார்.
    அவர் நூல்களுக்கு நான் கூறும் கருத்துரைகளால் ஈர்க்கப்பட்டவர்.

    காலனுக்கு ஏனிந்த அவசரம்?
    தமிழ் மொழிக்கு ஏனிந்த அவலம்?
    தமிழறிஞர் குழாமுக்கு ஏனிந்த இழப்பு?
    அறவோர் அணிக்கு ஏனிந்தக் குறைவு?
    அரற்றுவேனாயினேனுக்கு ஏனிந்த அழுகை?

    Share