Tag: கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

  • மழை!

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    வற்றிக் கிடக்கும்  வறண்ட பூமியைத்
    தொட்டுத் தழுவும் –
    உனது   தூய  கரங்களுக்குத்தான்  எத்தனை குளிர்ச்சி!

    இரவென்ன  பகலென்ன
    வானம்  கருக்  கொண்டால்…,
    பூமி  மகிழ்கிறது!

    நீ
    இல்லாத நாட்களில்                                        rain-fall
    பொல்லாத புழுக்கம்
    இருக்கின்ற நாட்களில்
    இப் புவியே வழுக்கும்!

    நீ வருகை தருங் காலத்தில்
    வெள்ளம் பாய்ந்தோடும்
    உனது
    விபரீதப் போக்கினால்
    கண்ணீர்  வெள்ளமும்  பாய்ந்தோடும்…!

    நதிக்கரைகளில்  அலையடிக்கும்
    கடற்கரைகளில்
    வெண்நுரைப்  பூக்கள்
    விரிகின்ற  மாரிக்காலம்,
    உன்னைச் சுமந்த மேகங்களின்
    ஊர்கோலம்!

    கண்ணுக்குக் குளிர்ச்சி தரும்
    இந்த –
    மண்ணுக்கே மகிழ்ச்சி  வரும்

    மீனோட…
    நாரைகள் தவமிருக்கும்
    ஏரோடாத கழனிகளில்
    ஏரோட…எங்கும்
    பைங்கூழ் விளைந்திருக்கும்!

    வறுமைத் தளையறுக்கும்
    வல்லமை  உன்னுடையது!
    நீ இல்லையேல்
    எந்த  மண்தான் பொன்னுடையது?

    கொட்டும் …இடிமின்னல் …காற்று…
    ”கூஹ் கூஹ்”வென்று
    குரலை யெழுப்ப
    முட்டும் மரக்கிளைகள்
    மோதிச்  சலசலக்க…
    கார்கால மேகங்கள்
    தாவிச் செல்லும்
    பல்லாக்கிலே –
    நீ வீற்றிருந்து
    விஜயஞ்  செய்கின்றாய்!

    சாகரங்களைச்
    சல்லாப புரியாக மாற்றும்
    சக்தி உன்னுடையது!

    நீ கொடைவள்ளல் –
    அள்ளிக் கொடுக்கும் போதுதான்
    இடையூறு  அதிகம்!

     

     

    Share
  • ஊர் உலகம்

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

    சோற்றுப் பீங்கானைக் கையில் எடுக்க
    பூனைக் குடும்பம், காக்கைக் குடும்பம்கப்பெரிய கூட்டமாய்
    அவர்களின் பார்வைகள் –
    என் வாயினைத் திறக்க விடாது தடுத்தன!

    கற்பனையில் ஒரு கவிதை தொடர
    ஊர் உலகம், வாழ்வு தாழ்வு,
    உள்ளத்து உணர்வுகள்
    சோதனைகள் வேதனைகள்
    இத்தியாதி இத்தியாதி
    இதயத்தை முட்கம்பிகளாய்க் கிழித்தன.

    ஆனால்
    அந்த
    மூச்சும், சுவாசமும்
    அன்பும் நட்பும்
    நினைவுகளும் நிஜங்களும்
    அப்படியே இன்றும்
    ஒரு
    துளிகூடக் குறையாமல்
    எனக்குள் நிறைவாக ஊற்றெடுக்கின்றது!

     

    Share
  • திருமண (நாள்) வாழ்த்து!

      என் தோழி பவள சங்கரி திருநாவுக்கரசுக்கு

     DSCN0926காலைச் சுடரொளி கண்களில் படர

    மாலை வான் நிறம் வாங்கிய வதனம் 

    முளரி அரும்புகள் முகிழ்த்த விழிகளில்
    ஒளிரும் புதிய உணர்வுகள் பூத்து
    வாழ்விலோர் திருநாள் கண்ட
    மகிழ்ச்சியில் மனந்தான் பூத்து
    செந்திரு போல் விளங்கும்
    செந்தமிழ் (பவள சங்கரி ) பெண்மை
    மாண்புறும் பெருநாள் உந்தன்
    மணநாளின் நினைவு நாளில்
    (கலைமகள் ஹிதாயாவின் வாழ்தலையை )
    வானத்தின் மழைத்தூ வலாய்
    குளிர்தமிழ்க் கவிதை யாலே
    பெய்திட வந்தேன் வளம்
    பெருக நும் வாழ்வின் வயல்

    வாழ்க்கைத் துணையை வரித்து இன்றென்
    நோக்கினில் உயர்ந்த பாச தோழியே பவள சங்கரி
    தீக்குள் கிடப்பினும் சுடர்விடும் பொன்போல்
    வாழ்கையில் என்றும் மாசின்றி வாழ்க…!!

    மாசணு காத மனத்துள் வாய்மை
    தேசு படர தெளிந்த நீ ரோடையின்
    ஓசையைப் போலும் உண்மையின் நாதம்
    ஆசு கவியாய் அகத்தினில் பொங்கி
    வீசும் தென்றலில் மேதினி பரவ…..!!!

    அண்ணன் (திருநாவுக்கரசு) கருணை மனத்தால்
    (இறைவன் வரமாய் ) தந்த மருமகள்
    இதயத்தை மனைவியின் இருப்பிட மாக்கிய
    (பவள சங்கரி) இன்றுன் வாழ்வின் மண நாளை நினைத்து
    எதிர் வரும் காலம் யாவிலும் துணையாய்,
    பிரிக்க இயலா பிணைப்பாய்,இறைவன்
    பேரரு ளாலே பிணைத்த வாழ்க்கைத்
    தலைவன் திருநாவுக்கரடசோடு சார்ந்து இல்லற
    வாழ்வின் தலைவியாய் வரும் வரும் நாளெலாம்
    வாழ்வாய் உனக்கென வரையிலா வாழ்த்துக்கள்…

    “இல்லறப் பூங்கா எழிலுறும் வண்ணம்
    எழிலாய் அமைந்த தோழி பவள சங்கரி அதன்
    சில் லெனும் நீரே,நீரில் மலர்ந்த
    செவ்வர விந்த மலரே,மலரின்
    உள்ளிருந் துளத்தின் உணர்விற் கலந்த
    உணர்வே,சுகந்த மணமே,கரும்பின்
    வெல்லப் பாகே,பாகுடைச் சுவையே…!
    மேலாம் நிதியே! என்றெலாம் போற்றும் …

    சங்க காலத் தமிழிலக் கியத்தின்
    மங்கா கவிதையின் சுவை நயம் நிறைக…!
    போதலர் தாமரைப் பொய்கையி லூறும்
    சீதள மிகும் இன் சுவை நீர் போலும்
    தீ திலா நெஞ்சில் சுரந்திடும் அன்பு நீர்க்
    வாழ்க்கையில் இருவர் கலந்தொரு மித்து,

    பொய்ப்பட பேசும் புவியின் கயமைகள்
    மெய்ப்படும் வாய்மை மேவிடும் வாழ்வினால்
    பொய்ப்பட ஆக புனித இல்லறத்தின்
    மெய்ப்பொருள் தேர்ந்து விரிகதிர் சுடர்களாய்

    கோபுரம் போலு யர்ந்த
    கொள்கையும்,அகன்ற வான் போல்
    ஆதுரம் மிகு குணமும்
    ஆழி போல் அழ்ந்த (அ)றிவும்
    சீருற பெற்று வாழ
    திகழ் பரம் பொருளாம் வல்ல
    இறைவனின் நெறிகள் பேணி
    சுகம் பெற வாழ்த்துகின்றேன்….!

    “மனைத்தக்க மாண்புடைய ளாகித் தற் கொண்டான்
    வளத்தக்காள் வாழ்க்கைத் துணை…”

    “பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பெனும்
    திண்மையுண்டாகப் பெறின் “என வள்ளுவன்
    தீட்டிய குறளோ வியம் போல் வீட்டில்
    ஏற்றிய தீபம் போல் இருள் கடிந் தொளிர்வாய்..,.!

    பெண்ணின் பெருமையெலாம்
    பேசும் திருக்குறளின்
    நுண்ணரிய கருத்தெல்லாம்
    நுணுகிச் சுவைத்து நலம்
    பண்ணி ஆயிரங் காலப்
    பயிராய் தலைத்திடுவீர்…!

    குழலினில் யாழினில் எழுந்திடும் இசையிலும்
    கோடி இன்பம் கூட்டும் மழலை
    மொழிகளின் இனிமையும்
    செவிகளின் நிறைய….!
    உள்ளங்கள் ஒன்றாய் உணர்வுகள் ஒன்றாய்
    இன்பமும் துன்பமும் ஒருவருக் கன்றி
    இருவர்க் காம் எனும் இயல்பின ராகி….

    நீரோடு கயல்பிரி யாதது போல்
    நிலவொடுஒளிபிரி யாதது போல்
    காரோடு குளிர்பிரி யாதது போல்
    கடலிடை அலைபிரி யாதது போல்

    நூலோடு நயமும் நுதலொடு திலகமும்
    தாளோடு எழுத்தும் தமிழிடை இனிமையும்
    பாலோடு வெண்மையும் பழமொடு சுவையும்
    பூவோடு மணந்தான் பொருந்திய வாறாய்
    என்றும் – தொடந்து வாழ்க !

    “செந்தமிழ் கவிதையாய்
    சிறப்புடன் வாழ வாழ்தும் உங்களன்புத் தோழி

    கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை

    Share
  • வல்லமைக்கு வயது- 06

     

    வெறும் புகழ்ச்சி அல்லஉண்மை !

    Vallamai_6th_year_300x1251

    வல்லமை யெனும் தேனமுதச்
    செந்தமிழின் –
    சுவையெல்லாம் உய்த்துணர்ந்தேன் !
    சிந்தையெலாம் நிறைந்த
    ஒரு –
    சுகானந்த அனுபவத்தில் திளைத்தேன் !
    களித்தேன் !!

    வல்லமை
    வெண்மையும்
    பசுமையும்
    மெலெழில் பூத்து ,
    இன்றைய தேவையில் –
    வாழ்வில்
    பசுமையும்
    சமாதானமும்
    அமைதியும்
    உணர்த்துவதாக இருகின்றது !

    வல்லமை
    கலை உள்ளங்களின்
    வாழ்வில் –
    செழுமை சேர்த்திருக்கின்றது !

    நல்ல முயற்சி
    பவள சங்கரி திருநாவுக்கரசு,
    அண்ணா கண்ணன்,
    தேமொழி,

    மேகலா இராமமூர்த்தி,,

    அமைதிச் சாரல் (சாந்தி மாரியப்பன்),

    தி. சின்னராஜ்,

    மதுமிதா,

    இன்னம்பூரான்,

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்,

    விஜய திருவேங்கடம்,

    விசாகப்பட்டினம் வெ. திவாகர்,

    ஆமாச்சு (எ) ஶ்ரீராமதாஸ்,

    ஸ்ரீநிவாசன்,
    காமேஷ்,

    செல்வ முரளி,

    முனைவர் நாகபூஷணம்,

    ஆகியோர் துணிவில் மலர்ந்த தூய பணி !
    வல்லமையைப் பார்க்கும் போது
    படிக்கும் போது –
    அதற்கு எழுதும் போது
    நினைக்கும் போது
    நிறைவுகளே நெஞ்சில் நிறைகின்றன !
    வல்லமைத் தளத்தில் நின்று பார்த்து
    சளித்து களைத்தது போதும் !
    இக் குளிர் நீர் பொய்கையில்
    இறங்கி சுவை நீர் பருகி
    சிறிது விடாய் ஆற்றிக் கொள்ள விழைகிறேன் !

    வல்லமை
    கவிப்பூக்களை
    தன் சிற்றலைக் கரங்களால் ஏந்தி
    இசைபாட காலாயிருந்த
    நேசவுள்ளங்களின் துடிப்பு !

    வல்லமை
    இந்திய மண்ணில் ஊற்றெடுத்து
    குதித்தோடி உலகமெங்கும் ஓடிவரும் நதி !
    வயலில் பாய்ந்து
    வளர்த்திடும் செந் நெல் போல ,
    தூய சிந்தையில் ஊறி வரும்
    களம் நீர் தான்
    வளர்க்கும்எங்கள் கலைப் பயிரை !

    வளர் சுடர் போலொளி வீசும்
    வல்லமை –
    அறிவிலும் சிறந்த
    நல் இதயப் பேழை!
    தன்னகம் கொண்ட தமிழ் தளம்
    வல்லமைக்கென் பைந்தமிழ் வாழ்த்து !

    கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை

    Share
  • என்வீட்டுப் பூனை!

    கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    ஒரு பூனை
    அடுப்படிச் சாம்பலில்குட்டி போட்டுக்
    கதறித் துடிப்பதாகக்
    கனவு கண்டு
    நித்திரையினைத் தொலைத்தேன்
    நிம்மைதியினை  இழந்தேன்…!

    காக்கா கோழிகளின்
    சங்கீத ராகம்
    என் காதுகளைக் குடையவே
    முற்றத்துப் பக்கம் பாதங்கள்
    கோலம் வரைந்தன
    கண்கள் நிஜங்களைத்
    தேடி அழைந்தன …!

    என் ராக் கனவுகள் –
    என்னை
    ஏமாற்ற வில்லை
    துரோகமிழைக்கவுமில்லை…!
    சில முக நூல் உறவுகளைப் போல்
    மன சந்தோஷத்தால்
    என் இதய மலர்
    சிரித்துக் கொட்டியது
    அழகான குட்டிகளின்
    பிறப்பினைக் கண்டு
    வருகையைக்  கண்டு…!

    நீண்ட தொல்லைகளுக்குப்
    பின் இன்றுதான்
    என் சுவாச மூச்சுக்கு
    மன நிம்மதி கிடைத்தது !

    இரவு நேர இருளில்
    அந்த உடுப்புப் பெட்டிக்குள்
    எலிகளின் அட்டகாசமா…?
    அல்லது
    விளையாட்டு பொம்மைககளின்
    குரலோசைகளா…?
    அல்லது
    உணர்வுகளின் சப்தங்களா…?

    உன் சுவாசம்பட்ட
    வீட்டுச் சந்துபொந்துகள்
    மூலை முடுக்குக்குகள்
    சூரியனைக் கண்ட பனிபோல
    மாறத் தொடங்கியுள்ளன

    உடம்பினைப் போர்த்திய
    துண்டினைப் பார்த்து
    உன் இதயம் –
    அழுது வடிவதேன்..?

    அதனால்தான் போலும்
    உன் உள்ளத்துக் கதவுகளை
    அடிக்கடி மூடித்
    திறந்து எனக்குள்
    உண்ணாவிரதம்செய்தனவோ?
    ஹர்த்தால் ஆர்ப்பாட்டம் புரிந்தனவோ ?

    என் ஜீவன் –
    எலி, பல்லி, கரப்பத்தான்
    நுலும்பு கொசு, எறும்பு
    எதுவுமே அற்ற
    படுக்கையில் மனநிம்மதி நாடி
    உறங்க அழைந்தேன்!

    உன் குட்டிகளைக் கண்ட
    சின்ன எலிகளெல்லாம்
    உன்னைப் போலவே
    மரம் விட்டு மரம் தாவும்
    மந்திகளைப் போலவே
    இடம்மாறித் தடம் மாறிப்போயின
    நிலை மாறி..!

    சில கனவுகள் பலிக்கும்
    நினைவுகள் நிறைவேறும்
    என்ற நம்பிக்கைகள்
    எனக்குள் வாழ்கின்றன
    என் எதிர்பார்ப்புகளின்  இலட்சியங்களில்
    ஆரம்பமாகும்
    திசைகாட்டும் கப்பலைப்போல்
    என் வீட்டுப் பூனைகளும் …!

     

    Share
  • என்னை விட்டுப்பிரிந்த தந்தையின் நினைவாக…

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

    எந்தையே எம்முயிரே
    எங்கு நீ சென்றாயோ ?
    சிந்தை நாம் கவல்கின்றோம்
    சோர்வுற்று வாழ்கின்றோம்
    உந்தன் பிரிவாலின்று
    உறு துணை இழந்துநாம்
    வெந்தழலில் புழுவாக
    வேதனையால் துடிக்கின்றோம்!

    மந்த மாருதமாய் நீயே
    மகிழ்வித்தாய் எங்களையே
    சந்தனத் தோப்பாக
    செழிப்புறயெம் வாழ்க்கையும்
    பந்தபாசம் பாசறையில்
    பயில்வித்தாய் எங்களைநீ
    விந்தைமிகு அன்பிற்கே
    வரைவிலக்கணம் ஆனாய்நீ!

    சாய்ந்தமரு தெம்பதியில்
    சகலருமே எப்பொழுதும்
    தூய்மையுறும் உன்னன்பைத்
    துளியேனும் தயக்கமின்றி
    நேயமுடன் மதித்துனது
    நேர்மைநல் லாற்றலோடு
    வாய்மையரும் பண்புகளை
    வாழ்த்திநிதம் மகிழ்ந்தனரே!

    மருத்துவத்தால் பல்லாயிரம்
    மக்களது நோய்தீர்த்த
    அருந்தந்தையே உம் பிரிவால்
    ஆறாகுமெம் வேதனைக்கு
    அருமருந்து இனிநாங்கள்
    ஆரிடம்தான் பெற்றிடலாம்?
    கருணையிறை அருளொன்றே
    கைகொடுக்கும்; ஆறுகிறோம்!

    சன்மார்க்க நெறிபேணிச்
    சாந்தமுடன் நீ வாழ்ந்தாய்
    உன்சேவை மனப்பான்மை
    உள்ளொன்று புறமொன்று
    முன்னொன்று பின்னொன்று
    மிழற்றுகிற பழக்கமின்றி
    நன்னெறிகள் பேணி நிதம்
    நலம்பெறவே வாழ்ந்தாய்நீ!

    சேர்பகையே வந்தாலும்
    சத்தியத்தில் தவறாது
    நேர்மையே நல் கிடவே
    நடத்திடுவாய் என்றென்றும்
    ஓர்மையிறை எண்ணமே
    உன்துணையாம் என்றேநீ
    கூறிய அறி வுரைகளின்னும்
    காதுகளில் ஒலிக்கிறதே!

    அரும்சுவர்க்கத் தலைவாசல்
    அதைவிடவும் அருந்தந்தை
    பெருந்தகுதி உயர்வாமே
    பெருமானார் பொன்மொழியைக்
    கருத்தில்நாம் ஆழமாய்க்
    கொண்டழகாய்  உன்பெயரைத்
    துருப்பிடிக்கா தென்றுமே
    தூய்மையுறக் காத்திடுவோம்!

    கலைமகளாய் நானென்றும்
    கவின்இஸ்லாம் வழியினிலே
    கலைஇலக்கியப் பணிகளையே
    கட்டுப்பாடு ஒழுக்கமுடன்
    நிலையாகத் தொடர்ந்தாற்ற
    நெஞ்சுறுதி தந்தநீயே
    நிலைகலங்க எமைவிட்டே
    நீத்தாயே இவ்வுலகை!

    என்னெழுது கோலுனது
    ஆத்மாவின் சாந்திக்காய்க்
    கண்ணீரை மையாக்கிக்
    கரைபுரளும் பாசத்தைப்
    பொன்னரிய எழுத்தாக்கிப்
    பிரார்த்தனை மாலையாய்
    இன்றிங்கே தொடுகிறதே
    இறையருள்கவே ஆமின்!

     

    Share
  • ஒரு எழுத்தாளர் பன்னூலாசிரியர் காலமானார்

    ஒரு எழுத்தாளரும், பன்னூலாசிரியரும், கல்விமானும், ஆய்வாளருமானஅல் -ஹாஜ் எஸ்.எச். முஹம்மது ஜெமீல்காலமானார்

    இவர் சாகுல் ஹமீத், முக்குலத் உம்மா தம்பதியினரின் புதல்வர்

    அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது எனும் ஊரில் 1940ம் ஆண்டு ஒக்டோபர் 18ந்திகதி பிறந்தார்.

    புகழ் பெற்ற குடும்பத்தில் சித்தி ஆரிபாவை திருமணம் செய்து கொண்டார்
    இத்தம்பதியினருக்கு ஒரே ஒரு மகன் முஹம்மது நசீல்.
    தனது ஆரம்பக் கல்வியைஆங்கில மொழி மூலம் காரைதீவு இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயம்,
    கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரி,
    கொழும்பு சாஹிரா கல்லூரி ஆகியவற்றில் கற்றார்

    பின்பு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பாடத்தில் சிறப்புப் பட்டமும்,

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்கல்வித் துறை முதுமாணிப் பட்டமும்

    அத்துடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வித்துறை டிப்ளோமா பட்டமும்,

    ஐக்கிய இராச்சியத்தின் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் கல்வித்துறை சார் பயிற்சியையும், பல்கலைக்கழக நிர்வாகம் தொடர்பான கல்வியையும் பெற்றுக் கொண்டார்.

    பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் போதனாசிரியராகவும்,

    ‘அருணாசலம் ஹோல்’ உதவி விடுதிக் காப்பாளராகவும் பணியாற்றியா இவர்

    கல்லூரி ஆசிரியராக,
    அதிபராக,
    ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி அதிபராக,
    வட்டாரக் கல்வி அதிகாரியாக,
    பிரதம கல்வி அதிகாரியாக,
    பரீட்சைத் திணைக்கள உதவி ஆணையாளராக,
    மட்டக்களப்புகிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பதிவாளராக,
    முஸ்லிம் சமய, கலாசார அமைச்சின் செயலாளராக,
    கல்வி, கலாசார விவகாரங்கள் அமைச்சின் மேலதிக செயலாளராக,
    கலாசார, சமய விவகார அமைச்சின் ஆலோசகராக…
    . இப்படிப் பல்வேறு உயர் பதவிகளை வகித்துத்து ஓய்வுபெற்றார்

    ‘எனது ஊர்’ எனும் தலைப்பில் ‘தினகரன் ஞாயிறு பாலர் கழகப் பகுதியில்’ 1949 இல் தனது முதலாவது ஆக்கம் மூலம் கலை உலகில் பாதம் பதித்தார் .

    இலக்கியம்,

    வரலாறு,

    கல்வி,

    நாட்டுப்புறப் பண்பாட்டியல் எனும் துறைகளிலான ஆய்வு முயற்சிகள் வலுப்பெற்று இறுதி வரை 25 நூல்களை எழுதியுள்ளார்.

    சுமார் 110 ஆய்வுக் கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன.

    50 நூல்களுக்கான பதிப்புரை, மதிப்புரை, சிறப்புரை வழங்கி உள்ளார்

    வானொலியில் (பிறநாடுகளுட்பட) 130 பேச்சுக்கள்,

    கலந்துரையாடல்கள், நிகழ்ச்சிகள் என்பவற்றிலும்,

    தொலைக்காட்சியில் 10 நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

    தினகரன், வீரகேசரி, தினபதி, சிந்தாமணி, நவமணி, தினக்குரல், மணிக்குரல், அல்இஸ்லாம், ஸாஹிரா, மித்திரன், அல் அரப், வளர்மதி, டெயிலிநியூஸ், ஒப்சேவர், எக்கோனோமிக்ஸ் டைம்ஸ் ஆகிய பத்திரிகை, சஞ்சிகைகளிலும் அவ்வப்போது வெளியிடப்படும் விசேட மலர்களிலும் இவரது கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

    கல்முனை ஸாஹிரா கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய காலத்தில் அக்கல்லூரி பல புதிய இலக்கிய முயற்சிகளை மேற்கொண்டார்

    மாணவர்களின் எழுத்தாற்றலை வளர்ப்பதற்காக 1976 இல் ஆரம்பிக்கப்பட்ட ‘ஸாஹிரா’ மாதாந்தப் பத்திரிகை பல ஆண்டுகள் வெளிவந்து,

    இன்றுவரை இடைக்கிடையே வந்து கொண்டிருக்கிறது.

    1983இல் இவரது ஆலோசனையில் ஆரம்பிக்கப்பட்ட ‘இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகத்தால்’ 1986இல் வெளியிடப்பட்ட ‘எழுவான் கதிர்கள்’முக்கியதொரு தொகுப்பாகும்.

    இதில் அன்று எழுதிய கவிஞர்கள் இன்று பெரும் புகழும் பெற்று வாழ்கின்றார்கள்

    அதில் என் கவிதையும் இடம் பெற்று உள்ளது

    1990களில் கிழக்கிலேற்பட்ட வன்முறைச் சூழலானது பணியகத்தின் சேவைகளை முடக்கிவிட்டது.

    இருந்தபோதிலும் 2000ம் ஆண்டுவரை 21நூல்களை அது வெளியிட்டுள்ளமை கவனத்திற் கொள்ளத்தக்கதாகும்.

    முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளராகவும் ,ஆலோசகராகவும் கடமையாற்றிய 11 வருட காலத்தில் இவ்வமைச்சு பெருந்தொகையான நூல்களையும், மலர்களையும் வெளியிட்டதிலும் பலரது நூல்களைப் பதிப்பித்ததிலும் எழுத்தாளர் மற்றும் கலைஞர் ஊக்குவிப்பிலும் பெரும் பங்கு வகித்தார்.

    இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றினை ஆய்வுசெய்து, ஆவணப்படுத்தி, மாவட்டரீதியான நூல்களை வெளியிட்டார்

    இவ்வாறு களுத்துறை, அனுராதபுரம், கண்டி, மாத்தளை,மாத்தறை, அம்பாறை, கம்பஹா, புத்தளம் ஆகிய மாவட்ட வரலாற்று நூல்கள், 1992-2000 ஆண்டு காலப் பகுதியில் வெளிவந்தது .இதற்காகப் பல அறிஞர்களின் உதவிகளை பெற்றுக் கொண்டார்

    எ.எம்.எ.அஸீஸ் அவர்களின் கல்விச் சிந்தனைகளும், பங்களிப்பும் (1980)
    சேர். ராஸிக் பரீத் அவர்களின் கல்விப்பணி (1984)
    சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் வரலாறு (1989)
    கல்விச் சிந்தனைகள் (1990)
    நினைவில் நால்வர் (1993)
    கலாநிதி ஜாயாவின் கல்விப் பணிகள் (1994)
    சுவடி ஆற்றுப்படை – முதலாம் பாகம் (1994)
    சுவடி ஆற்றுப்படை – இரண்டாம் பாகம் (1995)
    கிராமத்து இதயம் – நாட்டார் பாடல்கள் (1995)
    இஸ்லாமியக் கல்வி (1996)
    கல்விச் சிந்தனைகள் – இரண்டாம் பதிப்பு (1996)
    சுவடி ஆற்றுப்படை – மூன்றாம் பாகம் (1997)
    கலாநிதி பதியுத்தீன் மஹ்மூதின் கல்விப் பணிகள் (1997)
    காலச் சுவடுகள் (1998)
    நமது முதுசம் (2000)
    சுவடி ஆற்றுப்படை – நான்காம் பாகம் (2001)
    ஆகியவை மர்ஹும் எஸ்.எச்.எம்.ஜெமீல்அவர்களது நூல்களாகும்

    பொது நிதியியல் (1966)
    துவான் புர்ஹானுத்தீன் ஜாயா (1990)
    அனுராதபுர மாவட்ட முஸ்லிம்கள் (1992)
    அல்லாமா எம்.எம். உவைஸ் (1994)
    அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் (1997)
    கம்பஹா மாவட்ட முஸ்லிம்கள் (1998)
    Islam in Independent Sri Lanka (1998)
    Sri Lanka Udana (1998)
    புத்தளம் மாவட்ட முஸ்லிம்கள் (1999)
    ஆகியவை அவரால் தொகுப்பட்ட பதிப்புக்களாகும்

    இவர் தடவிப் பார்த்த விருதுகள் பல அவற்றில் சில இவை
    இலக்கிய ஆய்வுக்கான சாகித்திய மண்டல விருது (1995)
    வடக்கு-கிழக்கு மாகாணசபை – இலக்கியப் பரிசு (1995)
    ஈராக்கில், பக்தாத் நகரில் அரபு நாடுகளின் ஆசிரியர் சம்மேளனம் கேடயம் வழங்கிக் கௌரவித்தமை (1980)
    இந்தியாவில் நடைபெற்ற 6-வது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழக மாநாட்டில் ‘தமிழ்மாமணி’ பட்டம் வழங்கிக் கௌரவித்தமை (1998)
    திருச்சி (இந்தியா) M.I.E.T. கல்லூரியில் பொன்னாடை போர்த்தியும், ஞாபகச் சின்னம் வழங்கியும் கௌரவித்தமை (1995)
    மலேசியா, கோலாலம்பூரில் இயங்கும் கவிதாமாலை இயக்கம் ‘தமிழ் அருவி| பட்டம் வழங்கிக் கௌரவித்தமை (1999)
    அட்டாளைச்சேனை தேசியமீலாத் விழாவின் போது ‘நஜ்முல் உலூம்’ பட்டம் வழங்கிக் கௌரவித்தமை (1997)
    ‘சாமஸ்ரீ’ விருது (1999)
    சிந்தனைவட்டம், மலையக கலை கலாசார ஒன்றியம் இணைந்து கண்டியில் ‘இரத்தினதீப’ விருது வழங்கிக் கௌரவித்தமை (2000)
    கொழும்பு தமிழ்ச்சங்கத்தினால் கேடயம் வழங்கி, பொன்னாடை போர்த்திக் கௌரவித்தமை (1999)
    அம்பாறை மாவட்டக் கரையோர ஊடகவியலாளர் சங்கத்தினால் பொன்னாடை போர்த்தி, கேடயம் வழங்கிக் கௌரவித்தமை (2000)
    ப்ரிய நிலா கலை, இலக்கிய சங்கத்தினால் பொன்னாடை போர்த்தி, கேடயம் வழங்கிக் கௌரவித்தமை (2001)
    அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் கௌரவம் (1998)
    கொழும்பில் நடைபெற்ற உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டுக் கௌரவம் (2002)

    20 ஆம் நூற்றாண்டின் பின் அரைக்காலப்பகுதியில்மேற்கிளம்பிய இஸ்லாமியத் தமிழ் கல்விமன்களுள் முக்கிய இடம் பெற்ற எஸ். எச். எம் ஜெமீல் அவர்களின்
    ஆளுமைகளின் மரணங்கள் சமூகத்தில் பாரிய இடைவெளிகளை உண்டாக்கி உள்ளது
    சவுதிஅரேபியாவிலுள்ள இலங்கை சர்வதேசப் பாடசாலையின் அதிபராகவும்,

    பல்வேறு நாடுகளில் நடைபெற்ற ஆய்வு மாநாடுகளிலும் பங்குபற்றியிருந்ததுடன்,

    பல்வேறு அமைப்புக்களின் ஆலோசகராகவும்,

    முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி, மார்கா ஆய்வு நிறுவனம் போன்றவற்றின் ஆலோசகராகவும் பணியாற்றினார்.

    கல்வித்துறையில் மிக ஆழமான அறிவினைப் பெற்றிருந்த கல்விமான் மர்ஹும் எஸ்.எச்.எம். ஜெமீல் தமிழ் இலக்கியத்திலும், ஆங்கிலத்திலும் மிகவும் புலமைத்துவமிக்கவராகவும் திகழ்ந்தார்.

    வாழ்நாளில்; தன்னால் எழுதப்பட்ட, தேடப்பட்ட சுமார் 2000க்கும் மேற்பட்ட கட்டுரைகள், தொகுப்புக்கள் அடங்கிய நூல்களை அண்மையில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தார்.

    இவரது சகாக்களான ஏ.பீர் முகம்மது, எஸ்.எல். சியாத் அகமட் மற்றும், மருதூர் ஏ.மஜீட், டாக்டர் தாஸிம் அகமது ஆகியோர் தொகுத்து எழுதிய ஒரு “கிராமத்துச் சிறுவனின் பயணம்” எஸ்.எச்.எம்.ஜெமீலின் வாழ்வியல் தொடர்பான மிகப்பெரிய நூல் ஒன்றினை கடந்தாண்டு வெளியிட்டு அவரைக் கௌரவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

    இவ்வாறு நாட்டுக்கும், தன்சமூகத்திற்கும், கல்வியுலகிற்கும் மாபெரும் தொண்டாற்றிய கல்விமான் மறைந்தது தமிழ்பேசும் நல்லுலகிற்கு மிகப் பெரும் இழப்பாகும்

    .

    கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பதிவாளரும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சின் முன்னாள் செயலாளரும், கல்முனை ஸாஹிறாவின் முன்னாள் அதிபரும் பிரபல கல்வியயளாலருமான காலாநிதி அல்ஹாஜ் S.H.M.ஜெமீல் அவர்கள் இன்று (27.04.2015) காலமானார்கள்.

    இலக்கியம், கலை, கல்வி, கலாசாரம் முதலிய பல துறைகளில் புத்தகங்களையும், ஆக்கங்களையும் வெளியிட்ட அன்னார், அண்மையில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரதான நூலகத்திற்கு தனது சேகரிப்புக்களை கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

    தேசிய ஷூரா சபையின் நிபுணத்துவ ஆலோசனை சபையில் உறுப்பினராகவும் அண்மைக்காலமாக சமூக மற்றும் தேசிய உணர்வுடன் பங்களிப்புச் செய்தமை குறிப்பிடத்தக்கது.

    சாய்ந்தமருது மண்ணின் தொப்புள்கொடிதந்த குடும்ப உறவு இவர்

    தனது 75ம் வயதில் (27.04.2015)காலை தெஹிவளையில் இறைவனடி போய்விட்டார் .

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜுஊன்.

    ஒரு காவியம் முற்றுப்புள்ளி பெற்றுவிட்டது;

    எங்கள் குடும்பத்தின் சுடர் அணைந்து விட்டது

    அன்பான அங்களுக்கு அல்லாஹ் சுவர்க்கத்தை வரமாக்கி கொடுப்பானாக

    நரகத்தை ஹராமாக்கி வைப்பானாக !ஆமின்

    கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    Share
  • யார் சொன்னது…?

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    எத்தனைப் போராட்டம்
    எத்தனை இன்னல்
    எத்தனை சோகம்                                                kamalini
    எத்தனைக் கனவு
    எத்தனை வியாதி
    எத்தனைச் சோதனை
    எத்தனை எத்தனை…
    அத்தனையும் வாழும் வாழ்வில்!

    உடைந்து நொறுங்கிய கண்ணாடித்துண்டுகளாய்
    ஓட்டமுடியாச் சிதறல்கள்!
    உள்ளத்தின் உணர்வுகளில்
    வாழ்வின் தழும்புகள்!

    இதய நாளம்
    உயிர்ப் பிரிவின்
    சோகத்தில் துடிக்கின்றது!

    இதயத்தில் அவள் எண்ணங்களே
    நினைத்து நினைத்து அழுது வடிக்கும்
    என் மனசு!

    மரணம் என்று யார் சொன்னது..?
    மரணித்து விட்டார் என்று!

    கமலினி அக்கா
    ஹயாத்தோடு செல்லுகின்றார்
    மறுமை நாளில் எழுப்பப்படுவார்!

    நாமின்று உயிரோடு வாழ்கின்றோம்
    என்றோ ஓர்நாள் நாம்தான்
    மண்ணில் மரணிக்கப்படுவோம்!

     

    Share
  • நிம்மதியாய் வாழும்நாள் என்று பூக்கும்?

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    உழைத் துழைத்து நாமுந்தான் ஓடாய்த்தேய
    உழையாதார் ஊதித்தான் பெருக்கக் கண்டோம்!
    இழைத் தேநாம் இடுப்பொடிய ஈரமில்லா
    இதயத்தார் இருந்துறிஞ்சி “மேலே சென்றார்”!

    முதுகினிலே கூடையினைத் தாங்கி நாமும்
    முதுகொடியக் கொழுந்தெடுத்துக் கொணர்ந்து சேர்த்தோம்
    புதுவாழ்வு எதுவும் நாம் கண்டதில்லை!
    புல்லர்கள் வாழ்வுக்கே உரமாய்ப் போனோம்! 

    ஓட்டை “லயம்” தானெமது உலகும் வாழ்வும்!
    உழைப்புத்தான் உயிர் எமக்கு  ஓய்வோ தூக்கம்!
    காட்டையெல்லாம் கழனிகளாய்ச் செய்தோம் எங்கள்
    கனவுகளோ கண்ணீரில் கரையக் கண்டோம்!

    மலையகத்து இலைகளுக்குப் பசுமை சேர்க்க
    மணிமணியாய் வியர்வையினை வடித்துத் தந்தோம்!
    நிலைமாறி எம் வாழ்வில் பசுமை பூத்து
    நிம்மதியாய் வாழும் நாள் என்று பூக்கும்?

     

    Share
  • இழக்கக் கூடாததை இழந்தவர்களாய்!

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    உண்மை என்று நம்பியதற்காக
    வெற்றி பெறுவதற்குமுன்
    தீர்த்து விடவா
    இத்தனைப் பட்டாசுகளையும்
    தீர்த்துக் கட்டினாய்?

    தீமைகள்
    நல வழிப்பட்டதென்று
    எமது
    தியாக வரலாற்றின்
    தீர்வுகள்
    இருண்ட சாம்ராஜ்யங்கள்! 

    நமது
    சாவகாசங்கள்
    புஸ்வாணங்களும்
    பட்டாசுகளுந்தான்!
    அதனால்தான்
    நமது பட்டுக்களின் மேல்
    இச்சை தீர்க்கிறான்
    பக்கத்து வீட்டான்! 

    எட்டிப் பாருங்கள்
    எத்தனை யுவதிகள்
    இழக்கக் கூடாததை இழந்தவர்களாய்!

    பொத்திப் பொத்தி வளர்த்தானே
    நம் சகோதரன் – இன்று
    புட்டுக் கொண்டு வருவது
    வீரத்தின் விரல்கள் மட்டுமல்ல
    கதுப்புகளை நனைக்கும் கண்ணீரும்தான்! 

    கட்டுப் போட்டானே
    அச்சம், மடம், நாணம் என்று
    கசக்கிப் போட்டானே – கயவன்
    இச்சை கொண்ட மிருகம் என்று! 

    அமைதி காக்க அத்தாட்சிப் பத்திரங்கள் அதற்கு
    ஏந்தி வந்தான் துப்பாக்கியந்திரங்கள் -இந்தத்
    தப்பான தாத்பரியங்களுக்குத்
    தார்மீகத்தில்
    தியாகத் தீட்சைகள்! 

    அமைதி  ஒப்பந்தங்கள் – இவை
    அரசியல் தீப்பந்தங்ள் – அதில்
    நாம் இழந்தது உரிமைகளல்ல
    இராஜ தந்திரங்கள்
    இராணுவ ரகசியங்கள்! 

    தட்டி எழுப்பியவனே – எம்மைத்
    தட்டி உறங்க வைத்து விட்டுக்
    குரல் வளையை அறுத்துக்
    குருதி குடிக்கின்றான்! 

    காந்தியத்தின் தாயகமே
    கோர வெறியர்களை – நீயும்
    கொள்கைக் கொத்தர்களென்று
    கௌரவிக்கின்றாயே?!

    ஓ…!
    “கொல்” கைக் கொத்தர்கள்
    சேர்ந்து துகிலுரியும்
    கிருஸ்ண பரமாத்மாக்கள்!  

     

    Share
  • கையெழுத்து! தலையெழுத்து!

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

    பிச்சை போட வேண்டாம்!
    புகழ் தேட வேண்டாம்!
    ஏழை எளியோரை  நினைத்துப் பாருங்கள் – அந்த 

    அல்லாஹ்வே உங்களுக்குத்  துணையிருப்பார்!

    இருப்பதை வைத்துச் 
    சிறப்பாய் வாழ்வோம் 
    இறைவனை வணங்கி!

    நிம்மதியாய் இருப்போம்
    போட்டி பொறாமை  

    சண்டை சச்சரவு
    இவையெல்லாம் எதற்கு?

    மனதிலே விஷமென்றால் 
    எதற்கு மனிதாபிமானம்?

    மனதில் நச்சுத்துளி கலந்து
    சமூகத்துக்கு எழுதி என்ன பயன்?
    உறவுகளைப் பசிக்க விட்டுவிட்டுப் 
    பணத்தினைக் கட்டிக்காத்து என்ன பயன்?

    மனமும் உடலும் கருகிய பின் 
    குடும்பம் இருந்து  என்ன பயன்?
    சோற்றில் விஷத்தைப் போட்டுவிட்டு 
    வேடிக்கை பார்த்து  என்ன பயன்?
    உறவே சீரழிந்த பின்

    பணமும் பிணமும் எதற்கு?

    எழுத்தில் எல்லா வரிகளும் 
    தலைக்கனம் நோக்கிப் போகிறது!
    உடலும் உள்ளமும் ஊனமுற்றே 
    வாழ்வு வீணாய்ப் போகிறது…

    கையெழுத்து 
    நன்றாகயில்லையெனினும் 
    பரவாயில்லை – தலையெழுத்து 
    நிம்மதியாக அமைய 
    வழிகாட்டுங்கள்…!

    ஒருவனின் கதை கவிதை கட்டுரை அல்ல 
    ஒரு இனத்தின் வேதனை…!

     

    Share
  • கிராமிய கவிகளும் இலக்கியமும்

    கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    நாட்டார் பாடல்கள். இலங்கையின்  கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கரைவாகுப் பற்றுப் பிரிவிலும் (கல்முனை,திகாமடுல்லை) விவசாயம் சம்பந்தமான தொழில் ஈடுபடுபவர்கள்மத்தியில் இந்தப் பாடல்கள் பிரசித்தி பெற்றவைகளாகும்

    ஆண்களை விட பெண்கள்தான் பிரபல்யம்

    ஒருவர் ஆரம்பித்தால் தொடர்ந்து பாடுவதற்கு ஏனையவர்கள் தயாராகி விடுவார்கள்.

    ஆனால் இன்றைய கால கட்டத்தில்,நாட்டார் பாடல்கள் அன்றைய தலைமுறையு டன்  அழிந்து விடுகின்றது .

     நாட்டார் பாடலுக்கு களமே, களத்து மேடுதான்.

    தற்போது அறிமுகமாகியுள்ள நவீன விவசாயமுறைகள்

    ,இயந்திர மயப்படுத்தல்,

    கட்டாயக் கல்வி முறை,

     இவைகளெல்லாம் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தி,அடுத்த தலைமுறைக்கு இது இறுவட்டாக மட்டுமே காட்சி அளிக்கும்.

    தன்னைக் கல்யாணம் பண்ண முனையும்,ஒருவரை பெண் வெறுத்து ஒதுக்குவதையே குறிக்கோளாகக் கொண்டபாடல்கள்.தற்போதைய காலத்திற்கு ஏற்றமாதிரிக் கூறுவதானால்,கடலை  போடுபவரைக் கண்டால்,கட்டோடு பிடியாத பெண்ணின் வரி வடிவம்.இதோ

    கச்சான் அடித்த பின்பு -நடுக்
    காட்டில் மரம் நின்றதுபோல்
    உச்சியில் நாலு மயிர்-தலை
    ஓரம் எல்லாம் வழுக்கை

    கண்ணுமொரு பொட்டை-இரு
    காதுகளும் செவிடாம்
    குருத்தெடுத்த வாழை போல-அவர்
    கூன் வளைந்திருப்பார்

    முப்பத்தி இரண்டில் இப்போ -இந்த
    மூணு பல்லுத்தான் மீதி
    காகக் கறுப்பு நிறம்-ஒரு
    காலுமெல்லோ முடமவர்க்கு

    நாணற்பூப்போல -தலை
    நரைத்த கிழவனுக்கு
    கும்மாளம் பூப்போல -இந்தக்
    குமர்தானோ வாழுறது

    தங்கத்தாற் சங்கிலியும் -ஒரு
    தக தகவென்ற பட்டுடையும்
    பட்டணத்துச் செப்புமிட்டு-எனை
    பகல் முழுதுஞ் சுற்றி வாறான்.

    அத்தர் புனுகாம்
    அழகான பவுடர் மணம்
    இஞ்சி தின்ற குரங்குபோல –
    இவருக்கேனோ இச்சொகுசு.

    பட்டுடுத்துச் சட்டையிட்டு -நறு
    பவுசாக நடந்திட்டாலும்
    அரைச் சல்லிக் காசுமில்லை -ஆள்
    ஆறுநாட் பட்டினியாம்.

    சங்கிலியும் தங்கமில்லை –
    சரியான பித்தளையாம்
    இடுப்பிலேயும் வாயிலேயும்-
    இருக்கிறது இரவல் தானாம்…!

    இந்த அருமையான அன்றைய பாடல் இன்றைய சினிப்  பாடலை முந்திவிட முடியாது

    கிராமியக் கவிதைக்கு  புகழ் பெற்ற இடம்  மட்டக்களப்பு.( கிழக்கு மாகாணம் )

     தேனுக்கும் ,பாலுக்கும்,மீனுக்கும்   ,அன்புக்கும் ,விருந்துக்கும்  அறிவுக்கும் புகழ் பெற்றவர்கள்  மட்டக்களப்பு மக்கள்

    கலைகளைபேணி வளர்பதிலும்,  தலைசிறந்து விளங்குகின்றவர்கள்மட்டக்களப்பு மக்கள் .உணர்ச்சி கவிதை நிறைந்த மட்டக்களப்பு நட்டுப் பாடல்கள் பல்வேறு துறைப்பாட்டு, நிறைந்து வழங்குகின்றன.

    கிழக்கிலங்கையின் மூலை முடுக்குகளிலும் ,வயல்வெளிகளிலும் ,வீடுகளிலும் ,வீதியிலும் உலவும் இப்பாடல்களை தொகுத்து வகைப்படுத்தி வெளியிடுவதில் ஒருவரும் பெரிது கவனம்இதுவரை  செலுத்தவில்லையென்பது கவலையாகும்

    .இயற்கை வழ்வில் நின்று விலகி நிற்கும் நாகரிகத்தில் திளைத்து நிற்கும் பலருக்கு இப்பாடல்களின் அருமை தெரியாது.

     நாட்டுப்புற பாமரமக்களுக்கும், நகரமக்களுக்கும் ,வாழ்க்கை முறையிலும் உள்ளப்பாங்கிலும் வேறுபாடு வளர்ந்துகொண்டே வருவதனால்

    பாமரமக்கள் பாடும் பாட்டை கேட்டு மகிழ்கிற மனநிலை படித்தமக்களைவிட்டு ஒரளவிற்கு நீங்கிவிட்டது என்று கூறலாம்.

     நாட்டுப்பாடல்களை படுவோரின் தொகையும் நளுக்குநாள் குறைந்து கொண்டேவருகின்றது. நாளடைவில் நாட்டுப்பாடல்கள் மறைந்து விடக்கூடும்.என்ற அச்சம் என்னைப் போன்ற பலருக்கும்  உண்டு

    கவி என்னும் சொல் மட்டகளப்பிலே அகத்தினை ,நாட்டுப்பாடல்களைக்குறிக்கும்
    சிறப்புசொல்லாக வழங்குகின்றது.

     இக்கவிகளில் அதிகம் ஈடுபாடுடையவர் மட்டக்களப்பு இஸ்லாமிய மக்களே.

     சிறந்த கவிவளைப்பாடவல்லவர் இன்றும் பலர் உளர்.
    இத்தகைய உணர்ச்சிமிக்க காதற்பாடல்களாகிய கவிகள் கூற்றுக்குரியோர் பெயராற் காதலன் கூற்றாய் உள்ளவை,

    காதலி கூற்றாய் உள்ளவை,

    தோழி கூற்றாய் உள்ளவை,

    தாயார் கூற்றாய் உள்ளவை,

     நான்கு பிரிவுகளாகஇவை  வகுக்கப்பட்டுள்ளன.

    இக் காதற்கவிகள் தமிழிலுள்ள அகப்பொருள் மரபுக்கு மாறாகஇருக்ககூடும்

    உதாரணமாகத் தமிழ் இலக்கியத்திற் களவு ஒழுக்கம் பெரும்பாலும் தோழி துணை கொண்டே நடக்கும்.

    தலைவி ஒருபோதும் குறியிடம் கூறமாட்டாள். ஆனால் நாட்டுப்பாடலில் தலைவி தானே தலைவனிடம் குறியிடம் கூறும்வழக்கைகாணலாம்.

    சந்தன மரத்தை மச்சான்
    சந்திக்க வேன்டுமென்றால்
    பூவலடிக்கு மச்சான்
    பொழுதுபட வந்திடுங்கோ.

    கடப்படியில் வந்து நின்று
    காளை கனைக்கும் மென்றால்
    எங்கிருந்த போதும் நாகு
    எழுந்துவர மாட்டாதோ
    போன்ற பாடல்கள் தலைவி தலைவனிடம் குறியிடம் கூறுவதைக் குறிக்கின்றன.

    மட்டகளப்பில் – மழைவளம் குறைந்து, பசியும் பிணியும் பெருகும் காலத்து கண்ணகி தேவிக்குச் சாந்தி செய்யும் போது கொம்புவிளையாட்டு நடத்தி மகிழ்வர்.

    கொம்புவிளையாட்டில் ஊர் முழுவதும் இருகட்சியாகப் பிரியும்.

    ஒன்று கோவலன் கட்சி,

    மற்றது கண்ணகி கட்சி.

    இக்கட்சிகள் வடசேரி, தென்சேரி என்ற பெயர் பெறும்.

    இவ்வாறாக பிரிந்து, போட்டியாக ஒரு சேரியார் இன்னொரு சேரைப்பழித்து வசைப் பாடல்கள் பாடுவர்.
    பால்போல்நிலவெறிக்கப் படலை திறந்தவன ஆர்தோழி
    நான்தாண்;டிவடசேரியான் உனக்கு நழிப்பணம் கொண்டுலாவுகிறேன்.
    என்பன போன்ற தனி வசைப்பாடல்களும் பல உள.

     இப்பாடல் இப்பொழுது கிழக்கு மாகாணத்தில் மண்டூர் ,தமபிலுவில், காரைதீவு, வந்தாறுமூலை, போன்ற ஊர்களில் மட்டும் ஆடப்படுகின்றது.

     துன்பத்தைப்போக்கி இன்பத்தை பெருக்கப் பாடப்படும் இப்பாடல்கள் அழியாமற் காக்கப்படவேண்டியவை.
    ஆயிரக்கணக்கான நாட்டுப்பாடல்கள் பலதுறைப்பட்டு விளங்குகின்றன.

     நாட்டுப்பாடல்களை இறவாமல் காப்பது எல்லோருடைய கடமையாகும்

    தமிழரின் இலக்கிய செல்வத்திலே இப்பாடல்களுக்கு சிறந்த இடம்முண்டு.

    தமிழில் எத்தனையோ இலக்கிய நு}ல்களும், இலக்கண நு}ல்களும், இறந்து போய்விட்டன என்று வரலாறு கூறுகின்றது.

     யாழ் நூலகம் எரிக்கப் பட்டபோது சாம்பலாக்கப் பட்டுவிட்டது மனித ஆத்மாக்கள் கவலைப் படுகின்றது

    மட்டக்களப்பு நாட்டுப்பாடல்களின் முதற் பதிவு 1960 ம் ஆண்டில் வெளிவந்ததுள்ளது

    ஈழத்திலுள்ள அறிஞ்ஞர் பலர் ஈழத்து நாடோடிபாடல்களை அவ்வப்போது சேர்த்துப்பத்திரிகைகளிலும,; துண்டு பிரசுரங்களிலும் வெளியிட்டு வந்துள்ளனர். இவர்களுள் திரு. மு. இராமலிங்கம் அவர்களின் சேவை பாராட்டுக்குரியது.

    நாட்டுப்பாடல், நாட்டார் பாடல் அல்லது நாட்டுப்புற பாடல் எனப்படுவது நாட்டுப்புறங்களில் வாழும் மக்கள் தங்கள் அன்றாட வாழ்விலும், தொழிற்களங்களில் பணிநேரங்களில் களைப்பைக் குறைக்கும் வகையிலும், விழாக்களிலும் பாடும் பாடல்களைக் குறிக்கும்.

    இவ்வாறான பாடல்கள் வாய்மொழி மரபாக கையளிக்கப்பட்டு வந்தாலும் பெரும்பாலும் அதிக மாற்றத்துக்கு இலக்காகாமல் பேணப்படுகின்றன.

     அதேவேளை இவற்றின் இயற்றுனர்கள் என்று எவரையும் குறிப்பிடமுடியாத வகையில் இவை பொதுவழக்கில் பயன்பாட்டிற்கு வந்துவிடுகின்றன.

    நாட்டுப் பாடல்கள், நாடோடிப் பாடல்கள், வாய்மொழி இலக்கியம், ஏட்டில் எழுதாக் கவிதைகள், காற்றில் வந்த கவிதைகள், மக்கள் பாடல்கள், மரபுவழிப் பாடல்கள், பாமரர் பாடல்கள், பரம்பரைப் பாடல்கள், நாட்டார் பாடல்கள் என பல்வகைப் பெயர்களால் நாட்டுப்புறப் பாடல்கள் அழைக்கப்படுகின்றன.

    நாட்டார் பாடலை நாட்டுப்பாடல், தெம்மாங்கு, பாமர ஜனகானம்பொதுஜனகானம்கிராமியபாடல், எனப் பலவாறு அழைப்பர்.

     பழங்குடிகள் தம் கருத்துக்களையும், இன்ப துன்ப உணர்வுகளையும் பிறருக்குப் புலப்படுத்தக்கூடியவாறு மொழி வளர்ச்சி பெற்றிருக்காத சூழ்நிலையில் ஏதோ ஒரு வகையில் ஓசை முறைகளையும் பயன்படுத்தி இருக்கலாம்.

     மொழி துணையாக வந்த போது முதற்பாடல் தோன்றியிருக்கக் கூடும்.

    ஒருவர் ஓர் அடியைப்பாட, மற்றொருவர் மற்றைய அடியைப்பாட வினா விடையாகவும் நாட்டார் பாடல்கள் அமைந்தன.

    சூழலையும் குறிக்கோளையும் பொருத்து நாட்டார் பாடல்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்:

    தமிழில் முதலில் எழுந்த இலக்கியமான சிலப்பதிகாரமும் ஒரு பழைய கதைப்பாடலை ஆதாரமாகக் கொண்டே எழுந்திருக்க வேண்டும்.

     சங்ககால இலக்கியமான ஐந்திணை தழுவிய அகப்பாடல்களுக்கும், நாட்டு மகளிடையே வழங்கிய காதற்பாடல்களே முன்னோடிகள் எனலாம்.

     சிலப்பதிகாரத்தில் வரும் கானல் வரி, வேட்டுவ வரி, குன்றக்குரவை, ஆய்ச்சியர் குரவை என்பனவும் நாட்டார் இசைமரபின் தொடர்ச்சியாகவும் மக்கள் வாழ்க்கை முறையில் பெறும் முக்கியத்துவத்தைத் தெளிவு படுத்தும் விதமாகவும் இருக்கின்றன.

     இளங்கோவடிகளின் துன்ப மாலைப் பகுதியில் வழங்கும் பாடல் கூறுகளும், யாழ்ப்பாண இசை மரபில் வழங்கும் ஒப்பாரிப்பாடல்களும் ஓசை அமைப்பில் ஒருமைப்பாடு உடையன.

    பெரியாழ்வார் கண்ணனை குழந்தையாக உருவகப்படுத்திய தாலாட்டுதமிழ் நாட்டுத் தாய்மார்களிடையே வழங்கி வந்த தாலாட்டுப் பாடல்களையொத்தே உருவாக்கப்பட்டது.

    நாட்டுபாடலில் ஈடுபாடு காட்டிய பாரதியார் தமது பல்வேறு பாடல்களில் நாட்டுப்பாடலின் அமைப்பையும் சந்தத்தையும் பயன்படுத்துகின்றார்

    பாஞ்சாலி சபதம். இவருக்கு முன் கோபாலகிருஷ்ண பாரதியார்,இராமலிங்க சுவாமிகள் முதலியோர் கும்மியாட்டம் போன்றவற்றிற்கான நாட்டுப்படல்களை இயற்றியுள்ளனர்.

    பெரும்பாலும் எழுத்தறிவு பெறாத பொதுமக்களால் இயற்றப்பெறுவதால் நாட்டார் பாடல்களில் வட்டார மொழி வழக்குகளே மிகுந்து காணப்படும்.

     மேலும், பிற இலக்கியங்களைப் போன்றே நாட்டார் பாடல்களில் அவற்றின் காலத்தில் நிகழ்ந்த பெருநிகழ்வுகளும், இருந்த சூழல்களும், வாழ்க்கைமுறைகளும், பண்பாடும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும். சில வேளைகளில் பிற இலக்கியங்களில் காணப்படாத காலப்பதிவுகளும் மிகுந்து காணப்படும்.

     எடுத்துக்காட்டாக, தாது ஆண்டுப் பஞ்சத்தின்போது தமிழர் திருமணம் முதலிய சடங்குகள் எவ்வாறு இருந்தன போன்ற தகவல்களையும் இவற்றில் காணலாம்.

    நடுகைக் களத்தில் காதல் பேசும் வகையில் அமைந்த ஒரு எடுத்துக்காட்டுப் பாடல்5]

    நாலு மூலை வயலுக்குள்ளே

    நாத்து நடும் பொம்பிளே

    நானும் கொஞ்சம் ஏழையடி

    நடவு கொஞ்சம் செறுத்துப் போடு

    நண்டு சாறு காய்ச்சி விட்டு

    நடு வரப்பில் போற பெண்ணே – உன்

    தண்டைக் காலு அழகைக் கண்டு

    கெஞ்சுறானாம் அஞ்சு மாசம்

    நானும் கொஞ்சம் ஏழையடி

    நடவு கொஞ்சம் செறுத்துப் போடு

    பெண்டுகளே! பெண்டுகளே!

    தண்டு போட்ட பெண்டுகளே! – உன்

    கொண்டை அழகைக் கண்டு

    கெஞ்சுறானாம் அஞ்சு மாசம்

    நானும் கொஞ்சம் ஏழையடி

    நடவு கொஞ்சம் செறுத்துப் போடு

    நாட்டார் / கிராமிய பாடல்கள் என்ற தொகுதியின் ஆசிரியர் கிண்ணியாவைச் சேர்ந்த கவிஞர் பி.ரி. அஸீஸ் அவர்களாவார். நீண்ட இடைவெளிக்குப் பின் ஏப்ரல் 2011 இல் எழுதத் தொடங்கிய பி.ரி. அஸீஸ் அவர்கள் டிசம்பர் 2011 வரையான ஒன்பது மாதங்களுக்குள் ஒன்பது படைப்புக்களை வெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு ஆளுமைகளைக் கொண்டிருக்கும் இவர், அண்மைக் காலங்களில் அதிகமாக இலக்கியத்தில் ஈடுபட்டு தமிழ்த் தொண்டாற்றி வருபவர். நாட்டார் / கிராமிய பாடல்கள் என்ற தொகுதி ரசனைமிக்க பல நாட்டார்

    நாட்டார் பாடல்கள் தொழில்கள் நிமித்தம் புறப்பட்ட உணர்வுகளே. அதிகம் விவசாயம், மீன்பிடி போன்ற தொழில்களோடு சம்பந்தப்பட்ட சோகம், காதல், வெறி, தவிப்பு, பிரிவு ஆகிய பொருள்களில் நாட்டார் பாடல்கள் முத்திரை பதிக்கிறது

    கிராமத்து வாழ்க்கை மிகவும் இனிமையானது. அமைதி நிறைந்தது. உற்சாகம் மிகுந்தது. கிராமிய மக்கள் அன்பும் நல்ல பண்பும் கொண்டவர்கள். அழகியல் சூழலில் ஆனந்தமாக வாழ்பவர்கள். இதமான தென்றலிலும், இதயம் தொடும் பசுமையிலும் அவர்களின் காலம் கழிகிறது. இத்தகையவர்கள் வாழ்க்கையிலும் எத்தனையோ தொல்லைகளும் பிரச்சினைகளும் அவை காதல், சோகம், ஏமாற்றம், வறுமை, விவேகம் என பல்வேறு வகைப்பட்டு நிற்கிறது.

    வாழ்வியல் பிரச்சினைகளை அவர்கள் இனிய கவிகள் மூலம் வெளிப்படுத்துகின்றனர். இக்கவிகள் வாழும் தன்மை கொண்டவையாக விளங்குகின்றன. கிராமிய கவிகளும் இலக்கியமும் ஒவ்வொரு தனிமனித வாழ்க்கையிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன.

    திருமண பந்தத்தில் இணைய நினைக்கும் ஒரு இளஞ் சோடியின் மன உளைச்சலை வெளிப்படுத்தும் வரிகளாக பின்வரும் வரிகள் (அமைந்துள்ளன. வருமானம் இல்லாத காரணத்தால் கல்யாணம் செய்து கைப்பிடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தை தலைவனின் பாடலடிகள் சுட்டி நிற்கின்றன.

    காலயும் புலந்திருக்கு
    கனவெல்லாம் கலைஞ்சிரிச்சி
    மாலையும் கையுமா
    மச்சான் ஒன்ன கண்டிருந்தேன்

    வேலயும் இல்ல மச்சி
    வருமானம் கொறஞ்சிரிச்சி
    தோளிலே ஒன்ன வைக்க
    தோது இல்ல என் கிளியே!

    அடக்கு முறைக்குள் இருந்து வெளிவரத் துடிக்கும் ஒரு யுவதியின் மனோ வலிமையை சுட்டி நிற்கிறன.கீழ் உள்ள வரிகள்  அதில் தனது நியாயமான சுதந்திரத்துக்கு தடைக்கற்களாக விளங்கும் அனைத்தையும் படிக்கற்களாக மாற்றி முன்னேறத்துடிக்கும் பாங்கில் அது அமைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

    சுற்றி வர நெருஞ்சி முள்ளு
    சுருண்டிருந்து பாத்திருக்கேன்
    தடை தாண்டிப் பாய்ந்து வர
    நல்ல சப்பாத்துக்காய் 
    காத்திருக்கேன்!

    இன்றைய காலத்தில் பெண்களுக்கான அடக்கு முறைகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. பெண்கள் பல துறைகளில் முன்னேற்றங்களைக் கண்ட போதும் ஆணாதிக்கத்தின் பலம் குறைந்தபாடில்லை என்பதாக நினைக்கும் ஒரு யுவதியின் மனவெளிப்பாட்டை மேலுள்ள வரிகள் இயம்பி நிற்கின்றன.

    அலைகள் ஒரு போதும் ஓய்வதில்லை. அதேபோல இந்தப் பெண்ணும் தன் நினைவலைகளிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் ஒரு கன்னியின் மன ஏக்கத்தை பின்வரும் வரிகள் உணர்த்துகின்றன.

    ஓடுகின்ற
    தண்ணியிலே
    ஆடுகின்ற
    அலையெல்லாம்
    தேடுகின்ற
    என் மனதின் 
    ஏக்கங்களைக்
    கூறாதோ!

    தொழில் நிமித்தம் வீட்டைவிட்டு வெளியூருக்குச் சென்ற கணவன் பல நாட்களாக திரும்பி வரவில்லை. அவரது வருகையை எதிர்பார்த்து மனைவி வாடிப் போகிறாள். கணவனை நினைத்து அவள் ஏங்கும்; பாடல்  இப்படி வருகிறது.

    கழுத்திலே மின்னுகிற
    கரிச மணிக் கோர்வையிலே
    கைய வைத்து உருட்டி விடும்
    என் ஆசைக் கண்ணாலா

    தொழிலுக்கு தொலை தூரம்
    போனவரே
    நெடுநாளா சேதியில்ல
    என் நெஞ்சம் வெடிக்குதுகா!

    பருவகால மழை பிழைத்துப் போனால் உழவர்களின் பாடு திண்டாட்டம்தான். உழவர்கள் விளைச்சலை நன்றாகத் தந்தால் தான் நாட்டு மக்கள் நன்றாக சாப்பிட முடியும். விளைச்சலில் பிரச்சினைகள் ஏற்படாமல் அல்லாஹ்வை வேண்டி நிற்கும் சூடடிக்கும் பாடல் இப்படி வருகிறது.

    மாடுகள் வலய வலய
    நெல் மணிகள் குலய குலய
    பாடுகிறோம் பாட்டு
    சூடடித்து முடியும் வர
    சுகமாகக் கேட்டு!

    நாடுகிறோம் அல்லாஹ்வை
    நல் விளைச்சல் கெடச்சிடவே
    தேடுகிறோம்
    கடனெல்லாம் தீர
    ஒரு நல் வாழ்வை!

    சிறுவர்களை மகிழ்விப்பதற்காக அச்சிறுவர்களின் தாயாரோ அல்லது உறவினர்களோ பாடும் பாடல் இது.

     எதுகையும் மோனையும், இயைபுத் தொடையும் மிக இயல்பாக இப்பாடலில் அமைந்துள்ளது. இப்பாடலை மறுவாசிப்பு செய்யும்போது, நம்மையும், இப்பாடல் கரைந்து மோன காலத்திற்குள் தள்ளுகிறது. ஞாபகம் வருகிறதே பாணியில் பின்னோக்கி நம் நினைவின் நிழல்களை நகர்த்தினால், நம் குழந்தைப் பருவத்து நிகழ்வுகள் நினைவுக்கு வரும். இனி பாடலைப் பார்ப்போம்.

    சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு

    சாயக் கிளியே சாய்ந்தாடு

    அன்னக் கிளியே சாய்ந்தாடு

    ஆவாரம் பூவே சாய்ந்தாடு

    குத்து விளக்கே சாய்ந்தாடு

    கோயில் புறாவே சாய்ந்தாடு

    மயிலே குயிலே சாய்ந்தாடு

    மாடப் புறாவே சாய்ந்தாடு

    குழந்தைகள் பாடிக்கொண்டு விளையாடும் விளையாட்டுப் பாடல்கள் தனி ரகமானவை. குழந்தைகளின் விளையாட்டோடு, இசையும், இலக்கியமும் கலந்தது வியப்பான விசயமாகும்.

    குழந்தைகளின் விளையாட்டுக்கள் காலாவதியானதுடன், சேர்ந்து அவர்கள் விளையாட்டோடு பாடிய பாடல்களும் காற்றில் கரைந்து விட்டன.

    கண்ணாம் கண்ணாம் பூச்சாரே,

    காது காது பூச்சாரே

    எத்தனை முட்டை இட்டாய்?

    மூணு மூட்டை!

    மூணு முட்டையும் தின்னுப்புட்டு

    ஒரு சம்பா முட்டை கொண்டுவா!

    என்பன போன்ற பாடல்களைப் பாடுவார்கள். இத்தகைய பாடல்களுக்கு நாம் பொருள் விளக்கம் தேடி அகராதியைப் புரட்டிக் கொண்டிருக்கக்கூடாது.இத்தகைய பாடல்களின் இசை அமைதியையும் தாளக்கட்டையும்,சொற்செட்டுகளையும் மட்டும் நாம் அனுபவிக்கவேண்டும். பொருளற்ற வெற்றசைச் சொற்களாகவே இத்தகைய பாடல்களில் வார்த்தைகள் வந்து உக்கார்ந்திருக்கும். சான்றாக,

    மாப்பிள்ளை மாப்பிள்ளே

    மண்ணாங்கட்டி தோப்புளே

    அரைக் காசு வெற்றிலைக்கு

    கதி கெட்ட மாப்பிள்ளே. . .!

    என்ற பாடலைக் கூறலாம்.

    மைத்துனன் முறை உள்ள பையனை மச்சினன் முறை உள்ள பையன் கேலி செய்து பாடுவதாக அப்பாடல் அமைந்துள்ளது.

    சக்கு சக்குடி சருவொலக்கையடி

    குத்தொலைக்கையடிகுமரன் பொண்டாட்டி

    பாளையத்திலே வாழ்க்கைப்பட்ட

    பழனி பொண்டாட்டி. . .

    வெற்றசைச் சொற்களால் ஆன இசைப்பாடல் இது.

    பனை மரமாம் பனை மரமாம்

    பச்சைக் கண்ணாடி

    பல் இல்லாத கிழவனுக்கு

    டபுள் பொண்டாட்டி. . .

    என்ற குழந்தைப் பாடல் இரண்டாம் தாரமாகக் கிழவர் ஒருவர் இளம்பெண் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டதைக் கேலி செய்கிறது. இரண்டு பொண்டாட்டி என்பதை டபுள் பொண்டாட்டி என்று பாடுவது தமிழ் மொழியில் ஏற்பட்ட மொழிக்கலப்பைப் பதிவு செய்கிறது.

    பலிஞ் சடுகுடு அடிப்பானேன்?

    பல்லு ரெண்டும் போவானேன்?

    உங்கப்பனுக்கும் உங்காயிக்கும்

    ரெண்டு பணம் தெண்டம்தெண்டம்!

    என்கிற பாடலிலும் கேலி செய்யும் தொனியே மிஞ்சி நிற்கிறது.

    கிக்கீக்குஸ் கம்பந் தட்டை

    காசுக்கு ரெண்டு கெட்டு

    கருணைக் கிழங்கடா

    வாங்கிப்போடா. . . வாங்கிப்போடா. . .!

    இந்தப்பாடல் கரிசல் காட்டில் தோன்றியதாக இருக்க வேண்டும். கம்மங்கதிர்,கம்பு, கம்மஞ்சோறு, கம்மந்தட்டை என்பவை கரிசல் காட்டிற்கே உரியவையாகும். இப்பாடலும் பொருளற்ற வெற்றசைகளால் நெய்யப்பட்டிருக்கிறது.

    சடுகுடு விளையாடும்போது, பிள்ளைகள் பலவிதமான சிறுபாடல்களைப் பாடிக்கொண்டே விளையாடுவார்கள். அவைகள் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். அத்தகைய குறும் பாடல்களில் சிலவற்றைக் கீழே காண்போம்.

    சடுகுடு மலையிலே

    ரெண்டானை

    தவறி விழுந்ததுதவறி விழுந்தது

    கிழட்டானை. . . கிழட்டானை.

    வெள்ளிப் பிரம்பெடுத்து

    விளையாட வாராண்டா. . .

    தங்கப் பிரம்பெடுத்து

    தாலி கட்ட வாராண்டா. . .

    தாலி கட்ட வாராண்டா. . .

    தூத்தூ நாய்க்குட்டி

    தொட்டியக்குடி நாய்க்குட்டி

    வளைச்சி போடடா. . நாய்க்குட்டி. .

    இழுத்துப் போடடா. . நாய்க்குட்டி. . .!

    அந்தக் குடுக்கை இந்தக் குடுக்கை

    கல்லிலே போட்டா சுரைக் குடுக்கை

    சுரைக் குடுக்கை. . . சுரைக் குடுக்கை. . .!

    ‘கழிச்சிக் கல்’ விளையாட்டு என்று ஒருவித விளையாட்டைச் சிறுவர்கள் சென்ற தலைமுறைவரை விளையாடினார்கள். இந்த விளையாட்டைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்திலும் காணக் கிடக்கிறது.

    சங்ககாலம் முதல் சென்ற தலைமுறைவரை தொடர்ந்து வந்த இந்தக் குழந்தை விளையாட்டை, இந்தத் தலைமுறைப் பிள்ளைகளுக்கும் கடத்த முடியாமல் போனது எதனால்?

    இரண்டாயிரமாண்டுப் பாரம்பரியமிக்க இந்தச் சிறுவர் விளையாட்டை,சமீபத்திய வாழ்க்கை முறையால் நாம் தொலைத்துவிட்டோம்.விளையாட்டிலும், உலக மயமாக்கல் ஒற்றைக் கலாச்சாரத்தைத் திணிக்கிறது.

    விளையாட்டு என்றதும் மட்டைப் பந்து என்ற கிரிக்கெட்தான் இக்காலத்துப் பிள்ளைகளின் நினைவுக்கு வருகிறது. இந்த மட்டைப் பந்து விளையாட்டு என்பதும் ஒரு காலத்தில் சிறு பிள்ளைகள் விளையாடிய கிட்டிப்புல் என்ற சில்லாங்குச்சி விளையாட்டின், விஞ்ஞானபூர்வமான விரிவாக்கமே!

    ‘கழிச்சிக் கல்’ விளையாடும் பிள்ளைகள் விளையாட்டின்போது ஒவ்வொரு கல்லையும் எடுக்க, ஒருவிதப் பாடலைப் பாடுவார்கள். அத்தகைய பாடல் இதில் ஒன்று முதல் பத்துவரை உள்ள எண்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுட்டப்படுகின்றன!

    கொக்குக்கிக் கொக்கு

    ரெட்டை சிலாக்கு

    மூக்குச் சிலந்தி

    நாக்குலா வரணம்

    ஐயப்பன் சோலை

    ஆறுமுக தாளம்

    ஏழுக்குக் கூழு

    எட்டுக்கு முட்டு

    ஒன்பது கம்பளம்

    பத்துப் பழம் சொட்டு

    இதுவும் பொருளற்ற ஒரு வித இசைப்பாடலே. குழந்தைகளின் நினைவாற்றலை வளர்க்க இத்தகைய பொருளற்ற இசைப்பாடல்கள் உதவின.

    அந்தாதித் தொடை அமைந்த வினா-விடை பாணியிலான சில குழந்தைப் பாடல்கள் கேட்பதற்கும் பாடுவதற்கும் ரஸமாக இருக்கிறது. அத்தகைய பாடல்களில் சான்றுக்கு ஒரே ஒரு பாட்டு

    ஆண்டி. . . ஆண்டி.. .

    என்ன ஆண்டி?

    பான்னாண்டி. .

    என்ன பொன்?

    காக்காப் பொன்.

    என்ன காக்காய். . .?

    அண்டங்காக்காய். . .

    என்ன அண்டம்?

    பூ அண்டம்.

    என்ன பூ?

    பனம் பூ.

    என்ன பனை?

    தாளிப் பனை.

    என்ன தாளி?

    நாக தாளி.

    என்ன நாகம்?

    சுத்த நாகம்

    என்ன சுத்தம்?

    வீட்டுச் சுத்தம்

    என்ன வீடு?

    ஓட்டு வீடு

    என்ன ஓடு?

    பாலோடு

    என்ன பால்?

    நாய்ப் பால்

    என்ன நாய்?

    வேட்டை நாய்

    என்ன வேட்டை?

    பன்றி வேட்டை

    என்ன பன்றி?

    ஊர்ப் பன்றி

    என்ன ஊர்?

    கீரையூர்

    என்ன கீரை?

    அறைக்கீரை

    என்ன அறை?

    பள்ளி அறை

    என்ன பள்ளி?

    மடப் பள்ளி

    என்ன மடம்?

    ஆண்டி மடம்

    என்ன ஆண்டி

    பொன்னாண்டி . . .

    இந்தப் பாடல் இத்துடன் முடிவதில்லை. தேவை எனில் குழந்தைகள் ‘என்ன பொன்?’ என்று கேள்வியை எழுப்பி அதற்கு ‘ஆணிப் பொன்’ என்று விடையும் கூறிச் சங்கிலித் தொடர்போல் பாடலைத் தொடரலாம்.

    மொழிப் பயிற்சிக்கும், உச்சரிப்புப் பயிற்சிக்கும், நினைவாற்றலை வளர்க்கவும் கேட்ட கேள்விகளுக்குத் தயங்காமல் பதில் கூறும் மனத்திறனையும் இத்தகைய பாடல்கள் வளர்க்க உதவின.

    குழந்தைப் பருவம் முடிந்து வளர் இளம் பருவத்தில் அடி எடுத்து வைக்கும் இளங் குமரிப்பெண்கள் மற்ற முறைகாரப் பெண்பிள்ளைகளைக் கேலி செய்து விளையாட்டாகச் சில பாடல்களைப் பாடுகிறார்கள். நேசமிக்க இத்தகைய பாடல்களும் இன்று காணாமல் போய்விட்டன.

    மாதிரிக்கு அத்தகைய பாடல்களில் இந்த ஒன்றை மட்டும் வாசகர்கள் சுவைக்கலாம்

    அத்தான் தங்கையே ராமக்கா

    அரிசிக் காரன் வந்திட்டான்

    சின்ன வீட்டிலே புகுந்துக்கோ

    சிலுக்குத் தாளம் போட்டுக்கோ

    புட்டைப் பிச்சுத் தின்னுக்கோ

    புருசன் கூடப் பேசிக்கோ. .!

    ஒரு காலத்தில் குழந்தைகளின் வாழ்வுலகமும், இளம் பருவத்து வளர் இளம் பெண்களின் கனவுலகமும் வண்ண வண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்கிய சோலைகளாக இருந்தன!

    இன்று அவர்களின் கனவுலகமே பாலைவனங்களாகிவிட்டன. கட்டற்ற கற்பனை வெளியில், மொழியின் கைபிடித்து இசையின் காலடித்தடம் தேடி அலைந்த பிஞ்சுக் குழந்தைகளின் வாழ்வனுபவம், இன்றைய குழந்தைகளுக்குக் கிடைக்கவில்லை. இந்தக் கலாச்சார மாற்றம் நம்மை மேல் நோக்கி நகர்த்துகிறதா? புதைகுழியில் தள்ளுகிறதா? புரியவில்லை.

    நாடோடிப்பாடல்களில்
    கதை

    இசைப் பாடல்கள்

     கவிதைகள்

    பழ மொழிகள்

    விடுகதைகள்

    ஒப்பாரி

    கவிகள்

    தாலாட்டுக்கள்

    ஊஞ்சல் பாடல்கள்

    கப்பற் பாடல்கள்

    பாலர் விளையாட்டுப் பாடல்கள்

    இவையெல்லாம் நாட்டார் இலக்கியங்களாகும்.

    Share
  • தங்கை நுப்ரா…

    கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

    இன்ஷாத்துக்கு அன்று தூக்கமே வரவில்லை .இப்படியொரு அன்பான அருமையான தங்கை தன் வாழ்வில் குறுக்கிடுவாள் என அவன் கனவு கூட கண்டிருக்கவில்லை .

     

    அப்போதெல்லாம் அவனின் நண்பர்கள் தங்கள் “தங்கைகளை” புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கும் போது இன்ஷாத்தின் மனம் ஊமையாக கண்ணீர்  வடிக்கும். பொறாமையால் அவன் மனம் வெந்து போகும். இப்போது தனக்கு கிடைத்த இந்த தங்கையை அல்லாஹ்வால் தனக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே அவன் மகிழ்ந்துபோவான். அந்தக் கடிதத்தை எத்தனை தடவை பார்த்த போதிலும் அவன் மனம் அலுத்துக்  கொள்ளவில்லை. அவள் அதில் எழுதியிருந்த  அந்த  “நானாவை” மட்டும் தனக்குள் ஆயிரம் தரம் படித்துப் பார்த்து விட்டான் இன்ஷாத். இப்போதும் அந்தக் கடிதம் தான் அவன் கையில் இருந்தது. “அன்புள்ள நானா…! வண்டமிழ் வந்தனங்கள் பல! நான் நலம்! தங்களது நலம் மலராய் செரிந்து மணம் வீச ஏன் பிராத்தனைகள் தென்றலாய்  தடவட்டும்!” “இதுவரை நான் தங்களுக்கு பல கடிதங்கள் அனுப்பியுள்ளேன்.எல்லாவற்றிற்கும் பதில் எழுதி உங்கள் அன்பை வெளிப்படுத்தினீர்கள். நன்றிகள் நிழல்களாக! ” “நானா! நாளை உங்களுக்குத் லீவு நாள். அன்றைய மதிய உணவை தங்களுடன் சேர்ந்து உட்கொள்ள தீர்மானித்திருக்கிறேன். நீங்கள் வராவிட்டால் நான் அன்று முழுவதும் பட்டினியாகவே இருப்பது என முடிவு செய்துள்ளேன். எனவே என் அழைப்பை ஏற்று என் குடிசைக்கு வந்து என்னை  மகிழ்விப்பீர்களென நம்புகிறேன்.

    இப்படிக்கு உங்கள் வரவை எதிர்ப்பார்க்கும் அன்புத் தங்கை நுப்ரா”.

    கடிதத்தை படித்த இன்ஷாத் அப்படியே  தூங்கிப் போய்விட்டான். சகோதரிகள் இன்றிப் பிறந்த இன்ஷாத் எழுத்துத் துறையில் வல்லன். அவன் எழுதும் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், இசையும் கதையும்  ஆகியன பத்திரிகையில் பிரசுரிக்கப்படும். வானொலியில் ஒலிபரப்பாக்கியும் வந்தன. இதனால் இன்ஷாத்துக்கு பல ரசிகர்கள், ரசிகைகள் அவனை பாராட்டி பல கடிதங்கள் வரைந்தனர். இந்த ரசிகைகளில் ஒருத்திதான் இந்த நுப்ரா. அவள் எழுதும் கடிதங்களில் கலக்கமில்லாத தூய அன்பு,பாசம் நிறையவே இழையோடுவதை அவனால் நன்கு உணர முடிந்தது. நானா…நானா… என்று எழுதுவதைப் பார்த்து அவன் பூரித்துப் போவான். அந்த தங்கையை  தன் உடன் பிறவாத தங்கையாகவே நினைத்துக் கொண்டான் இன்ஷாத்.

    தங்கையைப் பார்க்கப் போகும் ஆவல் இன்ஷாத்தை அதிகாலையிலேயே எழுந்து உட்கார வைத்து விட்டது. கைகடிகாரம் மணி ஐந்து  என்பதை சரியாக காட்டிய  போது அவன் அதற்கு மேல் தூக்கம் பிடிக்காமல் எழுந்து கொண்டான். தன் காலைக் கடமைகளை உற்சாகமாக  நிறைவேற்றியவன் தாய் கொடுத்த காப்பியையும் காலைச் சாப்பாட்டையும் சாப்பிட்டு விட்டு நன்றாக “ட்ரெஸ்” பண்ணிக் கொண்டு  தன் தங்கையை பார்க்க புறப்பட்டான். அப்போது நேரம் சரியாக காலை எட்டு மணியைத் தாண்டி விட்டிருந்தது. நுப்ராவின் வீட்டை நெருங்கிய போது பயம் அவன் மனதைபிடித்துக் கொண்டது. மெதுவாக வீட்டுக் கதவை தட்டிய போது “வாருங்கள்” என்ற சந்தோசமான வரவேற்பு அவனை மெய் சிலிர்க்க வைத்தது. அவனுக்காகவே காத்திருந்தது போல் அவனை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள் அவள். அவளது அன்பான வரவேற்பில் அவள் நுப்ராவாகத்தான் இருக்க வேண்டும் என்பதை அவன்  மனம் உறுதியாகக் கற்பனை பண்ணிக் கொண்டது. இரண்டு, மூன்று வருட பேனா சந்திப்பின் பின் இன்று தான் நேரடியாகச் சந்திக்கின்றான். நுப்ரா ரொம்பவும் அழகாக இருந்தாள். அதைப் போல் வீடும் கவர்ச்சியாக, அழகாக காட்சியளித்தது. நுப்ரா, வாய் ஓயாமல் கதைத்துக் கொண்டிருந்தாள். இடையில், தானும் வேலைக்காரக் கிழவியும் தான் வீட்டில் இருப்பதாக கூறினாள். ஒரு உறவினரின் கல்யாண  வீட்டுக்கு போயிருக்கும் பெற்றோர் நாளை தான் வருவார்கள் எனவும் கூறினாள்.

    கடிதத்தில் “நானா…நானா…” என எழுதும் அவள் இன்ஷாத் வந்து ஒரு மணி நேரமாகியும் கூட ஒரு தடவைக் கூட “நானா” எனக்  கூப்பிடாதது அவன் மனதை என்னவோ செய்தது. பாடசாலை ஆசிரியருமான இன்ஷாத்துக்கு அவள் போக்கு அறவே பிடிக்கவில்லை. அவன் அதிகநேரமாக மௌனமாகவே இருந்தான். “ஏன் பேசாமலே இருக்கீங்க… என்னை உங்களுக்கு பிடிக்கவில்லையா…? என்று கெஞ்சும் குரலில் கேட்டாள் நுப்ரா. இன்ஷாத்துக்கு தூக்கி வாரிப் போட்டது. “நீங்க நுப்ராதானே…?ஆச்சரியத்தோடு கேட்டான் இன்ஷாத். “ஆமாம்” என்றவள் அவனைப் பார்த்து புன்னகைத்தாள். “நீங்க தனியாகத்தான் இருக்கீறீன்களா…?” என்று படபடப்போடு அவன் கேட்ட போது. “ம்… யாருமே  இல்லை…. உம்மா போகும் போது பக்கத்து வீட்டு தோழிகளை துணைக்கு கூப்பிடச்  சொல்லிட்டுப் போனாங்க… ஆனா… நான் யாரையுமே துணைக்கு கூப்பிடப் போறதில்லை… நீங்க தான் துணைக்கு  வந்திட்டீங்களே… இனி  எதற்கு….”  “உங்கள எனக்கு நல்லாப்  பிடிச்சிருக்கு….உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா…..? இதை சற்றும் எதிர்பார்க்காத இன்ஷாத் அப்படியே  விறைத்துப் போய் விட்டான். எத்தனை தூய மனதோடு  அவளை  பார்க்க வந்தவனுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்துக் கொண்டிருந்தாள் அவள்.

    “பெண்களே இப்படித்தானோ”என  எண்ணியவன்  “நீ…..நானா…நானா என்று எழுதியதை நன்றாக  நம்பி நான் இங்கு வந்து விட்டேன்… என்னை மன்னித்துக்கொள்”  “எனக்கு உன்னை  அறவே பிடிக்கவில்லை” என்று கூறியவன்  அவள் பதிலை எதிர்பாராமல்  சட்டென எழுந்து கொண்டான். அப்போது தான் அவள் கண்கள் கலங்கி  இருப்பதை அவனால் காண முடிந்தது. கூடவே அறைக்குள்ளிருந்து  நாலைந்து  பெண்களின் சிரிப்பொலி அவன் காதை துளைத்தது.  அத்தனை பேரும் சேர்ந்து  அவனை “நானா ” என அழைத்து, வெறுப்போடு போக இருந்தவனை திரும்பவும்  உட்காரவைத்தார்கள். கூடவே அவள் பெற்றோரும் சிரித்தபடி இன்ஷாத்தை அன்போடு பார்த்தபடி நின்றிருந்தார்கள். இன்ஷாத்துக்கு எதுவுமே புரியவில்லை. பின்னர் அவன் எப்படிப்பட்டவன் என்று பார்ப்பதற்காக  அவர்கள் வைத்த  சோதனை  என்பதை அவன் உணர்ந்து கொண்டான்.

    நானா தங்கை என்று பழகுவார்கள் சந்தர்ப்பத்தில் காதலர்கள் ஆகி விடுவார்கள். ஆண்கள் தனியாக பெண்ணைக் கண்டால் மனம் மாறிவிடுவார்கள். ஆனால் தன் மேல் இன்ஷாத் உண்மையான பாசம் தான் என்பதை  நன்றாக உணர்ந்து கொண்டாள் நுப்ரா. இன்ஷாத்துக்கு அறுசுவை உணவு  அந்த வீட்டில்  அன்போடு வழங்கப்பட்டது. நுப்ரா “நானா…….நானா…..” என  வாய்நிறைய அழைத்து உபசரித்ததனால் இன்ஷாத் மகிழ்ந்து போனான். பின்னர் அந்த அன்புத்  தங்கை  நுப்ராவிடம் விடை பெற்ற போது  அவன் கண்கள்  நீரை நிறைத்துக் கொண்டதை  அவனால் தவிர்க்க முடியாமல் போய் விட்டது.

    Share
  • துணைவன் வேண்டும் !

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    சீதனம் எதுவு மில்லை
    சீரமைக்குப் பஞ்ச மில்லை
    ஆதனம் அதுவு மில்லை
    பேதையவள்  வாழ்வில் ஒன்றாய்ப்
    பிணைந்திட வரனும் இல்லை!

    கல்வியும் கற்றவள் – நல்ல
    கனிவினை உள்ளத்தில் பெற்றவள்
    சொல்லினில் தெளிவு கொண்டவள்
    சுயநலம் துளியும் இல்லை
    நல்லதோர் துணைவன் அவளை
    நாடியே வரவும் இல்லை!

    குடிசை தான் வாழ்க்கை
    கோபுரம் அவள் உள்ளம்
    நடிகையாய் வாழ்வில் மாறும்
    நரித் தனம் எதுவும் இல்லை!
    அடிமையாய் அவளை அன்பால்
    ஆண்டிடத் துணைவன் வேண்டும் !

    அந்நிய நாட்டுக் கவளை
    அனுப்பியே உழைக்கத் தூண்டித்
    தின்றிடத் துடிக்கும் பேயர்
    தேவையே இல்லை ஆண்மை
    தன்னகம் கொண்டு வாழும்
    தகைமைசேர் துணைவன் வேண்டும்!

     

    Share
  • மனமாற்றம் வேண்டும்…!

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

    எழுத்தாளர் என்கின்றார் எழுதுவோருள்
    இவர்தானாம் மாமன்னர் செப்புகின்றார்
    “பழுத்தபழம்” போற்பேசும் இவரோயிங்கு
    படைத்தவையின் பட்டியலோ பூஜ்ஜியம்தான்!
    அழுத்தமுடன் எதைச் சொன்னார் புதுமையாக….?
    அசலுண்மை கடல் நீரா உப்பு என்றார்
    வெளுத்த நிறம் பாலென்றார்  வானில் நீந்தும்
    வெண்ணிலாவின் ஒளி தண்மை என்று சொல்வார்….!

    “நா” மெத்தத் தடித்ததனால் “நான்” நானென்று
    நலங்கெட்டவார்த்தைகளைக் கொட்டுகின்றார்!
    “பா” மெத்தப்படைத்தளித்த பாவாணர் போல்
    பல மேடைகண்டவர் போல் பகருகின்றார்!
    காமத்தைக் கருவாக கொண்டு ஏதோ
    கண்டபடி நாலைந்தைக் கிறுக்கியுள்ளார்
    நாமத்தை அச்சினிலே “பெரிதாய்ப்” போட
    நாய்படாப் பாடுபல படுகின்றாரே…..!

    பெண்ணழகைக் கவி செய்வார் பெண்களே இப்
    பெருவுலகில் பேறென்றும் சாற்றி நிற்பார்!
    பெண்ணொருத்தி எழுத்துலகில் முன்னே நிற்கப்
    பித்தரிவர் “பெருமனது” இடங் கொடாது
    வண்டமிழைக் கொண்டு இவர்வசைகள் பாடி
    வருத்தமுறச் செய்திடுவார் வார்த்தையாலே
    மண்டைதனில் கனம் கொண்டார் அறிவைத்தீட்டி
    மனமாற்றம் பெற்றுய்ய வேண்டுகிறேன்…..!

     

    Share