Tag: தமிழ்முகில் நீலமேகம்..

  • நன்றி

    பி.தமிழ்முகில் நீலமேகம்

    பார்கவி  அந்த அடுக்குமாடிக்   குடியிருப்பிற்கு  வந்து ஒரு வாரம் தான் ஆகியிருந்தது. அவர்களது அடுக்குமாடித் தொகுதியில் மூன்று தளங்கள் இருந்தன. இவர்களது  வீடு முதல் மாடியில் இருந்தது. தரை தளத்தைத் தாண்டி முதல் தளத்துக்கு வருமுன் உயிரை கையில் பிடித்துக் கொண்டே தான் வருவாள் பார்கவி. அவளது மகள் மகி குட்டிக்கோ, அதைவிட பெரும் பயம். எப்போதும் அந்த தரை தளத்தினைத் தாண்டும் வரை அம்மாவை ஒண்டிக் கொண்டே தான் செல்வாள். இவர்களது பயத்திற்கான காரணம், தரைதளத்தில் இருக்கும் மூன்றாம் எண்  வீட்டிலிருக்கும் திரு. ரோஜர்  அவர்களது  செல்லப் பிராணியே அதற்குக்  காரணம்.

    சீசர், கிட்டத்தட்ட அறுபத்தைந்து  பவுண்டு எடையும்,  முப்பது இன்ச் உயரமும் கொண்ட கம்பீர உயரம். காண்பவர் எவரும் சட்டென்று  பயந்துவிடக் கூடிய அளவுக்கு இருக்கும். ஆனால், திரு.ரோஜரோ , ” டோன்ட் ஒர்ரி. ஹீ  இஸ்  ஜஸ்ட் எ லிட்டில் பாய். ஹீ  வில் நாட் ஹார்ம்  எனிஒன்” (Don’t worry. He is just a little boy. He will not harm anyone)  என்று கூறுவார். அது மெல்ல உர்ரென்று  உருமினாலே, ஏதோ  ” பாய்வதற்கு தயாராக இருக்கிறேன். ஜாக்கிரதை ! ” என்று எச்சரிக்கை விடுப்பது போல் இருக்கும். பூட்டிய வீ ட்டினுள் தான் இருக்கும்.ஆனாலும் வெளியில் எவரும் நடக்கும் அரவம் கேட்டால் போதும், பயங்கரமாக குரைத்து, கதவைப் பிராண்டி, வெளியில் போய், வருபவர் மேல் பாய்ந்துவிட மாட்டோமா எனும்படியாகத் தான் இருக்கும் அதன் செய்கைகள்.

    ஒரு மாதம் சென்றிருக்கும். சில நாட்களாகவே ஏனோ சீசரின் சப்தம் கேட்பதே இல்லை. ஏனென்று சில வேளைகளில் பார்கவி எண்ணினாலும், “அப்பாடா. சில நாட்களாக நாயின் சப்தமோ, அரவமோ இல்லாததால் நிம்மதியாக நடமாட முடிகிறதே”  என்றெண்ணி  அமைதியானாள்.

    ஓர்நாள், துணிகளைத் துவைப்பதற்காக லாண்டரிக்குச்  சென்று  துணிகளை எல்லாம் மெஷினில் போட்டுவிட்டு, அங்கிருந்த சிறிய தகவல் பலகையை நோட்டமிட்டுக் கொண்டிருந்தாள். அப்போது, அவளது கண்ணில் அந்த அறிக்கை பட்டது.

    சீசரைப் பற்றிய விபரங்கள்…. அதன் நிறம், உயரம், எடை, பெயர், வகை, அதன் புகைப்படம் போன்றவற்றை  குறிப்பிட்டிருந்தனர். ” இதனால் தான் சில நாட்களாக சீசரின் சப்தம் கேட்பதில்லை போலும் ” என்று மனதினுள் எண்ணிக் கொண்டு, தன வேலைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பினாள் . அன்று மாலை பள்ளியிலிருந்து வீடு திரும்பிய  மஹி குட்டியிடம்  “சீசர் காணாம போயிடிச்சாம் மஹி மா…. லாண்டரில நோட்டீஸ் போட்டிருக்காங்க ” என்றாள் .

    ” அச்சச்சோ ! காணாம போயிடுச்சா ? பாவம் மா … அது சாப்பிட எல்லாம் என்ன  பண்ணுதோ ! ” என்று  மஹி  பாவமான குரலில் கூறினாள். சில நாட்களில் சீசர் பற்றி மறந்தே போயினர்.

    ஒரு நாள் மாலை, அதிகப்படியான குளிரும் இல்லாமல், மிகுதியான வெயிலும் இல்லாமல், சற்று இதமான சீதோஷணம்  நிலவியது. சற்று தூரம் காலாற நடந்து வரலாம் என தாயும் மகளும் கிளம்பினர். அவர்கள் இருந்த இடம், மரங்களடர்ந்த காட்டுப் பகுதி. சில காட்டுப் பகுதிகளை அழித்தே  அங்கு குடியிருப்புகளாகவும், அடுக்குமாடி  வீடுகளாகவும் கட்டி இருந்தனர். சற்று தூரம் நடந்து வந்தவர்கள், ” சரி , வீட்டுக்கு திரும்பி  போகலாம் ” என்றவாறு வீட்டிற்கு திரும்பி நடக்க ஆரம்பித்தனர். அவர்களது குடியிருப்பிற்கு அருகில் வந்ததும்  மஹி, ” ஏதோ முனகுற மாதிரி சத்தம் கேக்கல ? ” என்றாள்.

    ” இல்லையே ! ”  என்ற பார்கவியை  அங்கு அருகிலிருந்த பள்ளத்தாக்கினை  எட்டிப் பார்க்கச் சொன்னாள்  மஹி . எட்டிப் பார்த்தவளுக்கு  ஆச்சர்யம். அங்கு சீசர்  நின்று கொண்டு மேட்டின் மேல் ஏற முயற்சிப்பதும், சறுக்கி கீழே விழுவதுமாய் இருந்தது. அதைக் கண்டதும் பார்கவி, மேட்டின் மீது அமர்ந்து கொண்டு, கையை நீட்ட, சீசரும் சற்று முயன்று, பார்கவியின் கைகளை தொட, அப்படியே  அதைத் தூக்கி வெளியில் விட்டாள் பார்கவி. நடுங்கிக் கொண்டிருந்த சீசரை மெல்ல தடவிக் கொடுத்ததும், வாலாட்டி விட்டு, வேக வேகமாய் தன்  எஜமானனை தேடி ஓட  ஆரம்பித்தது.

    வீட்டிற்கு  தாயும் மகளும் வந்து சேர்ந்தனர். அப்போது, இவர்களின் வருகைக்காக காத்திருப்பது போல,  வாசலில் சீசர் தனது எஜமானர் ரோஜருடன் நின்று கொண்டிருந்தது. இவர்களைக் கண்டதும் வாலாட்டிக் கொண்டே, சுற்றிச் சுற்றி வந்தது. ” வீ   ஃபௌண்ட்  ஹிம் இன் தி வூட்ஸ். ஹீ  வாஸ் மோனிங் ஃபார் ஹெல்ப். வீ  ரெஸ்கியூட் ஹிம்.” ( We found him in the woods. He was moaning for help. We rescued him) என்றதும், ” தேங்க்ஸ்  எ லாட். ஐ  வில் பே  யூ  தி ரிவார்ட் ” (  Thanks a lot, I will pay you the reward) என்றார் திரு.ரோஜர். ” நோ…நோ… வீ  டோன்ட்  வான்ட்  தி ரிவார்ட். இட்ஸ்  ஜஸ்ட் எ ஸ்மால் ஹெல்ப் ” ( No…No… We don’t want the reward. It’s just a small help) என்று  மறுத்து விட்டார் பார்கவி. நன்றியுடன் தாயையும் மகளையும் பார்த்து வாலாட்டியது சீசர். பின் தன் எஜமானனை சுற்றி வந்து அவரது காலடியில் படுத்தது.

    அதன் பின், ஓர் நாளும் சீசர், இவர்களைப் பார்த்து குறைப்பதில்லை. மாறாக, நன்றியுடன் வாலாட்டியது .

    Share
  • நினைவுகள் !!!

    பி.தமிழ்முகில் நீலமேகம்

     

    ஏடெடுத்து எழுதி வைக்க

    எத்துனையோ நினைவுகளுண்டு !!!

    நினைவுகளை எல்லாம்

    வண்ண மலர்ச்சரமாக்கி

    அம்மலர்களின் சுகந்த நறுமணத்தில்

    இலயித்திருக்க பொழுதேது ???

     

     

    காற்றினில் கலந்து வந்து

    நாசியில் படிந்திடும் – மலரின்

    நறுமணம் போல்

    நினைவலைகளில் கலந்து வந்து

    நெஞ்சமதில் இனித்திடும்

    இனிய  இன்ப நினைவுகள் !!!

     

     

    கதிரவனின் ஒளி பட்டு

    மெல்ல விலகி   ஓடும்

    பனித்திரை என – உள்ளமதில்

    படிந்த  துன்பச் சுவடுகளை

    துடைத்தெறியும் பேரலையென

    மகிழ்வான தருணங்களின் நினைவலைகள் !!!

     

     

    மலரும்  நினைவுகளால்

    மனதினில் உருவாகுமோர்

    மகிழ்ச்சி ஊற்று !  – அது

    இதழின் ஓரத்தில்

    கொண்டு  வருமே

    அழகானதோர்  புன்னகை கீற்று !!!

     

     

    நினைவுகள் – அவை தாம்

    ஆகுமே உள்ளக் காயங்கட்கு

    நல்லதோர் அருமருந்தாய் !!

    அவையும் தான் வருடுமே

    துடித்த தவித்த உள்ளங்களை

    மென்மையான மயிலிறகாய் !!!

     

     

    Share
  • ஆசான்

    பி.தமிழ்முகில் நீலமேகம்

     

    அன்னையும் பிதாவும்

    கொடுத்த அறிவினை

    சுடர் விட்டெரிய செய்யும்

    தூண்டுகோல் !!!

     

    கண்டிக்கும் வேளையில்

    சற்று கரடு முரடு தான்

    கற்றுத் தரும்

    ஆசான்கள் எப்போதும் !!!

     

    அவர்தம் உள்ளந்தனில்

    மாணாக்கரின் நினைவுகள்

    என்றென்றும் – நினைத்தாலே

    இனிக்கும் கற்கண்டுகள் !!!

     

    கற்ற கல்வியையும் -பெற்ற

    அனுபவத்தையும் நாளும்

    போதனை மூலம் உலகிற்கு

    பரப்பிடும் ஒளி விளக்குகள் !!!

     

    அன்றாடம் கற்பித்தலின் மூலம்

    தானும் கற்றுக் கொண்டே

    இருக்கும் வளர்ந்து விட்ட

    பிள்ளைகள் -ஆசான்கள்!!

     

    படத்திற்கு நன்றி :  http://teachingwithcontests.com/wp-content/uploads/2011/03/comp.jpg

    Share
  • பெண்மை !!!

     

    பி.தமிழ்முகில் நீலமேகம்

     

    மகளிர் தினம் அன்னையர் தினம் என்று

    சொற்ப நாட்கள் மட்டும்

    கொண்டாடப் படவேண்டியதல்ல

    பெண்மை !!!

    என்றென்றும் மனதில்

    மரியாதைக்குரிய ஒன்றாய்

    ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதே

    பெண்மை !!!

    அன்னையாய் சகோதரியாய்

    மனைவியாய் தோழியாய்

    எத்துனையோ பரிணாமங்களில்

    பெண்மை !!!

    நாம் வாழும் வாழ்வு

    பெண்மையன்றி முழுமையடைந்திடுமோ ??

    நம்மை உலகிற்கு அறிமுகப் படுத்தியவள்

    பெண்ணன்றோ ??

    பெண்மையை போற்றி

    வணங்க வேண்டாம் ……

    அவர்தம் உள்ளம் தனை

    புரிந்து கொண்டாலே போதும் !!!

    அதிகாரம் செலுத்துவதாய்

    எண்ண வேண்டாம் ……

    அவர்தம் ஆதரவை

    உணர்ந்தாலே போதும் !!!

    பெண்மையின் அழகில்

    உலகமே விளங்கிடும்

    என்றென்றும்

    புதுப் பொலிவுடன் !!!

     

    Share
  • ஒரு மரத்தின் நாட்குறிப்பேட்டிலிருந்து ….

     

    பி. தமிழ்முகில் நீலமேகம்

     

     

    ஒரு மரத்தின் நாட்குறிப்பேட்டிலிருந்து :

     

    நிலத்துடன் உறவாடி

    காற்றுடன் கதை பேசி

    மேகத்துடன் நட்பு பாராட்டி

    எத்தனையோ புள்ளினங்களை

    எம் கரங்களில் தாங்கி

    தஞ்சம் கொடுத்து

    மனித குலத்திற்கு

    எம்மையே அர்ப்பணித்து

    தியாகச் சுடராய்

    உயிருடன் இருக்கும் போதும்

    மரித்து விட்ட பின்பும்

    ஏதேனுமொரு வகையில்

    பயனுளதாய் – எடுத்த பிறவியின்

    நோக்கம் தனை நிறைவேற்றிடும்

    நாங்கள் – மண்ணின் மைந்தர்களன்றோ ??

    எங்களைக் காத்தல் உங்களின்

    கடமையன்றோ மனிதர்களே ??

    இன்று உங்கள் சுயநலத்திற்காக

    எங்களை காவு வாங்குகிறீர் !!

    எதிர்காலத்தில் எமக்காய் நீங்கள்

    ஏங்கும் நாட்களும்

    வெகு தொலைவில் இல்லை !!

    சுதாரித்து எம்மைக் காத்தால்

    நாளைய வாழ்வு

    வளமாய் எம்முடன் !!!

    இல்லையேல் – மரமும்

    மனித இனமும் இனி

    அருங்காட்சியகத்தில் தான் !!!

    Share
  • பெண்களென்ன நாய்க் குட்டிகளா ???

    பி.தமிழ் முகில் நீலமேகம்

    வினோதினி… வித்யா….

    இன்னும் எத்தனை

    வனிதையர்  ஆசிட்டின்

    அகோரப் பசிக்கு

    இரையாகி – துடித்து

    பலியாயினரோ ???

     

    காதல் வந்துவிட்டது –

    உன்மேல் எனக்கு !!!

    ஒற்றை வார்த்தையைக்

    கேட்டதும் – உங்கள்

    பின்னால் ஓடிவர

    பெண்களென்ன நாய்க் குட்டிகளா ???

     

    விரும்பியதாகவும் காதலித்ததாகவும்

    கூறுகிறீர் – நீங்கள் விரும்பும் ஒன்றை

    கண்ணெனக் காக்க மாட்டீரோ ??

    விரும்பிய ஒன்றை

    உருத் தெரியாமல் சிதைக்கவும்

    மனம் ஒப்பிடுமோ ???

     

    உங்கள் சகோதரிகளை

    கண்ணென காத்திட

    துடிக்கிறீரே – எல்லாப்

    பெண்களும் எவரோ ஒருவரின்

    சகோதரி தானென்பது

    ஏன்  உங்களுக்கு விளங்கவில்லை ???

     

    வலியோர் அநீதி இழைத்துவிட்டு

    சட்டத்தின் திரைக்குப் பின்

    முகத்தை மறைத்துக் கொள்ள

    இழப்பும் வலியும் ஏனோ

    எளியோருக்கு மட்டுமே !!!

     

    இறைவா !!! இனி

    சிருஷ்டிக்கும் ஒவ்வோர்

    பெண் சிசுவுக்கும்

    உறுதியான பாதுகாப்பான

    கவசத்தை கொடுத்து விடு !

    ஏனெனில், உன் பிரபஞ்சத்தில்

    பாவையருக்கு பாதுகாப்பு இல்லை !!!

     

    படத்துக்கு நன்றி: http://www.vikatan.com/entrichy/2012/09/zjexod/images/blog-4.jpg

     

    Share
  • ஆசான்

    பி .தமிழ்முகில் நீலமேகம்

    அன்று  கல்லூரியின் கடைசி  வேலை நாள். பரீட்சைகள் அனைத்தும் முடிவடைந்து, அன்று  விடைத்தாட்கள் விநியோகிக்கப் பட்டு, மாணவர்களால் சரிபார்க்கப் படும். அதன் பின்னே, பரீட்சை முடிவுகள் அனைத்தும் வெளியிடப்படும். இது அந்தக் கல்லூரியின் வழக்கமாய் இருந்தது.

    நகரின் அந்த புகழ்பெற்ற மகளிர் கல்லூரியில் விரிவுரையாளராய் பணியாற்றி வந்தாள்  சசிகலா. திருத்திய விடைத்தாட்களை எடுத்துக் கொண்டு அந்த முதுகலை இறுதியாண்டு வகுப்பிற்குள் நுழைந்தாள்.மாணவிகளுக்கு விடைத்தாட்களை கொடுத்துவிட்டு, எவருக்கேனும் மதிப்பெண் வழங்கியதில் ஏதேனும் ஐயமிருப்பின் தன்னை அணுகுமாறு கூறிவிட்டு அமர்ந்தாள்.

    சற்று நேரத்தில், மாணவி ஜனனி வந்து விடைத்தாளில் ஏதோ சந்தேகம் கேட்டாள். அவளது சந்தேகத்தை தெளிவடையச் செய்துவிட்டு, அவள் முதல் மதிப்பெண் பெற்றிருந்தபடியால், அவளுக்கு வாழ்த்துகளைக் கூறிவிட்டு,       “மாணவிகளே ! உங்களுக்கு வழங்கியுள்ள மதிப்பெண்களில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தயங்காமல் வந்து கேளுங்கள்” என்றாள். அப்போது, ஆர்த்தி என்ற மாணவி விடைத்தாளுடன் வந்தாள்.

    “என்ன ஆர்த்தி? ” என்று கேட்டு சசிகலா முடிக்கும் முன், ஆர்த்தி அழ ஆரம்பித்து விட்டாள்.

    “மேடம், தயவு செய்து என்னை பாசாக்கி விட்டுருங்கள். அரியர்ஸ் வந்தால், எனக்கு ஒரு  வருஷம்  வேஸ்ட் ஆயிடும். ப்ளீஸ், கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க” என்று கெஞ்சினாள்.

    பேப்பரை வாங்கிப் பார்த்தாள்  சசிகலா. மதிப்பெண் போடுவதற்கு வழியே இல்லாமல் இருந்தது. என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, சிந்தியா அங்கு வந்தாள். அவளும் அவ்வகுப்பில் ஆர்த்தியுடன் பயிலும் மாணவி.

    “மேடம், நீங்கள் ஃபர்ஸ்ட் மார்க் வாங்குன ஜனனிக்கு யுனிவர்சிட்டி ப்ரொஃஃபிஷியன்சி கிடைக்கறதுக்கு மார்க் குறையுதுன்னு போட்டுக்  குடுத்த போது,  ஃபெயில் ஆன ஆர்த்தி பாஸ் ஆக ஏன் மார்க் போடக் கூடாது” என்றாள்.
    சசிகலாவிற்கு அவள் சொன்னதைக் கேட்டதும் ஆத்திரத்தில் கண்கள் சிவந்தன. ஏனெனில், அவள் அங்ஙனம் பாரபட்சம் பார்ப்பவளில்லை. ஜனனிக்கு அவள் போடாமல் விட்டிருந்த மதிப்பெண்களையே போட்டிருந்தாள்.

    ஆத்திரம் மேலோங்க, “சிந்தியா !  உன்  பேப்பரைக் கொண்டு வா…” என்றாள். வந்தவளிடம் பேப்பரை வாங்கி ஆத்திரத்துடன் சிந்தியாவின் விடைத்தாளில் பத்து மதிப்பெண்கள் குறைத்துக் கொடுத்து அனுப்பி விட்டாள். அவளுக்கு அன்று முழுவதும் ஏனோ மனம் சரியாகவே இல்லை.

    மாலை, கல்லூரி முடிந்ததும், சற்று நேரம் பூங்காவிற்கு சென்றுவிட்டு வீட்டுக்குச் செல்லலாம் எண்றெண்ணியவள், சற்று நேரத்தில் பூங்காவினை வந்தடைந்தாள். மரநிழலில் வந்தமர்ந்தவள், சுற்றியோடும் அணில்களையும், கீச்சிட்டுச் சுற்றும் பறவைகளையும் இரசித்துக் கொண்டிருந்தாள். அவளது மனதில் அன்றைய சம்பவம்   நிழலாடியது.

    “சே…நன்றாக படிக்கக் கூடிய மாணவி தான்.தன் அதிகப்ப்ரசங்கித் தனத்தால்,  ஆத்திரத்துக்கு ஆளாகி, தன் மதிப்பெண்களை இழந்ததோடில்லாமல், என் மனநிம்மதியையும் குலைத்து விட்டாளே இந்த சிந்தியா ! ” என்றவளது சராசரி மானுட மனம் எண்ணியது.

    “நாளை சிந்தியாவை,  அவளது ஆராய்ச்சிக் கட்டுரையை பிரசுரத்திற்கு அனுப்ப  தயார் செய்யச் சொல்ல வேண்டும். இரண்டு மாதம் கழித்து நடக்கவிருக்கும்  தேசிய அளவிலான அறிவியல் மாநாட்டிற்கு அவள் தயார் செய்து, என்னிடம் தந்த கட்டுரை மற்றும் நழுவல் படங்களை பார்வையிட்டு, குறைகள் இருப்பின் திருத்தச் சொல்லி, அவளை மாநாட்டில் பேச தயார் செய்ய வேண்டும் ” என்றவளது ஆசான் மனம் எண்ணியது.

         ” ஓர் நல்லாசானுக்கு மாணாக்கரிடையே என்றுமே உயர்வு தாழ்வு ஏற்படுவதில்லை !!! “
                           

    Share
  • இயற்கை

     

     

    பி.தமிழ்முகில் நீலமேகம்

     

    இறைவனின் திறமையில் உருவான

    கற்பனை  ஓவியம் …….. உலகம்….

    இறைவன் தன் எண்ணற்ற திறமைகளை

    தனது உலக ஓவியத்தில்

    தீட்டி வைத்துள்ளான்……….

    நீரோடையென……..கடலென ……

    மலையென…… நிலமென ……..

    நீரென…..காற்றென…..

    அந்த வண்ண ஓவியத்தில்

    நாமும் நடமாடும்

    கதாபாத்திரங்கள்……

    நாம் இருக்கும் அழகான ஓவியத்தை/ புகைப்படத்தை

    பொக்கிஷமாய் காப்போம் அன்றோ???

    காத்திடுவோம் – இறைவன்

    நமக்களித்த இயற்கையை…….

    நம் பொக்கிஷமென……

    விட்டுச் செல்வோம் – நம்

    சந்ததிக்கு   வளமான இயற்கையை வரமாய்……..

    படத்திற்கு நன்றி:

    http://www.prelovac.com/vladimir/beautiful-nature-pictures

    Share
  • முரண்

     

     

    பி.தமிழ்முகில் நீலமேகம்

     

    ஆதவன் கூட தூக்கக் கலக்கத்தினின்று

    விடுபடாத இந்த கருக்கலில்

    எங்கோ அவசரமாய்

    எதையோ தேடி ஓடுகிறீர்களே…..

    எனதருமை மானிடர்களே…

    சற்று நில்லுங்கள்!!!

    எங்கே செல்கிறீர்கள்?

    உங்களது இல்லத்திற்கா? அல்லது…

    அலுவலகத்திற்கா??

    இரவெல்லாம் கண்விழித்து

    பகலெல்லாம் கண்ணயரும் அதிசயம்

    உங்களிடம் மட்டும் தான் காண்கிறேன்…

    அதுவும்…. சில காலமாய்த்தான்…

    சுறுசுறுப்பாய் செயல்பட  பகலையும்….

    இளைப்பாறித் துயிலுற இரவையும்

    இறைவன் காரணமின்றிப் படைத்திருக்க மாட்டான்!!!

    ஆனால் …..  இன்றோ…..

    அனைத்தும் தலைகீழாய்….

    ஏனிந்த முரணான மாற்றம்????

    படத்திற்கு நன்றி:

    http://www.prelovac.com/vladimir/beautiful-nature-pictures

    Share
  • மின்வெட்டு !!!

     

    பி.தமிழ்முகில் நீலமேகம்

     

    ஏர் கண்டிஷனும்  ஃபேனும்  தான்

    உதவாமல் போய்விட

    கைகொடுப்பது பனையும்

    தென்னையும்  தான் – விசிறிகளாய் !!!

     

    கிரைண்டரும் மிக்சியும்

    ஓரமாய் படுத்துறங்க -மீண்டும்

    துள்ளியோடி வந்து வாசலை

    அலங்கரிக்குது – அம்மியும் ஆட்டுரலும் !!!

     

    குளிர்ந்த நீருக்காக ஃப்ரிட்ஜ் அருகே

    காத்திருந்த காலம் மாறி

    கண்ணுக்கு அழகாய் கைக்கடக்கமாய்

    ஆரோக்கியத்துடன் – மண்பானைகள் !!!

     

    டிவியில் லயித்து – உலகை மறந்திருந்தோர்

    இப்போது சுற்றியிருப்போரின்

    முகங்களில் சிரிப்பினைப்

    பார்க்கவும் பழகியிருக்கிறார்கள் !!!!

     

    கம்ப்யூட்டரால் கட்டுண்டிருந்த குழந்தைகளுக்கு

    இப்போது  மனப்பயிற்சியும் உடற்பயிற்சியும் ….

    தாயமும் பரமபதமும் – கண்ணாமூச்சியும்

    தொட்டு விளையாட்டும் கூட விளையாடுகிறார்கள் !!!

     

    செயற்கையோடு செயற்கையாகவே

    வாழப் பழகிவிட்ட நமக்கு- இயற்கையோடு

    இயைந்த வாழ்வினை அதன் சிறப்பினை

    நமக்கு கற்றுத் தருகிறது – மின்வெட்டு !!!

    Share
  • தொலைதூரக் காதல்

     

     

    பி.தமிழ் முகில் நீலமேகம்

     

    உன் நினைவுகளில் நானும்

    என் நினைவுகளில் நீயும்

    நீங்காது நிலைத்திருக்க

    தூரமும் தொலைவும் தான்

    காதலை பிரித்திடுமா என்ன ???

     

    அருகாமையும் அரவணைப்பும்

    உணர்த்தாத காதலை

    பிரிவும் தொலைவும்

    தெள்ளத் தெளிவாய்

    படம் பிடித்துக் காட்டிடாதோ ???

     

    அனுதினமும் வளர்ந்திடுமே

    அளவிலா   காதலும் ….

    பிரிவதுவும் ஏற்படுத்துமே

    ஆழமான வலுவான

    அன்பின்  அஸ்திவாரம் !!!

     

    உந்தன் அன்பின் அருமையை

    எனக்கும் ……எந்தன் –

    காதலின் வலிமையை

    உனக்கும் ……உணர்த்திடாதோ ???

    இந்த தொலைதூரக் காதல் !!!

    Share
  • இனி ஒரு பிறவி வேண்டாம்…!

     

     

    பி.தமிழ் முகில் நீலமேகம்

     

    செய்நன்றி தனை மறந்து

    முகத்துக்கு முன் துதியும்

    முதுகுக்குப் பின் மிதியடியும்

    மலிந்து விட்ட சமூகத்தில் –

    இனியும் வேண்டாம் ஒரு பிறவி !!!

     

    பெயரளவில் பெண்ணுரிமை

    என்றுரைத்து விட்டு

    வழக்கமான கடிவாளங்களை

    பொன்னால் பூட்டும் உலகில்

    இனியும் ஒரு பிறவி – வேண்டவே வேண்டாம் !!!

     

    உழைப்பவன் செவ்வனே உழைக்க

    எவனோ ஒருவன் – அட்டையென

    உழைப்பை உறியும் கேடு கெட்டோர் மத்தியில்

    இனியும் வேண்டாம் –

    ஐம்புலன் மூடி வாழும் ஓர் பிறவி !!!

     

    யாமின்றி அணுவும் அசையாது

    என்னால் ஆகிடாதது ஏதுமுண்டோ ? – என்று

    எக்காளச் சிரிப்புதிர்க்கும் இலஞ்சக்

    காட்டேரிகளின் மயான உலகில்

    புல்லாய்க் கூட – வேண்டாம் ஓர் பிறவி !!!

     

    படத்துக்கு நன்றி: http://www.mea.org/advertising/enoughads.html

    Share
  • ப்ரைவசி

    பி.தமிழ்முகில் நீலமேகம்

                  ஶ்ரீலஷ்மி, அந்த அப்பார்ட்மென்ட்ற்கு புதிதாய் தன் பிள்ளை மற்றும் கணவர் சுகந்தனுடன் வந்து குடியேறியிருந்தாள். அவளது கணவரது பணி மாற்றல் காரணமாய் மிச்சிகன் மாநிலம் டெட்ராய்ட் நகரத்திலிருந்து, பென்சில்வேனியாவிலிருந்த ஃபோர்ட் வாஷிங்டன் நகரத்திற்கு புதிதாய் வந்திருந்தார்கள். சில நாட்கள் ஹோட்டலில் தங்கி இருந்து அருகிலிருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் ஏதேனும் காலி மனைகள் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். சுகந்தனின் அலுவலகம் இருக்கும் சாலையிலேயே அவர்களுக்கு அப்பார்ட்மென்ட் கிடைத்தது. அந்த வார இறுதியில் குடியேற முடிவு செய்து அப்பார்ட்மென்டில் ஏதேனும் செப்பனிடும் வேலைகள் இருக்கின்றனவா என்று பார்க்கச் சென்று இருந்தார்கள். அப்போது, அங்கு வசித்து வந்த ஓர் தமிழ்க் குடும்பத்தினரைக் கண்டனர். அவர்கள் தாங்களாகவே வந்து தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். அருகில் ஓர் தமிழ்க் குடும்பம் வசிப்பதை அறிந்த ஶ்ரீலஷ்மிக்கு மிகுந்த மகிழ்ச்சி. நம் தாய்மொழியில் பேசி உறவாடி மகிழ நம் தேசத்தைச் சேர்ந்தவர் அருகில் உள்ளனர் என்று எண்ணி மகிழ்ந்தாள்.

    ஒரு வாரத்திற்குப் பின், அவர்கள் அங்கு குடியேறினர். அவ்வப்போது சந்திக்கும் வேளைகளில், அந்தப் பக்கத்து வீட்டுத் தமிழ்ப் பெண் ஶ்ரீலஷ்மியுடன் நன்றாகவே பேசினாள். அதன் பின் வந்த பண்டிகை நாளொன்றில் இருவருமாய் சேர்ந்து பலகாரம் செய்து பரிமாறிக் கொண்டார்கள். சில நாட்களில், அவர்கட்கு சில நல்ல நண்பர்கள் கிடைத்தனர். அனைவரும் வாரத்திற்கு ஒருமுறை தங்கள் பிள்ளைகளுடன் ஒன்று கூடி பேசி, பிள்ளைகட்கு நண்பர்கள் வட்டத்தினை ஏற்படுத்திக் கொடுத்தனர். அவர்களும், அருகிலிருக்கும் இந்தியக் கடைகள், அங்கு விற்கும் பொருட்களின் தரம், மலிவான விலையில் தரமான பொருட்கள் கிடைக்கும் இடங்கள், அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் கோயில்கள், குடும்பச் சுற்றுலா செல்ல ஏதுவான இடங்கள் போன்றவற்றை எல்லாம் விவாதித்தனர். ஶ்ரீலஷ்மிக்கு ஓர் நல்ல நட்பு வட்டம் பக்கத்து வீட்டுப் பெண்ணின் மூலம் கிட்டியதில் மிக்க மகிழ்ச்சி.

    ஓர் ஊரிலிருந்து வேறு ஊருக்கு மாற்றலாகிப் போகும் போது, அவர்கள் போகும் ஊரில் இருக்கும் நல்ல அப்பார்ட்மெண்ட்கள், அருகில் அத்தியாவசியத் தேவைகட்கான கடைகள், போக்குவரத்து வசதிகள் போன்றவற்றை இணையத்தில் செயல்படும் மன்றங்கள் (forums) வாயிலாக அறிந்து கொள்வது ஶ்ரீலஷ்மியின் வழக்கம். அப்படித்தான் அவள் இம்முறையும், ஃபோர்ட் வாஷிங்டன் நகரத்தினை பற்றி அறிந்து கொள்வதற்காக ஓர் மன்றத்தில், தனது சந்தேகங்களை ஓர் பதிவாகப் போட்டிருந்தாள். அந்த மன்றத்தின் இணைய பக்கத்தில் அவளது பதிவிற்கு வந்திருந்த பதில்களைப் அவ்வப்போது பார்த்துக் கொள்வாள். அவ்வாறு ஒரு சமயம் பார்த்துக் கொண்டிருந்தவள், அந்தப் பக்கத்து வீட்டுப் பெண் அவளது பதிவுகட்கு, பதிலளித்திருப்பதைக் கண்டாள். பக்கத்து வீட்டுப் பெண் அவளுடன் தனது மின்னஞ்சல் முகவரியை பகிர்ந்து கொண்டதினால், ஶ்ரீலஷ்மியால் அவளை அந்த மன்றத்தில் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. அடுத்த முறை சந்தித்த போது, அப்பெண்ணிடம், “எனது கேள்விகட்கு நீங்கள் இணைய மன்றத்தில் பதிலளித்திருந்தீர்கள். மிக்க நன்றி” என்றாள். அதன் பின், ஶ்ரீலஷ்மி அதை மறந்து விட்டாள்.

    சில நாட்கள் சென்றன. ஶ்ரீலஷ்மிக்கு பக்கத்து வீட்டுப் பெண்ணின் போக்கில் மாற்றம் தெரிந்தது. அவள் முன் போல் தன்னிடம் பேசுவதில்லை என்பதை உணர்ந்தாள். அவளது பாராமுகம் ஶ்ரீலஷ்மிக்கு வருத்தமாய் இருந்தது. அவளுக்கு ஏனோ மனதே சரியில்லை. நாம் யாரையும் எந்த விதத்திலும் துன்புறுத்தியதோ, தொந்தரவு செய்ததோ கிடையாதே….நம்மையும் அறியாது அவரை கஷ்டப்படுத்தி விட்டோமோ?? நம்மை அவர்களுக்கு பிடிக்கவில்லையோ?? என்றெல்லாம் மனதைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தாள் . நேரில் போய்க் கேட்டுவிடலாமா என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள். அலுவலகத்திலிருக்கும் தன் கணவனைத் தொலைபேசியில் அழைத்து, தன் மனக் குமுறலைக் கொட்டித் தீர்த்தாள்.

    அன்று மாலை, அவர்களது தோழிகளில் ஒருவரை சந்தித்தாள். வழக்கமான விசாரிப்புகள், பேச்சுகளின் போது அவர், “ உங்களது பக்கத்து வீட்டுப் பெண், நீங்கள் அவரது ப்ரைவசியில் தலையிடுவதாக குறைபட்டுக் கொள்கிறாரே. நீங்கள் இணைய மன்றத்தில் அவரது பதிவுகளை எல்லாம் தேடித் தேடி படிப்பதாகவும் குறை கூறுகிறாரே. என்ன நடந்தது? “ என்றார். அப்போது தான் ஶ்ரீலஷ்மிக்கு என்ன  நடந்திருக்கும் என்பது புரிந்தது. சிரித்துக் கொண்டாள். அவரிடம், “ அவர் இணைய மன்றமொன்றில் இங்கு இருக்கும் இந்தியக் கடை பற்றியும், அங்கு பொருட்களின் தரம் பற்றியும் பதிவிட்டிருந்தார். அதை பார்த்ததாக அவரிடம் கூறினேன்.அதைத் தான் அவர், அவரது ப்ரைவசியில் நான் தலையிடுவதாக உங்களிடம் கூறியிருக்கிறார்.சாதாரண விஷயத்தை பெரிது படுத்துகிறார்” என்றாள் ஶ்ரீலஷ்மி. “ஓ…இதுதானா விஷயம்.இதிலென்ன இருக்கிறது?” என்று சிரித்தார் அந்த தோழி. பக்கத்து வீட்டுப் பெண்ணின் பாராமுகத்திற்கான காரணத்தை உணர்ந்து கொண்ட ஶ்ரீலஷ்மி மனதினுள் சிரித்துக் கொண்டாள். இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டாள்.

    Share
  • Why does the Touch-Me-Not plant (Mimosa pudica) closes its leaves when touched?

     

    Thamizhmukil

     

                

     

                                          It is thought that the Touch-Me-Not (Mimosa pudica) plant closes its leaves when touched as a defense mechanism to prevent it selves from the insects or other herbivores. Nyctonastic movements, which are reactions that happen in absence of light, cause the Mimosa to close its leaves. The opening and closing of the leaves is controlled by a fluid-filled sac like structures found at the base of the leaves and each leaflet. The swollen base of the leaf is called as pulvinus. When the plant is touched, electrical signals are produced by the cells. The cells in the `pulvinus’ respond to this signal by flushing out potassium and water to the adjacent cell. With the massive loss of water, the leaves become flaccid and the pulvinus bends over and the leaflets fold. This causes the leaves of the plant to close. If the leaves are left undisturbed for few seconds, they open again.

     

    Share
  • கரைசேரா ஓடங்கள்

     

    தமிழ்முகில்

     

     

     

     

     

     

     

     

     

     

    கண்ணின் இமையென
    பாதுகாத்து நின்ற
    தாயும் நினைவிற்கு
    வரவில்லை !!!
    உந்தன் உயர்வே
    எந்தன் மனக்கனவு
    என்றிருந்த தந்தையும்
    மனக்கண் முன்
    தோன்றவில்லை !!!
    உனக்கு விட்டுக் கொடுக்கவே
    எனது இந்த  அவதாரம்
    என்றுரைத்த உடன் பிறப்பும்
    மறந்து போய்விட்டது !!!
    ஏனோ ??  
    காதல் – கண்ணை
    மறைத்து விட்டது !!!
    வாழ்க்கை சமுத்திரம் கடக்க
    காதல் ஓடம்  ஒன்றே
    போதுமென்றெண்ணி விட….
    ஓடமும் தான் சென்றது –
    நீரின் மேல்
    மெல்லிறகாய் சிலகாலம் !!!
    தென்றலில் மட்டுமே
    அசைந்தாடிப் பழகியிருந்தபடியால்
    புயலைக் கண்டதும்
    நிலை தடுமாறிட …..
    தத்தளித்து நின்று
    கரை சேர நினைத்த போது தான்
    தெரிந்தது – தான் நிற்பது
    நடுச் சமுத்திரத்தில் என்று !!!
    சமுத்திரத்தில் மூழ்கி
    முத்தெடுக்கவும் முடியவில்லை …..
    கரை தேடி ஒதுங்கவும்
    இயலவில்லை ……
    வாழ்வும் இங்கு
    தள்ளாடுது – கரை சேரா ஓடமாய் !!!

    Share