Tag: திருக்குவளை மீ.லதா.

  • “பெரும் தலைவர்” – கர்மவீரர் காமராசர்!

    திருக்குவளை மீ.லதா.

    தமிழ்நாட்டின் தலைமகன்
    இந்தியாவின் பெருந்தலைவன்
    பிள்ளை மனம் கொண்ட தங்கமகன்
    கம்பீர நடை கொண்ட சிங்கமகன்
    செல்வம் சேர்க்காத செல்வமகன்
    ஏழைகளின் செல்ல மகன்
    சாதனைகளின் சரித்திர நாயகன்…
    எங்கள் கல்விக்கண் திறந்த
    ஐயா உங்கள் பாதம் பணிகிறோம்

    தந்தை பெரியார் அவர்களால் தமிழ் நாட்டின் இரட்சகர் என்று அழைக்கப்பட்ட கல்வி வள்ளல் பெருந்தலைவர் காமராசர். நூற்றுப் பத்து ஆண்டுகளுக்கு முன் மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்து ஆறாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்று, தம் கடுமையான உழைப்பால் அகில இந்தியத் தலைவர் என்ற அளவுக்கு உயர்ந்த காமராசர் பெயரால், கால் நூற்றாண்டுக்கு முன் டெல்லியில் ஓர் அறக்கட்டளை தொடங்கப்பட்டது.

    அதன் காரணம் என்னவென்று கேட்டபோது இந்தியாவில் ஒருவர் அகில இந்தியத் தலைமைப் பொறுப்புக்கு வரவேண்டுமென்றால் அவர் முதலில் மேல்சாதிக்காரராக, குறிப்பாகப் பார்ப்பனராக இருக்க வேண்டும். ஒரு பாரம்பரியமிக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அவர் மேல்நாட்டுப் படிப்புப் படித்திருக்க வேண்டும். அடுத்தபடியாக அவர் வடநாட்டுக்காரராக இருக்க வேண்டும். அதிலும் இந்திக்காரராக இருக்க வேண்டும். அதைவிட முக்கியமாக அவர் சிவப்பு நிறத்தவராகப் பார்ப்பதற்குக் கவர்ச்சிகரமாக இருக்க வேண்டும். இந்த ஆறு அடையாளங்களில் ஒன்று கூட இல்லாமல் ஓர் அகில இந்தியத் தலைவராக வந்தார் என்றால் அது காமராசர் ஒருவர்தான் என்று பதில் சொன்னார்கள்.

    கறுப்புக் காந்தி என்றழைக்கப்பட்ட காமராசர்தான் இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக இருந்த ஜவகர்லால் நேரு மறைந்தபோது லால்பகதூர் சாஸ்திரியை ஏகமானதாகத் தேர்வு செய்தவர். அவரது திறமையை, பெருமையை உலகமே பாராட்டியது.

    அன்றைக்கு 16 ஆயிரம் மக்கள் மட்டுமே வசித்து வந்த விருதுநகரில் மேகவர்ணம் என்ற பிரிவினரைச் சேர்ந்த பிரபல வியாபாரியான குமாரசாமி நாடார் – சிவகாமி அம்மையாருக்கு 1903-ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் நாள் காமராசர் பிறந்தார். அங்கே சத்திரிய வித்தியா சாலை என்ற பள்ளியில் அவர் 6-ஆம் வயதில் சேர்க்கப்பட்டார். இந்தப் பள்ளிக் கூடத்திற்கு ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு கைப்பிடி அரிசி கொண்டு போய் கொடுக்கவேண்டும். ஆதலால் இப்பள்ளி பிடியரிசிப் பள்ளிக்கூடம் என்று அழைக்கப்பட்டது. காமராசரின் 12-ஆம் வயதிலேயே அவரது தந்தையார் எதிர்பாராது முடிவெய்திய காரணத்தால் அவரது பள்ளி செல்லும் வாய்ப்பு நிறுத்தப்பட்டது.

    1920-ஆம் ஆண்டு, காந்தி அறை கூவல் விடுத்த ஒத்துழையாமைப் போராட்டத்தின்போது காமராசர் அதை ஏற்று, போராட்டத்தில் பங்குகொண்டார். விருதுநகரில் மட்டுமன்றி சுற்று வட்டார கிராமங்கள் எல்லாவற்றுக்கும் நடந்தே சென்றுதான் பிரச்சாரம் செய்தார். ஒரு முறை 60 கிலோ மீட்டர் சுற்றி மதுரைக்கு நடந்து சென்று கட்சிப் பணியாற்றி விட்டுத் திரும்பி வந்தார்.

    1924-ஆம் ஆண்டு, தந்தை பெரியார் கேரள மாநிலம் வைக்கத்தில் நடத்திய போராட்டத்தில் ஒரு தொண்டராக காமராசர் விருதுநகரிலிருந்து சென்று வந்தார்.
    காங்கிரஸ் தலைவராக 1940-இல் காமராசர் வெற்றி பெற்றார். அப்போது அவரைத் தேசத்துரோகி எனக் குற்றம் சாட்டி பிரிட்டிஷ் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.

    1941-ஆம் ஆண்டு, அவர் சிறையில் இருந்தபோதே விருதுநகர் நகராட்சித் தலைவ ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறையிலிருந்து விடு தலையாகி வெளியே வந்து நகராட்சித் தலைவர் என்ற முறையில் கூட்டத்தை நடத்தி விட்டுப் பின் அந்தப் பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். இந்தப் பதவியில் இருந்தால் காங்கிரஸ் கட்சியின் இதர கட மைகளையெல்லாம் கவனித்துச் செய்ய முடியாது என்ற காரணத்தால்தான் அப்பதவியிலிருந்து விலகினேன் என்று அவர் சொன்னார். அதுபோலவே பொதுத்தொண்டு செய்பவருக்குத் திருமணம் ஒரு தொல்லை என்று முடிவு செய்து திருமணத்தைத் தவிர்த்து கடைசிவரை பிரமச்சாரியாகவே வாழ்ந்து தொண்டாற்றினார்.

    காமராஜரின் தமிழகம் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாய் இருக்கிறது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் சொல்லி இருக்கிறார்.

    காமராசர் பற்றிய குறிப்பு:
    காமராஜருக்குக் கோபம் வந்து விட்டால் அவ்வளவுதான், திட்டித் தீர்த்து விடுவார். ஆனால் அந்தக் கோபம் மறுநிமிடமே பனி கட்டி போல கரைந்து மறைந்து விடும்.

    தமிழ்நாட்டில் எந்த ஊர் பற்றி பேசினாலும், அந்த ஊரில் உள்ள தியாகி பெயர் மற்றும் விபரங்களை துல்லியமாகச் சொல்லி ஆச்சரியப்படுத்துவார்.

    தனது பாட்டி இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட காமராஜர் தோளில் துண்டு போடப்பட்டது. அன்று முதல் காமராஜர் தன் தோளில் துண்டை போட்டுக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

    கதர்த்துண்டுகள் அணிவித்தால் காமராஜர் மிக, மிக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். ஏனெனில் அந்தக் கதர்த்துண்டுகள் அனைத்தையும் பால மந்திர் என்ற ஆதரவற்றோர் இல்லத்துக்குக் கொடுத்து விடுவார்.

    1966-ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பேசிய காமராஜர், “மக்களுக்குக் குறைந்த விலையில் பொருட்களை வழங்கும் தொழில்களை நிறையத் தொடங்க வேண்டும்” என்றார். இந்த உரைதான் இந்திய பொருளாதார துறையில் மாற்றங்களை ஏற்படுத்தியது.

    பெருந்தலைவரை எல்லாரும் காமராஜர் என்று அழைத்து வந்த நிலையில் தந்தை பெரியார்தான் மேடைகள்தோறும் “காமராசர்” என்று கூறி நல்ல தமிழில் அழைக்க வைத்தார்.

    காமராஜருக்கு “பச்சைத்தமிழன்” என்ற பெயரை சூட்டியவர் ஈ.வெ.ரா.பெரியார்.

    பிரதமர் நேரு, காமராஜரை பொதுக் கூட்டங்களில் பேசும் போதெல்லாம், “மக்கள் தலைவர்” என்றே கூறினார்.

    தமிழ்நாட்டில் காமராஜரின் காலடி தடம் படாத கிராமமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர் எல்லாக் கிராமங்களுக்கும் சென்றுள்ளார். இதனால்தான் தமிழ்நாட்டின் பூகோளம் அவருக்கு அத்துப்படியாக இருந்தது.

    காமராஜர் திட்டத்தின் கீழ் காமராஜரே முதன் முதலாக தாமாக முன் வந்து 2.10.1963ல் முதல் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார்.

    காங்கிரஸ் கட்சியை மிக, மிகக் கடுமையாக எதிர்த்து வந்தவர் ராமசாமி படையாச்சி, அவரையும் காமராஜர் தன் மந்திரி சபையில் சேர்த்துக் கொண்ட போது எல்லோரும் ஆச்சரியப்பட்டனர்.

    சட்டத்தைக் காரணம் காட்டி எந்த ஒரு மக்கள் நலத் திட்டத்தையும் கிடப்பில் போட காமராஜர் அனுமதித்ததே இல்லை. “மக்களுக்காகத்தான் சட்டமே தவிரச் சட்டத்துக்காக மக்கள் இல்லை” என்று அவர் அடிக்கடி அதிகாரிகளிடம் கூறுவதுண்டு.

    தவறு என்று தெரிந்தால் அதைத் தட்டி கேட்கக் காமராஜர் ஒரு போதும் தயங்கியதே இல்லை. மகாத்மா காந்தி, தீரர் சத்தியமூர்த்தி உள்படப் பலர் காமராஜரின் இந்தத் துணிச்சலால் தங்கள் முடிவை மாற்றியது குறிப்பிடத்தக்கது.

    காமராஜர் எப்போதும் “முக்கால் கை” வைத்த கதர்ச் சட்டையும், 4 முழு வேட்டியையும் அணிவதையே விரும்பினார்.

    காமராஜர் அவர்கள் திருநெல்வேலி மக்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்

    காமராஜரின் எளிமை நேருவால் போற்றப்பட்டிருக்கிறது. ‘எனக்குத் தெரிந்து இவருடைய சட்டைப் பையில் பணம் இருந்ததில்லை’ என்று நேரு குறிப்பிட்டதுண்டு.

    காமராஜர் நாளிதழ்களை படிக்கும் போது எந்த ஊரில் என்ன பிரச்சினை உள்ளது என்பதை உன்னிப்பாகப் படிப்பார். பிறகு அந்த ஊர்களுக்குச் செல்ல நேரிடும் போது, அந்தப் பிரச்சினை பற்றி மக்களுடன் விவாதிப்பார்.

    காமராஜர் ஒரு தடவை தன் பிரத்தியேக பெட்டிக்குள், இன்சைடு ஆப்பிரிக்கா, என்ட்ஸ் அண்ட் மீன்ஸ், டைம், நியூஸ்வீக் ஆகிய ஆங்கில இதழ்களை வைத்திருப்பதைக் கண்டு எழுத்தாளர் சாவி ஆச்சரியப்பட்டார்.

    காமராஜரின் தன்மானம்:
    காமராஜர் நாகர்கோவில் தொகுதியில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லியில் தங்கி இருந்தபோது, அமெரிக்க அதிபர் நிக்சன் இந்தியா வந்தார். காமராஜரைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரைச் சந்திக்க விரும்பினார். ஆனால் காமராஜர் சந்திக்க மறுத்து விட்டார். உடனே உதவியாளர் அதிர்ச்சி அடைந்து, ”உலகமே பெருமைப்படும் அமெரிக்க அதிபரே உங்களைப் பார்க்க விரும்பும் போது…” என்று இழுத்தார். அதற்குக் காமராஜர் நிதானமாகப் பதில் சொன்னார், ”அவரு பெரிய ஆளா இருக்கலாம்ன்னேன். யார் இல்லைன்னது? நம்ம ஊர் அண்ணாதுரை அமெரிக்கா போனாரு, இதே நிக்சனை பார்க்க விரும்பினாரு. ஆனா இந்த நிக்சன் பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டாருன்னேன். நம்ம ஊர்க்காரரைப் பார்க்க விருப்பமில்லாதவரை நாம ஏன் பார்க்கணும்னேன்?” என்றார்

    விவசாயிகள் பெரும்பங்கு நம்பிக்கொண்டிருக்கும் பாசனத்திட்டங்கள் காமராஜ் உருவாக்கியவை!
    அவர் ஆட்சி ஏற்றபோது தமிழகத்தில் இருந்தது 3 சர்க்கரைத் தொழிற்சாலைகள்.
    அவர் ஆட்சி விட்டு இறங்கிய போது 14!!!

    இன்னும் சொல்லவோ?
    159 நூல் நூற்பு ஆலைகள்
    4 சைக்கிள் தொழிற்சாலைகள்
    6 உரத் தொழிற்சாலைகள்
    21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள்
    2 சோடா உற்பத்தித் தொழிற்சாலைகள்
    ரப்பர் தொழிற்சாலை
    காகிதத் தொழிற்சாலை
    அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை
    கிண்டி, விருதுநகர், அம்பத்தூர், ராணிப்பேட்டை, மதுரை, மார்த்தாண்டம், ஈரோடு, காட்பாடி, தஞ்சாவூர், திருச்சி…என்று தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள் உருவாக்கினார்.
    (பட்டியலில் இன்னும் சில விடுபட்டுள்ளன)

    மனசாட்சியோடு கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் தோழர்களே!
    காமராஜ் ஆட்சி புரிந்தது 9 ஆண்டுகள்தான்!

    அவர் 9 ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் செய்த இந்தச் சாதனைகளில்…
    எதைச் சொல்ல எதைச் சொல்லாமல் போக. பக்கங்கள் பத்தவில்லை இவர் பெருமை பேச. இவர் வாழ்ந்த மண்ணில் வாழ்கிறேன் என்றபெருமையில் திளைக்கிறேன்.

    Share
  • இதயம் கவர்ந்தவன்!

    -திருக்குவளை மீ.லதா

    உன்  காந்தப் பார்வையின் இழுப்பட்ட விசையால்
    இடம் மாறியது எனது இதயமடா!
    விலகி செல்லும் போது வீணாய் அழைத்து போனது
    உன் பின்னால் என் மனமும்!

    உடைகளின் வண்ணத்தின் ஒற்றுமை
    நம் எண்ணத்தின்ஒற்றுமையைப்
    பறைசாற்றிய  நாட்கள் எத்தனை!

    காத்திருப்பில் கரைந்துபோன காலங்களில்
    உன்னுடன் பேசிய  நினைவுகள்
    உயிர் கொடுத்தன வாழ்ந்துவிடு என்று!

    மணக்கும் மல்லிகை பார்த்தால்
    மறக்காது மனக்கண்முன் வந்துபோனது
    மல்லிகையுடன் நீ நின்ற கோலம்!

    கற்பனையில் கரைந்த காட்சி  கண்மலரக்
    கண் எதிரில் நின்றது உனது வடிவில்
    கண்கலங்கி நின்றேன் சந்தோஷத்தின் எல்லையில்!

    சுமைதாங்கும்  இதயமாய்
    உனைத் தாங்கிய இதயம்
    களைப்பாறியது உனது இதயம் சேர்ந்து!

    மணித்துளிகள் நிமிடங்களானது
    பிரிவென்ற அம்பு துளைக்கக் காத்திருக்க?
    கிடைத்திடும் தருணம் ’மகிழ்ச்சி கொள்’ என்றது
    பகவத்கீதை வரிகள் போல!

    அடிக்கடி சந்தித்த பார்வையின் பரிமாற்றம்
    பாதுகாப்பாய்ப் பூட்டப்பட்டது
    பெட்டகத்தின் திறப்பான் என்னிடம் இருத்தப்பட்டது!

    விருந்தோம்பல்  விளையாட்டாய்ப் போக
    மனம் மணி பார்த்தது பதைபதைத்து!
    சிரிப்பலையில் சிறகு விரித்த சந்திப்பு
    இப்போது மெளனம் சாதித்தது பிரிவைக் கண்டு!

    விடை கொடுத்து விடை பெற்றாய்
    விடை தெரியாத என் கேள்வி மட்டும்
    கொக்கிபுழுவாய்க் குடைந்து நின்றது!

    உள்நுழைந்து இதயம் சுரண்டிய உன் நினைவும்
    நீ வந்து சென்ற அடையாளமாய் மிச்சம் இருந்தது
    அறை முழுதும் வாசனையாய் உன் அங்கத்தில் பரவிய நறுமணம்!
    தினம்தோறும் அசைபோடும்
    மனத்தின் காட்சியானது உனது வருகை காலம் முழுதும்!

     

    Share
  • பெண்ணே கேளாயோ!

    -திருக்குவளை மீ.லதா

    உடைக்கப்பட்டன
    பெண்கையில்  விலங்கென்று
    பெருமை கொள்பவனே உடைத்தும் எதற்கு
    உன்னிடம் சாவி?
    உனக்குப் பின்னால்
    பெண் என்பதாலோ?
    உன்னைவிட எதில் குறைந்தவள்?
    அன்பும் பண்பும் அங்கத்தில் அவள் பூட்டியுள்ள
    நகையல்லவோ!
    விட்டுகொடுத்து வாழ்பவள்-
    ஆனால் விட்டுதரமாட்டாள்
    அவள் உரிமைகளை!
    பூவானவள்
    வாடும்வரை வாழ வைக்கிறாள் தன்னை நம்பினோர் கைவிடப்படாரென!
    புதையும் வரைப் புரட்சிப்பெண்ணாக இரு பூவையே!
    மடிந்து விடாதே மண்ணுக்குள் உரமாக!

     

    Share
  • வீறுகொண்டு எழு!

    -திருக்குவளை மீ.லதா

    வீரம் விளைந்த மண்ணு!
    விவேகம் நிறைந்த மண்ணு!
    பெண்மையைப் போற்றும் மண்ணு!       indian woman

    புலி விரட்டிய பெண்டிரும்
    போர் புரிந்த  பெண்டிரும்
    போதனை செய்த பெண்டிரும்
    வாழ்ந்த வாழ்க்கை வரலாறாய்!
    இன்றோ வானம் வசப்பட்டும்!
    போர்க்களமான வாழ்க்கை??

    சூறையாடப்படும் கற்பும்
    சுருக்கிட முடியும் கயிறுமாக
    வாசல் தாண்டி வந்தால்
    வாழும் வாழ்க்கை கேள்விக்குறியாய்
    மடிந்து போகும் பெண்ணே!
    விடியல் நோக்கி நடைபயிலேன்!
    குறுகிப் போகாதே  கண்ணே!
    நிமிர்ந்து நின்று பதிலுரையேன்!

    உலகம்  உனக்கும் குடை விரிக்கட்டும்!
    மலர்தூவி வாழ்த்துப்பா பாடட்டும்!
    எழுத்தாணி எழுதட்டும் ஏட்டிலே உன் புகழை!

     

    Share
  • பேருந்துப் பயணம்!

    மீ.லதா, திருக்குவளை

    பரபரப்பான  காலைப்பொழுது
    அடித்துப் பிடித்துக் கிளம்பிச்
    சன்னலோர இருக்கை பிடித்து
    ’அப்பாடா!’ என்று பெருமூச்சி,
    பேருந்தில் அமர்ந்து
    காலை உண்ட உணவின்
    இடிபாடு தொண்டைக்குழிக்குள் சிறு அசைவாய்
    பல் இடுக்குகளிலும்!

    தனக்கு மட்டும்தான் இந்த வாழ்கை என்று புலம்பல்!
    அருகில் இருப்பவரை  மறந்து
    கொஞ்சமாக உரையாடலின்
    சத்தங்கள் மறந்து போன
    புத்தகம், எழுதாமல் விட்ட பக்கங்கள்,
    விடுமுறை இல்லையே என ஆதங்கத்தின் வெளிபாடு
    உறவு முறை விசாரிப்பு
    சற்று நேரத்தில் நிரம்பி வழிந்த பேருந்துகளில் சத்தங்களும்
    நடத்துனரின் கூக்குரலும்  ”டிக்கெட் யார் எடுக்க வில்லை?” என்று
    இவள் மனம் வீட்டிலேயே நின்றது
    மூடப்பட்டதா சமையல் பாத்திரங்கள்? சரியாகப் பூட்டப்பட்டதா?
    வீடு என்று
    இயந்திர வாழ்க்கையில் துருப்பிடித்த மனம்?

    Share
  • வாழ்க்கைப் பயணம்

    -திருக்குவளை மீ.லதா 

    பால் நிலவாய் வண்ணம் கொண்டேன்
    பருவம் மாறக் கனவு கண்டேன்
    கார்முகில் வண்ணன் கரம் பிடித்தேன்
    காவிரி நதியில் சங்கமித்தேன்
    யுத்த பூமியாய் மாறி நிற்கப்
    பூத்ததோ புதிய பூ ஒன்று!
    புன்னகை சிந்திட நிற்குது இங்கு
    கவலை இல்லாது வாழ்ந்திட்டேன்
    காலம் முழுவதும் மகிழ்ந்திட்டேன்
    காலன் வந்ததும் கலங்கிட்டேன் 
    வாழ்ந்த வாழ்க்கை நினைத்திட்டேன்
    இதுவே போதுமென்று அமைதியுற்றேன்
    கல்லறை தனிலே உறங்குகின்றேன்!

    Share
  • மனதில் நிறைந்தவர் எம். ஜி. ராமசந்திரன்…

    –திருக்குவளை மீ.லதா.

     

    அள்ளி தந்த கைகள் எங்கே ,
    அரவணைத்த நெஞ்சம் எங்கே,
    சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல தமிழரின் நல்வாழ்விற்காய் பிறந்தாரோ நல் மாணிக்கமாக எம் ஜி ஆர். அவர் சிம்ம குரல் எடுத்து கர்ஜனை செய்ய வேண்டாம். ஒலிப்பெருக்கியில் ஒரு குரல் கொடுத்தால் போதும் என் இரத்தத்தின் இரத்தங்களே… என் இனிய உடன் பிறப்புகளே என்று சொன்னாலே போதும்… ஒடி வரும் மக்கள் வெள்ளத்தில் அவர் திணறிய நாட்கள் எத்தனையோ! பொன்மன செம்மலாய் பூமிதனில் இன்றும் ஒளிரும் தீபங்களாய் இருப்பவரை பற்றி எழுதுகிறேன். அவர் மீது அன்பு கொண்ட நான்.

    இலங்கையில் உருவாகி தமிழகத்தில் நிலைக்கொண்ட புயலாக வந்தார். அன்பு என்ற மந்திரத்தில் அடங்கிப் போனோம் நாம்.

    ஏழையின் பங்காளனாக அவர் இருந்தார். ஏட்டுக் கல்வியை ஏழைக்கும் அளித்த காமராசரின் வாரிசாக வந்து கொடுத்தார் இலவசமாய்.

    தாய் சத்தியபாமாவின் கண்டிப்பான வளர்ப்பும், நேசமான உறவும், பாசமான பரிவும் உலகை ஆள வைத்தவையோ??

    1936ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை.

    இச்சம்பவத்திற்குப் பின்னர் முதன் முதலாக வெளிவந்த திரைப்படம் காவல்காரன். இது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது. 1971 ஆம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, “பாரத்” விருதை வழங்கியது. இது சத்யா மூவிஸ் தயாரிப்பான “ரிக்சாக்காரன்” படத்தில் நடித்ததற்காக கிடைத்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது படம்.

    அவர் நடித்துக் கடைசியாக வெளி வந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்.

    1972-இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார். பின்பு அக்கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக மாறியது. முதன் முதலாக போட்டியிட்ட திண்டுக்கல் பகுதியில் பெரும் வெற்றி பெற்றது.

    திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற வழிவகுத்தது. 1984 ல் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரசாரத்திற்கே வராமல் முதலமைச்சர் ஆன ஒரே முதல்வரானார் எம்.ஜி.ஆர். இவரது ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

    1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். மறைவிற்குப் பின் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

    எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா என்று எம்.ஜி.ஆர் 25ல் ஆனந்த விகடனில் வெளி வந்தது.

    mgr“இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும்
    இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்”

    “மாபெரும் சபைதனில் நீ நடந்தால் – உனக்கு
    மாலைகள் விழவேண்டும்
    ஒரு மாற்றுக்குறையாத மன்னவன் இவனென்று
    போற்றிப் புகழ வேண்டும்”

    இவை வெறும் பாடல் வரிகள் அல்ல. சாகாவரம் பெற்ற ஒரு சகாப்தத்தைப் பற்றிய ஆழமான பதிவுகள். அந்த சகாப்தம் தான் எம்.ஜி.ஆர்.

    இருபதாம் நூற்றாண்டில் எம்.ஜி.ஆர் என்ற இந்த மூன்றெழுத்து மந்திரச் சொல், தமிழகத்தை, இந்தியாவை, ஏன் உலகின் ஒரு பகுதியை எவ்வாறு ஆட்டிப்படைத்தது. மக்களை எப்படி ஈர்த்திருந்தது என்பதை நம்மில் பலரும் அறிவோம்.

    எழுபதுகளில், ஒரு ஆங்கிலப் பத்திரிகை, இந்தியாவில் மக்களின் பேரன்பைப் பெற்ற பெருமகன்களாக இருவரைச் சுட்டியது. ஒருவர் பண்டித ஜவஹர்லால் நேரு. மற்றொருவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

    நாடக அரங்கிலும், திரையுலகத்திலும், அரசியல் பொதுவாழ்விலும் எவராலும் வெல்ல முடியாத சக்தியாக, மக்கள் மனம் கவர்ந்த முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். நின்றால் பொதுக்கூட்டம். நடந்தால் ஊர்வலம். அமர்ந்தால் மாநாடு…என்பார்களே…. அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆருக்கு பொருந்தும்.

    மதத்தால், இனத்தால், மொழியால் அவர் யார் என்பதை விட, மனத்தால், குணத்தால், எண்ணத்தால், செயலால் ஒரு மாபெரும் மனிதராக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.

    குழந்தைத் தொழிலாளராக நாடகத்துறையில் அடியெடுத்து வைத்த எம்.ஜி.ஆரின் அந்தப் பாலப் பருவத்திலேயே பட்ட துன்பங்களும், துயரங்களும் ஏராளம், ஏராளம்.

    “உழைப்பவரே உயர்ந்தவர்” எனும் உன்னத லட்சியத்தை கொள்கையாகக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் “ஓடி ஓடி உழைக்கணும், ஊருக்கெல்லாம் கொடுக்கணும்” எனும் பாடல்களுக்கு ஏற்ப வாழ்நாளெல்லாம் தாம் பாடுபட்டு உழைத்துச் சேர்த்த பணத்தை வாரிக்கொடுத்து வள்ளலானார். அந்த வள்ளலின் பொன்மனத்தைப் போற்றித்தான் திருமுருக கிருபானந்த வாரியார் எம்.ஜி.ஆருக்கு பொன்மனச் செம்மல் என்ற பட்டத்தை வழங்கினார்.

    திரையுலகிலும், அரசியல் பொதுவாழ்விலும் எம்.ஜி.ஆர் சந்திக்காத சோதனைகள் இல்லை. அத்தனையையும் முறியடித்து சாதனைகள் பல புரிந்தவர்.

     

     

     

     
    திருக்குவளை மீ.லதா
    நாகை மாவட்டம்

    Share