Tag: பட்டினத்தடிகளின் பாடல்கள்

  • பட்டினத்தடிகளின் பாடல்கள் – 22ம் பகுதி

    தஞ்​சை ​வெ. ​​கோபாலன்

    கன்னிவனநாதா கன்னிவனநாதா
    கெட்டநாள் கெட்டாலும் கிருபை இனிப் பாரேனோ
    பட்டநாள் பட்டாலும் பதமெனக்குக் கிட்டாதோ
    நற்பருவமாக்கும் அந்த நாளெனக்குக் கிட்டாதோ
    எப்பருவமுங் கழன்ற ஏகாந்தம் கிட்டாதோ
    வாக்கிறந்து நின்ற மவுனமது கிட்டாதோ
    தாக்கிறந்து நிற்கும் அந்தத் தற்கத்தி கிட்டாதோ
    வெந்துயரைத் தீர்கும் அந்த வெட்டவெளி கிட்டாதோ
    சிந்தையைத் தீர்க்கும் அந்தத் தேறலது கிட்டாதோ
    அனாடியார்க் கடிமை கொளக் கிட்டாதோ
    ஊனமற என்னை உணர்ந்து வித்தல் கிட்டாதோ
    என்னென்று சொல்லுவண்டா என்குருவே கேளடா
    பின்னை யெனக்கு நீ அல்லாற் பிரிதிலையே. 1.

    மதுரையம்பதி வாழ் சோமசுந்தர சிவமே! நினது திருவருளைப் பெறாமல் நாட்கள் வீணாகிப் போனாலும், இனியாவது நின்றன் கருணையினைப் பெறாமல் இருப்பேனோ? அருள் கிடைக்காமல் நான் அவதியுற்றாலும் இனியொருநாள் நற்கதியை அடையாமல் போவேனோ? நற்பேறு பெருகின்ற நல்ல காலம் எனக்குக் கிட்டாதோ, அதனால் விளைகின்ற நன்மைகளை நான் அடையும் நாள் வந்து சேராதோ. சதாகாலமும் பேசிக் கொண்டிருக்கும் நிலைமை மாறி உன்னில் மனம் வைத்து வாய் மெளனம் கிட்டாதோ, மேலும் ஜீவராசிகளோடு கூடியிருக்கும் நிலை மாறி சுத்த சிவத்தில் லயிக்கும் ஏகாந்தம் கிட்டாதோ. பிறவியினால் பெற்ற துன்பங்கள் நீங்கி பரவெளியின் அமைதியில் நான் நிலைக்கும் நாள் வாராதோ, எண்ணங்களை அடக்கி ஒருமுகப்படுத்தி உன்னில் ஒன்றும் அந்தத் தேன்சுவையும் கிட்டாதோ. மெய்யடியார் கூட்டத்தில் நான் தொண்டுபுரியும் காலமும் வாராதோ, குற்றமே குணமாக்கொண்ட எனக்கு நின் திருவருளை ஓதுவித்தல் கூடாதோ. சற்குருநாதா, என் குருமணியே! என்னவென்று சொல்லுவேன், என்னவென்று சொல்லுவேன். நின்னையன்றி என்னை ஆதரிப்பார் இல்லையே.

    கன்னிவனநாதா கன்னிவனநாதா
    அன்ன விசாரம் அது அற்ற இடம் கிட்டாதோ
    சொன்ன விசாரம் தொலைந்த இடம் கிட்டாதோ
    உலக விசாரம் ஒழிந்தவிடம் கிட்டாதோ
    மலக்குழுவின் மின்னார் வசியாதும் கிட்டாதோ
    ஒப்புவமை அற்றோடொழிந்த இடம் கிட்டாதோ
    செப்புதற்கும் எட்டாத் தெளிவிடமும் கிட்டாதோ
    வாக்கு நனாதீத வகோசரத்திற் செல்ல எனைத்
    தாக்கு மருட் குருவே நிந்தாளிணைக்கே யான்போற்றி. 2.

    கன்னிவனத்து நாதனே, சிவபெருமானே! சோற்றுக் கவலையே பெருங்கவலை, அந்தக் கவலை இல்லாத இடம் எனக்குக் கிடைக்காதா, தங்கம் தங்கம் என்று பொன்னின் நினைவாக இருக்கும் நினைவு அகன்று அது போன இடம் தெரியாத வெற்றிடம் எனக்குக் கிடைக்காதா. பூலோக வாழ்க்கையின் நிறை குறைகளில் ஈடுபட்ட இவ்வுலக விசாரம் தொலைந்து போன இடம் எனக்குக் கிடைக்காதா. இழிநிலையாம் மகளிரொடு கூடிவாழும் வாழ்க்கை நிலை இல்லாத வெற்றிடம் எனக்குக் கிடைக்காதா. பிறரது சுகவாழ்க்கை, நல்வாழ்க்கை இவற்றை ஒப்பிட்டுப் பார்த்து இரங்குகின்ற நிலை மாறி சமமான பார்வை எனக்குக் கிடைக்காதா. சொற்களால் வியந்து போற்ற முடியாத வெற்றிடமும் கிட்டாதோ. வாக்கு, மனம் இவற்றுக்கு அப்பாற்பட்ட இடத்துக்கு எனை செலுத்துவீர் ஐயனே! நினது திருத்தாள் இணையடி போற்றுகின்றேன்.

    (முதல்வன் முறையீடு நிறைவு பெற்றது)

    Share
  • பட்டினத்தடிகளின் பாடல்கள் – 21ம் பகுதி

    தஞ்​சை ​வெ. ​கோபாலன்

    கன்னிவனநாதா கன்னிவனநாதா
    பிறப்பைத் தவிர்த்தையிலை பின்னாகக் கொண்டையிலை
    இறப்பைத் தவிர்த்தையிலை என்னென்று கேட்டைய்லை
    பாசமெரித்தையிலை பரதவிப்பைத் தீர்த்தையிலை
    பூசியநீற்றைப் புனை என்று அளித்தையிலை
    அடிமையென்று சொன்னையிலை அக்குமணி தந்தையிலை
    விடுமுலகம் போக்கி உன்றன் வேடம் அளித்தையிலை
    உன்னிலழைத்தையிலை ஒன்றாகிக் கொண்டையிலை
    நின்னடியார் கூட்டத்தில் நீ அழைத்து வைத்தையிலை
    ஓங்குபரத்துள் ஒளித்த அடியார்க்கு அடியான்
    ஈங்கோர் அடியான் எமக்கென்று உரைத்தையிலை
    நாமந்தரித்தையிலை நானொழிய நின்றையிலை
    சேவவருளி எனைச் சிந்தித்தழைத்தையிலை
    முத்தி அளித்தையிலை மோனங் கொடுத்தையிலை
    சித்தி அளித்தையிலை சீராட்டிக் கொண்டையிலை
    தவிர்ப்பைத் தவிர்த்தையிலை தானாக்கிக் கொண்டையிலை
    அவிப்பரிய தீயாய் என் ஆசை தவிர்த்தையிலை
    நின்ற நிலையில் நிறுத்தி எனைவைத்தையிலை
    துன்றும் கரணமொடு தொக்கழியப் பார்த்தையிலை
    கட்ட உலகக் காட்சிக் கட்டொழியப் பார்த்தையிலை
    நிட்டையிலே நில்லென்று நீ நிறுத்திக் கொண்டையிலை. 1.

    கன்னிவன நாதனே கன்னிவன நாதனே, மீண்டும் மீண்டும் பிறப்பதைத் தவிர்த்தாயில்லை, பிறந்தபின் தடுத்து ஆட்கொண்டாயில்லை, இறப்பையும் தடுத்ததில்லை, ஏன், எதற்கு என்று எனை எதுவும் வினவவும் இல்லை. உறவையும் பாசத்தையும் நீக்கியபாடில்லை, பரிதவித்து ஏங்குவதையும் தீர்க்கவில்லை, நெற்றியில் இடும் திருநீற்றையும் அணியும்படி எனக்குத் தரவில்லை. நான் உனது அடிமை என்பதை ஏற்று அறிவித்தாயில்லை, அணிந்துகொள்ள ருத்திராக்ஷ மாலையும் தரவில்லை, சாச்வதமில்லாத இந்த உலகத்தை மாயம் என்பதை உணர்வித்து உன் காட்சியைக் கொடுத்தாயில்லை. உன்னிடம் என்னை அழைத்துக் கொள்ளவில்லை, உன்னோடு என்னையும் ஒன்றாக்கிக் கொண்டாயில்லை. கூடிநிற்கும் உன் அடியார் கூட்டத்தில் என்னையும் சேர்த்தாயில்லை. உன்னையே கதியென்று ஏற்றுக் கொண்ட அடியார் கூட்டத்தில் இவனும் ஒருவன் என்று என்னை அறிமுகம் செய்தாயில்லை. என்னை அடியவன் எனப் பெயர் சொல்லி அழைக்கவில்லை, ஆணவ மலத்தை அழித்தாயில்லை, உனது திருவருட் கருணையில் பிணைத்தாயில்லை. முக்தி தந்தாயில்லை, மோன நிலையை அளித்தாயில்லை, அட்டமா சித்திகளை அருளிச் செய்தாயில்லை. பரிதவிப்பை நீங்க்கினாய் இல்லை, என்னைச் சிவமாய்க் கொண்டாயில்லை. யோகத்தில் நிலைத்திட செய்தாயில்லை. யோகம் செய்யும் சாதனமான தீய அகக் கரணாதிகளை அடக்கினாயில்லை. சிரமம் தரும் உலக வாழ்விலிருந்து நீங்கி நிற்கும் மார்க்கத்தை அருளினாயில்லை, நிஷ்டையில் நிலைத்திரு என உபதேசம் செய்யவும் இல்லை.

    கன்னிவனநாதா கன்னிவனநாதா
    கடைக்கண் அருள்தாடா கன்னிவனநாதா
    கெடுக்கும் மலமொறுக்கிக் கிட்டிவரப் பாரேடா
    காதல் தணியேனோ கண்டு மகிழேனோ
    சாதல் தவிரேனோ சங்கடந்தான் தீரேனோ
    உன்னைத் துதியேனோ ஊர்நாடி வாரேனோ
    பொன்னடியைப் பாரேனோ பூரித்து நில்லேனோ
    ஓங்காரப் பொற்சிலம்பின் உல்லாசம் பாரேனோ
    பாங்கான தண்டை பலபணியும் பாரேனோ
    வீரகண்டாமணியின் வெற்றிதனைப் பாரேனோ
    சூரர் கண்டு போற்றும் அந்தச் சுந்தரத்தைப் பாரேனோ
    இடையில் புலித்தோல் இருந்தநலம் பாரேனோ
    விடையில் எழுந்தருளும் வெற்றிதனைப் பாரேனோ
    ஆனை உரிபோர்த்த அழகுதனைப் பாரேனோ
    மானைப் பிடித்தேந்து மலர்க்கரத்தைப் பாரேனோ
    மாண்டார் தலைப்பூண்ட மார்பழகைப் பாரேனோ
    ஆண்டார் நமக்கென்று அறைந்து திரியேனோ
    கண்டங்கறுத்து நின்ற காரணத்தைப் பாரேனோ
    தொண்டர் குழுவில் நின்ற தோற்றமதைப் பாரேனோ
    அருள் பழுத்த மாமதியாம் அனனத்தைப் பாரேனோ
    திருநயனக் கடைஒளிரும் செழுங் கொழுமைப் பாரேனோ
    செங்குமிழின் துண்டம் வளர் சிங்காரம் பாரேனோ
    அங்கனியை வென்ற அதரத்தைப் பாரேனோ
    முல்லை நிலவெறிக்கு மூரல் ஒளி பாரேனோ
    அல்லார் புருவத்து அழகுதனைப் பாரேனோ
    மகரங்கிட்னதொளிரும் வண்மைதனைப் பாரேனோ
    சிகரமுடியழகும் செஞ்சடையும் பாரேனோ
    கங்கையொடு திங்கள் நின்ற காட்சிதனைப் பாரேனோ
    பொங்கரவைத் தான் சடையில் பூண்டவிதம் பாரேனோ
    சரக்கொன்றை பூத்த சடைக்காட்டைப் பாரேனோ
    எருக்கறுகு ஊமத்தை அணி ஏகாந்தம் பாரேனோ
    கொக்கிறகு சூடிநின்ற கொண்டாட்டம் பாரேனோ
    அக்கினியை ஏந்திநின்ற ஆந்தம் பாரேனோ
    தூக்கிய காலும் துடியிடையும் பாரேனோ
    தாக்கு முயலகன் மேல் தாண்டவத்தைப் பாரேனோ
    வீசுகரமும் விகசிதமும் பாரேனோ
    ஆசையளிக்கும் அபயகரம் பாரேனோ
    அரிபிரமர் போற்ற அமரர் சயசய எனப்
    பெரியம்மை பாகம் வளர்பேரழகைப் பாரேனோ
    சுந்தர நீற்றின் சொகுசுதனைப் பாரேனோ
    சந்திரசேகரன் ஆய்ந்த் தயவுசெய்தல் பாரேனோ.

    மதுரைக்கரசே, கன்னிவனநாதா கடம்பவன ஈசா! கடைக்கண் பார்த்து கருணை புரிவாய், ஆணவ மலம் என் மனத்தை ஆட்டிப் படைக்காமல் அதை வீழ்த்தி என்னிடம் நெருங்கி வரப் பார்ப்பாயே! நின் அருட்பார்வையொன்றை என்னை வீழ்ச்சியிலினின்றும் தடுத்து நிறுத்தும். உன் அருட்பார்வை கிடைக்கப் பெற்றால் உலகத்துப் பற்றை ஒழிப்பேன்; உந்தன் மலர்த்திருப்பதம் கண்டு தரிசிப்பேன், மரணத்தை வெல்வேன், சங்கடங்கள் தீர்வேன். உன் அருள் கிட்டிவிட்டால் உன்னை எப்போதும் துதிப்பேன், நீ கோயில்கொண்ட தலங்கள் தோறும் சென்று தரிசித்து மகிழ்வேன், நினது திருமலரடிகளைத் தொழுது பூரித்து நிற்பேன். பிரணவத்தின் தோற்றமாய் அமைந்துள்ள நின்றன் சிலம்பின் அழகைக் கண்டு களிப்பேன், காலின் அசைவில் ஓசையெழுப்பும் நினது தண்டையொலியை பரிவோடு பார்ப்பேன். நடனமாடும் நின் திருப்பாதத்தில் அணிந்த வீரகண்டாமணியின் வெற்றிகளைக் காண்பேன், சூராதி சூரர்கள் உன் புகழை வாயாரப் பேசுவதைக் கேட்டு மகிழ்வேன். அரையில் அணிந்த புலித்தோலின் அழகைக் கண்டு களிப்பேன், ரிஷப வாகனம் ஏறி காட்சி தரும் இன்பத்தை நுகர்வேன். தாருகவனத்தில் மோதிய யானையைக் கொன்று மேலே போர்த்திய காட்சியக் கண்டு களிப்பேன், மானைப் பிடித்து கையில் வைத்த நின் தாமரைக் கரங்களைக் கண்டு மகிழ்வேன். கல்பகோடி ஆண்டுகள் வாழ்ந்த பிரம்மாக்களின் சிரங்களை மாலையாய் அணித்த அழகைக் காண்பேன், என்னுடைய இறைவன் இவன் என்று மகிழ்ந்து திரிவேன். நினது பொன்னிறத்து கண்டம் கருமை நிறம் ஆனதன் காரணத்தை அறிந்து கொள்வேன், மெய்யன்பர்களோடு உவந்து நிற்கும் காட்சியைக் காண்பேன். கனிவு ததும்பும் நின் நிலவொத்த முகத்தைக் காண்பேன், கடைவிழியின் அழகை மனம் களித்துப் பார்ப்பேன். சிவந்த குமிழ மலரையொத்த உன் நாசியழகைக் கண்டு மகிழ்வேன், கொவ்வைக் கனியினும் சிவந்த உன் உதட்டழகைப் பார்த்து மகிழ்வேன். முல்லை மலரைப் போன்ற உன் பல்வரிசை அழகைக் கண்டு மகிழ்வேன், கரிய நெற்றிப் புருவ அழகைக் கண்டு மகிழ்வேன். மகர குண்டலம் அணிந்த நின் காதின் அழகைக் காண்பேன், திருமுடியில் துலங்கும் சிவந்த சடையழகைக் காண்பேன். கங்கையும் நிலவையும் அணிந்த நின் தலைமுடியை எண்ணி மகிழ்வேன், சீறும் பாம்பை முடியில் அணிந்த அழகைக் காண்பேன். சரக்கொன்றை மலரணிந்த நின் கற்றைச் சடையழகைக் காண்பேன், எருக்கு, அறுகு, ஊமத்தை மலர்களை அணிந்த நின் அழகைப் பார்ப்பேன். கொக்கின் இறகைச் சூடிய அழகைக் காண்பேன், இடக்கரத்தில் அனலை ஏந்திய உன் அழகினை நன்கு பார்ப்பேன். நடனமாட தூக்கிய அந்த குஞ்சித பாதத்தின் அழகைக் கண்டு மகிழ்வேன், எதிர்த்து வந்த தீமைகளின் ஒருமுகப்பட்ட முயலகனை வலக்காலின் கீழிட்டு ஆடுகின்ற அழகைக் காண்பேன். ஆடலின் போது வீசுகின்ற கரத்தினையும், நேரே வந்து தோன்றும் அழகினையும் கண்டு களிப்பேன். ஆசிவழங்கும் வலக் கரத்தை வணங்கி மகிழ்வேன். பெருமாளும், பிரம்மனும் துதி செய்ய, தேவாதி தேவரெல்லாம் ஜெய ஜெய என்று கோஷமிட, உமையினை இடப்பக்கம் கொண்டு நீ நிற்கும் அழகைக் கண்டு களிப்பேன். நெற்றியில் பூசிய திருநீற்றின் அழகைப் பார்ப்பேன். சந்திரசேகரனாய் தோன்றி ஆருயிர்க்கெல்லாம் அருள்புரியும் காட்சியைக் கண்டு களிப்பேன்.

    (அடுத்தது “இந்தப் பாடலின் நிறைவுப் பகுதி”)

    Share
  • பட்டினத்தடிகளின் பாடல்கள் – 20ம் பகுதி

    தஞ்​சை ​வெ. ​கோபாலன்

    முதல்வன் முறையீடு.

    மதுரையம் பதியில் கோயில் கொண்டுள்ள சோமசுந்தர கடவுளை நோக்கிப் பாடியதாக அமைந்தவை. கன்னிவனமென்பது மீனாட்சியம்மன் ஆட்சிபுரியும் தலம். ஆதியில் கடம்பவனமாக இருந்த மதுரை ஊழிக்காலத்திலும் அழியாமல் நின்ற காரணத்தால் ‘கன்னி’ எனும் பெயர் பெற்றது.

    கன்னிவனநாதா, கன்னிவனநாதா,
    மூலமறியேன், முடியும் முடிவறியேன்
    ஞாலத்துட்பட்ட துயர் நாட நடக்குதடா,
    அறியாமையாம் மலத்தால் அறிவு முதற் கெட்டனடா
    பிரியா வினைப் பயனாற் பித்துப் பிடித்தனடா,
    தனுவாதிய நான்கும் தானாய் மயங்கினண்டா
    மனுவாதி சக்தி வலையில் அகப்பட்டனடா
    மாமாயை யென்னும் வனத்தில் அலைகிறண்டா
    தாமாயுலகனைத்தும் தாது கலங்குகிறண்டா. 1.

    மதுரையம்பதி மேவிய சிவபெருமானே, சிவபெருமானே! ஆன்மாக்கள் எங்கிருந்து பிறந்தன, எங்குபோய் முடிகின்றன என்பதை உணர்ந்தேனில்லை. இப்பூவுலகில் வாழ்க்கையின் ஊடே கணக்கற்ற துன்பங்கள் வந்து சேர்ந்து துயரத்துள் ஆழ்த்துகின்றன. வாழ்க்கையில் இன்பம் எது, துன்பம் எது என்பதை அறிந்து கொள்ள முடியாத அறியாமையாம் மலம் அறிவை மூடிவிட்ட காரணத்தால் அறிவு முதல் அனைத்தும் கெட்டுத் தொலைந்தது. முற்பிறவிகளில் செய்த பாவங்கள் எனைத் துரத்தி வந்ததனால் மனம் பித்துப் பிடித்துப் போனது. ‘தனுவாதிய நான்கும்’ அதாவது தனு, கரணம், புவனம், போகம் எனப்படும் இப்பூவுலக வாழ்வின் தத்துவங்களில் மூழ்கித் தவித்து மனம் மயங்கி, மறைக்கும் மாயத் தொழிலைப் புரியும் ‘திரோதான’ சக்தியுள் ஆட்பட்டுவிட்டேன். உலகமும் அதன் உட்பொருளும், மறையும் பாங்கினதால் அவை மாயை எனப்படும். அந்த மா மாயை எனும் பெரும் மாயக் காட்டினுள் வழியறியாது அலைந்து திரிகின்றேன், இப்பிறவியும் வாழ்வும் மாயை எனும் உண்மை புரிவதால், உளம் கலங்குகிறேன். (இதில் கண்டுள்ள சில சொற்களும் கருத்துக்களும் சைவ சித்தாந்தம், யோகம் பயின்றவர்களிடம் கேட்டுத் தெளிவு பெறுதல் நலம்)

    கன்னிவனநாதா, கன்னிவனநாதா,
    மண்ணாசை பட்டேனை மண் உண்டு போட்டதடா
    பொன்னாசை பெண்ணாசை பேர்கேனே என்குதே
    மக்கள் சுற்றத்தாசை மறக்கேனே என்குதே
    திக்கரசாம் ஆசையது தீரேனே என்குதே
    வித்தை கற்கும் ஆசையது விட்டொழியேன் என்குதே
    சித்து கற்கும் ஆசை சிதையேனே என்குதே
    மந்திரத்தில் ஆசை மறக்கேனே என்குதே
    சுந்தரத்தில் ஆசை துறக்கேனே என்குதே
    கட்டு வர்க்கத்தாசை கழலேனே என்குதே
    செட்டு தனில் ஆசை சிதையேனே என்குதே
    மாற்றும் சலவை மறக்கேனே என்குதே
    சோற்றுக் குழியும் இன்னும் தூரேனே என்குதே 2.

    கன்னிவனமாம் மதுரயம்பதிவாழ் சோமசுந்தரனே! சிவபெருமானே! மண் மீது ஆசை கொண்டு மேன்மேலும் நிலம் வாங்கி மகிழ்ந்திருந்தேன், அந்த மண்ணே இந்த உடலைத் தின்றுவிட்டதே. பொன் மீதும், பொன் நகை மீதும் கொண்ட ஆசையும், பெண்ணாசையும் என்னைவிட்டுப் போகமாட்டேன் என்கிறதே. பெண்டு, பிள்ளைகள், உறவுகள் என்று நான் கொண்ட ஆசைகள் எதனையும் மனம் மறக்க மாட்டேன் என்கிறதே, எட்டு திசைகளையும் கட்டியாள வேண்டுமென நான் கொண்ட ஆசையும் தீரமாட்டேன் என்கிறதே; பற்பல வித்தைகள், அறுபத்தினாலு கலைகள் மேன்மேலும் கற்கவேண்டும் என்கிற மனத்தாசையை விட்டொழிக்க இயலவில்லையே, அட்டமாசித்திகளை எப்படியும் அடைதல் வேண்டுமென்ற எண்ணமும் நீங்கவில்லையே; மந்திரங்கள் செய்யும் மாயங்கள் அனைத்தையும் கற்றல் வேண்டுமென நினைப்பது மறக்கவில்லையே, பிறர் பார்க்க அழகொழுக இருக்க நினைப்பதும் துறக்க முடியவில்லையே; வியாபாரம் செய்து அதில் லாபம் அடையவேண்டுமென்ற ஆசை சிதைய மறுக்கின்றதே (செட்டு = வியாபாரம்), வேளைதோறும் சலவை செய்த ஆடை அணியும் ஆசை மறக்கமாட்டேன் என்கிறதெ, சொற்றினைக் கொள்ளும் வயிறும் நிரம்பி விட்டது போதும் எனும் நிலையை அடையமாட்டேன் என்கிறதே.

    கன்னிவனநாதா கன்னிவனநாதா
    ஐந்து புலனும் அடங்கேனே என்குதே
    சிந்தை தவிக்கிறதும் தேறேனே என்குதே
    காமக் குரோதம் கடக்கேன் என்குதே
    நாமே அரசென்று நாடோறும் எண்ணுதே
    அச்சம் ஆங்காரம் அடங்கேனே என்குதே
    கைச்சு மின்னுமானம் கழலேனே என்குதே
    நீர்க்குமிழியாம் உடலை நித்தியமாய் எண்ணுதே
    ஆர்க்கும் உயிர் ஆசை அழியேனே என்குதே
    கண்ணுக்குக் கண்ணெதிரே கட்டையில் வேகக் கண்டும்
    எண்ணும் திரமா இருப்போமென்று எண்ணுதே
    அநித்தியத்தை நித்தியம் என்று ஆதரவா எண்ணுதே
    தனித்திருக்கேன் என்குதே தனைமறக்கேன் என்குதே
    நரகக் குழியும் இன்னும் நான் புசிப்பேன் என்குதே
    உரகப்படத்து அல்குல் உனைக் கெடுப்பேன் என்குதே
    குரும்பை முலையும் குடிகெடுப்பேன் என்குதே
    அரும்பு விழியும் என்றன் ஆவி உண்பேன் என்குதே
    மாதர் உருக்கொண்டு மறலி வஞ்சம் எண்ணுதே
    ஆதரவும் அற்றிங்கு அரக்காய் உருகிறண்டா
    கந்தனை ஈன்றருளும் கன்னிவனநாதா
    எந்த விதத்தில் நான் ஏறிப் படருவண்டா 3.

    என் ஐம்பொறிகளும் அடங்கமாட்டேன் என்கின்றனவே, அவற்றல் வரும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் இவற்றைத் தேடுகின்றதே. எதையெதையோ எண்ணி மனம் சஞ்சலப்படுவது நின்று, தெளிய மாட்டேன் என்கிறதே. காமமும் குரோதமும் தணிய மறுக்கின்றதே, நானே ராஜா நமக்கு நிகர் எவருமில்லை என்கிற ஆணவம் தினந்தோறும் தோன்றுதே. அச்சமும், ஆங்காரமும் அடங்க மறுக்கின்றதே, அனைத்தையும் ஒழித்தாலும் மனம் மட்டும் குரங்குபோல் தாவுவது நிற்கவில்லையே. நீர்க்குமிழி போன்ற நிரந்தரமற்ற இந்த உடலை சாச்வதமானது என்று மனம் எண்ணுகின்றதே, உயிர்மேல் இருக்கும் ஆசை அழியமாட்டேன் என்கிறதே. கண்ணெதிரே மாண்டவர் பிணம் கட்டையில் எரிவது கண்டும், நாம் மட்டும் நிரந்தரமாய் இருப்போம் என்று எண்ணம் இருக்கிறதே. நிரந்தரமில்லாததை நிரந்தரம் என்று எண்ணுகிறதே, சுற்றிலுமுள்ள ஆர்ப்பாட்டங்களிலிருந்து தனித்து இருக்க மறுக்குதே, மனம் அனைத்திலும் விடுபட்டு இருக்கவும் முடியலையே. இடுகாட்டில் மரணக் குழியோ உன்னை நான் உண்டு தீர்ப்பேன் என்கிறதே, பெண்ணுறவின் மீதான ஆசை உன்னைக் கெடுத்தே தீருவேன் என்கிறதே. தென்னங்குரும்பை போன்ற தனங்கள் உன் குடியைக் கெடுப்பேன் என்று கச்சைகட்டி நிற்கின்றதே, அழகிகளின் அம்பு விழிகள் என் ஆவியைக் குடித்தே தீருவேன் என்கிறதே. எமனோ பெண்ணுருவத்தில் வந்து என்னை மோசம் செய்ய எண்ணுகிறான், என்னைத் தேற்றி ஆதரவு தர எவருமின்றி நான் அரக்கைப் போல உருகுகின்றேனடா. கந்தவேளாம் முருகக் கடவுளைப் பெற்றெடுத்த மதுரையம்பதிவாழ் சிவனே, எந்த விதத்தில் நான் நினது திருவடிகளைப் பற்றிக் கொள்வேன்?

    கன்னிவனநாதா கன்னி வனநாதா
    புல்லாகிப் பூடாய்ப் புலர்ந்தநாள் போதாவோ
    கல்லாய் மரமாய்க் கழிந்தநாள் போதாவோ
    கீரியாய்க் கீடமாய்க் கெட்டநாள் போதாதோ
    நீர்யாய் ஊர்வனவாய் நின்றநாள் போதாதோ
    பூதமொடு தேவருமாய்ப் போனநாள் போதாதோ
    வேதனை செய்தானவராய் வீழ்ந்தநாள் போதாதோ
    அன்னை வயிற்றில் அழிந்தநாள் போதாதோ
    மன்னவனாய் வாழ்ந்து மரித்த நாள் போதாதோ
    தாயாகித் தாரமாய்த் தாழ்ந்தநாள் போதாதோ
    சேயாய்ப் புருடனுமாய்ச் சென்றநாள் போதாதோ
    நோய் உண்ணவே மெலிந்து நொந்தநாள் போதாதோ
    பேய் உண்ணப் பேயாய்ப் பிறந்தநாள் போதாதோ
    ஊனவுடல் கூன் குருடாய் உற்றநாள் போதாதோ
    ஈனப் புசிப்பில் இளைத்த நாள் போதாதோ
    பட்டகளையும் பரதவிப்பும் போதாதோ
    கெட்டநாள் கெட்டேன் என்று கெட்டநாள் போதாதோ
    நில்லாமைக்கே அழுது நின்றநாள் போதாதோ
    எல்லாரும் என்பாரம் எடுத்தநாள் போதாதோ
    காமன் கணையால் கடைபட்டல் போதாதோ
    ஏமன் கரத்தால் இடியுண்டல் போதாதோ
    நான்முகன் பட்டோலை நறுக்குண்டல் போதாதோ
    தேன் துளபத்தான் நேமி தேக்குண்டல் போதாதோ
    உருத்திரனார் சங்காரத்து உற்றநாள் போதாதோ
    வருத்தம் அறிந்தையிலை வாவென்றழைத்தயிலை.

    கன்னிவனமாம் மதுரையம்பதிவாழ் சோமசுந்தரனே! சிவபெருமானே!! எத்தனை பிறவிகள், எத்தனை அனுபவங்கள், எத்தனை துன்பங்கள். புல்லாகவும், பூண்டாகவும் பிறந்து வாடிய காலம் போதாவோ, கல்லாகவும் மரமாகவும் கிடந்த காலம் போதாவோ. கீரியாகவும், புழுவாகவும் பிறந்து நொந்த காலம் போதாவோ நீர்வாழ் ஜந்துவாகவும், மண்ணில் ஊரும் உயிராகவும் இருந்தநாள் போதாவோ. பூதமுமாய், தேவனுமாய்ப் பிறந்து கிடந்த நாள் போதாவோ, பிறருக்குத் துன்பங்களைக் கொடுத்து வாழ்ந்த நாள் போதாவோ. அன்னையின் கர்ப்பத்தில் அடைபட்டுக் கிடந்தநாள் போதாவோ, மன்னவனாய் வாழ்ந்து மரித்த நாள் போதாவோ. தாயாகவும், மனைவியாகவும் தாழ்ந்து கிடந்த நாள் போதாவோ, சேயாய், புருஷனாய் சென்ற நாள் போதாவோ. நோய் மலிந்து மெலிந்த நாள் போதாவோ, பேய்களுக்கு உணவாக ஆன பேயாகப் பிறந்த நாள் போதாவோ. பிறப்பெடுத்த நாள் முதலாய் கூன், குருடு, முடமாகத் துன்பம் அடைந்த நாள் போதாவோ, உண்ண உணவின்றி வாடி மெலிந்த நாள் போதாவோ. பிறப்பினால் களைப்பும், பரிதவிப்பும் அடைந்த நாள் போதாவோ, இருக்கின்ற காலமும் கெட்டதோடு, மேலும் கெட்டவனாக ஆனதும் போதாவோ. இந்த பாழ் பிறவி நிலையில்லை என்பது தெரிந்து வருந்தியது போதாவோ, என் வினையால் மற்றவர்கள் பாரம் சுமந்ததும் போதாவோ. காமன் கண்வீச்சால் கடைப்பட்டுப் போனதும் போதாவோ, எமன் கரங்களால் இடிபட்டடும் போதாவோ. பிரம்மனின் தலையெழுத்தால் வதையுண்டது போதாதோ, தேன்சொரியும் துளசிமாலை அணிந்த பெருமாளின் சக்கரத்தால் பட்டவினை போதாவோ. உருத்திராட்சம் அணிந்த சிவன் சம்ஹாரம் செய்ததால் துன்பப்பட்டது போதாவோ, என் வருத்தத்தை உணரவில்லை, போதும் பட்டது இனி முடியாது, வந்துவிடு என்னிடம் என்று அழைத்தாயில்லை, என் செய்வேன்.

    (கன்னிவனநாதரிடம் முறையீடு இன்னும் வரும்)

    Share
  • பட்டினத்தடிகளின் பாடல்கள் – 19ம் பகுதி

    தஞ்​சை ​வெ. ​கோபாலன்

    இந்தப் பகுதியில் மனித இனத்தில் பிரஜோற்பத்தி தொடங்கி, மதலையாகி வளர்ந்து முதிர்ந்து இறுதியில் மூச்சடங்கி தீக்கிரையாகும் வரையிலான நிகழ்வுகளைத் தொடர்ச்சியாக யாக்கை நிலையாமை பற்றிச் சொல்லியிருக்கிறார். இந்தப் பகுதியில் அடிகளாரின் சொற்கள் படிக்கச் சற்று அருவருப்பாகத் தோன்றினாலும், அதுதான் முற்றிலும் உண்மை என்பதால் அந்த கசப்பான உண்மையை நம் மனம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

    உடற்கூற்று வண்ணம்.

    ஒருமட மாதும் ஒருவனுமாகி இன்ப சுகந்தரும்
    அன்பு பொருந்தி உணர்வு கலங்க ஒழுகிய விந்து
    ஊறுசுரோணித மீது கலந்து 1.

    பனியிலொர்பாதி சிறுதுளி மாது பண்டியில் வந்துபுகுந்து
    திரண்டு பதுமவரும்பு கமடமிதென்று
    பார்வை மெய்வாய் செவி கால்கைகளென்ற 2.

    உருவமுமாகி உயிர்வளர் மாதம் ஒன்பதுமொன்றி
    நிறைந்து மடந்தை உதரமகன்று புவியில் விழுந்து
    யோகமும் வாரமும் நாளும் அறிந்து 3.

    மகளிர்கள் சேனை தரவணையாடை மண்பட வுந்தி
    உதைந்து கவிழ்ந்து மடமயில் கொங்கை அமுதமருந்தி
    ஓரறிவு ஈரறிவாகி வளர்ந்து 4.

    பேதைகள் இருவர் ஆணும் பெண்ணுமாய் இனிமை தரும் சுகானுபவத்தில் திளைத்திருக்க, அன்பு பெருக, உணர்வு மயங்கி, கலவியின் பயனாய் ஆண்மகன் சுக்கிலம் தலைவியின் சுரோணிததில் கலந்ததும்;

    இவ்விரு கலப்பில் சுக்கிலம் பனித்துளியின் பாதியளவில் சுரோணிதச் சேர்க்கையால், தாமரை மொட்டைப் போலவும் பின் ஆமை வடிவம் கொண்டும் வளர்ந்து பெரிதாகி கண், காது, மூக்கு, கால், கைகள் இவைகளெல்லாம் சிறிது சிறிதாகப் பிரிந்து வளர்ந்து;

    சிசுவின் உருவம் வளர்ந்து ஒன்பதும் ஒன்றுமாய் மாதங்கள் முடிந்ததும், தலைவி வேதனையுற, வருந்தியந்த சிசுவும் மண்ணில் விழ, கூடியிருந்த சுற்றம் அந்த சிசுவிற்கு நாள், நட்சத்திரம் கோள்களைக் கணித்திட;

    கூடியிருந்த மாதரார் கூட்டம் குழந்தையை எடுத்துச் சீராட்டி தூளியிலிட்டுத் தாலாட்ட, சிறுகச் சிறுக அந்தச் சிசு கால் கைகளை உந்தி விளையாடிப் புரண்டு படுத்து தவழ்ந்து, தாயின் அரவணைப்பில் தாய்ப்பால் அருந்தி ஓரறிவு, ஈரறிவு என வளர்ந்து வரும் காலத்தில்;

    ஒளிநகையூற இதழ் மடவாரும் உவந்து முகந்திட
    வந்து தவழ்ந்து மடியிலிருந்து மழலை மொழிந்து
    வா இரு போ என நாமம் விளம்ப; 5.

    உடை மணியாடை அரைவடமாட உண்பவர்
    தின்பவர் தங்களொடு உண்டு தெருவிலிருந்து புழுதியளைந்து
    தேடிய பாலரொடோடி நடந்து
    அஞ்சு வயதாகி விளையாடியே 6.

    உயர்தரு ஞான குரு உபதேசமும் தமிழின் கலையும்
    கரைகண்டு, வளர் பிறையென்று பலரும் விளம்ப
    வாழ் பதினாறு பிராயமும் வந்து 7.

    மயிர்முடி கோதி அறுபத நீல வண்டிமிர் தண்தொடை
    கொண்டை புனைந்து, மணி பொனிலங்கு பணிகளணிந்து
    மாகதர் போகதர் கூடி வணங்க 8.

    சின்னஞ் சிறியதாய் மல்லிகை மொட்டாய் பற்கள் வெளிவர, மெல்லிய இதழில் மடவார் முகர்ந்து முத்தமிட, குழந்தையும் மகிழ்ந்து அவர்பால் செல்ல, தாய்மடியேறி மழலைகள் மொழிய, ‘வா’ எனவும் ‘போ’ எனவும் சொற்களைப் பேசித் தொடர்ந்து ‘அப்பா’ என்றும் ‘அம்மா’ என்றும் கொஞ்சி அழைக்க;

    பட்டாடைகளும், பன்மணி மாலையும், தங்கத்தில் அரைஞாண் இடையினில் ஆட, உண்பவர், தின்பவர் செயலைப் பார்த்துத் தானும் உண்டும், பருகியும், தெருவில் ஓடி, புழுதியில் அளைந்து, தன்வயதொத்த பாலரைத் தேடி ஓடி விளையாடி, ஐந்து வயதாக ஆன பிறகு;

    தகுதியுள்ள குருவிடம் சேர்ந்து, ஞானோபதேசமும் நல்ல தமிழ்க் கல்வியும், சாத்திர நீதியும் கசடறக் கற்று, நூல் பல தேர்ந்து நன்கு பயின்று, வளர்பிறை போலவே நாளும் வளர்ந்து, பதினாறு வயதினை அடையும் போதினில்:

    நீண்ட கூந்தலைச் சீவி முடிந்து கொண்டைகள் இட்டு, ஆறு கால் கொண்ட நீலநிற வண்டுகள் மொய்க்கும் நல்ல மலரில் மாலைகள் கட்டி அணிந்து, மணிகள் பொதிந்த பொன் அணிகளை அணிந்து பார்ப்பவர் அனைவரும் கூடிநின்று பாராட்டி நிற்க;

    மதன சொரூபன் இவன் என மோக மங்கையர் கண்டு மருண்டு
    திரண்டு, வரிவிழி கொண்டு சுழிய எறிந்து
    மாமயில் போல் அவர் போவது கண்டு; 9.

    மனது பொறாமல் அவர் பிறகோடி மங்கல செங்கல
    சந்திகழ் கொங்கை மருவ மயங்கி இதழமுதுண்டு
    தேடிய மாமுதல் சேரவழங்கி; 10.

    ஒருமுதலாகி முதுபொருளாய் இருந்த தனங்களும்
    வம்பில் இழந்து,மதன சுகந்த விதனமிது என்று
    வாலிப கோலமும் வேறு பிரிந்து; 11.

    வளமையும் மாறி இளமையும் மாறி வன்பல் விழுந்திரு
    கண்கள் இருண்டு வயது முதிர்ந்து நரை திரை வந்து
    வாத விரோத குரோதம் அடைந்து
    செங்கையினில் ஓர் தடியுமாகியே 12.

    மன்மதனையொத்த அழகுடையவனாக இவன் இருக்கிறானே என மோகங் கொண்ட மங்கையர்கள் மனம் மயங்கி, செவ்வரி படர்ந்த கண்களால் பார்த்து மருண்டு அழகிய மயில்கள் பவனி செல்வது போல போகும் அவர்கள் செல்லும் காட்சியும்;

    தன்னைப் பார்த்து மயம் மயங்கிச் செல்லும் அந்த மாதைப் பின்பற்றிச் சென்று, அவளது கொங்கைகள் தன் மார்போடு இழைய மருவிக் கொண்டு, இதழோடு இதழ் வைத்து இன்பம் தேடி, அவள் விரும்பியவாறு இன்பமளித்து;

    முன்னோர்கள் தேடிவைத்த செல்வங்களையெல்லாம் திரட்டி, தான் சேர்த்தவற்றையும் இப்படி இன்ப நாட்டத்தில் கொண்டு செலுத்தி, மதன சுகங்களின் மிகையால் செல்வம் கரைந்து, உடலும் மெலிந்து வாலிபத் தோற்றம் மாறி கிழத்தனம் எய்தி, மிகுந்த சுகத்தின் பலன் இது என பிறர் பரிகசிக்க;

    செல்வம் அழிந்து, இளமை ஒழிந்து, பற்கள் விழுந்து, கண்கள் இருண்டு, வயதின் முதிர்ச்சியால் தலை நரை படர்ந்து, தோல் சுருங்கி, ஆத்திரமும், பொறாமை குணங்களும் பெற்று நடுங்கும் கரங்களில் ஒரு தடியையும் ஊன்றிக் கொண்டு;

    வருவது போவது ஒரு முதுகூனுமந்தி யெனும்படி
    குந்தி நடந்து, மதியும் அழிந்து, செவி திமிர் வந்து
    வாயறியாமல் விடாமல் மொழிந்து; 13.

    துயில் வரு நேரம் இருமல் பொறாது தொண்டையும் நெஞ்சும்
    உலர்ந்து வறண்டு துகிலும் இழந்து சுணையும் அழிந்து
    தோகையர் பாலர்கள் கோரணி கொண்டு; 14

    கலியுக மீதில் இவர் மரியாதை கண்டிடு மென்பவர்
    சஞ்சலம் மிஞ்ச, கலகலவென்று மலசலம் வந்து
    கால்வழி மேல்வழி சார நடந்து; 15

    தெளிவுமிரா உரைதடுமாறி சிந்தையும் நெஞ்சமும்
    உலைந்து மருண்டு, தடமும் உலனிது மிகவும் மலைந்து
    தேறி நல்லாதர வேதென நொந்து; 16

    கிழக்குரங்கொன்று தன் கூன் முதுகைச் சாய்த்துக் கொண்டு அங்கும் இங்குமாய் திரிகின்ற காட்சிபோலவும், அறிவு கெட்டு, காதும் செவிடாகி அடைத்துக் கொண்டும், அடுத்தவர் சொல்வதைக் கேட்க முடியாமலும், வாயில் வந்ததையெல்லாம் விடாமல் உளறிக் கொட்டிக் கொண்டு;

    இரவு ஆனதும் தூக்கம் கண்களைச் சுழற்றிக் கொண்டு வருகின்ற நேரம்; அந்த நேரம் பார்த்து விடாமல் இருமல் வந்து தூக்கத்தைக் கெடுக்கும்; தொண்டையும், நெஞ்சும் இருமியதால் வறண்டு போகும், தூக்கத்தில் துகில் போன இடம் தெரியாமல் விலகிக் கிடக்கும்; இவற்றைக் கண்டு பெண்டிர் வருந்துவர், இளையோர் ஏகடியம் பேசுவர்;

    இது கலியுகம். யுகதர்மங்கள் மாறுபடும். இந்த யுகத்தில் இதுபோன்ற நிலைமையை அடைந்தவர்களைக் கண்டு பரிதாபப் படமாட்டார்கள், பெரிசு படும் பாட்டைப் பாருங்கள் என்பர், மனது வருத்தப்படும், நம்மை அறியாமலே நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் மலமும், சலமும் தானே கழிந்து பார்ப்பவர் முகம் சுளிக்க வைத்துவிடும்’

    மனத்தில் தெளிவு இல்லாமையால் பேசும் சொற்களிலும் தெளிவு இருக்காமல் வார்த்தை தடுமாறும்; சிந்தை வரண்டு விடும், நெஞ்சம் உரைந்துவிடும், மனோதிடமும் குலைந்துவிடும், நமக்கு இனி உறுதுணை யார் என்பதை மனம் எண்ணத் துவங்கிவிடும்.

    மறையவன் வேதன் எழுதியவாறு வந்தது கண்டமும்
    என்று தெளிந்து இனியென கண்டம் இனியென தொந்தம்
    ஏதினி வாழ்வு நில்லாது இனி நின்ற; 17.

    கடன்முறை பேசும் என உரை நாவு முழங்கி விழுந்து
    கைகொண்டு மொழிந்து கடைவழி கஞ்சி ஒழுகிட வந்து
    பூதமு நாலு சுவாசமும் நின்று –
    நெஞ்சு தடுமாறி வரும் நேரமே. 18.

    வளர்பிறை போல எயிறும் உரோமமும் சடையும் சிறு
    குஞ்சியும் விஞ்ச, மனதும் இருண்ட வடிவும் இலங்க
    மாமலை போய் யம தூதர்கள் வந்து; 19

    வலைகொடு வீசி உயிர்கொடு போக மைந்தரும் வந்து
    குனிந்து அழ நொந்து, மடியில் விழுந்து மனைவி புலம்ப
    மாழ்கினரே இவர் காலமறிந்து 20

    படைப்புக் கடவுளாம் பிரம்ம தேவன் எழுதிய பிரம்ம லிபியின் படி வாழ்க்கையில் எத்தனை கண்டங்களொ அத்தனையும் நினைந்து, இனியும் கண்டங்கள் உண்டோ, விதியின் நியதிப்படி என்னென்ன நேருமோ, இனி வாழ்வு என்ன வாகுமோ, நிலைக்குமோ என்றெல்லாம் சிந்தித்து;

    வாழ்க்கை லட்சியங்கள், கடமைகள் என்றெல்லாம் வாழும் முறைகளை வக்கணையாய்ப் பேசுகின்ற நாவு சோர்ந்து வீழ்ந்து பேசமுடியாமல் போய்; கைகளால் சைகை செய்து பிறருக்கு உணர்த்தி, கடின சோறு உண்ண முடியாமையால் கஞ்சி குடித்து, குடித்த கஞ்சியும் கடைவாய் வழியே தவறிச் சிந்தி வழிய, உள்செல்லும் பிராணவாயு குறைய, சப்த நாடிகளும் ஒடுங்கிக் கிடக்க, பேசமுடியாமல், மூச்சு விடவும் முடியாமல் மனம் கலங்கிடும் காலத்தில்;

    வளர்பிறைச் சந்திரனையொத்த கடைவாய்க் கோரைப் பற்களோடும், தீப்பற்றி எரிவதைப் குத்திட்டு நிற்கும் செம்பட்டைத் தலைமுடியும், அதில் சடைகள் நிரம்பியிருக்கவும், கடுத்த மனமும், இருள் போல விளங்கும் கருத்த மேனியும், பெரிய மலைபோன்ற சரீரமும் கொண்ட எம தூதர்கள் வந்து;

    பாசக் கயிற்றை வீசி உயிரைக் கட்டி இழுத்துக் கொண்டு போகும்போது, பிள்ளைகள் வந்து ஐயோ போயினரே என்று கதறி அழுது வருந்த, மடியில் விழுந்து மனைவி புலம்ப, ஏனையோர் அந்த துக்க சூழ்நிலைக்கேற்ப வருந்தி நிற்கின்ற நேரத்தில்;

    பழையவர் காணும் எனும் அயலார்கள் பஞ்சு பறந்திட
    நின்றவர் பந்தர் இடுமென வந்து பறையிட முந்தவே
    பிணம் வேக விசாரியும் என்று; 21.

    பலரையும் ஏவி முதியவர் தாம் இருந்த சவம் கழுவும்
    சிலரென்று, பணி துகில் தொங்கல் களபம் அணிந்து
    பாவகமே செய்து நாறும் உடம்பை; 22.

    வரிசை கெடாமல் எடுமென ஓடி வந்திளமைந்தர்
    குனிந்து சுமந்து கடுகி நடந்து சுடலை அடைந்து
    மானிட வாழ்வு எ(ன்)ன வாழ்வென நொந்து; 23.

    விறகிடமூடி அழல்கொடுபோட வெந்து விழுந்து
    முறிந்து நிணங்கள் உருகி எலும்பு கருகி அடங்கி
    ஓர்பிடி நீறுமிலாத உடம்பை
    நம்பும் அடியேனை இனி ஆளுமே. 24.

    நெடுநாளைய மனிதன் இவன் என்று பேசிக் கொண்டு அண்டை அயலார் ஓடிவந்து பார்த்து, அருகில் இருந்தவர்களைப் பார்த்து வருபவர்கள் உட்கார பந்தல் போடுங்கள், பறை ஓசை எழுப்ப ஆட்களைக் கூப்பிடுங்கள், பிணத்தைக் கொண்டுபோய் எரித்திட ஆவன செய்யுங்கள் என்று சொல்லி;

    பலபேருக்குச் சொல்லி அனுப்பி, பெரியவர்கள் பிணத்துக்கு எண்ணெயி இட்டுக் காப்புச் செய்து, தண்ணீர் விட்டுக் கழுவுங்கள் என்று சொல்லி, பொன்னால் ஆன அணிகலன், புதிய துணி, பூமாலை, வாசனைப் பொடி அத்தனையும் போட்டுத் தங்கள் பாசத்தை வெளிப்படுத்தி, நாற்றமெடுக்கக் கூடிய இந்த சரீரத்தை;

    செய்ய வேண்டிய முறைப்படி காரியங்களைச் செய்து பிணத்தை எடுங்கள் என்று பெரியவர்கள் சொல்ல, நல்ல உடல்வாகு கொண்ட நால்வர் வந்து எடுத்துத் தங்கள் தோள் மீது சுமந்து, வேகமாய் நடந்து, சுடுகாட்டை அடைந்து, “என்னடா மனித வாழ்க்கை’ என்று அப்போது தோன்றிய சுடுகாட்டு வைராக்கியம் எனும் ஞானத்தால் மனம் நொந்து கூறி;

    நல்ல காய்ந்த விறகு, மாட்டுச் சாணத்தால் ஆன விராட்டி இவைகளைக் கொண்டு வந்து அடுக்கி, அதன் மீதில் பிணத்தைக் கிடத்தி, அதன் நெஞ்சில் தீமூட்டி, பிணம் எரிந்து வெந்திடும் போது அதன் தசைகளும் கொழுப்பும் சரிந்து விழுந்ததை பிணம் எரிப்போன் மீண்டுமெடுத்து எரித்தும், எலும்புகள் கருகிப் பின் சுட்ட சாம்பலாய்ப் போய் ஒருப்டிக்குள் அடங்கிடும் வண்ணம் அமைந்த இந்த அரிய சரீரத்தை மாண்புடையது என்று பெரும் பொருட்டாக எண்ணி இறுமாந்திருந்த இந்த அடிமையை இப்போதாவது கனிவு கொண்டு ஆண்டு அருளவேண்டும் ஐயனே!!

    (இன்னும் வரும்)

    Share
  • பட்டினத்தடிகளின் பாடல்கள் – 18ம் பகுதி

    தஞ்​சை​ வெ. ​கோபாலன்

    திருவிடைமருதூர்:
    மென்று விழுங்கி விடாய் கழிக்க நீர்தேடல்
    என்று விடியும் எனக்கு என்கோவே – நன்றி
    கருதார் புரம் மூன்றும் கட்டழலாற் செற்ற
    மருதா உன் சந்நிதிக்கே வந்து. 1.

    நன்றி கொன்ற அரக்கர்களையும், அவர்தம் புரம் மூன்றையும் மூண்ட செந்தழலாற் எரித்த மருதூர் வாழ் அண்ணலே! சதா காலமும் வயிற்றுக்கு உணவையும், உண்டபின் விடாய் தீர நீர்தேடி ஓடும் இந்த நீச வாழ்க்கை என்று தீரும், என்று நான் உன் சந்நிதிக்கு வந்து உனக்கே ஆளாவேன் சொல்லுவீர் எனை ஆளும் என் அரசே!

    திருவொற்றியூர்:
    கண்டங் கரியதாம் கண் மூன்று உடையதாம்
    அண்டத்தைப் போல அழகியதாம் – தொண்டர்
    உடலுருகத் தித்திக்கும் ஓங்குபுக ழொற்றிக்
    கடலருகே நிற்கும் கரும்பு. 2.

    ஆலகால விடமுண்ட காரணத்தால் நீலநிறம் பாய்ந்த கண்டமும், முகத்தில் மூன்று நயனங்களும், இந்த அண்டசராசரங்களைப் போல அழகும் படைத்த தொண்டர்கள் உடலும் உள்ளமும் உருகவைக்கும் இனிமை பொருந்திய கரும்பே! கீழைக் கடற்கரையோரம் திருவொற்றியூர் அமர்ந்த பெருமானே.

    ஓடு விழுந்து சீப்பாயும் ஒன்பது வாய்ப் புண்ணுக்கு
    இடுமருந்த யான் அறிந்து கொண்டேன் – கடுவருந்தும்
    தேவாதி தேவன் திருவொற்றியூர்த் தெருவில்
    போவார் அடியிற் பொடி. 3.

    சீவடியும் புண்போன்ற ஒன்பது வாசல்களைக் கொண்ட இந்த உடலுக்கு இடவேண்டிய மருந்தை நான் அறிந்து கொண்டேன். அந்த மருந்து யாதெனின், (கடு + அருந்தும் = ஆலகாலவிடத்தை உண்ட) தேவாதி தேவனான திருவொற்றியூரானின் அடியவர்கள் தினந்தினம் நடந்த பூமியில் கிடக்கும் பாததூளியே இப்பிணிக்குச் சரியான மருந்து. (இக்கருத்தையொட்டியே சில ஆலயங்களில் அங்கப் பிரதக்ஷணம் செய்வது அடியார்கள் நடந்த பாததூளி உடலில் பட்டுப் புனிதமடைதற்காக என்பது கருத்து)

    வாவி யெல்லாம் தீர்த்தம், மணல் எல்லாம் வெண்ணீறு
    காவணங்களெல்லாம் கணநாதர் – பூவுலகில்
    ஈது சிவலோகம் என்றென்றே மெய்த்தவத்தோர்
    ஓதும் திருவொற்றி ஊர். 4.

    மெய்யான தவம் புரிந்த புனிதர்கள் எல்லோரும் போற்றுகின்ற திருத்தலமாம் திருவொற்றியூரில் அமைந்துள்ள நீர்நிலைகள் அனைத்துமே சிவ புண்ணிய தீர்த்தங்களாம்; அந்நகர் எங்கும் பரவிக் கிடக்கும் மணல் யாவும் அவன் அணியும் திருநீறு; மலர்கள் பூத்துக் குலுங்கும் நந்தவனங்கள் அனைத்துமே சிவகணங்களாகும்.

    திருவாரூர்:
    ஆரூரர் இங்கிருக்க அவ்வூர்த் திருநாளென்று
    ஊரூர்கள் தோறும் முழலுவீர் – நேரே
    உளக் குறிப்பை நாடாத ஊமர்காள் நீவிர்
    விளக்கிருக்கக் தீத்தேடு வீர். 5.

    திருவாரூர் தியாகேசர் இங்கே இருக்க, எந்தெந்த ஊரிலோ திருநாள் என்று ஊரெங்கும் பறையறைவீர். அட பேதையர்களே! சித்தத்தில் உறையும் அறிவான தெய்வத்தை உணராமல், ஊமைகளே! யாராவது விளக்கு எரிந்து கொண்டிருக்க தீக்காக அலைவார்களா?

    திருக்காளத்தி:
    பொய்யை ஒழியாய், புலாலை விடாய், காளத்தி
    ஐயரை எண்ணாய், அறம் செய்யாய் – வெய்ய
    சினமே ஒழியாய், திருவெழுத்து ஐந்து ஓதாய்,
    மனமே உனக்கென்ன மாண்பு. 6.

    நெஞ்சே! பொய் பேசுவதை நீ விட்டபாடில்லை; மாமிச உணவுகளை உண்பதை விட்டபாடில்லை; காளத்திநாதனை நினைக்கவில்லை; தான தர்மங்களையும் செய்தபாடில்லை; துன்பம் தரும் கோபத்தையும் விட்டபாடில்லை; அதெல்லாமிருக்கட்டும் சிவபெருமானின் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதுவதும் இல்லை, இவைகளையெல்லாம் கடைபிடிக்காமல் உனக்கென்ன அத்தனை கர்வம்.

    காஞ்சிபுரம்:
    எத்தனை ஊர் எத்தனை வீடு எத்தனை தாய் பெற்றவர்கள்
    எத்தனை பேர் இட்டழைக்க ஏன் என்றேன் – நித்தம்
    எனக்குக் களையாற்றா ஏகம்பா கம்பா
    உனக்குத் திருவிளையாட் டோ. 7.

    ஏ கம்பநாதா, எகம்பநாதனே! எனக்குத்தான் எத்தனை பிறவி, அவை அத்தனையிலும் எத்தனை ஊர், எத்தனை வீடு, என்னைப் பெற்ற அன்னையர்கள் எத்தனை பேர், எனக்கிட்டழைக்க எத்தனை பெயர்கள் ஏன் என சிந்தித்தேன், ஏகம்பநாதரே! இவை அத்தனைக்கும் நான் ஆளாவது எதனால், இதெல்லாம் உனது திருவிளையாடலோ?

    திருவிருப்பையூர்:
    மாதா உடல் சலித்தாள், வல்வினையேன் கால் சலித்தேன்
    வேதாவும் கைசலித்து விட்டானே – நாதா
    இருப்பையூர் வாழ் சிவனே, இன்னுமோர் அன்னை
    கருப்பையூர் வாராமற் கா. 8.

    இருப்பையூரில் கோயில் கொண்டுள்ள சிவபெருமானே! எனக்குத்தான் எத்தனை தாயார்கள் ஒவ்வொரு பிறவியிலும் அவர்கள் அத்தனை பேரும் என்னைப் பெற்று மனம் சலித்தார்கள்; தீவினைகள் செய்ய அத்தனை பிறவிகளிலும் ஓடியாடியதால் நானும் கால் சலித்துப் போனேன்; என்னை மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்க வைத்து அந்த பிரம்மனாம் நான்முகனும் கைசலித்துப் போனான்; ஐயனே! இனியும் ஒரு முறை நான் கருப்பையூர் சென்று வாசஞ் செய்து மீண்டும் பிறக்காமல் வரமருள்வாயே.

    திருக்காரோணம்:
    அத்தி முதல் எறும்பு ஈரான உயிர் அத்தனைக்கும்
    சித்த மகிழ்ந்தளிக்கும் தேசிகா – மெத்தப்
    பசிக்குதையா பாவியேன் பாழ்வயிற்றைப் பற்றி
    இசிக்குதையா காரோண ரே. 9.

    திருநாகைக் காரோணப் பெருமானே! யானை முதல் எறும்பு வரையிலான பலகோடி ஜீவராசிகளுக்கும் உணவளித்துக் காக்கும் பரமேச்வரா! ஞானத்தைத் தேடி அலையும் எனக்கும் வயிறு உண்டு, பசி உண்டு என்பதை அறியாமல் இருந்தேனே; பசிக்கொடுமை தாங்கமுடியவில்லை, அடியவனின் பாழ்வயிற்றைப் பற்றி நினைக்க வேண்டியிருக்கிறதே ஐயனே.

    திருக்குற்றாலம்:
    காலன் வருமுன்னே கண் பஞ்சடை முன்னே
    பாலுண் கடைவாய்ப் படுமுன்னே – மேல்விழுந்தே
    உற்றார் அழுமுன்னே, ஊரார் சுடுமுன்னே
    குற்றாலத் தானையே கூறு. 10.

    என் பாழும் உயிரை எடுத்தேக எமன் வருவதற்கு முன்பாக, கண்கள் பஞ்சடைந்து பார்வை மங்குமுன்பாக, வாயில் ஊற்றிய பால் உள்ளே இறங்காமல் கடைவாயில் வழிந்தோடுதற்கு முன்பாக, உயிர்போன என் உடல் மீது உறவும் சுற்றமும் விழுந்து அழுமுன்னே, அந்தப் பாழுடலை ஊரார் எடுத்துச் சென்று தீயிட்டுச் சுடுமுன்னே, ஓ நெஞ்சமே, திருக்குறாலநாதனை நினைத்துப் போற்றிடுவாய்.

    (இன்னும் வரும்)

    Share
  • பட்டினத்தடிகளின் பாடல்கள் – 17ம் பகுதி

    தஞ்​சை​ வெ​. கோபாலன்

    திருக்கைலாயம்.

    கான்சாயும் வெள்ளி மலைக்கரசே நின் கழல் நம்பினேன்
    ஊன் சாயும் சென்மம் ஒழித்திடுவாய் கரவூரனுக்கா
    மான் சாயச் செங்கை மழுவலம் சாய வளைந்த கொன்றைத்
    தேன் சாய நல்ல திருமேனி சாய்ந்த சிவக் கொழுந்தே. 1.

    மணம் பரப்பும் (கான் = மணம்) பனிமலையாம் கயிலையங்கிரிக்கு அதிபதியே! (கரவூரன் = கரவூர் என வழங்கும் விரிஞ்சீபுரத்து அன்பன். அங்கு சிவனுக்குப் பூசை புரியும் அந்தணச் சிறுவனுக்கு அபிஷேகம் செய்ய எட்டவில்லை என்பதால் சிவன் தலை குனிந்து கொடுத்ததாகத் தல புராணம் கூறுகிறது) கரவூர் அன்பனான சிவசருமனுக்காக உன் திருக்கரங்கரங்களில் தாங்கியுள்ள மான் சாய்ந்திடவும், மற்றோர் கையிலுள்ள மழு வலப்புறமாகச் சாய்ந்திடவும், உன் கழுத்தில் அணிந்திருக்கும் கொன்றைமாலையிலிருந்து தேன் ஒழுக, இவை அனைத்தோடும் உன் திருமேனியும் சாய அமர்ந்திருக்கும் சிவக் கொழுந்தே உன் பாதங்களைப் பணிந்தேன், மாமிசப் பிண்டமான இப்பிறவியை ஒழித்து எனக்கு மோட்சமளிப்பாய்.

    குறிப்பு:- விரிஞ்சிபுரம் பற்றியும் அங்கு சிவனுக்கு பூசை செய்த அந்தணச் சிறுவன் சிவசருமன் பற்றியும் இங்கு தெரிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும். விரிஞ்சிபுரத்து ஈசன் மார்க்கபந்தீச்வரர், அம்பாள் மரகதாம்பிகை. 1300 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்தத் திருத்தலம் வேலூருக்கு அருகில் இருக்கிறது. இவ்வூரின் தலபுராணத்தின் படி படைப்புக் கடவுளான பிரம்மா இங்கு சிவபூஜை செய்யும் சிவாச்சாரியார் குடும்பத்தில் சிவசர்மனாகப் பிறந்தார். சிவசர்மன் உபநயனம் செய்யப்படாத குழந்தையாக இருந்த போதே அவனுடைய தந்தையார் இறந்து போனார். விரிஞ்சிபுர ஆலயத்திலுள்ள சிவனுக்கு பூஜை செய்யும் கடமை இந்த சிறுவனுக்கு வந்தது. ஆனால் உபநயனம் (பூணூல் அணிதல்) நடந்தால்தான் பூஜை செய்ய முடியும். இறந்து போன சிவாச்சாரியாரின் உறவினர்களுக்கு அவர் விட்டுச் சென்றிருக்கிற நிலம் மற்றும் பூஜை செய்யும் உரிமை அனைத்தையும் பிடுங்கிக் கொள்ள வேண்டுமென்கிற எண்ணம். அதனால் சிறுவன் சிவசர்மனிடம் உன் முறை வரும்போது நீ போய் பூஜை செய்யவில்லையானால் அந்த உரிமை எங்களுக்கு வந்துவிடும். நிலத்தையும் நாங்கள் பிடுங்கிக் கொள்வோம் என்றனர். சிவசர்மாவின் தாய் இறைவன் மார்க்கபந்தீச்வரரிடம் வேண்டிக் கொண்டார் வழிகாட்டு என்று. கார்த்திகை மாதத்தில் கடைசி சனிக்கிழமை இறைவன் அந்த அன்னையின் கனவில் தோன்றி சிறுவனை பூஜை செய்ய அனுப்பும்படி சொல்லி ஆசி வழங்கினார். மறு நாள் சிவசர்மன் பிரம்ம தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து கொண்டிருந்த போது சிவபெருமான் ஒரு கிழவர் வேடத்தில் வந்து அவனுக்கு பூணூல் அணிவித்து உபநயனம் செய்வித்து பிரம்மோபதேசம் எனும் காயத்ரி மந்திர உபதேசம் செய்து வைத்தார். அதோடு சிவனுக்கு பூஜை செய்யும் உரிமையுள்ள சிவதீட்சையையும் வழங்கினார். பின்னர் கிழவர் மறைந்து சென்றார். சிறுவன் பிரம்ம தீர்த்தத்திலிருந்து புனித நீரை குடத்தில் எடுத்துக் கொண்டு ஒரு யானை மீதேறி கோயிலுக்கு வர அங்கு கூடியிருந்தோர் அதிசயித்துப் போக, கோயில் கதவு தானாகத் திறந்து கொண்டது. ஏதோ காலம் காலமாக பூஜை செய்து வந்த அனுபவசாலியைப் போல அந்தச் சிறுவன் முதலில் சுவர்ண கணபதிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்தான். அடுத்து பூஜை செய்ய சிவனிடம் சென்றால் அவனால் சிவனுடைய தலையை எட்ட முடியவில்லை. இறைவா! உன் தலையில் புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்ய எனக்கு உயரம் எட்டவில்லையே என்ன செய்வேன் என்று வேண்ட, சிவன் தன் தலைமுடியைத் தாழ்த்தி குனிந்து கொடுத்து அவன் பூஜை செய்ய வசதியாக நின்றார். இன்றும் அங்கு சிவன் சற்று குனிந்த நிலையில் இருப்பார். இங்கு பட்டினத்தார் இதைக் குறிப்பிட்டு அன்று அந்தச் சிறுவனுக்காக உன் உடல், கை மழு, மான், கழுத்து மாலை அனைத்தும் தாழக் குனிந்தாயே என்கிறார்.

    இல்லம் துறந்து பசி வந்தபோது அங்கு இரந்து தின்று
    பல்லும் கறையற்று வெள்வாயுமாய் ஒன்றில் பற்றுமின்றிச்
    சொல்லும் பொருளும் இழந்து சுகானந்தத் தூக்கத்திலே
    அல்லும் பகலும் இருப்பதென்றோ கயிலாயத்தனே. 2.

    வீடு, வாசல், மனைவி மக்கள் அனைத்தையும் நீங்கி வெளியேறி, பசி எடுத்தால் பிச்சை எடுத்து உண்டு, இல்லறத்தில் உணவு அருந்தியபின் தாம்பூலம் போட்டு பற்கள் கறையாகி விடுமே, அதுபோல அல்லாமல் கறையற்ற பல்லோடு வெளுத்த வாயோடும், எதிலும் பற்று இல்லாமலும், சொற்களை நீக்கி மவுன நிலை அடைந்து, எனக்கென பொருள் எதுவை இல்லாமல் சுகானந்த அனுபவத்தில் இரவு என்ன, பகல் என்ன என்று எப்போதும் யோக நித்திரையில் இருக்கும் நாள் என்றோ கயிலையில் அமர்ந்த கோவே.

    சினந்தனை அற்றுப் பிரியமும் தானற்றுச் செய்கை அற்று
    நினைந்தது அற்று நினையாமையும் அற்று நிர்ச்சிந்தனாய்த்
    தனந்தனியே இருந்து ஆனந்த நித்திரை தங்குகின்ற
    வனந்தனில் என்று இருப்பேன் அத்தனே கயிலாயத்தனே. 3.

    இயல்பிலே உள்ளத்தில் அமைந்த கோபத்தை அறவே நீக்கி; ஆசையை அகற்றி; செய்கைகள் அனைத்தையும் துறந்து; இதுவரை மனதில் சேர்த்து வைத்திருந்த நினைவுகளையெல்லாம் நீக்கிவிட்டு; மறந்து விடுதல் என்பதையும் மறந்துவிட்டு; வெறுமையான மனத்தினனாய்த் தன்னந்தனியானாய் அமர்ந்து சிவசிந்தனையோடு எப்போதும் இருப்பது எப்போது ஐயனே கயிலாயத்தமர்ந்த கோவே.

    கையார வேற்று நின்று அங்ஙனந் தின்று கரித்துணியைத்
    தையாது உடுத்து நின் சந்நிதிக்கே வந்து சந்ததமும்
    மெய்யார நிற்பணிந்து உள்ளே உரோமம் விதிர்விதிர்ப்ப
    ஐயாவென்று ஓலமிடுவதென்றோ கயிலாயத்தனே. 4.

    கை நிறைய பிச்சை ஏற்று, வாங்கிய இடத்திலேயே அதை உட்கொண்டு, கரிபடிந்த துணியைத் தைக்காமல் உடுத்துக் கொண்டு உன்னுடைய சந்நிதிக்கு வந்து சதாகாலமும் மனதில் உன்னை எண்ணிப் பணிந்து, உடலில் மயிர்க்கால்கள் அனைத்தும் குத்திட்டு நிற்க ‘ஐயா’ என்று உரத்தக் குரலெடுத்து உன்னைப் பார்த்து ஓலமிடுவது என்னாளோ, கயிலையில் அமர்ந்த பெம்மானே.

    நீறார்ந்த மேனி உரோமஞ் சிலிர்த்து உளம் நெக்குநெக்கு
    சேறாய்க் கசிந்து கசிந்தே உருகி நின் சீரடிக்கே
    மாறாத் தியானம் முற்றானந்த மேற்கொண்டு மார்பில் கண்ணீர்
    ஆறாய்ப் பெருகக் கிடப்பதென்றோ கயிலாயத்தனே. 5.

    உடலெங்கும் திருநீறணிந்து, உன்னை எண்ணி மயிர்க்கால்கள் குத்திட்டு, உள்ளமோ உன்னை நினைந்து நெக்குருகி சேறு போல கனிந்து, உன் சேவடித் தாமரைகளை மனதில் எண்ணி எப்போதும் தியானம் செய்து, கண்களில் பெருகி வரும் கண்ணீரால் மார்பு நனையக் கிடப்பது என்னாளோ, கயிலைமலை வாழ் சிவபெருமானே.

    செல்வரைப் பின் சென்று சங்கடம் பேசித் தினந்தினமும்
    பல்லினைக் காட்டிப் பரிதவியாமற் பரானந்தத்தின்
    எல்லையில் புக்கிட ஏகாந்தமாயெனக் காமிடத்தே
    அல்லல் அற்று என்று இருப்பேன் அத்தனே கயிலாயத்தனே. 6.

    செல்வம் படைத்த சீமான்களைத் தேடிப்போய் என் துயரங்களையெல்லாம் சொல்லி, பற்களைக் காட்டிக் கெஞ்சி பரிதவித்து நிற்காமல், பரானந்தமாம் சிவானந்தத்தின் எல்லைக்குக் கொண்டு சென்று, ஏகாந்தமாகத் துன்பங்கள் எதையும் அண்டவிடாமல் இருக்க அருள் செய்திடுவாய் அத்தனே, கயிலாயம் அமர்ந்த பெருமானே.

    மந்திக் குருளை யொத்தேனில்லை நாயேன் வழக்கறிந்தும்
    சிந்திக்கும் சிந்தையை யான் என்செய்வேன் எனைத்தீது அகற்றி
    புந்திப் பரிவிற் குருளையை ஏந்திய பூசையைப் போல்
    எந்தைக்கு உரியவன் காணத்தனே கயிலாயத்தனே. 7.

    குட்டிபோட்ட குரங்கு தன் குட்டியை எடுப்பதில்லை, அந்த குட்டியே தாயின் வயிற்றைக் கவ்விக் கொள்ளும் (மர்க்கட நியாயம்) போல நான் உன்னைக் கவ்விக் கொள்ளவில்லை, நாயினும் கேவலமான நான் நிலைமைகளை அறிந்திருந்தும் உன்னைச் சிந்திக்காமல் இருக்கும் என்னுடைய சிந்தையை என்னவென்று சொல்வேன்; என் உள்ளம் புகுந்த கள்ளத்தை நீக்கி பூனை எப்படித் தன் குட்டியைக் கவ்விக் கொண்டு போகுமோ அதுபோல (மார்ச்சால நியாயப்படி) நீ என்னை கவ்விக் காத்திட வேண்டும் தந்தையே, கயிலை நாயகனே.

    வருந்தேன் பிறந்தும் இறந்தும் மயக்கும் புலன்வழி போய்ப்
    பொருந்தேன் நரகிற் புகுகின்றிலேன் புகழ்வாரிடத்தில்
    இருந்தேன் இனியவர் கூட்டம் விடேன் இயல் அஞ்செழுத்தாம்
    அருந்தேன் அருந்துவன் நின்னருளால் கயிலாயத்தனே. 8.

    திருக்கயிலாயம் அமர்ந்த சிவபெருமானே! இனி நான் பிறந்தும் பின் இறந்தும் இப்படி துன்பப்படமாட்டேன், ஐம்புலன்களின் மயக்கத்தால் அவை காட்டும் திசை நோக்கிப் போய் எச்செயலிலும் ஈடுபட்டுத் துன்புறமாட்டேன்; பாபக் குழியெனும் நரகத்தில் விழமாட்டேன், காரணம் நான் நின் அடியவர் கூட்டத்தில் சேர்ந்திருக்கிறேன், அந்த அடியார் திருக்கூட்டத்தை எந்த காரணத்தினாலும் விட்டு விலகமாட்டேன், இனிய தேனின் சுவையுடைய உன் ஐந்தெழுத்தாம் ‘சிவாயநம’ எனும் மந்திரத்தை அருந்திக் கிடப்பேன்.

    மதுரை:
    விடப்படுமோ இப்பிரபஞ்ச வாழ்க்கையை விட்டு மனம்
    திடப்படுமோ நின்னருள் இன்றியே தினமே அலையக்
    கடப்படுமோ அற்பர் வாயிலிற் சென்று கண்ணீர் ததும்பிப்
    படப்படுமோ சொக்கநாதா! சவுந்தரபாண்டியனே. 9.

    மதுரை வாழ் சோமசுந்தரா! சவுந்தரபாண்டியனே! இப்பூவுலக வாழ்க்கையில் காணுகின்ற அனைத்து இன்பங்களையும் விட்டு நீங்கிவிடமுடியுமா; அப்படி விட்டு விலகிவிட மனம்தான் துணிந்து திடப்படுமோ; அப்படியின்றி தினம்தினம் அதனைச் சாராமல் இருக்கத்தான் முடியுமா; மனம் சலனப்பட்டு அங்குமிங்குமா அலைக்கப்படுமோ; அற்பர்கள் வீட்டு வாயிலில் சென்று கண்களில் நீர் சோர நின்று மனவருத்தம் பட இயலுமோ, நின் அருள் கிடைக்காதவரை அவை இயலாது.

    (இன்னும் வரும்)

    Share
  • பட்டினத்தடிகளின் பாடல்கள் – 16ம் பகுதி

    தஞ்​சை ​வெ.​ கோபாலன்

    இனி சில தலங்களில் பாடிய தனிப் பாடல்கள்:

    1. திருச்செங்கோடு:

    நெருப்பான மேனியர் செங்காட்டிலாத்தி நிழலருகே
    இருப்பார் திருவுளம் எப்படியோ இன்னம் என்னை அன்னை
    கருப்பாசயக் குழிக்கே தள்ளுமோ கண்ணன் காணரிய
    திருப்பாதமே தருமோ தெரியாது சிவன் செயலே.

    செக்கச் செவேலென்று சிவந்த வானத்தைப் போன்ற திருமேனியை உடையவரும், அத்திமர நிழலில் வீற்றிருப்பவருமான பரமேஸ்வரனது கருணை உள்ளம் என்ன நினைக்கின்றதோ? அடியவனான என்னை மீண்டும் தாயின் கர்ப்பத்தில் வாசம் செய்யப் பணிக்கின்றாரோ; அப்படியின்றி அந்த மகாவிஷ்ணுவாலும் அடிமுடி காணமுடியாத அத்தனின் திருப்பாதங்களை அளித்து முக்தி தருமோ யார் கண்டார். எல்லாம் அந்த சிவபெருமான் செயல்.

    2. திருவொற்றியூர்.

    ஐயுந் தொடர்ந்து விழியுஞ் செருகி அறிவழிந்து
    மெய்யும் பொய்யாகி விடுகின்ற போதொன்று வேண்டுவன் யான்
    செய்யும் திருவொற்றியூருடையீர் திருநீறும் இட்டுக்
    கையும் தொழப் பண்ணி ஐந்தெழுத்து ஓதவும் கற்பியுமே.

    திருவொற்றியூர் தலமேவும் சிவபெருமானே! நெஞ்சில் (‘ஐயும்’ என்பதில் ‘ஐ’ எனும் எழுத்துக்கு கபம் அதாவது bronchial congestion என்பார்கள்) சளி கபம் அடைத்துக் கொண்டு, விழிகள் மேல்புறமாய்ச் செருகிக் கொண்டு, உணர்வுகள் அடங்கிப் போய், இதுகாறும் ஓடியாடிக் கொண்டிருந்த இந்த பூதவுடலானது ஜீவன் இழந்து பிணமாகி இனி இது இல்லையெனும் நிலைமைக்கு வரும்போது இறைவா, நான் உன்னிடம் ஒரு வரம் கேட்பேன். அதனைக் கேட்டு நீயும் அங்ஙனே ஆகுக என வரமளித்திடுவாய் ஐயனே! எனக்கு நீ அருளும் வரம் என்னவென்றால், நான் நெற்றியில் திருநீற்றை இட்டுக் கொண்டு, இரு கரங்களாலும் உன்னைத் தொழுது கொண்டு உன் ஐந்தெழுத்தான ‘நமசிவாய’ எனும் மந்திரத்தை ஓதவும் அருள் புரிய வேண்டும் என்பதே.

    3. சுடப்படுவார் அறியார் புரம் மூன்றையும் சுட்டபிரான்
    திடப்படு மாமதில் தென்னொற்றியூரன் தெருப்பரப்பின்
    நடப்பவர் பொற்பதம் நம் தலைமேல் பட நன்கு உருண்டு
    கிடப்பது காண் மனமே விதி ஏட்டைக் கிழிப்பதுவே.

    ஏ மனமே! நன்கு உணர்ந்து கொள்வாயாக. திரிபுரங்களைப் பெம்மான் சிவபெருமான் சுட்டெரிக்கும் தருணத்தில் சுடப்படுபவர்களான ஜீவன்கள் அறிந்து கொள்ளாத செய்தியொன்று உண்டு. வானுயர்ந்த நெடு மதில்கள் சூழ் எழில்வாய்ந்த திருவொற்றியூர் திருத்தலத்தில் வீற்றிருந்து அருள்பாலிப்பவனான தியாகராஜப் பெருமானுக்குரிய திருவீதிகளில் நடந்து செல்லும் மெய்யடியார்களின் திருவடிகள் நம் தலையில் படும்படி வீழ்ந்து கிடந்தால் மட்டுமே பிரம்ம தேவன் நமக்காக எழுதிய விதி எனும் ஏட்டைக் கிழித்தெறிய முடியும். இதனை அறிவீனர்கள் உணர்வதில்லையே.

    4. திருவிடைமருதூர்.

    காடே திரிந்தென்ன காற்றே புசித்தென்ன கந்தை சுற்றி
    ஓடே எடுத்தென்ன உள்ளன்பு இலாதவரோங்கி விண்ணோர்
    நாடே இடைமருதீசர்க்கு மெய்யன்பர் நாரியர்பால்
    வீடே இருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுவரே.

    உள்ளத்தில் இறைவன் பால் உண்மையான அன்பு இல்லாதவர்கள் காட்டில் தனித்து இருந்தால்தான் என்ன? உணவை நீக்கி காற்றை மட்டுமே உட்கொண்டு வாழ்பவர்களாக இருந்தால்தான் என்ன? கந்தலாடை அணிந்து கொண்டு கையில் பிட்சாபாத்திரம் ஏந்திக் கொண்டு யாசகம் பெற்று வாழ்ந்தால் என்ன? இவற்றால் எல்லாம் அவர்களுக்குக் கிடைக்கப்போகும் நன்மைகள் ஏதும் இல்லை. விண்ணோர் வாழும் தேவலோகமெனப் போற்றப்படும் திருவிடைமருதூர் ஈசர்பால் மெய்யன்பு பூண்டவர்கள் மேற்சொன்னவர்களைப் போல தவம் செய்வதாகச் சொல்லிக் கொண்டு உள்ளன்பு இல்லாமல் இருப்பதைக் காட்டிலும், இல்லறத்தில் ஈடுபட்டுத் தங்கள் மனைவி மக்களோடு இருப்பார் நிச்சயம் வீடுபேறு பெற்று மோட்சம் பெறுவர். (திருமூலரும் “வேடநெறி நில்லார் வேடம் பூண்டென்பயன், வேட நெறி நின்றார் வேடமெய் வேடமே” என்கிறார்.)

    5. தாயும் பகை கொண்ட பெண்டீரும் பகை தன்னுடைய
    சேயும் பகை உறவோரும் பகை இச்செகமும் பகை
    ஆயும் பொழுதில் அருஞ்செல்வம் நீங்கில் இங்கு ஆதலினால்
    தோயும் நெஞ்சே மருதீசர் பொற்பாதம் சுதந்திரமே.

    இவ்வுலக வாழ்வை நன்றாக ஆராய்ந்து பார்க்கின்றபோதில், நமக்குரிய செல்வங்கள் எல்லாம் நம் கையைவிட்டுப் போய் வறியவனாக ஆனபோழ்தில், நமக்குப் பெற்ற தாயோ, மனைவி மக்கள் சுற்றமோ எவரும் உறவாக இருக்கப்போவதில்லை. அதுமட்டுமல்லாமல் இந்த ஊரும் உலகமும் நமக்குப் பகைதான். ஆகையால் என் நெஞ்சே திருவிடைமருதூரில் வதியும் பரமேசர் திருப்பாதங்களே நமக்கு அடைக்கலமே.

    6. திருக்கழுக்குன்றம்:
    காடோ செடியோ கடற்புறமோ கனமே மிகுந்த
    நாடோ நகரோ நகர் நடுவோ நலமே மிகுந்த
    வீடோ புறந்திண்ணையோ தமியேன் உடல் வீழுமிடம்
    நீடோய் கழுக்குன்றில் ஈசா உயிர்த்துணை நின்பதமே.

    திருக்கழுக்குன்றத்தில் வானுயர நீண்ட மலையுச்சியில் அமர்ந்துள்ள எம்பிரானே! தனித்திருக்கும் அடியேனின் உடல் உயிரிழந்து வீழுகின்ற இடம் காடோ, மரத்தடியோ, கடற்கரையிலோ, வளம் கொழிக்கும் நாடோ, நகரமோ, நகரத்தின் நடுவிலோ, எல்லா நலன்களும் நிறைந்த வீடோ, வீட்டின் திண்ணையோ எதுவாகினும் அடியேனுக்கு நினது திருவடிகளே துணை.

    7. திருக்காளத்தி:
    பத்துப் புகுந்து பிறந்து வளர்ந்து பட்டாடை சுற்றி
    முத்தும் பவளமும் பூண்டு ஓடியாடி முடிந்த பின்பு
    செத்துக் கிடக்கும் பிணத்தருகே இனிச் சாம்பிணங்கள்
    கத்தும் கணக்கென்ன காண் கயிலாபுரிக் காளத்தியே.

    தென்கயிலை எனப்பெயர் பெற்ற திருக்காளத்தியில் எழுந்தருளியுள்ள சிவனே! அன்னையின் கர்ப்பத்தில் பத்துமாதங்கள் சிறையிருந்து, பின்னே இம்மண்ணில் வந்து பிறந்து, வளர்ந்து பட்டாடைகளை உடலில் அணிந்து கொண்டு, முத்திலும் பவளத்திலும் ஆன மணிகளை அணிந்து அழகுபடுத்திக் கொண்டு, ஓடி ஆடி விளையாடி முடித்தபின்பு, உலக இன்பங்களையெல்லாம் அனுபவித்து ஓய்ந்த பின்பு உயிர் பிரிந்தபின் பிணமென்று பெயர் சூட்டிப் படுக்க வைத்து, அந்தப் பிணத்தைச் சுற்றி அமர்ந்து இனிச் சாகப்போகும் பிணங்கள் ஓசையிட்டு அழுவதும் ஏனோ ஐயனே!

    8. பொன்னால் பிரயோசனம் பொன் படைத்தார்க்குண்டு, பொன்படைத்தோன்
    தன்னாற் பிரயோசனம் பொன்னுக்கு அங்கு ஏது உண்டு, அத்தன்மையைப்போல்
    உன்னாற் பிரயோசனம் வேணதெல்லா முண்டு உனைப்பணியும்
    என்னாற் பிரயோசனம் மேதுண்டு? காளத்தி ஈசுரனே.

    திருக்காளத்தி வாழ் பரமேச்வரனே! பொன்னும் செல்வமும் படைத்தவர்களுக்கு அந்த பொன்னால் பயன் உண்டு, ஆனால் பொன் படைத்தவனால் அந்தப் பொன்னுக்கு ஏதும் பயன் உண்டோ? அதைப்போலத்தான் உன்னால் எமக்குப் பயன் வேண்டிய மட்டும் உண்டு, ஆனால் உன் திருவடிகளே கதி என்று பணிந்து தினந்தினம் போற்றுகின்ற எம்மால் உமக்கு ஏது பிரயோசனம், சொல்.

    9. வாளான் மகவு அரிந்து ஊட்டவல்லேன் அல்லன், மாது சொன்ன
    சூளால் இளமை துறக்க வல்லேன் அல்லன், தொண்டு செய்து
    நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லன் நான் இனிச் சென்று
    ஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்பருக்கே.

    சிவனடியாராக வந்து நீ கேட்டதற்காகச் சிறுத்தொண்டரைப் போல வாளால் தன் சொந்த மகவையே அரிந்து கறிசமைத்து உனக்கு ஊட்டும் வல்லமை சிறிதும் இல்லாதவன் நான்; ‘திருநீலகண்டத்தின் மீது ஆணை என்னை இனி தீண்டலாகாது’ என சூள் உரைத்த மாதின் சொல்லை ஏற்றுத் திருநீலகண்ட நாயனார் தன் மனைவியைத் தொடாமலே இளமைக் காலத்தைக் கடந்தாரே அதைப் போல தியாகம் செய்ய வல்லவன் அல்ல நான்; ஆறே நாட்கள் காளத்தியப்பனைக் காட்டில் கண்டு பக்திகொண்டு ஆறாம் நாள் அவர் கண்களில் உதிரம் கசியக் கண்டு தன் கண்ணை எடுத்து அவருக்கு அப்பிய அந்த நெஞ்சுரம் கொண்ட கண்ணப்பனைப் போல மனோதிடம் கொண்டவன் அல்லன்; அப்படிப்பட்ட நான் காளத்தி அப்பரே நான் உன்னை அடைக்கலமென்று அடைவதுதான் எப்படியோ?

    10. முப்போதும் அன்னம் புசிக்கவும் தூங்கவும் மோகத்தினால்
    செப்போதிள முலையாருடன் சேரவும் சீவன் விடும்
    அப்போது கண்கலக்கப் படவும் அமைத்தாய் ஐயனே
    எப்போது காணவல்லேன் திருக்காளத்தி ஈசுரனே.

    திருக்காளத்தி ஈஸ்வரா! ஒவ்வொரு நாளும் மூன்று போழ்திலும் சோற்றைப் புசிக்கவும், பின்பு நன்கு உறங்கவும், மோகங்கொண்டு செம்புக் கிண்ணம் போன்ற இளம் தனங்களைக் கொண்ட மாதருடன் உறவாடவும், இவ்வுயிர் உடல்விட்டுப் போகுங்காலை மனம் வருந்தி கண்கலங்கி அழவும் வைத்தாயே ஐயனே! உன்னை எப்போதுதான் நான் காண்பேன்.

    (தலவரிசைப் பாடல்கள் இன்னும் உண்டு)

    Share