கன்னத்தில் மின்னலொன்று
இசைக்கவி ரமணன்
உனக்கே உனக்காக (43)
கன்னத்தில் மின்னலொன்று
(பாடல்)
[mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%B1/[/mixcloud]
கன்னத்தில் மின்னலொன்று
கண்சிமிட்டித் தான்மயங்க
கள்ளூறும் கண்ணிரண்டைக்
கண்டுகண்கள் தாம்கிறங்க
பொன்னூறும் பூவிதழில்
வானமிழ்தம் தானிறங்க
என்னசொல்லிப் பாடுவதோ
என்னுயிரே தாலேலோ!
பாறையினில் ஈரமென
பாலையினில் சாரலென
பந்துநிலவாய் நுழைந்தாய்
நெஞ்சில் நின்று நீ நெகிழ்ந்தாய்
சூறையினில் காவலென
கூரையினில் சேவலென
சொந்தபந்தமாக வந்த
தோழமையே தாலேலோ!
அன்றிலிருந் தின்றுவரை
இன்பமிது போல இல்லை
என்றுமிது நீள்கவென்றே
என்றன்மனம் ஏங்கும் எல்லை
குன்றில்வரும் வெண்ணிலவே!
கொப்புக்குயில் பண்ணழகே!
சிட்டுக் குருவிச் சிறகே!
சித்திரமே தாலேலோ!
பார்த்தவிழி பார்த்திருக்க
பருகும்விழி பருகிநிற்க
சேர்த்தகதை தீர்ந்ததம்மா
ஜென்மம்கரை சேர்ந்ததம்மா
ஆர்த்துவரும் பொன்னருவி
அள்ளிவரும் சீதனமே
அன்புமயமான அன்பே
ஆனந்தமே தாலேலோ!
படத்திற்கு நன்றி