( எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா )

 

 

பரந்திருக்கும் கடலதனை

பலருக்கும் உவமிப்பர்

பட்டம்பல பெற்றவரை

பதவியிலே உயர்ந்தவரை

பெட்டிநிறை பணம்கொண்டார்

அத்தனபேர் தனையுலகில்

கடலெனவே பெயர்சூட்டிக்

களிப்புடனே அழைத்திடுவர் !

 

உவமிக்கும் உவமானம்

உயர்வினையே தரவேண்டும்

உவர்நிறைந்த கடலதனை

உவமித்தல் உகந்ததன்றோ

உவர்நிறைந்த கடலதனை

உவமானம் ஆக்கிவிடின்

உயர்வென்று கருதுவதில்

ஒருகுறைவு வருமன்றோ !

 

தந்தாலும் பலவளத்தை

தாகமதைத் தீர்க்காத

கடலதனை உவமித்தல்

கற்பனைக்கே பொருத்தமில்லை

பசுமைதனைத் தருவதற்கும்

பயிர்வளர்ச்சி யடைவதற்கும்

ஒருபொழுதும் உதவாமல்

இருக்குதன்றோ உவர்கடலும் !

 

மேலிருக்கும் மேகமது

கீழிருக்கும் கடல்தன்னுள்

ஆதவனின் உதவியுடன்

ஆவியென நீரெடுத்து

பூமிதனைக் குளிர்விக்க

பொழிகின்ற மழையெனவே

மாறிவிட்டால் பின்னால்தான்

மற்றவர்க்கு உதவுதது !

 

பட்டம்பல பெற்றவர்கள்

பண்புநிலை உயர்வதில்லை

பணம்கொண்ட பலபேர்கள்

குணம்கூட மாறமாட்டார்

உவர்கொண்ட கடல்போல

உளமெல்லாம் உயிர்ப்பின்றி

அவர்வாழும் நிலையினைநாம்

அகிலத்தில் காணுகிறோம் !

 

கருணைக் கடலென

கடவுளைக் கூறுகிறோம்

கற்பனைக் கடலென்று

கவிஞர்தமை அழைக்கின்றோம்

பரந்திருக்கும் காரணத்தால்

பெருவாழம் கொண்டதனால்

கடலெனவே கருதிநின்று

உலகிலுள்ளோர் அழைக்கின்றார் !

 

ஆழத்தை நோக்கிடினும்

அகலத்தை நோக்கிடினும்

மாக்கடலின் உவர்தன்மை

மாறிவிட மாட்டாது

உவர்தன்மை கொண்டகடல்

உயர்வுக்குப் பொருத்தமன்று

உள்ளமதில் அதையெண்ணி

ஒருகணம்நாம் சிந்திப்போம் !

 

மேலிருக்கும் மேகம்தான்

கீழ்கடலை பயன்படுத்தும்

மேலான பணிதன்னை

மேதினியில் செய்கிறது

மேலான குணமுடையார்

வெளிவந்து நின்றுவிடின்

கீழான குணமெல்லாம்

கிறுகிறுத்து ஓடிவிடும் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *