உயிர்ப்பிழந்த சாசனங்கள்!!!
-மகேந்திரன்
நியாயத்தின் சாரங்களால்
நியமனம் செய்யப்பட்ட
நிதர்சன சாசனங்கள் – யாவும்
நீர்த்துப்போன படிமங்களோ?!!
படிமங்களாயின் பாதகமில்லை
வடிவங்கள் உருமாறி
நொடியிழந்த மணித்துளியாய் – தாவும்
கடிவாளமற்ற புரவியாமோ?!!
புரவியின் பிடரியாய் உலுக்காது
நரம்புகள் தளர்ந்து
தரங்களின் துணை தவிர்த்த – காவாம்
நரகத்தின் காவலாமோ?!!
காவலின் தொனியிலே
பாவலன் போல் இறுமாந்து
சேவகம் தனை மறந்து – பாழும்
நாவடி பிறழ்ந்த வஞ்சகமோ!!
வஞ்சகப் பேய்களுக்கு
தஞ்சம் கொடுத்துவிட்டு
நெஞ்சம் அழுகிப்போன – மேவும்
மஞ்சம் வீழ்ந்த சாமரமோ!!
சாமரத் தென்றல் வீசி
கமல வதனம் சிவந்திருக்க
கோமள நாண்பூண்டு – ஆங்கே
தமனியன் தாள் புகுந்தாயோ!!
புகுந்த வீட்டிலோ
தகுந்த மரியாதை இல்லாது
வெகுண்டால் வெண்காடு தானென – ஊதும்
மகுடிக்கு அடங்கினாயோ!!
அடங்கியதால் தவறென்று
முடக்கியுனை போட்டுவிட்டு
சடங்குகள் கொண்டாடி – உன்னை
அடக்கிவைத்தல் நியாயம்தானே?!!