குழந்தையும் தெய்வமும்.
தனுசு
குழந்தை பிறப்பு குறைந்துவிட்ட
கணக்கைக் கண்டு
காரணமறிய
கள்ளத்தனமாய்
கடவுள் வந்தான் பூமிக்கு….
சகதியில் பன்றி
தன் குட்டிகளோடு புரள
தாய் பன்றியை
ஏக்கத்தோடு பார்த்தான்
ஓரத்தில் நின்ற
அனாதை சிறுவன்.
பில்கேட்ஸின் சுவரொட்டியை
கிழித்துவிட்டு
பத்தாவது நாள் பட சுவரொட்டியை
ஒட்டுவதில்
நேர்த்தியாய் இருந்தான்
ஒரு குழந்தை தொழிலாளி.
புதிய சட்டைக்கு
பட்டன் தைக்கும் சாக்கில்
தன் மீது போட்டுப் பார்த்து
தடவிக் கொடுத்தான்
கிழிந்த ஆடையுடன் ஒரு சிறுவன்.
உணவகத்தில்
வயிறு நிறைந்து
எழுந்தவரின் இலையில்
உண்ணாமலிருந்த லட்டை
உற்றுப்பார்த்து
எடுத்துப் போட்டுத் துடைத்தான்
பசித்த வயிறோடு ஒரு பாலக ஊழியன்.
தன்னால் செய்யப்பட்ட பட்டாசுகள்
வானத்தில்
வண்ணம் காட்ட
அதை நோக்கும் எண்ணமில்லாமல்
புண்ணான உடம்பில்
உண்ணாத வயிறும்
வேதனை கொடுக்க
வதை பட்டான்
பட்டாசு தொழிற்சாலையில்
ஒரு சிறுவன்.
ஒப்பாரி பாட யாருமில்லாததால்
ஈக்கள் மொய்க்க
இறுதிப் பயணத்துக்குத் தயாரானது
குப்பைத்தொட்டியில் கிடந்த
ஒரு குழந்தை.
மலர்ந்த பூக்களை
தட்டில் வைத்து
பூ பூவென கூவினாள்
வாடிய முகத்துடன் சிறுமி.
கல் சுமக்க போனவிடத்தில்
வல்லுறவு சுமத்தப்பட்டதால்
வெளியுலகம் அஞ்சி
கூடுக்குள் குருகியது
ஒரு பூப்பெய்தா பிஞ்சு.
கும்பிட கடவுள்
கைக்கெட்டும் தூரத்திலிருக்க
கோயிலின் வாசலில்
கள்ளனோ
கபோதியோ
அவனை கையெடுத்து கும்பிட்டு
“ஐயா…சாமி….” என்றே
காசு கேட்டது
ஒரு குழந்தைக்கூட்டம்.
குழந்தையாய்ப் பிறக்க
குழந்தைகளே விரும்பவில்லை
ஏழையாய்ப் பிறக்க
எந்த உயிரும் தயாரில்லை
தன் தவறை உணர்ந்தான்
தலையில் அடித்துக்கொண்டான்
என்னடா
ஏதடா
ஏனிந்த நிலையடா
படைத்தவன் நானா?
என் பணியும் வீணா?
இறைவன் என்பவன்
இனி எதற்காக
இரங்கல் பாடுங்கள்
இன்றோடு எனக்காகவென
கண்ணீர் விட்டு அழுதான்.
படத்துக்கு நன்றி: http://qhpc.org/wp-content/uploads/2013/02/Tears-of-Faith.jpg