சத்திய மணி

 

எதுவும் அறியாதது போலொரு குழந்தை
எனைப் பார்த்து சிரிக்கின்றது
அதில் ரகசியம் இருக்கின்றது
இதழோரம் இருக்கும் நவநீத வெளுப்பு
சிரிப்பினில் தெரிகின்றது
அதில் விஷ‌ம‌மும் புரிகின்றது()

கருவண்டு கண்களில் கசிந்திடும் கருணைக்கு
தேவர்கள் காத்திருந்தார் – அவன்
கால்பட்ட மண்ணுக்கு காலங்கள் தோறும்
புவிமகள் நோன்பிருந்தாள்
உரலிட்ட பின்னாலும் பலங் கொண்டுதவழும்
கண்காட்சி காண்பதற்கோ – பெரும்
முனிவரும் ஞானியரும் ஒருசேரவந்து
உண்ணாமல் நின்றிருந்தார்
அலைபாயும் கேசம் அசையாது செய்தால்
மழைமேகம் சுரக்காதடி – இவன்
கலைபேசும் குழலூதி களிப்போதைமுன்னாலே
கலிகாலம் செல்லாதடி()
தினந்தோறும் விளையாடி எனைத்தோற்க செய்து
அழவைத்து சுகமேற்றுவான் – என்
மனந்தோறும் உள்ளூடி எனைத்தேற்றி மன்றாடி
மறுபடியும் எனைச்சீண்டுவான்
அவனன்றி நானில்லை நானின்றி அவனில்லை
இதிலெங்கள் உடன்பாடுதான் – எந்தப்
பிறவியிலும் தொடர்கின்ற உறவுக்கு அச்சாரம்
புவியறியும் பிற்பாடுதான்
மனச்சாந்தி பெருவதற்கும் வீண்பிறவி விடுவதற்கும்
மாயனின் காலைப்பிடி – நீள்
தவக்கோலம் நிறைவதற்கும் தரிசனம் பெறுவதற்கும்
மறுக்காது கீதைப்படி()

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.