கீதா மதிவாணன்

old-indexபட்டுத்தூளியிலிட்டு பாலாடையில் தேன்புகட்டி
அந்நாளில் அவளுக்கும் ஒரு பெயர் சூட்டப்பட்டிருக்கலாம்.
வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும்போதோ,
ரேசன் அட்டை புதுப்பிக்கப்படும்போதோ அன்றி
அவளுக்கென்று ஒரு பெயர் இருப்பது
அவள் நினைவுக்கு வருவதேயில்லை.
தங்கமே வைரமே பவுனே பச்சைக்கிளியே என்று
கொஞ்சுமொழிகளால் கொண்டாடப்பட்டும்
அம்மாடி, கண்ணு, செல்லம், பாப்பாவென்று
ஆசையாயும் அன்பாயும் அழைக்கப்பட்டும்
அடியேய் இவளே…. நாயே பேயே சனியனே என்று
பின்னாளில் பேரெரிச்சலுடன் விளிக்கப்பட்டும்
கடந்துபோன காலத்தின் எந்த முடுக்கிலும்
தன்பெயர் புழங்கப்படாததில் அவளுக்குப் பெருவருத்தம்.
பள்ளிக்குச் சென்று பழக்கப்படாவாழ்வில்
அவள் பெயர் தாங்கியதொரு அஞ்சலட்டைக்கும்
வழியற்றுப்போனவளின் அந்திமக்காலத்தில்
ஏக்கத்தவிப்போடு ஊசலாடிக்கொண்டிருக்கிறது உயிர்க்கூடு,
காலனேனும் அவளைப் பெயரிட்டு அழைக்க
காலத்தே வருவானாவென்ற காத்திருப்போடு!

http://www.shunya.net/Pictures/NorthIndia/Bishnupur/Bishnupur.htm

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.