க. பாலசுப்பிரமணியன்

 

போதுமென்ற மனமிருந்தால்
பொழுதெல்லாம் அட்சயமே..!
புன்சிரிப்பு புலர்ந்திருந்தால்
போகுமிடமெல்லாம் அட்சயமே !!

கண்ணிரண்டும் கருணைவளையம்
அணிந்திருந்தால் அட்சயமே !
காப்பியங்கள் காதணியாய்
காதருகில் கிசுகிசுக்க
காலமெல்லாம் அட்சயமே !

கசடுபடா குரலிருந்து
முத்தான பாடல்கள்
முணுமுணுக்க முழங்கிவிட
முப்பொழுதும் அட்சயமே…!

கைகளிரண்டும் வலிமையுடன்
கடமைகள் செய்திருக்க
கங்கணமாய் பண்பிருந்தால்
காலமெல்லாம் அட்சயமே…!!

பசித்தவயிற்றை பக்கம்வைத்து
பருப்போடு சோறுகலந்து
பசியாறப் பார்க்கையிலே
பார்வைகொள்ளும் சுகமென்றும்
அட்சயமே… ..அட்சயமே. !!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.