உறவேல் ஒழிக்க ஒழியாது! (பகுதி-2)
ராமஸ்வாமி ஸம்பத்
“தாத்தா, நம் குடிலுக்கு இன்று என் தந்தையாரை அழைத்து வந்திருக்கிறேன்,” என்று வீட்டுக்கு வந்த மாறன் பாட்டனாரின் செவியில் உரைத்தான்.
“என்ன, மாலடியானா வந்திருக்கிறான்? அந்தப் பாஷாண்டி இங்கு எங்கே வந்தான்? முதலில் அவன் ’மால் பகைவன்’ என்று பெயரை மாற்றிக்கொள்ளட்டும். சமயத்தையும் பெயரையும் மாற்றிக்கொள்வது இந்த முல்லைத்தேவனுக்குக் கை வந்த கலைதானே,” என்று சீறினார் நம்பி.
மாறனுக்கு பாட்டனார் தன் மருமகன் மீது ஏன் இவ்வளவு சீற்றம் கொள்கிறார் என்று புரியவில்லை.
”மாமா, என் மீது தங்கள் சினம் நியாயமானதே. உங்களையெல்லாம் பிரிய நேர்ந்தது என் போறாத காலம்தான். மாலவனின் பணியில் ஈடுபட்டிருந்த எனக்கு அப்போது வேறு வழியில்லாமல் போய்விட்டது,” என்றான் மாலடியான்.
“மாலவன் பணி… ஹும்!” என்று ஏளனம் செய்த நம்பி, மாறனிடம் “கிருமிகண்டன் பணி என்று சொல்லச்சொல்” என்றார். “இத்தகைய குலத் துரோகிகளை நாம் நெருங்க விடக் கூடாது. சூலுற்றிருந்த இளம் மனைவியையும் வயது முதிர்ந்த மாமனையும் தவிக்க விட்டுக் கிருமிகண்டன் சேவையே பிரதானம் என்றிருந்து அந்த மால் பகைவனின் ஆணைப்படித் திருச்சித்திரக்கூடத்துக் கோவிந்தராஜரின் மூர்த்தம் கடலில் எறியப்படுவதற்குத் துணை நின்ற இவனை எவ்வாறு மன்னிப்பது?“
“மாமா, உங்களைப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அடியேனுக்கு எல்லாவற்றையும் விளக்க ஒரு வாய்ப்புக் கொடுங்கள். அதன்பின் என்னைப்பற்றி ஒரு முடிவுக்கு வாருங்கள்,” என்று இறைஞ்சினான் மாலடியான்.
கோபத்தால் சோர்வுற்ற நம்பி மேலே ஏதும் சொல்லவில்லை. இந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு, தன் விருத்தாந்தத்தைக்கூற ஆரம்பித்தான் மாலடியான்.
படத்திற்கு நன்றி:http://chennaionline.com/Religion/Temples/Chidambaram–a-divya-dEsam/20102515032546.col