அன்பே வா (சிறுகதை)
பாஸ்கர் சேஷாத்ரி
அப்பா சாயங்காலம் ஆறு மணிக்கு ரெடியா இரு.
என்னடா எதனா கோவிலுக்குக் கூட்டிண்டு போறயா?
இல்ல , உனக்குப் பிடிச்ச அன்பே வா படம் டி டீ எஸ் ல போடறாங்க.
வேணாண்டா, போன மாசம் கொஞ்ச நேரம் டி வி ல பார்த்தேன்.
நீ வேற, இது லெவல் வேற. புது கலர், சூப்பர் சவுண்ட் எபெக்ட். பாரு அந்த பெரிய ஸ்க்ரீன்ல.
உள்ளே நுழைந்தோம் பெரிய தியேட்டர் தான். ஒரே இருட்டு. நடுங்கும் குளிர் வேறு.
ஏன்டா, எவ்வளவுடா டிக்கெட்டு
சும்மா வாப்பா.
நீ படம் பாரு. பாட்டெல்லாம் எப்படி இருக்கு பாரு
உனக்கு பிடிச்ச விசுவோட மியூசிக்
தெரியுண்டா. ஒன்பது பாட்டு. அதுல ஒன்னு இங்கிலீஷ்.
மனம் படத்தில் லயிக்கும்போதே கொஞ்சம் அன்னியமாய்ப்பட்டது. இந்தப் பணக்காரத்தனம், மனசுக்கு ஒட்டவில்லை.
டே போலாம்டா.
ஏம்பா. படம் ஆரம்பிச்சு ஒரு மணி கூட ஆகலை.
கொஞ்சம் இரு என்றவன் அஞ்சு நிமிஷத்தில் ஒரு பக்கெட்டுடன் வந்தான்.
என்னடா இது.
பாப்கார்ன் பா. சும்மா சாப்பிடு
டே எனக்கு எல்லாமே கொஞ்சம் தள்ளி இருக்கற மாதிரி இருக்கு.
சும்மா புலம்பாதே. பாரு கபாலி, காமதேனுல இதைப் பார்த்தா மூட்டைபூச்சி தான் கடிக்கும்.
ஸ்க்ரீனுக்கே துட்டு. அதே சிம்லா லொகேஷன் தான். இங்கே எப்படி இருக்கு பார்த்தியா? காலை நீட்டித்தான் வச்சுக்கொயேன்.
சரிடா. நான் இந்த அமைப்புக்கு செட் ஆக மாட்டேன். சொல்றா , எவ்வளவுடா டிக்கெட் .
ப்ரீ பா. பாரு பாரு . அந்தக் குதிரை பாட்டு.
ஆமாம். குதிரை சப்தம் யாரு தெரியுமா?
யாருப்பா, சதன் தானே
சே சே அப்ப அவன் விசுகிட்ட சேரல. இது மீசை முருகேஷ். மூணு நாள் கஷ்டப்பட்டான். இந்தப் பாட்டு செட் போட்டு எடுத்தது. கிட்டத்தட்ட விசுவுக்கு புக்கான முதல் படம். கொஞ்சம் புரோடக்க்ஷன் டிலே. ஈஸ்ட்மன் கலர் புரோசெஸ்ல பாம்பேல லேட் பண்ணிட்டான்.
காமிரா யாரு வின்செண்டா?
சே. இது அறுபத்தி ஆறு ரிலீஸ். ஆபரடிவ் காமிரமேன் மாருதிராவ். யாரு தெரியுமா? முதல்ல விசுவுக்கு புக் ஆனது சந்திரோதயம் தான். நடுவுல கலங்கரை விளக்கம்னு சில பேர் சொல்றா. ஆனா அன்பே வா அறுபத்திஆறு பொங்கல். சந்திரோதயம் மே மாசம் வந்தது.
மாருதி ராவ் யார் தெரியுமா?
தெர்ல பா
டாக்டர் மகேந்திரன் இருக்கான்ல?
அந்தக் காது டாக்டர்.
அவர் தான். அவன் அப்பா தான் மாருதிராவ்.
சரிடா, கிளம்பு.
எனக்கு ஒன்னுக்கு வரது. ஏதோ டிஸ்கம்பார்ட்.
இருட்டில் வெளியே போய் வருவதற்குள் ஒரு பாட்டு போய்விட்டது.
மெல்ல போடா, ஒரே இருட்டு. எல்லாம் ஒரே ஷோக்கு லைட். ஒரு மண்ணும் தெரியல.
உட்காருப்பா
டேய், ஒரு உபகாரம் பண்ணு .
என்னப்பா ஏதனா வேணுமா?
ஆமாண்டா.
சொல்லு .
நாலு புளிப்பு மிட்டாயும் ஒரு ஆரஞ்சு கலர் சோடாவும் கிடைக்குமா?