இசைக்கவி ரமணன் – பாரதியின் வார்ப்பு

0
1673485519159blob

பாஸ்கர் சேஷாத்ரி

இசைக்கவி ரமணன் ஒரு பெரும் தத்வார்த்தமான பேச்சாளர். அவரின் வார்த்தைப் பிரயோகமும், சுத்தமான தமிழ் உச்சரிப்பும், நினைவில் கொண்டு சொல்லும் கவிதைகளை நீங்கள் கேட்க வேண்டும். அபாரமான நினைவாற்றல், பிசிறு இல்லாத பேச்சுத் திறன் , வளமான குரல், பெரும் தமிழ் பக்தன். ரமணனின் பாரதி பற்றிய கூட்டம் மாதா மாதம் ஆர்கே அரங்கில் நடைபெறுகிறது. ஒரு பேச்சாளன் எப்படி தனது பேச்சில் உண்மையாக இருக்கிறான் என்பதற்கு இவர் ஒரு சான்று. பாரதி கவிதைகளை அவர் பாடிக் காட்ட. நீர் கேட்டால், கண்ணில் நீர் வரும். அவர் உணர்ச்சிக்கவி. கவிதையை மனனம் செய்யலாம். ஆனால் உணர்ச்சிப் பிழம்பை எப்படிக் கொண்டு வர முடியும்?. ரமணன் செய்வார் .வித்தை தெரிந்த சொல்லாளர் அவர். கவிதையை அவர் உணர்வோடு சொல்லி, பொருள் சொல்லும் பாங்கு உன்னதம். பல உணர்வுகளை எந்தப் பேச்சிலும் வெளிப்படுத்த முடியாது. அது மர்மமான பிரதேசம். தத்துவங்களும் அப்படியே.

பாரதியின் பல கவிதைகள் தத்துவமான மர்ம தேசம். அதைப் பிடிக்க வாசிப்பு போதாது. அதை விளக்க ஒரு மந்திரக்கோல் வேண்டும். ரமணன் கையில் அது உண்டு. நேற்று ரமணனின் பேச்சில் வெளியைப் பற்றிச் சொன்னபோது எனக்கு ஜிட்டு கிருஷ்ணமுர்த்தியும், ரமணரும் நினைவுக்கு வந்தார்கள். ரமணன் அந்த மாயா ஜாலத்தை நேற்று செய்தார். வெளி என்ற விஷயத்தை விளக்க அவர் காட்டிய மேற்கோள் மிகச் சிறப்பு. கூர்மையான பேச்சு, எறிந்த வேல்கம்பு கூர்தீட்டிச் செல்லும் வேகம் ரமணனின் பலம்.

சென்னையில் பல இடங்களில் அவர் பேசுகிறார். மயிலையில் அவர் ஆர்கே அரங்கில் ஜனவரி பதினேழாம் தேதி மாலை பேச இருக்கிறார். வந்து கவிப்புனலில் திளையுங்கள் . நீர் புதிதாய்ப் பிறப்பீர். உம் கண்கள் விரியும், வாழ்க்கை மேலும் பொருள் கொண்டதாக இருக்கும்.

ரமணன் அவர்களை இன்று பாரதியின் பிரதிநிதியாக நான் பார்க்கிறேன். கவிஞனின் உள்ளத்தை நம்முள் கொண்டு வருவது அரிய செயல் .எனக்குப் பாரதியின் மேல் இருக்கும் ஈர்ப்பு மேலும் வலுவடைந்து என்னை ஆட்கொள்ளக் காரணம் ரமணன் தான். நான் வீழ்ந்துவிட்டேன். வீழ்வது பாரதிக்குப் பிடிக்காது. ஆனால் இது வேறு வீழ்ச்சி. பாரதியால் கூட என்னை எழுப்ப இயலாது.

இது போன்ற நிகழ்ச்சிகளை அந்த அரங்கில் அளிக்கும் ஆர்கேவுக்கு எனது நமஸ்காரம். ஒரு சிறிய இடத்தை அளித்து என்னைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு ஒரு பேச்சுரை அளித்து நிகழ்ச்சிகளை அவர் நடத்த அனுமதி கொடுத்து இயல் இசை நாடகத் துறையை வளரச் செய்வது பெரும் சேவை. அதுவும் நகரின் மையத்தில் குளிரூட்டிய அறையும் நல்ல இருக்கையும் கொடுத்து, மக்களை மேம்படுத்த அவரின் சீரிய முயற்சி மேலும் வளர்க. அவரின் மதுரத்வனிக்கு நன்கொடை செய்க – அவருக்கு எனது வணக்கம். ஆர்கே அரங்கம், சென்னை ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் பழைய தண்ணீர்த் துறை சந்தை எதிரில் உள்ளது.

வாழ்க ரமணன் – வாழ்க ஆர்கே. வாழ்க பாரதி. வாழ்க தமிழ். எனது பணிவான வணக்கம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.