இராஜாஜியும் ஓ.பன்னீர்செல்வமும்
அண்ணாகண்ணன்
இராஜாஜியும் ஓ.பன்னீர்செல்வமும்
ஒரு மகத்தான ஆளுமையுடன் இவரை ஒப்பிடுவது அணுவளவும் பொருந்தாது என்றாலும் ஒரே ஒரு மனநிலைக்காக இந்த ஒப்பீடு.
காங்கிரஸ் கட்சியில் இராஜாஜி இருந்தபோது இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல், இந்திய தேசிய காங்கிரசின் தலைவர், சென்னை மாகாண முதலமைச்சர், சென்னை மாநில முதலமைச்சர், மேற்கு வங்க ஆளுநர், இந்தியாவின் உள்துறை அமைச்சர் என அதி உயர் பதவிகள் பலவற்றை வகித்தார். பின்னர், ஜவகர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் காங்கிரசிலிருந்து விலகினார். சுதந்திரா கட்சியைத் தொடங்கினார். 1967 தேர்தலில் தி.மு.க. உடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு வென்றார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாகத் தலையெடுக்கவே இல்லை. ஒரே ஒரு காய்நகர்த்தலில் காங்கிரஸ் கட்சியின் தலையெழுத்தையே மாற்றினார் இராஜாஜி.
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இருந்தபோது, தமிழ்நாட்டின் முதலமைச்சராக மூன்று முறைகள் இருந்தார். துணை முதலமைச்சராக, எதிர்க்கட்சித் தலைவராக, எதிர்க்கட்சி துணைத் தலைவராகப் பதவி வகித்தார். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரிய வலது கரமாக இருந்தார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். தீய சக்தி என ஜெயலலிதாவால் அழைக்கப்பட்டவரின் மகனை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தேடிச் சென்று சந்தித்துள்ளார். “அரசியலில் நண்பர்களும் இல்லை. எதிரிகளும் இல்லை. எதிர்காலத்தில், தேர்தல் நெருங்கும்போது எதுவும் நடக்கலாம்” என்று வேறு கூறியுள்ளார். தன்னை மதிக்காத அதிமுக, பாஜக கட்சிகளுக்குப் பாடம் புகட்ட, தி.மு.க. அணியில் அவர் இணையக்கூடும். தேர்தல் பரப்புரையில் திமுகவுக்காக ஓ.பன்னீர்செல்வம் வாக்குக் கேட்பது, அரசியலில் விநோதமான காட்சி. இது வாக்குகளாக மாறுவது ஐயமே என்றாலும் அதிமுக – பாஜக அணிக்கு கருத்தியல் ரீதியாக ஒரு பின்னடைவாக அமையலாம்.
இராஜாஜியும் ஓ.பன்னீர்செல்வமும் இந்த ஒரு புள்ளியில் இணைகிறார்கள். அது, தாங்கள் கொலு வீற்றிருந்த கட்சியை அழிக்க, நேரெதிர் அணிக்கும் மாறத் துணிகிற மனநிலை. இந்தக் கசப்பு, மிகக் கடுமையானது. நான் அழிந்தாலும் பரவாயில்லை, உன்னை அழிக்காமல் விடமாட்டேன் என்ற அளவுக்குத் தீவிரமானது.
