ஜெயபாரதியின் அடுத்த படம், புத்ரன்
சைத்தன்யா மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் ஜெயபாரதி இயக்கத்தில் ‘புத்ரன்’ எனும் புதிய திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் ஒய்.ஜீ.மகேந்திரன், சங்கீதா, மாஸ்டர் வருண் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
கதைச் சுருக்கம்:
திருவிடந்தையில் வசிக்கும் வாசுதேவன் (ஒய்.ஜீ.மகேந்திரன்) தேவகி (சங்கீதா) தம்பதிகள், தங்களது பத்து வயது மகனுடன் மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். தேவகிக்கு இன்னொரு குழந்தைக்கு வாய்ப்பு இல்லை என்று தெரிந்ததால் தன் ஒரே மகன் தர்ஷன் மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருந்தனர்.
ஒரு நாள் மாலை விளையாடச் சென்ற தர்ஷன், வீட்டுக்குத் திரும்பவே இல்லை. மனம் பதைத்த தேவகி, தன் கணவனை தேடச் சொல்லி அனுப்புகிறாள். கணவன் வாசுதேவன், தன் நண்பனோடு பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துவிட்டு காவல் நிலையத்தில் புகார் செய்கிறார்.
மகன் கிடைக்காத வேதனையில் தேவகி தற்கொலைக்கு முயல்கிறாள். மனைவியைக் காப்பாற்றிய வாசுதேவன் அவளின் மன மாற்றத்திற்காகச் சென்னையில் குடியேறுகிறார்.
சென்னையில் பல்வேறு இடங்களில் மகனை வாசுதேவன் தேடுகிறார். மகன் எங்கும் கிடைக்கவில்லை. வட சென்னையில் சிறுவர்கள் பள்ளிக்குப்
போகாமல் கொத்தடிமைகளாக வேலை செய்வதைக் கவனித்து திடுக்கிடுகிறார்.
வாசுதேவன் தன் மனைவியுடன் கலந்து பேசி, இதற்கு முடிவு கட்ட நினைக்கிறார். உடனே, தன் நண்பனை சேர்த்துக்கொண்டு, சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கிறார். கோபமடைந்த சம்பந்தப்பட்ட ரவுடிகள், வாசுதேவனையும் மனைவியையும் தாக்கிவிட்டுச் செல்கிறார்கள். இவர்களின் நோக்கம் நிறைவேறியதா? மகன் கிடைத்தானா? என்பதே கதை.
இப்படத்தின் இயக்குநர் ஜெயபாரதி (குடிசை, கனவுகள் கற்பனைகள், ஊமை ஜனங்கள், ரெண்டும், ரெண்டும் அஞ்சு, உச்சி வெயில், நண்பா நண்பா, குருஷேத்திரம்) போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடதக்கது. மேலும் புதுதில்லியில் உள்ள மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு ஆவணப் படங்களை இயக்கியுள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் முத்ரா (செங்காத்து, ஜெயமுண்டு பயமில்லை) போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். இதன் இசைமைப்பாளர் தர்ஷன், இசைக்காக 5 தேசிய விருதுகளை வாங்கிய ஐசக் தாமஸிடம் அசோஸியேட்டாக பணியாற்றியவர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:
ஒளிப்பதிவு – முத்ரா
இசை – தர்ஷன்
எடிட்டிங் – சுபாஷ்
பாடல்கள் – வெ.இறையன்பு
மக்கள் தொடர்பு – செல்வரகு
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஜெயபாரதி
=================
தகவல்: செல்வரகு