பாதைகளும் மீள்பார்வை தரும் புத்தாண்டு

0

அவ்வை மகள்

சந்தமுறப்பாடுகிறேன் முழுமனதாய் அந்தாதி
அந்தாதிச் சந்தமெந்தன் செல்கதிக்குச் சிந்தைக்கு
சிந்தை துரகமெனவோடியப் பிந்தை நிலை
நிலையாடிப் படம் காட்டவென் சித்தாம்புயத்து
புயமிருந்தும் கால்கையிருந்துமன்றொன்றும்
ஒன்றும் வில்க்ககிலீர் வாலாபாக் குண்டுமழை
மழைக்குருதி மண்ணைச் செம்மைச் சூளையிட
சூளையிடம்பெயலாக் கரம் சுற்றக் கண்முன்னே
முன்னே ஆங்கெழுந்த மத்துகளில் துடித்தெழுந்து
எழுந்தழைக்கா மரணம் பிழைக்ககிலீர் பலி வீணே!
வீணேபோகுமோ அவர்தம் பாடுகளும் பாதைகளும்
பாதைகளும் மீள்பார்வைதரும் புத்தாண்டு பிறந்திடவும்
பிறந்திடவும் நந்தனத்தில் முந்தைநிலை நினைவகற்றோம்
நினைவகற்றோம் வையத்து வாழ்வை அவ்வாண்டு இந்நாளில்
இந்நாளில் நாம் வாழ ஈந்தவரைச் சொந்த மண்ணில் வீழ்ந்தவரை
வீழ்ந்தவரை மாத்திரைப்போதுக்குள் மரணமேற்றவரை
ஏற்றவரை தோத்திரம் செய்தே தொழுதிடுவோம் குடில்கள்தொறும்
குடில்கள்தொறும் பாடிடுவோம் பல்லாண்டு இவ்வாண்டு
இவ்வாண்டுகளும் நம் முந்தையர் பாடறியப் பேசிடுவோம் வைசாகம்
வைசாக விழாவினிலே சித்திரைக்கு முகமன் சொல்லி
சொல்லில், செயலில் மூத்தவரை ஏத்திப்பரவிடுவோம் நந்தனமாய்!!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *