சட்டம் ஆலோசனைகள் (5)
மோகன் குமார்
கேள்வி: தம்பிராஜா திருப்பூர்
1983ல் எனது தாத்தா சுயசொத்தை (மைனர்) எனக்கு ரிஜிஸ்டர் உயில் எழுதிய பிறகு அதை தாத்தாவின் மகன் (எனக்கு அப்பா), விற்க அதிகாரம் உண்டா?
பதில்: உங்கள் தாத்தா மைனரான உங்களுக்கு ஒரு சொத்தை உயில் மூலம் எழுதி வைத்துள்ளார்.
அது தான் அவரது கடைசி உயில் எனில் அந்த சொத்துக்கு உரிமை தாரர் நீங்கள் தான். அதனை விற்க உங்கள் தந்தைக்கு உரிமை கிடையாது.
நீங்கள் அந்த சொத்தை விற்கவேண்டும் எனில் அந்த சொத்து (சென்னை, திருச்சி, மதுரை போன்ற) கார்ப்பரேஷன் லிமிட்டில் இருந்தால் அதனை முதலில் ப்ரோபெட் செய்யவேண்டும்.
அதாவது நீதி மன்றத்தில் உயிலை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். உயில் படி சொத்துக்களை கோர்ட் பிரித்து அறிவிக்கும். அப்படி அறிவிக்கும் டாகுமென்ட் தான் “ப்ரோபேட்” எனப்படும். அது தான் கடைசியாக எழுதப்பட்ட உயில் என்பதோடு, அவர் சுய நினைவில் எழுதினாரா போன்ற விஷயங்களை திருப்தி படுத்திக் கொண்ட பின் நீதி மன்றம் இந்த ப்ரோபேட்டை வழங்கும். கிட்டத்தட்ட உயிலின் காபி தான் இது. இந்த ப்ரோபேட் வைத்து தான் அவரவர் சொத்துக்களை தங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.
ஏற்கனவே சொன்னது போல் உங்கள் சொத்து கார்ப்பரேஷன் லிமிட்டில் இருந்தால் மட்டுமே ப்ரோபெட் செய்வது அவசியமாகிறது
கேள்வி: தம்பிராஜா திருப்பூர்
ஒருவரின் சொத்தை வில்லங்கம் பார்க்கும் போது அதில் ரிஜிஸ்டர் உயில் (1983ல்) எழதி இருந்தால் அது வில்லங்கத்தில் வருமா?
பதில்: இல்லை. வில்லங்கத்தில் அந்தசொத்து மேல் கடன் வாங்கியிருந்தால், அது ரிஜிஸ்தர் ஆனால் மட்டும் கடன் விபரம் தெரியும். உயில் எழுதிய விபரங்கள் வில்லங்கத்தில் தெரியாது