தாகூரின் 150ஆவது பிறந்தநாள் விழா
இரவீந்திரநாத் தாகூரின் 150ஆவது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடும் வகையில் பாரத பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் தலைமையில் தேசீய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
தேசீய குழுவின் கொள்கை வழிகாட்டுதலை நடைமுறைப்படுத்த நிதியமைச்சர் தலைமையில் ஒரு தேசீய அமலாக்கக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. 2011-2012இல் பல்வேறு துறையில் உள்ள சிந்தனையாளர்களையும் அவர்களது பங்களிப்பிற்குப் பயனளிப்பதை உறுதி செய்யும் வகையில் உள்ள நிகழ்ச்சிகளுக்கு தேசிய அமலாக்கக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த நிகழ்ச்சிகளும் திட்டங்களும் மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள், விஸ்வபாரதி, பல்கலைக் கழகங்கள் / நிறுவனங்கள் தாகூர் பற்றிய வல்லுநர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும்.
மே மாதம் 7ஆம் தேதி காலை புதுதில்லி விஞ்ஞான பவனில் நடைபெறும் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையேற்கிறார்.
வங்கதேச திட்ட அமைச்சர் ஏர்வைஸ் மார்ஷல்(ஓய்வு) ஏ. கே. கந்த்கர் முதன்மை விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் திருமதி சோனியா காந்தி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்.
இந்நிகழ்ச்சியின் நினைவாக தேசீய அமலாக்கக் குழு உறுப்பினர்கள் பல்வேறு நினைவுகளை வெளியிடவுள்ளனர்.
முதன்முறையாக தாகூரின் ஓவியங்களை ஒன்று திரட்டி ரவீந்திநாத்தின் ‘சித்ராவளி’ என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. தாகூரின் கதைகள் என்ற திரைப்படமும், தாகூர் குறித்து சத்தியஜித்ரேயின் ஆவணப் படமும் வெளியிடப்படவுள்ளன. இவையனைத்தும் பண்பாட்டு அமைச்சக ஆதரவுடன் நடைபெறும். தாகூரின் நினைவு தபால் தலையும், தாகூர் உருவம் பொறிக்கப்பட்ட நினைவு நாணயமும் வெளியிடப்படும்.
தொடக்க விழாவினைத் தொடர்ந்து விஞ்ஞான பவனில் தாகூருடன் தொடர்புடைய கருத்தரங்கு, திரைப்படம் கண்காட்சி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.
===========================================================
தகவல் – பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை
படங்களுக்கு நன்றி: http://en.wikipedia.org, http://www.stampstodayindia.com
பகிர்வுக்கு நன்றி.