குன்றக்குடி அடிகள்

1. அறிவியலும் அருளியலும்

அறிக அறிவியலை! விஞ்ஞானத்தின் விளக்கங்கள் பெருக! “அறிவு” என்றாலே ஒன்றை அணுகும் முறையையே குறிக்கும்.

அறிவியலும் அருளியலும் தம்முள் முரண்பட்டனவும் அல்ல, எதிரெதிர் செல்வனவும் அல்ல.

ஒன்றிலிருந்து பிரிதொன்று காரண காரியத் தொடர்ச்சியுடன் இயங்குந்தன்மையது.   இந்த உலகம் எப்படி இயங்குகிறது?

என்று சுற்றுப்புறச் சூழ்நிலையை ஆராய்ந்து அறிவது அறிவியல்.  நான் யார்? என் உள்ளம் யார்? ஞானங்கள் யார்? என்று அகநிலைகளை ஆராய்ந்தறிவது அருளியல்.

இன்பம் எது? துன்பம் எது? என்று ஆராய்வது அருளியல்.  நன்மை எது? தீமை எது? என்று ஆராய்ந்தறிவது அறிவியல்.

அகமும் புறமும் சேர்ந்ததே வாழ்க்கை.  உடலும் ஆன்மாவும் சேர்ந்ததே வாழ்க்கை.

“ஆன்மிகம்” என்றொரு வழக்கு சமயத்திற்கு உண்டு.  ஆன்மிகம், ஆன்மாவின் வாழ்க்கை என்று பொருள் படும்.  உலகியத்தின் பல்வேறு துறைகளுக்கும் தனித்தனியே இன்று அறிவியல் வளர்ந்துள்ளது.  வளர்ந்துகொண்டே இருக்கிறது, அதுபோலவே ஆன்மாவைப் பற்றிய அறிவும் வளர வேண்டும்.   ஆன்மாவைப் பற்றிய அறிவியல் 19 ம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு வளராமல்
தேக்கம் கண்டுவிட்டது.  ஆன்மாவைப் பற்றி அறிவியலைக் கடவுளுடன் சம்பந்தப்படுத்தி “மதம்” என்ற அமைப்புக்குள்  சிறைப்படுத்திய பிறகு ஆன்மாவைப் பற்றிய அறிவியல் வளர்ச்சி நின்றுவிட்டது.  கடைசியாக  ஆன்மாவைப் பற்றி ஆன்மாவின் வாழ்க்கையைப் பற்றி ஆய்வு செய்தவர் காரல் மார்க்ஸ்.  “ஆன்மா”  “ஜீவன்”  என்ற சொல் வழக்கை ஏற்றுக்கொண்டுள்ளார்

என்பது உண்மையானாலும்  “ஆன்மா”வை ஏற்றுக்கொண்டதாக கூற முடியாது.

ஆன்மாவைப் பற்றி அறிவியல் பார்வையில் ஆய்வு செய்ய வேண்டும்.  ஆன்மா என்பது என்ன?  ஆன்மா இயற்கையிலிருந்து முகிழ்த்ததா? அல்லது பிறிதொரு பொருளால் படைக்கப்பட்டதா?  ஆன்மா தோற்றமும் அழிவுமுடையதா? ஆன்மா, அறிவுப்பொருளா?  அறிவிக்க அறியும் அறிவுப் பொருளா?  ஆன்மாவின் இலட்சியம்தான் என்ன?

ஆன்மாவின் வாழ்க்கையில் நன்றும் தீதும் — இன்பமும் — துன்பமும் குறிக்கிடுவது எப்படி? எதனால்?  ஆன்மாவிற்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு?  இன்னோரன்ன வினாக்களுக்கு விடை காணும் ஒருவகையான அறிவியலே ஆன்மவியல்.

அறிவே வாழ்க்கைக்கு ஆக்கம் தரும்.  ஆதலால், அறிவியலும் அருளியலும் ஒருசேர ஆராயத்தக்கன! அறியத்தக்கன!

அருளியலின் முடிவுகளே அறிவியலுக்கு வாயில்கள்!  அறிவியலின் முடிவுகள் அருளியளுக்கு ஆக்கமாக ஆவன.

_________________________________
REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.