கிரேசி மோகன்

கண்ணன் திருப்புகழ் (வெண்பா)….
————————————————————–
’’கண்ணனை நெஞ்சே கருது’’
—————————————————–

சூர்பணகை ஆனாலும், சுந்தரி ஆனாலும்,
பார்ப்பன எல்லாம் பரம்பொருளே – தாற்பரியம்
தன்னை உணர்ந்து தவறா(து) இருந்திட,
கண்ணனை நெஞ்சே கருது!
சதிரிள மாதர் சகவாச தோஷம்,
உதிரிலைக் காலம் உணர்வாய் – மதிளரங்க
மன்னனை, மாயனை, மண்புகுந்த ஆயனை,
கண்ணனை நெஞ்சே கருது!
பண்டரி எங்குளான், பாலன் புகன்றிட,
விண்டதிரத் தூண்வாய் வெளிப்பட்ட – பண்டரியில்
தன்நினைவு தப்பத் துதிப்போர்க்(கு) அருள்புரியும்,
கண்ணனை நெஞ்சே கருது!
பட்டதெல்லாம் பாழாகும், தொட்டதெல்லாம் தூளாகும்
எட்டிய(து) ஏதும்வாய்க்(கு) எட்டாது – அட்டமியில்
விண்ணகன்று தாய்மாமன் வெஞ்சிறைக்கு வந்தவனை
கண்ணனை நெஞ்சே கருது!
வானிருந்த, கீழிறங்கி தூணிருந்த, தந்தவர
வானிருந்த, தாம்பு வடமிருந்த – மாவிருந்தை
உண்ணுதற்(கு) ஆகா(து), உறியேறும் ஆகாயக்
கண்ணனை நெஞ்சே கருது!!
————————————————————————————————————
படங்களுக்கு நன்றி:
http://kamadenu.blogspot.in/2011_12_01_archive.html

Leave a Reply