புதிய வானம் … புதிய பூமி …
— கவிஞர் காவிரிமைந்தன்.
அன்பே வா திரைப்படத்தில் ஆரம்பப் பாடலிது! உள்ளத்திலிருந்து ஒரு உற்சாகக் கங்கை பிரவகித்து ஓடி வருகிற வெள்ளம்! எழில்சிந்தும் காஷ்மீரின் இதயமாக விளங்கும் சிம்லாவின் அழகிலே நெஞ்சம் மயங்கலாம்! கதிரவன் காட்சிதரும் விடிகாலைப் பொழுதொன்றில் கதாநாயகன் எம்.ஜி.ஆர். கருப்பு சிவப்பு நிறத்தில் உடையணிந்து தலைப்பாகையுடன் கையில் ஒரு சூட்கேஸ் … என அமர்க்களமாய் குளிர்க்காற்றின் கதகதப்பில் ஓடியாடி வருகின்ற காட்சி! இன்றும் எம்.ஜி.ஆர். ரசிகர்களின் மத்தியிலே உறைந்திருக்கிறது! புதிய வானம் புதிய பூமி என்று ஒரு கையை மேலும் மறு கையை கீழும் காட்டும் எம்.ஜி.ஆரின் பாணி இன்றும் பிரபலம்தானே!! முத்திரை பதித்த நடிகராக உலா வந்த எம்.ஜி.ஆர் அவர்கள் தனது இரண்டு கரங்களை பயன்படுத்தி வெற்றி பெற்றதுபோல் இன்னொரு நடிகர் பெற்றிருக்கிறாரா என்பது கேள்விக்குறியே!
கவிஞர் வாலி அவர்களின் வரிகளில் இமயத்தின் உயரமும் இதயத்தின் ஈரமும் பிரதிபலிப்பதைப் பாருங்கள்! மக்கள் திலகம் துள்ளிவரும் பாதையிலே பள்ளிக் குழந்தைகளுடன் கொஞ்சி மகிழும் அழகென்ன? அவர்களின் முகத்தில் எதிர்காலம் உயர்ந்ததாக அமையும் என்கிற நங்கூர நம்பிக்கையைப் பாட்டு வரிகளில் விதைத்திருக்கிறார். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசைப் பாதையிட்டு கவிதைக்கு ரத்தினக் கம்பள வரவேற்பளித்திருக்கிறார். தனது குரல்வளத்தால் தமிழ்த்திரையை 50 ஆண்டுகாலமாக தன்வசப்படுத்தி வைத்திருந்த டி.எம்.செளந்திரராஜன் அவர்தம் கம்பீரக் குரலில் முழங்கிடும் பாடல் இன்றும் நம் இதயத்தைத் தொடுகிறது!!
படம் அன்பே வா
பாடல்: புதிய வானம் புதிய பூமி
வரிகள்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
குரல்: டி எம் சௌந்தரராஜன்
______________________________________________
புதிய வானம் புதிய பூமி – எங்கும்
பனிமழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ணப் பூமழை பொழிகிறது ஒ ஒ ஓஹோ
லால்ல லாலால்லா ஓஓஓ லால்ல லாலால்லா
(புதிய வானம்)
புதிய சூரியனின் பார்வையிலே
உலகம் விழித்துக்கொள்ளும் வேளையிலே
இமயத்தில் எழுகின்ற குளிர்காற்று – என்
இதயத்தைத் தொடுகிறது
அன்று இமயத்திலே சேரன் கொடி பறந்த
அந்தக் காலம் தெரிகிறது
அந்தக் காலம் தெரிகிறது
(புதிய வானம்)
பிள்ளைக் கூட்டங்களைப் பார்க்கையிலே
பிஞ்சு மழலை மொழி கேட்கையிலே
நல்லவர் எல்லாம் நலம் பெறுவார் – என்ற
நம்பிக்கை தெரிகிறது
அவர் வரவேண்டும் நலம் பெறவேண்டும்
என்று ஆசை துடிக்கிறது
என்று ஆசை துடிக்கிறது
(புதிய வானம்)
எந்த நாடு என்ற கேள்வியில்லை
எந்த ஜாதி என்ற பேதமில்லை
மனிதர்கள் அன்பின் வழிதேடி – இங்கு
இயற்கையை வணங்குகிறார்
மலை உயர்ந்ததுபோல் மனம் உயர்ந்ததென்று
இவர் வாழ்வில் விளக்குகிறார்
இவர் வாழ்வில் விளக்குகிறார்
(புதிய வானம்)
https://youtu.be/xRPv3zgwT6I
காணொளி: https://youtu.be/xRPv3zgwT6I