– புலவர் இரா. இராமமூர்த்தி.

ஓர் அரசனுக்குப் பொருள் இன்றியமையாதது! பொருளாதாரம் அரசாட்சிக்குத் தேவை! இந்தப் பொருளை அரசன் எவ்வாறெல்லாம் ஈட்டலாம் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார்! நாட்டின் பொருளாதாரத்தைப் பெருக்க அரசன் இயற்கைச்செல்வத்தை முறைப்படி, தேவையான பொருளாக மாற்றிக் கொள்ளலாம்!

பொருள் என்பதற்குப் பரிமேலழகர் தரும் விளக்கம் சிறந்தது! நாட்டால் ஆக்கவும், அரணால் காக்கவும் படுவதாகியபொருள் என்கிறார் அவர்! நாட்டின் இயற்கை வளங்களால் உருவாக்கப்படும் பொருள், நாட்டால் ஆக்கப்படுவது; நாட்டின்மக்களின் உழைப்பால், வயலிலும், கடலிலும், தொழிற்சாலைகளிலும் ஈட்டப் பெறுவது! இப்பொருளை அறவழியில் ஈட்டவேண்டும்! அறவழியில் பொருளீட்டி அறவழியில் இன்பத்தை நுகரவேண்டும் என்பதைக் காட்டுவதற்குத்தான், அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்கள் அதேவரிசையில் திருக்குறளில் இடம் பெற்றுள்ளன!

இந்தப் பொருள் உருவாதற்கு உரிய செயல்களை அரசன் ஊக்குவிக்க வேண்டும்! நாட்டுமக்கள் வரிப்பணமாக வேளாண்மை வருவாயில் ஆறில் ஒரு பங்கைச் செலுத்துவர் அந்த ஆறில் ஒருபங்கு என்பது

”தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான்என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை”(43)

என்ற குறட்பாவில் கூறிய ஐந்துடன், ஆறாவது பங்காகக் கருதப் பெற்றது! இந்த வரியையும் நிலம் விளையாதவிடத்தும், பஞ்சகாலத்திலும் வாங்காமல் வரி விலக்களித்து, அரசன் பொருள் ஈட்டவேண்டும் என்கிறார் திருவள்ளுவர். இதனை திறனறிந்து, தீதின்றி வந்தபொருள் என்ற பாடற்பகுதியால் விளக்குகிறார்!

”இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு ” (385)

என்ற திருக்குறள் அரசன் தொழிலை வளர்த்தல், பொருளை ஈட்டல், சேமித்தல், உரியவாறு நாட்டின் நலனுக்காகப் பிரித்துஅளித்தல் ஆகிய பொருளியல் சிந்தனையைக் கூறுகிறது! ஆக, ஓர் அரசன் தனது நாட்டை மேம்படுத்துவதற்குப் பொருள்சேர்த்தல் தேவை! அதற்கு வயல் வளமும் அதனைச் சார்ந்த தொழில்களும் தேவை! இதற்கு அடிப்படை நீர்வளம் என்கிறார்!

”இருபுனலும் வாய்த்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற் குறுப்பு ”(737)

என்ற குறளில் இருபுனல் என்பது கீழ்நீர், மேல்நீர் ஆகியவை என்கிறார் பரிமேலழகர்! அவற்றுள் கீழ் நீர் கிணறு, குளங்களையும், மேல்நீர் ஏரி , ஆறுகளையும் குறிக்கும்! வாய்த்த மலை என்பது அரணாகவும், மலைவளத்தின்அடிப்படையாகவும், மழைக்காலத்தில் சேர்த்த நீரை அருவியாகத் தருவதாகவும் அமைந்துள்ளது!மலையிலிருந்து வரும்நீர், ”வருபுனல்”! இவை பஞ்சகாலத்திலும் உதவுபவை! இவற்றால் முறையாக வரும் வருவாய் உள் நாட்டிலிருந்துவருபவை !

ஆறிலொரு பங்காகிய வரி வருவாயுடன், மேலும் மூன்று வழிகளில் அரசனிடம் பொருள் வந்து சேரும் என்கிறார்திருவள்ளுவர்! அவை உறுபொருள் அதாவது, உடையவர் இல்லாத நிலையில் யாருக்கும் உரிமையின்றிக் கிடந்தபுதையல், வாரிசற்ற செல்வம் ஆகியவை. அடுத்து உல்கு பொருள், அதாவது நாட்டின் பொருளாதாரச் சமநிலையைத் தடுமாறவைக்கும் வகையில், நாட்டின் செல்வத்தை எடுத்துச் செல்லும் வணிகர்களிடம், சுங்கவரி, முதலான வரிகளைவிதித்து ஈட்டும் செல்வம்; அடுத்து, ஒன்னார்த் தெறு பொருள் அதாவது பகைவரை எதிர்த்துப் போரில் வென்று பெறும்பொருள் ஆகிய மூன்றும் வேந்தனின் பொருள் என்கிறார்!

அண்டை நாட்டின்மேல் படையெடுத்து வென்ற அரசன், அந்த நாட்டின் பொருளை அடைவதே, ”ஒன்னார்த் தெறு பொருள்”!திருவள்ளுவர் ஒரு வேந்தன் கொடுங்கோலனாக மக்கள் செல்வத்தைப் பறிக்கக் கூடாது என்கிறார்! அறமற்ற வழியில்பொருளீட்டல் தவறு என்கிறார். ஆனால் அடுத்த நாட்டு அரசன் மேல் படையெடுத்து வென்றதால் வரும் பொருளைக்கவர்ந்து கொள்வதை மட்டும் ஏற்றுக் கொள்கிறாரே! அஃது எவ்வாறு சரியானதாகும்?

”உறுபொருளும் உல்குபொருளும் தன் ஒன்னார்த்
தெறு பொருளும் வேந்தன் பொருள்” (756)

என்ற பாட்டு நம்மை வியக்கவும் திகைக்கவும் வைக்கிறது ! அண்டை நாட்டை ஆக்கிரமித்து அந்த நாட்டுச் செல்வத்தைவாரி விழுங்கும் ஏகாதிபத்தியச் செயலைத் திருவள்ளுவர், அரசனுக்குப் பொருள் வந்து சேரும் வழியாக ஏன் கூறுகிறார்? சிந்திக்க வேண்டும்! அறவழியில் வாராத பொருளை அரசன் ஏற்றல் தவறு என்பதை,

”அருளோடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல் ” (755)

என்ற பாட்டில் விளக்கும் அவர், அடுத்தநாட்டுக்கு உரிய பொருளை ”வேந்தன் பொருள்” என்று ஏற்பது எவ்வாறு?அவ்வாறாயின் இதற்கு வேறு பொருள் உள்ளதா? இந்தக் குறட்பாவை மீண்டும் ஒருமுறை எழுத்தெண்ணிப் படிப்போம்!

இக்குறட்பாவில் ஒன்னார்த் தெறுபொருள் என்ற தொடருக்கு முன், தன் என்ற முன்னொட்டு அமைந்திருப்பதைநோக்குங்கள்! தான் ஒன்னாரைத் தெறுதல் என்பது தானே அண்டை நாட்டார் மேல் படைஎடுத்தலைக் குறிக்கும் ஆனால்தன் ஒன்னார்த் தெறுதல் என்பது தன்மேல் அண்டை நாட்டார் படையெடுத்துவரும்போது அவரைத் தற்காப்புக்காகஎதிர்ப்பதைக் குறிக்கும்! ஆகவே அண்டை நாட்டின் மேல் ஆதிபத்தியம் செலுத்துவது வேறு;அண்டை நாட்டார்படையெடுத்து வந்தபோது எதிர்ப்பது வேறு! இவ்வகையில் தம், மேல் படையெடுத்து வந்த ஒன்னாரை எதிர்த்துப் போரிட்டுவெல்லும் போது, அவர்கள் வீழ்ந்தால், அந்த நாட்டை ஆளும் உரிமையை மேற்கொண்டு அந்தநாட்டின் வருவாயை எடுத்துஅவர்களுக்கே தந்து ஆளும் வகையில், ‘தன்’ ஒன்னார்த்தெறுபொருளை, வென்ற வேந்தன் தன் பொருளாகக் கொள்வதுதவறாகாதல்லவா?

மக்கள் அளிக்கும் ஆறில் ஒருபங்கு வருவாயைத் தவிர மக்களைத் துன்புறுத்திப் பொருள் சேர்க்க மாட்டான்; மற்றும்தன்னுடன் மாறுபட்ட மனம் கொண்டு படையெடுத்து வரும் பகைவர்களை எதிர்த்து அடிமைப்படுத்துவானேயன்றி, தானேஎவர்மீதும் படையெடுத்துச் சென்று அழிப்பதில்லை!” என்ற பொருளில் சூளாமணி என்ற தோலாமொழித் தேவரின்இலக்கியம் கூறும் பாடலாகிய

ஆறிலொன்றறமென அருளினல்லதொன்று
ஊறுசெய்து உலகினில் உவப்பதில்லையே!
மாறுகொண் டெதிர்ப்பவர் வணக்கின் அல்லதை
சீறி நின்று எவரையும் சிதைப்ப தில்லையே!” 

என்ற பாடல் இக்கருத்துக்கு அரண் செய்வதைக் காணலாம்! ”தான்” என்பது-” தன்” என்று குறுகியதால், விரிந்த புதிய பொருள்இது!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *