ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 9
–சி. ஜெயபாரதன்.
(1883-1931)
ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்
மூலம் : கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
புவியை விட்டு வெளியே
“மானிட வாழ்க்கையின் இதயத்திலோ, பிரபஞ்சத்தின் ஆழத்திலிருந்தோ எங்கே படைப்பின் மர்மங்கள் சேமித்து வைக்கப் பட்டுள்ளனவோ ஆங்கே மாமேதைகள் காற்றைப் போல் மேலேறுகிறார். முகிலைப் போல் மிதக்கிறார். குன்றைப் போல் உயர்கிறார். அவரது போராட்டங்களில் பழம் பெரும் பிரச்சனைகள் தீர்வாகக் கொண்டுவரப் படுகின்றன.”
“மனிதனுக்கு அறிவும், திறமையும் இருந்த போதிலும், விருப்பையும், வெறுப்பையும் அவன் இதயம் ஏற்காமல் துயர்ப்பாடுகளைப் பொறுத்துக் கொள்கிறது. மாமேதைகள் தமது குறிக்கோள்களில் வெற்றி அடைவதும் மனிதரது கைகளில்தான் உள்ளது.
கலில் கிப்ரான். (The Giants)
புவியை விட்டு வெளியே
_________________________________
சினத்தோடு, தீவிரமாய்ப்
புவியை விட்டு வெளியே
புவிமண் நீங்குகிறது !
நளின மோடு உன்னத மாய்
நடந்து வருகிறது
புவி மீது புவிமண் !
ஆலயங்கள்,
மாட மாளிகைகள்,
கூட கோபுரங்கள் கட்டப் படும்
புவிலிருந்து
புவி மண்ணை எடுத்து !
வையக மனிதர்
வையகத்தில் பின்னிக் கொள்வார்
தமது
விதிகள், சட்ட திட்டங்கள்
கோட்பாடு
மரபுக் கதைக ளோடு !
புவி களைத்துத்
தவியாய்த் தவிக்கும் கனவுகள்
அவிழ்ந்து போய் !
_________________________________
புவியின் கூரிய விழிகள்
உறக்கத்தில் மூடி
நேரிய முறை தவறி
ஓய்வெடுக்கும் !
அப்போது
புவிமண் உரைக்கும் புவியிடம் :
“நான்தான் கருப்பப்பை
நான்தான் புதையல் சமாதி
நான் கருப்பப் பையாகவும்
நான் சமாதி நிலையிலும்
நீடிப்பேன்
அண்டக் கோள்கள்
அழியும் வரை
பரிதி
எரிந்து போய்
சாம்பலாகும் வரை !
_________________________________
“குருதி ஆறுகள் ஒருநாள் ஒயின் மது ஓடும் நதிகளாய் ஆகிவிடும் ! பனித்துளிகளாய் ப் பூமி மீது பொழிந்த கண்ணீர்த் துளிகள் ஒருநாள் நறுமணப் பூக்களை விளைவிக்கும் ! இருக்கை விட்டுப் பிரிந்த ஆத்மாக்கள் ஒன்று கூடிப் பொழுது புலர்ச்சியின் புதுத் தொடு வானாய் அமையும். அப்போது மனிதன் நியாயத்தையும், நீதியின் காரணத்தையும் அடிமைச் சந்தையில் விலை கொடுத்து வாங்கி விட்டதாக உணர்வான். தனக்குள்ள உரிமைக்காக ஊழியம் செய்து செலவழிப்பவன் ஒருபோதும் தான் இழப்ப தில்லை என்று புரிந்து கொள்வான்.”
கலில் கிப்ரான். (The Giants)
_________________________________