பழமொழி கூறும் பாடம்

0

– தேமொழி.

பழமொழி: மாக் காய்த்துத் தன்மேல் குணில் கொள்ளுமாறு

 

தொன்மையின் மாண்ட துணிவொன்றும் இல்லாதார்
நன்மையின் மாண்ட பொருள்பெறுதல் – இன்னொலிநீர்
கன்மேல் இலங்கு மலைநாட! மாக்காய்த்துத்
தன்மேல் குணில்கொள்ளு மாறு.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

பதம் பிரித்து:
தொன்மையின் மாண்ட துணிவு ஒன்றும் இல்லாதார்
நன்மையின் மாண்ட பொருள் பெறுதல்,-இன் ஒலி நீர்
கல் மேல் இலங்கும் மலை நாட!-மாக் காய்த்துத்
தன்மேல் குணில் கொள்ளுமாறு.

பொருள் விளக்கம்:
பழமையான நூல்பல கற்பதால் மேன்மைதரும் துணிவு ஒன்றும் பெறாதவர், நன்மை தரும் வகையில் மாண்பு கொண்ட செல்வம் பெறுவாரெனில்; இனிமையான ஓசையுடன் நீரானது கற்பாறைகள் மேல் பாயும் அருவிகள் கொண்ட மலைநாட்டைச் சேர்ந்தவரே, (அவரது நிலையானது) மாமரம் செழித்து காய்கள் பல கொண்டதால் தன்மேல் கல்லெறி படுவது போன்ற நிலையாக அமைந்துவிடும்.

பழமொழி சொல்லும் பாடம்: கல்வியறிவு பெறாத ஒருவர் முயன்று செல்வம் பல சேர்த்தாலும், அதனைக் காப்பாற்றும் வழி அறியாததால், பிறர் அவரது செல்வதை ஏமாற்றி பறித்துக் கொள்ளும் நிலையில் தள்ளப்படுவார் என்றும் பொருள் கொள்ளலாம். கல்வியறிவற்ற காரணத்தால், தான் பெற்ற செல்வதைத் தேவையுள்ளவர் நன்மை பெரும் வகையில் பயன்படுத்தத் தெரியாத, ஈகையின் மேன்மையை உணராத ஒருவரின் செல்வம், அவருக்கும் பலனின்றி பிறகு தீயார் கொள்ளை கொள்ளும் நிலையை அடையும் என்றும் பொருள் கொள்ளலாம்.

எனவே பொதுவாகக் கொள்வோமானால், அறிவின்மை காரணமாக செல்வதை எவ்வாறு பாதுகாப்பது என்றோ; அல்லது எவ்வாறு தனக்கும் பிறருக்கும் பயனளிக்கும் வகையில் நன்முறையில் செலவழிப்பது என்றோ அறியாத ஒருவரின் செல்வம், அவருக்குப் பலன் தராமல் தீயவர் கைப்பற்றும் நிலையை அடையும். அறிவில்லாதவர் பெற்ற செல்வமானது, காய்த்த மரம் கல்லடி பட்டு துன்பம் பெறுவது போல அவருக்கும் அவரது பொருளுக்கும் துன்பத்தையே விளைவிக்கும், இக்கருத்தைக் குறள்,

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு. (குறள்: 408)

அறிவற்றோர் பெற்ற செல்வம், கற்றறிந்த நல்லவர் ஒருவரை வருத்தும் வறுமையை விடவும் பெரிதும் துன்பம் தருவதாகும் என்று கூறுகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.