“கண்ணா கனியவை நாற்பது” …. (4)
கிரேசி மோகன்
சுகம்கிடைத்தும் ஓரிடத்தில் சும்மா இராமல்
நகம்கடித்து நாற்புறமும் நோக்கி -முகம்சுளிப்பாய்
மேலான பேரின்பம் தோலால் கிடைக்காது
வேளாண்மை செய்யான்மா வில்….(19)
வில்லிருந்தும் தோளிருந்தும் வீரம் பிறக்காது
கள்ளிருந்தும் போதை கிடைக்காது -உள்ளிருக்கும்
ஆன்மனே ஆண்மை அவனெழுச்சி சம்போகம்
ஊன்மனங்கள் சோரும் உறுப்பு….(20)
உறுப்பதற்கு ஞானம், உரைப்பது மோனம்
பிறப்பிறப்(பு) இல்லா புருஷன் -கருப்பொருளாய்
சக்தியவள் , அன்பில் சிவனவன், பாலில்
யுக்தியிலாண் பெண்ணாம் அது….(21)
அதுவாக ஓர்நாள் ருதுவாகும் ஆன்மா
அதுவரை ஐம்புலனை ஆள்வாய் -கதையல்ல
கற்பனை மாயையைக் கட்டக் களித்துடுவான்
அற்பனும் அக்குடையை ஆண்டு….(22)
ஆண்டோனும் ஆண்டியும் மாண்டபின் மீண்டுமிங்கு
ஆண்டியாய் ஆண்டோனாய் ஆகிடுவர் -வேண்டாமே
வேஷமிது அஞ்ஞானம் வேதாந்த கும்பலின்
பாஷையில் கோவிந்தா போடு….(23)
போடுவதை உண்ணாது போயின்ப வேட்டையில்
ஆடியிரை ஆகி அனல்சுடு -காடுவர
அய்யோ எனக்கூவ அய்யோ மணவாளன்
கொய்யா(து) இருப்பானா கூறு….(24)