நவராத்திரி நாயகியர் (7)
க. பாலசுப்பிரமணியன்
மைசூர் அன்னை சாமுண்டீஸ்வரி
அரக்கனை அழித்திடவே வெகுண்டெழுந்த வேங்கை
ஆயிரம் ஆதவர்கள் அணியிட்ட பார்வை
அங்கமெல்லாம் தங்கமென மின்னிவிடும் நங்கை
அச்சமில்லை! அன்னையவள் அன்புடைய மங்கை !
பிறந்திருக்கும் குழந்தைக்கும் பாலூட்ட வருவாள்
பிறழாத நாவினிலே உயிர்மெய்யாய் நிற்ப்பாள்
பிறவிக்கடன் நீக்கிடவே பிரணவத்தைத் தருவாள்
பேரிடரில் கைகொடுத்து பைரவியே காப்பாள் !
மருந்தாகி மனத்துள்ள மலமெல்லாம் நீக்கிடுவாள்
விருந்தாகி வந்தாலோ விளக்கருகில் அமர்ந்திடுவாள்
பருந்தாகி பார்த்திருந்து பகையெல்லாம் விலக்கிடுவாள்
மறந்தும் நினைத்தாலோ மனதில்லாம் நிறைந்திடுவாள்!
சண்டனையும் முண்டனையும் சடுதியில் அழித்தவளே !
சும்பனையும் நிசும்பனையும் மோகினியாகி முடித்தவளே
சாகசங்கள் புரிந்திடவே சாமுண்டியாய் வந்தவளே !
சாம்பவியே ! சங்கரியே ! சந்தனமாய் மணப்பவளே !
வீரத்திலே துர்கையை வென்றவர் யாருமில்லை
ஈரத்திலே தாயுள்ளம் தரணியிலே நிகரில்லை
நாளத்தில் குருதியெல்லாம் காளியுந்தன் நிறமன்றோ!
நான்மறைகள் போற்றுகின்ற ஆதிசிவன் அருந்துணையே !
கொலுவேறி நீயிருக்கக் குவலயமே வியந்திடுமே !
குரலினிலே புதுப்பாடல் நித்தம் பிறந்திடுமே !
குறையின்றிக் குடும்ப மெல்லாம் களித்திடுமே !
கோலமிட்டு அழைக்கின்றேன்! குலமகளே வருகவே !