க. பாலசுப்பிரமணியன்

 

மைசூர் அன்னை  சாமுண்டீஸ்வரி

shri-chamundeshwari

அரக்கனை அழித்திடவே வெகுண்டெழுந்த வேங்கை

ஆயிரம்  ஆதவர்கள் அணியிட்ட  பார்வை

அங்கமெல்லாம் தங்கமென மின்னிவிடும் நங்கை

அச்சமில்லை! அன்னையவள் அன்புடைய மங்கை !

 

பிறந்திருக்கும் குழந்தைக்கும் பாலூட்ட வருவாள்

பிறழாத நாவினிலே உயிர்மெய்யாய் நிற்ப்பாள்

பிறவிக்கடன் நீக்கிடவே பிரணவத்தைத் தருவாள்

பேரிடரில் கைகொடுத்து பைரவியே காப்பாள் !

 

மருந்தாகி மனத்துள்ள மலமெல்லாம் நீக்கிடுவாள்

விருந்தாகி வந்தாலோ விளக்கருகில் அமர்ந்திடுவாள்

பருந்தாகி பார்த்திருந்து பகையெல்லாம் விலக்கிடுவாள்

மறந்தும் நினைத்தாலோ மனதில்லாம் நிறைந்திடுவாள்!

 

சண்டனையும் முண்டனையும் சடுதியில் அழித்தவளே !

சும்பனையும் நிசும்பனையும் மோகினியாகி முடித்தவளே

சாகசங்கள் புரிந்திடவே சாமுண்டியாய் வந்தவளே !

சாம்பவியே ! சங்கரியே ! சந்தனமாய் மணப்பவளே !

 

வீரத்திலே துர்கையை  வென்றவர் யாருமில்லை

ஈரத்திலே தாயுள்ளம் தரணியிலே  நிகரில்லை

நாளத்தில் குருதியெல்லாம் காளியுந்தன் நிறமன்றோ!

நான்மறைகள் போற்றுகின்ற ஆதிசிவன் அருந்துணையே !

கொலுவேறி நீயிருக்கக்  குவலயமே வியந்திடுமே !

குரலினிலே புதுப்பாடல்  நித்தம் பிறந்திடுமே !

குறையின்றிக் குடும்ப  மெல்லாம் களித்திடுமே !

கோலமிட்டு அழைக்கின்றேன்!  குலமகளே வருகவே !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *