நாகேஸ்வரி அண்ணாமலை

sg-map

செனெகல் என்னும் ஆப்பிரிக்க நாட்டில் தாங்கள் செய்த பாவங்களைக் களைவதற்கு ஒரு எளிய வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.  தலைநகரமான டாக்கரிலும் மற்றும் சில பெரிய ஊர்களிலும் தெரு ஓரங்களில் பல ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படும் சிவப்பு அலகுகளையுடைய சிறு பறவைகளை விற்றுக்கொண்டிருப்பவர்களைப் பார்க்கலாம்.  இந்தப் பறவைகளில் ஒன்றை அவர்களிடமிருந்து வாங்கி அவற்றின் காதுகளில் மந்திரங்களைச் சொல்லி, அதை வாங்கியவர் தான் செய்த பாவங்களையும் தனக்கு வாழ்வில் ஏற்பட்டிருக்கும் கஷ்டங்களையும் கூறியபின் அந்தப் பறவையைப் பறக்கவிட்டுவிட்டால் தான் செய்த பாவங்களிலிருந்து தனக்கு விடுதலை கிடைக்கும் என்றும், தன்னுடைய கஷ்டங்களுக்கு விடிவு கிடைக்கும் என்றும் நம்புகிறார்.

africa_waterஇப்போது இந்தக் குறிப்பிட்ட பறவை மட்டுமின்றி இன்னும் சில பறவைகளும் ஊர்வன இனத்தைச் சேர்ந்த விலங்குகளும் மனிதனின் பாவங்களைப் போக்கும் என்று செனெகல் நாட்டு மக்கள் எண்ண ஆரம்பித்திருக்கிறார்கள்.  இந்த நம்பிக்கை மக்களிடையே வேகமாகப் பரவி வருவதால் சமூகத்தின் பெரிய புள்ளிகளான அரசியல்வாதிகள், நடிகர்கள், பெரும் பணக்காரர்கள் இந்த மிருகங்களையும் பறவைகளையும் விற்பவர்களின் வீடுகளுக்கே வந்து வாங்கிச் செல்கிறார்கள்.  தங்களின் துரதிருஷ்டமும் பாவங்களும் மற்றவர்களைச் சென்று அடையட்டும் என்று சிலர் அவற்றை வெளியில் விட்டுவிடுகிறார்களாம்.  அவை மறுபடி அவற்றை விற்றவரிடமே போய்ச் சேர்ந்துவிடுகின்றனவாம். விற்றவர்களுக்குப் பணமும் கிடைத்துவிடுகிறது. மறுபடியும் அவற்றை விற்றுப் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது.  ஜனங்களின் அறியாமையால் ஒரு சிலர் எப்படிப் பணம் பண்ணுகிறார்கள் பாருங்கள்.

நியுயார்க் நகரின் புரூக்ளின் பகுதியில் வசிக்கும் யூதர்களிடமும் இது மாதிரியான அறியாமை இருக்கிறது.  (மற்ற ஊர்களில் வசிக்கும் யூதர்களிடமும் இந்தப் பழக்கம் இருக்கும்போல் தெரிகிறது.) புது வருடத்திற்கும் தங்கள் பாவங்களுக்குப் பிராயச்சித்தம் தேடும் யூதப் பண்டிகையான யாம் கபூருக்கும் இடையே உள்ள நாட்களில் தாங்கள் செய்த பாவங்களைக் கோழிகளின் மேல் சுமத்தும் பழக்கம் இருக்கிறது.  இந்த இரண்டு பண்டிகைகளுக்கும் இடையேயுள்ள பத்து நாட்களில் உயிரோடு கோழிகளை விற்கும் கடைக்குச் சென்று (அமெரிக்காவில் கோழிகளை உயிரோடு விற்கும் கடைகள் எங்காவதுதான் உண்டு.  நன்றி தெரிவிக்கும் பண்டிகை சமயத்தில் சில விவசாயப் பண்ணைகளில் நாம் வேண்டும்போது வான்கோழிகளைக் கொன்று நமக்கு விற்பார்கள்.  சாதாரணமாக அமெரிக்காவில் எல்லாவகை மாமிசங்களையும் உறைந்த நிலையில் பனிப்பெட்டியில் வைத்துத்தான் விற்பார்கள்.  விசேஷ தினங்களில்தான் உயிரோடு கோழிகளையும் வான்கோழிகளையும் விற்பார்கள்.) அவற்றை வாங்கி யாருடைய பாவங்கள் களையப்பட வேண்டுமோ அவர்களுடைய தலைக்கு மேலே கோழிகளைச் சுற்றி மந்திரம் ஓதிவிட்டால் அந்த மனிதரின் பாவம் கோழிகளுக்குச் சென்றுவிடுமாம்.  பின் அவற்றைக் கொன்று அவற்றை சாப்பிட விரும்பும் ஏழைகளுக்கு விநியோகிப்பார்களாம்.  பாவங்களை நினைத்துத் திருந்தி இறைவனிடம் மன்னிப்புக் கோரும் நாளில் எவ்வளவு எளிதாகப் பாவங்களைக் களைந்து மன்னிப்புப் பெற்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள்!

தான் செய்யும் தவறுகளையும் பாவங்களையும் யாரும் எளிதில் ஒப்புக்கொள்ளுவதில்லை.  அப்படி ஒப்புக்கொள்ளுபவர்களும் தங்களுடைய தவறுகளுக்கும் பாவங்களுக்கும் யாரையாவது பொறுப்பாக்குவார்கள்.  இதற்குமேல் இது மாதிரி மிருகங்களைப் பலிகொடுத்து இறைவனிடம் தன்னுடைய பாவங்களுக்குப் பரிகாரம் தேட மனிதன் முயல்கிறான்.

கோவில்களில் மிருகங்களைப் பலிகொடுத்துத் தன்னுடைய பாவங்களுக்குப் பரிகாரம் தேட மனிதன் எப்போதிலிருந்து முயன்று வருகிறான் என்று தெரியவில்லை.  ஒரு வேளை அல்லது ஒரு நாள் உணவைத் துறந்து விரதம் இருந்து மனிதன் தன் பாவத்திற்குப் பரிகாரம் தேடுவதையோ புண்ணியம் சேர்த்துக்கொள்ள விரும்புவதையோ வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளலாம்.  அதில் ஒரு வகைத் தியாகம் இருப்பதாக ஒப்புக்கொள்ளலாம்.  ஏனெனில் ஒரு வேளை உணவைத் தவிர்ப்பதன் மூலம் தங்கள் பசியைத் தாங்கிக்கொள்கிறார்கள்.  தங்கள் பாவங்களை அப்பாவிக் கோழிகள் மேல் சுமத்துவது எவ்வளவு பெரிய அறியாமை!  நியுயார்க்கில் ஒரு யூதப் பெண்ணிற்கு கோழிகளைத் தொடவே பிடிக்காதாம்.  அதனால் மந்திரம் சொல்வது மட்டும் இவளுடைய வேலை.  கோழியை இவளுடைய தலையைச் சுற்றி சுற்றுவது இவளுடைய கணவனின் வேலையாம்.  கோழிகளின்மேல் தன்னுடைய பாவங்களைச் சுமத்துவதற்குக்கூட இன்னொருவர் உதவி தேவைப்படுகிறது.

நாம் செய்த பாவங்களை உணர்ந்து வருந்தி அதற்குப் பரிகாரமாக நல்ல செயல்களைச் செய்து இறைவனிடம் இறைஞ்சி மன்னிப்புக் கேட்பதன் மூலம்தான் இறைவனிடம் மன்னிப்புப் பெறமுடியும் என்பதை இவர்களுடைய மதத்தலைவர்கள்கூட இவர்களுக்கு எடுத்துச் சொல்லவில்லையா?  இவர்களுடைய மதத்தலைவர்களே இவர்களுக்குப் புத்தி புகட்டவில்லையென்றால் யார் இவர்களுக்குப் புத்தி புகட்டுவார்கள்?

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பாவங்களைக் களையும் வழி இதுவா?

  1. பாவங்களைக் களைகிறானோ, இல்லையோ, கருவிகளில் மூழ்கியுள்ள மனிதன், இந்த வகையிலாவது பறவைகளிடமும் கோழிகளிடமும் பேசுகிறானே. செனகல் பறவை (Pithi) விடு தூது, கோழி விடு தூது இலக்கியம் படைக்க வாய்ப்பு.

  2. உளமறிந்து செய்கின்ற தவறுகள் பாவங்களாகின்றன. அதைத் திருத்திக்கொள்ளாத வரை அவைகளுக்கு விமோசனமே கிடையாது .. மனிதர்களைப் போல் பறவைகளும் மிருகங்களும் தங்கள் பாவங்களுக்கு மனித இனத்திடம் விமோசனம் தேடினால் என்னாவது ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.