-மேகலா இராமமூர்த்தி

இந்தவாரப் படக்கவிதைப் போட்டிக்கான படம் இது. இதனை ஒளிப்பதிவு செய்தவர் திரு. முத்துக்குமார். போட்டிக்குத் தேர்வுசெய்து தந்தவர் திருமதி சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி.

palmtree

”பனைமரத்தின் பாதியில் அமர்ந்து அலைபேசியை ஆர்வத்துடன் படிக்கும் அன்புத் தம்பி! சற்றே உன் பிடி நழுவினால் என்னாகும் நீ யோசி! மரத்தைவிட்டு இறங்கியபின் அலைபேசிச் செய்திகளை நீ வாசி!” என்று இந்தத் தம்பிக்கு அறிவுரை சொல்லவேண்டியது அவசியமாய்ப்படுகின்றது.

மனிதர்களைத் தாங்கி நிற்கும் பனையே! புல்வகையைச் சேர்ந்த நீ மரமாய் உயர்ந்து மலைக்க வைக்கிறாய். அத்தோடு பல்வகைப் பயன்களையும் மனிதர்க்குக் குறைவின்றி நல்குகிறாய். பெண்ணையாகிய உன்னையே சிறந்த நட்பிற்கு இலக்கணமாய் நாலடியும் நவில்கின்றது.

கடையாயார் நட்பிற் கமுகனையர் ஏனை
இடையாயார் தெங்கி னனையர் தலையாயார்
எண்ணரும் பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே,
தொன்மை யுடையார் தொடர்பு.  (நாலடியார்)

இனி, கவிஞர்களின் முறை! பனையினும் உயர்ந்த சிந்தனைகளை அள்ளிவழங்கக் காத்திருக்கும் அவர்களை வரவேற்றுக் கவிபாட வைப்போம்!

*****

தம்பி! பனையில் ஏறிப் பாதுகாப்பின்றித் தன்படம் (selfie) எடுப்பது உனக்கே வினையாய் முடியும்; வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு!” என்று எச்சரிக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

நன்றியா…

வாலிபம் என்பது
விளையாட்டுக் களம்தான்,
விளையாட்டு வினையாகாதவரை..

சரித்திரம் படைப்பது
சாதனைதான்,
சறுக்கல் வராதவரை..

பாதுகாப்பு ஏதுமின்றி
பனைமரத்தில் ஏறி,
பலரும் பார்க்கத்
தன்படம் எடுக்கையில்
தவறி வீழ்ந்தால்,
உன்படம் வருமே
கறுப்புக் கட்டத்தில்..

கதறும் பெற்றோரைக்
காணநீ இல்லாமல்போவதா
காட்டும் நன்றி…!

*****

சா’தீ’யம் கருக்கிய உன் காதலுக்கு நீதி கேட்டா? மனிதரின் குடியைக் கெடுக்கும் குடியை ஒழிக்கவா? ஏறுதழுவுதலுக்குக் குரல்கொடுத்த வீரர்களுக்கு ஆதரவாகவா? எதற்காகப் பனைமீது பாய்ந்தேறினாய் தம்பி? காரணம் எதுவாயினும் ’கரணம் தப்பினால் மரணம்’ எனும் நிலையிலா போராடுவது? புவியில் நின்று முழங்கு; மாந்தருக்கு நீதி வழங்கு!” என்கிறார் திரு. இளவல் ஹரிஹரன்.

அருகிவரும் பனைமரத்தை
   அணைத்தபடி ஏறிநிற்கும்
திருமகனே இளைஞனே..நீ
    சேதிசொல்ல உள்ளதென்ன…
உருகியுனைக் காதலித்த
    உத்தமியைக் கௌரவமாய்க்
கருவமிகு சாதீயம்
    கொலைசெய்த காரணத்தால்…

நீதிகேட்டு மரமேறி
     நிற்கின்றாயோ..அல்லால்
[……..]

மாறாக டாஸ்மாக்கில்
      மதுமயக்கம் கொண்டுமக்கள்
சீரழியும் செயலதனால்
      மதுக்கடைகள் மூடுதற்கே
போராட ஓங்கிநின்ற
      பனைமரத்தில் ஏறினாயோ…
வீறுகொண்டு வெறும்வார்த்தை
      வீணரினை நம்பாமல்

ஏறுதழுவல் என்றதமிழ்ப்
      பண்பாட்டு விளையாட்டு
மாறுபாடு ஏதுமின்றி
      மாநிலத்தில் நிகழ்வதற்குப்
போரிட்ட மெரீனாவின்
     புரட்சியாளர்க் கென்றுதவ
வேர்கொண்ட பனையேறி
     விரைவாக நின்றாயோ…

உனக்குமுன்னே ஒருவனேறி
     உதவுதற்கு நிற்கின்றான்
உனக்குவந்த குறுஞ்செய்தி
     உரைப்பதற்கு முயல்கிறாயோ…
[…….]

எதுகார ணமென்றாலும்
      இளைஞருயிர் பணயமாக்கும்
புதுமையினைத் தவிர்த்துவிடு..
       பூமிநின்று போராடு…..
பதுமையென மக்களினைப்
       பார்க்கின்ற ஆட்சியரின்
பொதுமையினைப் புறந்தள்ளிப்
       புதுப்பிப்பாய் விழிப்புணர்வை!

*****

தனை நனைக்க எப்போது வருவாள் தன் மழைக்காதலி என்று ஏங்கிநிற்கும் பனைமரக்காதலனின் காதல் உணர்வுகளை அழகாய்க் கவிவடித்திருக்கின்றார் திருமிகு. சுபிக்ஷா.

ஒற்றை முத்தத்தில் தொடங்கிய பந்தம்
ஆயிரம் முத்தங்களில் அௗவளாவி
என் அங்கமெல்லாம் ஆரத் தழுவி
என்னை ஆர்ப்பரித்தவள்

வாரம் ஒரு முறையாவது வந்து விடுவாள், நான்
வாடி விடக்கூடாது என்பதற்காக

அவளில்லாமல் நானில்லை
அறிவாள் அவள்

சொல்லித்தான் தெரிய வேண்டுமோ.., எனச்
சொல்லாமல் விட்டு விட்டேன்
சொத்தாய் மதிக்கும் அவளிடம்
சொர்க்கமென நினைக்கும் என் காதலை..

என்ன நினைத்தாளோச் தெரியவில்லை
என்னைப் பார்க்க வந்து பல நாட்களாகிவிட்டது
எட்டி பார்த்துக்கிட்டு தான் இருக்கேன்
எதுவும் தெரியவில்லை

உற்றானாக நினைத்துக் கேட்கிறேன்
உதவி வேண்டும் தம்பி
உன் கையில் இருக்கும் பெட்டியில் எல்லாம் தெரியுமாமே!
உற்றுப் பார்த்து சொல்

எப்பொழுது வருவாள்
என்னவௗ் என்று…

மழைக்காக…,
மரம்

*****

”உன்னைப் போல் பிறர்க்குதவும் மரமொன்று பாரிலில்லை பனையே! ஈகைக்கு இலக்கணம் நீ! நட்புக்குச் சான்று நீ! உன் ஓலையன்றோ எம் அமிழ்தனைய தமிழ் காத்தது. புல்லினத்தில் தோன்றி விண்ணுயர நிற்கும் உன் சாதனை வியக்கவைப்பது. உன் சேவைகள் எம்மை நயக்கவைப்பது! வாழ்க எம் பனை நண்பனே!” என்று உளந்தோய்ந்து பனையின் பெற்றியைப் பாடுகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

பனை நண்பன்

பாதி மரமேறிப் பக்குவமாய்ப் படமெடுத்து
பனைமரத்தின் பயனையெலாம் பார்புகழச் செய்தாயோ!

பலவித மரங்களிலே பனைமரம் போலாகுமா!
பிறர்வாழநீ வாழுமுன் குணத்துக்கது ஈடாமோ!

பெற்றோர் வளர்த்த பிள்ளைகூட உதவாதானால்..
வளர்க்காமலே நீவளர்ந்து பிறருக்கு உதவுகின்றாய்!

நண்பரைத் தேர்ந்தெடுக்க முக்குணத்தில் ஒன்றாக..
தென்னை வாழையோடு உன்குணமு மொன்றாகும்!

நண்பனுக்குகந்த குணமென உத்தமநண்பணுக்கு..உன்
பனைக்குணமே பெரிதென்றான் அர்த்தமுள்ளகவியரசன்!

முக்குணத்தில் சிறந்த சாத்விக குணம்பெற்று..
பூவுலகக் கற்பகத் தருவெனத் தாரணியில் புகழடைந்தாய்!

கயவர்களை இனம்கண்டு பனைமரத்தி லொருமுறை..
கட்டிவைத்து உதைத்தால் திருந்திவாழ வழியுண்டாம்!

நெட்டைப் பனையென்றும் நெடியமரமென்றும்..
நேர்மைக் கோர் உதாரணமாய் திகழுகின்றாய்!

பனைமரமேறிப் பரிசுப்பெற்ற வாலிப இளைஞனுக்கு..
பெண்கொடுத் தாருண்டென்ப தோர்க் காலமுண்டாம்!

பழுத்துக் கனிந்தால் பனம் பழமாகவும்..
பழுக்கா விட்டால் நுங்கெனவும்..பல்வகையில்

பித்தர்களுக்கு மருத்துவம் வேண்டா மவன்..
பித்தம்தெளிய யுன்பழம் கொடுத்தால் போதுமாம்!

உயிரின முண்ணக் கிழங்குவெல்லம் கருப்பட்டியென..
புல்லினத்தில்பிறந்து பேரினமாய் நின்று உதவுவாய்!

வெட்டி வீழ்ந்தாலும் வீணாகாமல்..உத்திரமாக..
கட்டிவாழும்எம் குடிலுக்கு வலிமை சேர்த்தாய்!

சித்தர்களின் சிந்தனைகள் சித்திரஎழுத்துவடிவமாக..
சிறந்த இலக்கியங்களுக்கு ஏடாகிப் படிவம்கொடுத்தாய்!

தமிழ் வளர்ச்சிக்கு உதவிய ஒரேமரமென்றும்..
மொழிக்குதவிய முதல் மரமெனவும்நீ உலகறிவாய்!

வெப்பக்கதிர் வீச்சைத் தணிக்க..விரிந்துபரந்த..
விசிறியாகி வெங்கதிர் தவிர்த்தாயோர் காலத்தில்..

மரம்தானனென இகழ்சொன்னா லதைமறுத்து..வீரமுடன்..
தனிமரமாய்த்தோன்றி மரமினத்துக்கு மங்காப்புகழ்சேர்த்தாய்!

காய்ந்து கயிறாகிநீ கால்நடையைக் கட்டினாலுமுன்..
கட்டுக்கடங்காப் பயன்புகழ் வாழிய வாழியவே!

மாநிலமரமென தமிழ்மரபை தமிழ்குடியைப் பறைசாற்றும்
பனைநண்பனுனை மானுடர்கள் நினையாத நாளில்லையே!

*****

படத்திலிருக்கும் ’பனை’ நம் கவிஞர்களின் கற்’பனை’க்கு நல்லதோர் விருந்து படைத்திருப்பதை அவர்தம் கவிதைகள்வழி உணரமுடிகின்றது. பனம்பழமென இனிமையாய்க் கவிவடித்திருக்கும் கவிஞர்களுக்குப் பாராட்டுக்கள்!

என் சிந்தை கவர்ந்து இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் கவிதை இதோ…

தடம் மாறும் போராட்டம்

தையல் நாடி மையல் கொண்ட திராவிடப் பண்பாட்டில்
பனைமடலேற்றம் கண்டான் பண்பாட்டுத் தமிழன்
அடல் கொண்டதே மடலேற்றம்
மடல் வென்றதே மனமாற்றம்
மடல்மா ஏறிய ஆண்மை
மனம் மாறியதே பெண்மை
மனம் மாறாப் பெண்மைக்குக் காட்டிய போராட்டம்
காலமாற்றத்தில்
காதலில் புகுந்ததே கள்ளத்தனத்தின் ஊடாட்டம்
கைபேசியின் காட்சிப் பதிவுகளில்
காதல் களியாட்டம்
கைகூடாக் காதலருக்கோ
காட்சிகளின் சாட்சிகளே வெறியாட்டம்
போராட்ட முறை மாறலாம்
போராட்ட அறம் மாறலாமா?

அன்று, தன்காதல் கைகூடாக் காதலன், உடல்கிழிக்கும் பனங்கருக்கில் ஏறித் தன்னை வருத்திக் காதலியின் அன்பையும், ஊராரின் அருளையும் பெற்று அவளை மணமுடித்தான். இன்றோ… காதலி தன்னை விரும்பாவிட்டால், ஆபாசப் படமெடுத்து அவளைப் பழிவாங்கவும், அவள் வாழ்வோடு அவளையும் சேர்த்துக் கருக்கவும் துணிந்துவிட்டனர் காதலென்று சொல்லித் திரியும் கயவர்கள். காலம் மாறலாம்; காதல் அறம் மாறலாமா? என்று வேதனையோடு வினவும் திருமிகு. மா. பத்ம பிரியாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வுசெய்கிறேன்.

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 102-இன் முடிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.