எம் . ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா

 

          அசுரர்கள் வாழ்ந்ததாய் அறிகின்றோம் கதைகளிலே

             அசுரர்கள் நிஜமாக வாழ்கின்றார் அருகினிலே

         பிஞ்சுமனம் பார்க்கார்கள் கெஞ்சினாலும் கேட்கார்கள்

              கொஞ்சமேனும் இரக்கமின்றி கொன்றொழிப்பார் பிஞ்சுகளை !

 

       படித்தாலும் பண்பில்லார் பதவியாலும் உயர்வுபெறார்

            நினைப்பெல்லாம் கசடாக நித்தமுமே இருந்திடுவார்

       தமக்கெனவே வாழ்ந்திடுவார் தலைகுனிவை பொருட்படுத்தார்

              நிலத்திலவர் வாழ்வதனால் நிம்மதியை அழித்திடுவார் !

 

        படித்தவரில் பலபேரும் பாமரரில் சிலபேரும்

                அடுத்தவரை அழவைக்கும் ஆசையிலே அலைகின்றார்

        எடுத்துவைக்கும் அடியனைத்தும் இரக்கமதை மிதிப்பதற்கே

                எடுத்துவைக்கும் இவர்களெலாம் ஏனுலகில் பிறந்தனரோ !

 

        காமமெனும் வெறியுடனே கணமெல்லாம் திருயுமிவர்

                காணுகின்ற அத்தனையும் காமமுடன் நோக்குகிறார்

        மாமியென்றோ மகளென்றோ மலருகின்ற குருத்தென்றோ

               காமநிறை கண்ணுடையார் கருதியே நிற்பதில்லை !

 

       கணநேரம் காணுகின்ற காமசுகம் தனைநினைப்பார்

            காலமெல்லாம் தவித்தழுவார் காயமதை நினைப்பதில்லை

       உயிர்போகும் அவர்நிலையை ஒருகணமும் பொருட்படுத்தா

              உணர்வில்லா அசுரர்களாய் உலவுகிறார் உலகினிலே !

 

       அறியாத பிஞ்சுகளை அழித்துநிற்கும்  அசுரர்களை

             அனைவருமே சேர்ந்துநின்று அகற்றிவிடல் அவசியமே

       நெறியிழந்து நிற்பாரை நீழ்புவியில் வாழவிட்டால்

              அளவிறந்த  ஆவேசம் கொண்டுநிற்கும் அசுரகுணம் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.