(  எம் . ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா  )

 

 

குங்குமம் பொட்டும் குறுகுறுத்த பார்வையும்

எங்குமே பரந்துநிற்கும் எழிலார்ந்த கற்பனையும்

பொங்கிவரும் தமிழுணர்வும் பொறுப்பான எழுத்துக்களும்

எங்களுக்கு அளித்துவிட்டு எங்குசென்றீர் சித்தரையா   !

 

எழுதிக் குவித்தகை எப்படித்தான் ஓய்ந்ததுவோ

அளவின்றி  பலவற்றை ஆர்வமுடன் தந்தீர்கள்

வழுவின்றி வையகத்தில் வாழும்வகை எழுத்தாக்கி

வழங்கிவிட்டு ஏனையா மனமேங்க வைத்துவிட்டீர்        !

 

வெள்ளுடையில் மேடையேறி வெளியாகும் கருத்துக்களை

அள்ளிநாம் பருகிவிட ஆசையுடன் இருக்கின்றோம்

வெண்தாடி வெள்ளுடையில் வேறுயார் இங்குள்ளார்

வித்தகரே சித்தரையா விரைவாகச் சென்றதேனோ     !

 

பரிசுபல பெற்றாலும் பல்லக்கில் ஏறாமல்

பக்குவத்தைக் கடைப்பிடித்து பலபேரும் மதிக்கநின்றாய்

படைக்கின்ற அத்தனையும் பயனாகும் பாங்கினிலே

படைத்தளித்து விட்டுத்தான் பாரைவிட்டு அகன்றனையோ    !

 

உன்நாவல் அத்தனையும் உரமாக இருக்குமையா

வெவ்வேறு விதமாக விறுவிறுப்பாய் தந்துநின்றாய்

தமிழ்படிப்பார் யாவருமே தலைமீது வைப்பார்கள்

அறிவான எழுத்தாலே அனைவரையும் ஆண்டுவிட்டாய்   !

 

முக்காலமாய் உந்தன் எழுத்துக்களை பார்த்திடலாம்

முதற்காலம் முற்போக்கு முகிழ்த்ததையே பார்க்கின்றோம்

இடைக்காலம் வெள்ளித்திரை ஈர்த்துவிட இருந்துவிட்டாய்

இக்காலம் இறைபக்தி எழுத்தாக்கி எழுச்சிபெற்றாய்     !

 

குடும்பத்தை உயர்த்துதற்கு கொடுத்துநின்றாய் பலகருத்தை

குலவிளக்காம் பெண்கள்தமை குன்றேத்திப் பலபுகன்றாய்

நலமிக்க சமுதாயம் நாட்டில் வரவேண்டுமென்று

நாளெல்லாம் எழுதிவிட்டு நாயகரே சென்றதேனோ        !

 

படைப்புலம் அழுகிறது பத்திரிகை அழுகிறது

பாலகுமாரன் ஐயா பசுந்தமிழும் அழுகிறது

பரவசமும் பக்குவமும் பாங்காக படைத்தளித்த

பாலகுமாரன் ஐயா பாரைவிட்டுப் போனதேனோ    !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.