துணைவியின் இறுதிப் பயணம் – 12
-சி. ஜெயபாரதன், கனடா
என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !
[Miss me, But let me go]
++++++++++++++
[39] அணையாத கனல்
ஏற்றி வைத்த உன்
மெழுகுவர்த்தி ஒருநாள்
காற்றடிப்பில்
பட்டென அணைந்து விடும் !
எரியும் விளக்குகள்
எல்லாமே
ஒருநாள் அணைந்து போகும் !
உன் உடம்பும்
ஒரு மெழுகு வர்த்தியே !
அதிலே ஆட்சி புரியும்
ஆத்ம உயிரும் ஓர்
தீக்கனல் சக்தியே !
ஒருநாள்
அணைந்து போகும் தீக்கனல் !
என் வீட்டில் வாழ
ஏற்றி வைத்த
ஓர் கலங்கரை விளக்கு
என் துணைவி !
அவள் நடமாடும் தீபம் !
குப்பெனப் புயலில் அணைந்து
எங்கும் இருள் மயம் !
துணைவிக்கு
அன்று நான் இட்ட தீ
அணைந்தது,
ஆனால் அதனால்
எனது நெஞ்சில் பற்றிய தீ
இதுவரை
அணைய வில்லை ! அது
அணையுமா ? அணையுமா ? என்றும்
அணையுமா ?
+++++++++++++++
[40] அறுந்த தொப்புள் கொடி
பிறந்த சிசுவுக்கு இருப்பது
ஒன்றில்லை ,
தொப்புள் கொடிகள்
இரண்டு !
பெற்ற தாயுடன்
இணைந்தது ஒன்று !
தெரிவது
மனித கண்ணுக்கு !
சேயிக்குத் தெரியாமல்
இயங்கி வருவது
இரண்டாவது தொப்புள் கொடி !
படைப்பாளியுடன்
பிணைந்தது !
ஆத்மப் பிணைப்பு அது !
உயிர்ப் பிணைப்பு !
தெரியும் தொப்புள் கொடி
அறுத்தால்
சேய் தானாய் இயங்கும் !
தெரியாத
தொப்புள் கொடி அறுந்தால்
செத்துவிடும் சேய் !
துணைவிக்கு அறுந்து போனது
பிணைப்புக் கொடி !
+++++++++++++++++
பிரார்த்தனை தொடர்கிறது.
சி. ஜெயபாரதன்
+++++++++++++++