இந்த வார வல்லமையாளர் – 301: விமானப்படை வீரர் அபிநந்தன்

0

இந்த வார வல்லமையாளர் என விமானப்படை வீரர் அபிநந்தனை அறிவிப்பதில் வல்லமை பெருமை கொள்கிறது. செய்யாறு அருகே உள்ள திருப்பனமூர் என்னும் கிராமத்தைப் பூர்விக ஊராகக் கொண்ட சிம்மக்குட்டி வர்த்தமானன் என்னும் விமானப்படை அதிகாரியின் மகன் திரு. அபிநந்தன். பாகிஸ்தான் படையினரால் சுடப்பட்டு, பாகிஸ்தான் ஆளும் காஷ்மீர் பகுதியில் பிடிபட்ட அபிநந்தன், திரும்பவும் இந்தியா வந்துள்ளார். அவரை வரவேற்பதில் பெருமை கொள்கிறோம். இவர் நாடு திரும்பியதால் இந்தியா – பாகிஸ்தான் போரும் அதனால் ஏற்படும் அழிவுகளும் தடுக்கப்பட்டுள்ளன.

அபிநந்தன் வாழியவே!

இந்திய  நாட்டின்   வலிமையைக்  காட்டிட
எல்லை கடந்தவன்  மீண்டான்!- அவன்
  எழுந்து  பறந்த  விமானம்  வீழினும்
        எதிரியைத்   தாழ்த்திஉ   யர்ந்தான்!

நொந்திடச்  செய்தவர்  கொடுமைகள்  தாங்கிநம்
     சொந்தச்ச   கோதரன்  மீண்டான்! – அவன்
   நுண்ணறி வுத்திறன்  காட்டியே   வெற்றியில்
       நூழிலா  டும்திறன்  கொண்டான்!

தந்தையி  னுள்ளம்  பெருமிதம்  கொண்டிட
       மைந்தனாய்த்  தாயகம்  வந்தான்! –  அவன்
    வந்தனன்  எம்அபி  நந்தனன்  என்றே
        வாழ்த்தும்   ஒலியிடை வந்தான்!

விழித்திடும்  கண்முன்  வேல்பாய்ந்  திடினும்
       அழித்திமைக்  காதவன்   மீண்டான்! – தன்
   தொழிலென  நாட்டினைக்  காத்திடு  தோழன்
          சூரனாய்த்  தாய்நிலம்  மீண்டான்!

மொழியெலாம்  தோற்றிட  முயற்சியில்  வென்றவன்
      விழிகள்  நிறைந்திட  மீண்டான்! – தனை
    அழித்திடும்  எமனையும்  அலட்சியம் செய்தே
          ஆர்ப்புடன்  நம்மிடை    நின்றான்!

தவப்பெருந்  தாயுளம்  சந்தோஷங்  கொண்டிடத்
      தந்தையைக்  கண்டுப  ணிந்தான்! – தனை
   அவமதித்  தோர்வாய்  அடைந்திட நம்முன்
       சுயமதிப் போங்கிட  வந்தான்!

சாகா  வரத்தினைப்  பெற்றநம்  மைந்தன்
      வாகா  எல்லைக  டந்தான்! –  நாம்
   ஆஹா, ஆஹா! என்றுபு  கழ்ந்திட
        அஞ்சனை  மைந்தனாய்  வந்தான்!

கோலங்கள்  வாசலில்  இடுவோம் பூரண
     கும்பத்  துடன்வர  வேற்போம்! – நம்
  குலமெலாம்  வீரமே  கொண்டிட வேண்டிக்
       கூடிக்கு  லாவியே  நிற்போம்!

                                   –  திருச்சி  புலவர் இராமமூர்த்தி.
அபிநந்தன் கும்மி
1)
வாழி அபிநந்தன் வாழிய வாழிய
வான்புகழ் கொண்டனை வாழியவே
ஆழி அலைபோலென் உள்ளமடா! – கவி
ஆர்த்துப் பெருக்குது வெள்ளமடா!
2)
வாளினைப் போலுன்றன் மீசையடா! –  வடி
வேலினைப் போன்றதுன் நாசியடா!
தோளினைப் போலென்று காட்டிடவே – பல
தொன்மலைக் கூட்டமும் கேட்குதடா!
3)
கூரிய பார்வையைத் தீட்டிடவே – கதிர்
கோடிக் கிரணத்தைக் காட்டுகிறான்
நேரினில் வந்தென்றன் பாட்டினிலே – அவன்
நித்தமும் நின்றிட ஏட்டினிலே!
4)
மாசில் இரவிலோர் ஆதவன் போலன்று
வானத்தில் பாய்ந்தனை தாக்கிடவே!
தூசு நிகர்த்ததாய் அந்நியர் ஊர்தியைத்
துண்டு பலகோடி ஆக்கினையே!
5)
சக்தியில் மிக்கவான் ஊர்திகளில் – பகை
தாக்கிட வந்திடக் கண்டவுடன்
அக்கண மேவுள வன்மையால் அன்றோநீ
அஞ்சாமல் பாய்ந்தனை வானத்திலே!
6)
மாடுகள் பூட்டிய வண்டியைக் கொண்டதோர்
வல்லமை மிக்கதோர் ஊர்தியினை
சாடிடச் சென்றவுன் சாதனையை – எங்கள்
தண்டமிழ் என்றென்றும் போற்றிடுமே!
7)
வீசிப் புடைத்திடும் ஓர்முறம் ஏந்தியே
வேங்கையை ஓட்டிய சாகசம்போல்
பேசும் புவிஅபி நந்தனே நீயந்தப்
பேயவர் தம்மையே ஓட்டியதை!
8)
முன்னம் இருப்பது மூள்பகை ஊர்திகள்
மூன்றென்று கண்டாலும் அஞ்சா மலே
நன்று விரட்டியே மாட்டினைப்போல் அந்த
நாசகர் தம்மைநீ ஓட்டினையே!
9)
குண்டொன்று போட்டுநீ  தாக்கிட ஓரூர்தி
குட்டிக் கிரணத்தைப் போடவதன்
துண்டொன்று பாய்ந்துன்றன் ஊர்தியை அல்லவா
தொட்டுத் தொளத்ததும் கண்டனையே!
10)
விண்ணில் இருந்துடன் வேகம் குதித்தனை
வித்தைச் சிறகினை ஏந்தியநீ!
மண்ணில் இறங்கிய பூமிய தோகொடும்
வஞ்சகர் நாடென்று கண்டனையே!
11)
சுற்றிலும் காதகர் சூழ்ந்துனை நின்றாலும்
சோர்வெதும் அண்டாமல் நின்றனைநீ!
முற்றிலும் நின்றவர் கல்லாலும் சொல்லாலும்
மோதிப் புடைத்திடும் போதினிலும்
12)
ஆழ இதயத்தில் ஊறிடும் பற்றினால்
அஞ்சாமல் நாட்டினைப் போற்றிடவே
வாழிய பாரதம் வாழிய என்றுநீ
மாவொலி செய்தனை கேட்டிடவே!
13)
அந்நியர் நாட்டினர் கையினில் உன்னுடை
ஆவணம் சிக்குதல் ஆகாதென
அந்நிலை கண்டுநீ தின்னத் தொடங்கினை
ஆவிதை என்னென்று சொல்லிடுவேன்!
14)
தின்று முடித்திட நேரம் இலையெனச்
சிந்தை உணர்ந்திட ஓடியங்கோர்
சின்னக் குழியொன்றில் நீரினைக் கண்டுநீ
முன்னம் குதித்ததை என்னசொல்வேன்!
15)
ஆவணம் யாவையும் வேகம் அழித்தபேர்
ஆண்மை நிறைந்தவோர் வித்தகன்நீ!
காவியம் காட்டிடும் சாகசம் தன்னைநீ
கண்ணெதிர் காட்டிய அற்புதன்நீ!
16)
எத்தனை கேள்விகள் யாரெங்கு கேட்டாலும்
எத்தனம் ஏதிலும் மாட்டவில்லை!
சித்தம் உயர்ந்துள சிங்கமே என்றுன்னைச்
செந்தமிழ் பாடிடும் நித்தமுமே!  (வாழி)
– சிவசூரி.

(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 )

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *