குறளின் கதிர்களாய்…(251)
-செண்பக ஜெகதீசன்
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பய னெய்த லரிது.
-திருக்குறள் -606(மடியின்மை)
புதுக் கவிதையில்…
மண்ணாளும்
மன்னரின் செல்வம்
தானே வந்து கிடைத்தாலும்,
சோம்பலுடையோர்
அதனால் எவ்வித
சிறப்புப் பயனும்
அடைதல் அரிதாகும்…!
குறும்பாவில்…
அரசர் செல்வம் கிடைத்தாலும்,
அதனால் மாண்புடை பயனெதுவும்
பெறலரிது சோம்பலுடையார்க்கே…!
மரபுக் கவிதையில்…
மண்ணை யாளும் மன்னர்தம்
மதிப்பு மிக்க செல்வமதும்
எண்ணம் போலக் கிடைத்தாலும்
எந்தச் செயலும் செய்யாத
கண்ணிய மில்லா மடியுடையோன்,
கிடைத்த வரிய பொருளாலே
கண்ணிய மிக்க பயனெதுவும்
கண்டிப் பாகப் பெறலரிதே…!
லிமரைக்கூ..
மன்னர்தம் செல்வத்துடன் உறவே
தானேவந்து கிடைத்தாலும் சோம்பேறிக்கதனால்
நற்பயனெதுவும் கிடைக்காது அறவே…!
கிராமிய பாணியில்…
சோம்பப்படாத சோம்பப்படாத
வாழ்க்கயில சோம்பப்படாத,
சொகுசுவந்து கெடச்சாலும்
சோம்பேறியா மாறிப்புடாத..
ராசாவூட்டுச் செல்வமும் ஒறவும்
தானேவந்து சேந்தாலும்,
ஒண்ணுஞ் செய்யா
சோம்பேறிக்கு அதுனால
நல்ல பயனா
எதுவும் கெடைக்காதே..
அதுனால
சோம்பப்படாத சோம்பப்படாத
வாழ்க்கயில சோம்பப்படாத,
சொகுசுவந்து கெடச்சாலும்
சோம்பேறியா மாறிப்புடாத…!
