நல்லாட்சி, குன்றா வளர்ச்சி மற்றும் சமூக மகிழ்ச்சி
சென்னை லயோலா கல்லூரியில் 2010 செப்டம்பர் 25 அன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலந்துரையாடல் நிகழ்வு தொடர்பான செய்திக் குறிப்பு வருமாறு:
இன்று இந்தியாவில் அரசுத் தலைவர்கள், கொள்கை வகுப்பவர்கள், திட்டம் தீட்டுபவர்கள் அனைவரும் பேசுவது பொருளாதார வளர்ச்சி, வளர்ச்சி விகிதம், பொருட்கள் உற்பத்தி, சந்தை நிலவரம், அன்னியச் செலாவணி கையிருப்பு போன்றவை தான். இச்சூழலில், நாட்டு மக்களை ஒரு பயனாளியாக, ஒரு மனுதாரராக, ஒரு நுகர்வோராக, ஒரு வாக்காளராகப் பார்க்கப்படும் நிலைதான் உள்ளது. இந்தியா வல்லரசாகப் போவதாகவும், உலகப் பொருளாதாரத்தில் முதல் 3 இடங்களுக்குள் நாம் இருக்கப் போவதாகவும் கனவுப் பேச்சுக்கள். கட்டமைப்பு வசதிகளைப் படம் பிடித்துக் காண்பித்து, சாதனைகளாக அறிவிக்கின்றோம். அது மட்டுமல்ல, உலகப் பணக்காரர்களையும் உலகத் தர நிறுவனங்களையும் உருவாக்கி மகிழ்கிறோம்.
இப்படி பொருள் சார்ந்த, பணம் சார்ந்த, நுகர்வு சார்ந்த செயல்பாடுகளை வளர்ச்சி மேம்பாடு என மேற்கத்தியர்கள் கூறியவற்றை கிளிப்பிள்ளை சொல்வது போல் நம் தலைவர்கள் பேசி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நம் தலைவர்கள் சமுதாய எதார்த்தத்திலிருந்து விலகி அடைந்துகொண்டு, நம் அதிகாரிகள் காட்டும் சாதனைச் சித்திரங்களைப் பார்த்து மகிழ்ந்து அறிக்கை விடுவதும், பேசுவதுமாக இருக்கிறார்கள். அதிகளவில் இருக்கும் ஏழை மக்களின் வாழ்வு இந்நாட்டில் எப்படி உள்ளது என்பதைப் பற்றித் தலைவர்கள் கவலைப்படுவதில்லை. மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக, அமைதியாக, சுய மரியாதையாக, மதிக்கக்கூடிய சமத்துவமான மானுட வாழ்க்கையை எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழ வழிவகை இருக்கிறதா என்பதைக் கொள்கை வகுப்பவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. மக்களாட்சி என்றாலே மக்களை மதிக்கின்ற, நியாயமான, நியதியான, மற்றவர்களைச் சமமாகப் பாவிக்கின்ற ஆட்சி என்று பொருள். ஆனால் இன்று நம் நாட்டில் அந்தப் பார்வை கிடையாது
உலகத்தில் மேம்பாடு, வளர்ச்சி என்று பொருள் உற்பத்தியை வைத்து பேசிக்கொண்டிருந்த போது, பாகிஸ்தான் பொருளாதார நிபுணர் பேராசிரியர் மெஹ்பூப்அல் ஹக் என்பவர்தான் இதற்கு ஒரு மாற்றுச் சிந்தனையைத் தந்தார். அதை ஆதரித்து அமர்த்தியா சென் கருத்துப் புரட்சியை ஏற்படுத்தினார். இதன் விளைவாகத்தான் ஐ.நா. மானுட மேம்பாடு என்ற வரையறையை உருவாக்கி, அதன் பார்வையில் வளர்ச்சியைக் கணக்கிட கற்றுக்கொண்டது, அறிக்கை தயாரித்தது. அதாவது மானுடம் எப்படி வாழ்க்கை நடத்துகிறது, அந்த வாழ்க்கையின் தரம் என்ன என்ற அடிப்படையில் பார்க்க ஆரம்த்தது. மக்கள் வசிப்பிடம், கல்வி, சுகாதாரம், அடிப்படை வசதிகள் போன்றவற்றை வைத்து மதிப்பிட ஆரம்பித்தனர். அதே போல் கிட்டத்தட்ட 72 குறியீடுகளைக் கொண்டு ஒட்டு மொத்த தேசிய மகிழ்ச்சி எனும் உணர மட்டுமே கூடிய ஒன்றை அளக்க முற்பட்டு, சமூக மகிழ்ச்சி, மக்கள் நலன் போன்றவற்றை மேம்படுத்த முயல்கிறது, இமாலய மலையினுடே ஒரு குட்டி நாடான பூடான்.
நம் நாட்டில் இந்தப் பார்வைகள் இல்லை. அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களில், சந்தைப்படுத்துதலும் நுகர்வும் பேராசையும் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. இன்றைக்குச் சந்தைக்காகப் பேசக் கூடியவர்களைத்தான் நாம் பார்க்கிறோமேயன்றி மனிதர்கள் மதிக்கப்படக்கூடிய வாழ்க்கையை வாழ முடியவில்லை. இந்த நேரத்தில் நல்ல ஆளுமை, எல்லோரையும் உள்ளடக்கிய குன்றா வளர்ச்சி, அதன் மூலம் சமூக மகிழ்ச்சி ஆகியவற்றைப் பெரிதாக்கிப் பார்க்க வேண்டிய கட்டாயக் கடமை உள்ளது. அதற்கான மாற்றுச் சிந்தனை உடனடி அவசியமாகிறது. அதைப் பற்றி விவாதித்திட, 2010 செப்டம்பர் 25 அன்று, சென்னையில் கலந்துரையாடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அழைப்பிதழ்
பண்பாட்டு, பல்சமய ஆராய்ச்சி மையம் (IDCR), லயோலா கல்லூரி, சென்னை மற்றும் பாடம் – வளர்ச்சி அரசியலுக்கான மாத இதழ் இணைந்து நடத்தும் செயல் திட்டக் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு, புதிய அரசியல் சித்தாந்தத்தை நம் நாட்டு அரசியல் மற்றும் ஆளுமையில் வலுப்படுத்தத் தங்களது யோசனைகளையும் பங்களிப்பினையும் தருமாறு அன்புடன் அழைக்கிறோம்.
“நல்லாட்சி, குன்றா வளர்ச்சி மற்றும் சமூக மகிழ்ச்சி”
இடம் : வளாகம், லயோலா கல்லூரி, நுங்கம்பாக்கம்
நாள் : 25 செப்டம்பர் 2010 (சனிக்கிழமை)
நேரம் : காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை.
குறிப்பு : முதலில் மாநில அளவிலான கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், தவிர்க்க முடியாத, எதிர்பாராமல் எழுந்த காரணங்களால், மாநில அளவிலான கருத்தரங்கம் தள்ளிவைக்கப்படுகிறது. ஆனால், இந்த “செயல்திட்டக் கலந்துரையாடல்” நிகழ்வு, பின்னர் நடத்தப்பட இருக்கும் மாநில அளவிலான கருத்தரங்கத்திற்கும், வருங்காலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டங்களைத் தீட்டுவதற்கும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.
மேலும் விவரங்களுக்கும் வருகையை உறுதி செய்யவும்:
98403 93581 – திரு. அ. நாராயணன், ஆசிரியர், பாடம் மாத இதழ்
94440 53063 – முனைவர். கிளாட்ஸ்டன் சேவியர், லயோலா கல்லூரி
மின்னஞ்சல் மூலம் உறுதி செய்ய: paadam.pm@gmail.com
* கலந்துரையாடலைத் தொடர்ந்து மதிய உணவு வசதி செய்யப்பட்டுள்ளது.