சேக்கிழார் பாடல் நயம் – 71 (ஆதியார்)
திருச்சி புலவர் இராமமூர்த்தி
ஆதியார் நீல கண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம்
பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி்
ஏதிலார் போல நோக்கி, ‘எம்மை என்றதனால் மற்றை
மாதரார் தமையும் என் தன் மனத்தினும் தீண்டேன்’ என்றார்.
திருநீலகண்டர் உயிர்களைக் காக்கும் பொருட்டு ஆலகால விடத்தையே உண்ட பெருங்கருணையைப் போற்றினார். அதனை எண்ணி எண்ணி வியந்து அச்செயலை உள்ளத்துள் கொண்டு, ‘’திருநீலகண்டம்” என்ற திருப்பெயரை வாய் ஓயாமல் கூறி மகிழ்ந்தார். அதனாலேயே அவர் இயற்பெயர் மறைந்து ‘’திருநீலகண்டர்” என்ற திருப்பெயர் அவருக்கு நிலைத்து விட்டது! உள்ளத்தில் இறைவனையே இடைவிடாது நினைத்துக் கொண்டிருந்த அவர்பால், உடலின்பத்தை வளர்க்கும் பொருட்செல்வம் பெருகியபின், அதன் விளைவாக இளமை மீதூர இன்பத்துறையில் எளியர் ஆனார். ஆழ்மனத்தில் இருந்த சிவபக்தியை மீதூர்ந்த உடலாசை, அவரை மயக்கி விட்டது. உண்மையில் அவர் மனம் பேதியாதிருந்தது. உள்ளமெல்லாம் இறைவனே குடியிருந்த அவர்மனம், அவர் மனைவியார் ‘’எம்மைத் தீண்டாதீர்” என்று கூறக்கேட்டு விழித்துக் கொண்டது. திருக்குறள் ,
‘’பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு!’’
என்ற குறளில், ‘பிற பெண்டிர் கண்ணால் உண்ட எச்சிற்பண்டமாகிய நின் மார்பை நெருங்கவும் மாட்டேன்’ என்று கூறித் தலைவனை விலக்கினாள். அது போலவே நாயனார் மனைவியாரும், ‘பிற பெண்டிரின் எச்சில் உடலைத் தொட்ட உடலால் என்னைத் தீண்டாதீர்!’ என்று வெறுத்துப் பேசிய சொல் அவரைச் சுட்டு விட்டது!
இயல்பாக ஆண்களின் மனத்திட்பம், பெண்ணை நாடாது. சீதைபால் உள்ளத்தைப் போக்கிய இராமன், திட்பம் மிக்க தம் உள்ளம் அவளை நாடியதால், சீதையும் கன்னியாகவே இருக்க வேண்டும் என்று உறுதியாகக் கருதினார். அந்த மனத்திட்பத்தைக் கம்பர் ,
“ஆகும் நல்வழி; அல்வழி என்மனம்
ஆகுமோ ? இதற்கு ஆகிய காரணம்,
பாகு போல்மொழிப் பைந்தொடி, கன்னியே
ஆகும்; வேறுஇதற்கு ஐயுறவு இல்லையே !’’
என்று பாடினார். சீதையின் மனமும் கற்பென்னும் திண்மை படைத்தது. ஆழ்மனத்தில் இறைவனையே எண்ணியிருந்த திருநீலகண்டர் மனைவியின் சொல் கேட்டு விழித்துக் கொண்டார். மனைவியார் கூறிய, “எம்மைத் தீண்டாதீர்!” என்ற தொடர் அவருடைய ஆழ்ந்த மனத்திட்பத்தைத் தூண்டி விட்டது. இறைவன் மேல் ஆணையிட்ட மனைவியின் சொல், சிவபிரான் பால் அவர் கொண்ட ஈடுபாட்டிலிருந்து சற்றும் விலகாத ஆழ்மனத்தை வெளிக் கொணர்ந்து விட்டது! அவர் மீண்டும் பெருமை பெற்றவர் -”பெரியவர்” ஆனார். இதனைச் சேக்கிழார்,
‘’ஆதியார் நீல கண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம்
பேதியா ஆணை கேட்ட பெரியவர்’’
என்று போற்றுகிறார். ஆம், எந்த வகையிலும் இறைவனின் நீலகண்டத்தின் பால் கொண்ட ஆர்வத்திலிருந்து பேதியாத ஆணையை அவர் பெற்றார். சிவபெருமா னொருவரையேயன்றிப், பெருந்தேவரும் பிறர் யாவரும் வெல்லுதற்கரிய காமவிச்சையை ஆணையின் வரம்பிலே நின்று வென்றமையால் செய்தற்கரிய செயல் செய்தவராயினார் நாயனார்; அதுபற்றி இங்குப் பெரியவர் என்றார். ஆகவே அவர் தம் பழைய நிலையிலிருந்து விலகி நீங்கினார். தம் மனைவி “எம்மைத் தீண்டாதீர்” என்று கூறிய தொடரில் ‘எம்மை’ என்பது அவர் மனைவியாரையும் அவர் போன்ற பிற மாதரையும் உளப்படுத்தியதால் ‘’இனி எந்த மாதரையும் என் மனத்தாலும் நினைக்க மாட்டேன்‘’ என்று கூறும் உறுதிப்பாட்டை உண்டாக்கி விட்டது. இதனைச் சேக்கிழார்,
பெயர்ந்து நீங்கி
ஏதிலார் போல நோக்கி, ‘எம்மை என்றதனால் மற்றை
மாதரார் தமையும் என் தன் மனத்தினும் தீண்டேன்’ என்றார்.
என்று பாடுகிறார். இங்கே மனத்தில் தீண்டுதல் – நினைத்தல்; தீண்ட நினைத்தலும் தீண்டுதலின் பயனை விளைத்தேவிடும். நினைப்பே கருமமாகி வினைக்கு முளையாகு மென்பது சாத்திரம். ஆலாலசுந்தரர் திருக்கயிலாயத்தில் மாதர் மேன் மனம் போக்கியசெயலே அவர் உலகில் அவதரிக்கக் காரணமாயிற்று என்பது முன்னர்த் திருமலைச் சருக்கத்திற் கூறப்பெற்றது. எனவே, மனத்தாற் றீண்டுதலும் ஆணை கடத்தலேயாமாதலின் அதுவும் செய்யேன் என்பவராய் இவ்வாறு கூறினார். இப்புராணம் திருநீலகண்டநாயனார் புராணம் ஆதலால் மனைவியார் திருத்திய காரணத்தால்தான் இவர் திருந்தினார் என்று கருதக் கூடாது. ‘’எம்மை” என்ற சொல் அவருள்ளத்திலே ஆழ்ந்திருந்த இறைப்பற்றைத் தூண்டிவிட்டதால், அவர் இறைவன் திருவருளையன்றி வேறெதையும் கருத்தாதவர் ஆனார். இனி முழுப்பாடலையும் பயின்று பயன் பெறுவோம்.
ஆதியார் நீல கண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம்
பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி்
ஏதிலார் போல நோக்கி, ‘எம்மை என்றதனால் மற்றை
மாதரார் தமையும் என் தன் மனத்தினும் தீண்டேன்’ என்றார்.
சேக்கிழாரின் இப்பாடலில் நீலகண்டம் எவ்வாறு உள்ளத்தில் நிலைக்கிறது என்பதை விளக்குகிறது; எம்மை என்ற சொல்லின் பொருள் நயமும்,, மனத்தினும் தீண்டேன் என்ற தொடரின் ஆழ்ந்த பொருளும் அடியாரின் ஆழ்மனத்தின் இயல்பைப் புலப்படுத்திப் பாடல் நயத்தை விளக்குகிறது!
